குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்குநாட்டு மற்போர் வீரர்)
கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூந்துறை என்னும்
ஊரில் மாட்டையாக் குப்பிச்சி என்ற மற்போர் வீரர் இருந்தார்.கொங்கு
வேளாளரில் காடையென்னும் வமிசத்தில் தோன்றியவர் அவர். மற்போர்
புரிவதில் வல்லுநர். பல நாடுகளுக்குச் சென்று ஆங்காங்கு நிலவும்
சிறப்புக்களையும் பண்பாட்டுப் பாங்குகளையும் தெரிந்துகொள்ள ஆவல்
கொண்டார். கொங்கு நாட்டில் விசயநகர மன்னர்கள் ஆட்சி செலுத்திய
காலம். குப்பிச்சி தான் திட்டமிட்ட படியே விசய நகரம் சென்றுசேர்ந்தார்.
அங்கே ஒரு ஆஸ்தான மற்போர் வீரர் இருந்தார். வெளிநாட்டிலிருந்து
வரும் மற்போர் வீரர்கள் அவரோடு மற்போர் புரிந்து வெற்றியடைந்தால்
மட்டுமே அரசரைப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் அந்த ஆஸ்தான
மல்லருக்குப் பணிந்து நடத்தல் வேண்டும். ஒரு நீண்ட சங்கிலியை அரண்மனை
முதல் வாயிலில் மேலே வளைவாகத் தொங்கவிட்டு அதன் ஒரு நுனியைத்
தன் இடக்கால் விரலால் பற்றிக்கொண்டிருப்பார். வெளிநாட்டிலிருந்து
வருபவர்கள் தலைவணங்கி அச்சங்கிலியின் கீழே நுழைந்து வரல் வேண்டும்.
தன் கால் பட்ட சங்கிலிக்கும் வருபவர்கள் பணிவுகாட்டல் வேண்டும் என்ற
இறுமாப்புடன் நடந்து கொண்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்நாட்டு
மன்னர் இதனைக் கவனிக்கவேயில்லை.
போதாக்குறைக்கு அவர் ஒரு அடங்காத முரட்டுக் குதிரையை வேறு வளர்த்து
வந்தார். ஆஸ்தான மல்லரைத் தவிர வேறு யாரையும் தன்மேல் சவாரி செய்ய
அக்குதிரை அனுமதித்ததில்லை. சொல்லப் போனால் வேறு யாரும் அக்குதிரைமீது
ஏறினால் உயிர் பிழைப்பது அரிதாகும். வேறு நபர் ஏறிவிட்டால் அக்குதிரை
குதிக்கும்; சுற்றிச் சுழலும்; வெறித்தனமாக ஓடும். இப்படியெல்லாம் செய்து
ஏறிய நபரைக் கீழே தள்ளிவிடும். இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஏறிய நபர்
இறங்காமல் சமாளித்துவிட்டால் அருகிலுள்ள அவ்வூரின் பெரிய ஏரிக்குள்
பாய்ந்து செல்லும். மடமடவென்று நீரில் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும்.
ஆழமான பகுதியில் தன் மேல் ஏறியுள்ள நபரை விழவைக்கும். விழுந்தால்
மூச்சுத்திணறிச் சாகவேண்டியதுதான். இந்த அளவு முரட்டுத்தனம் கொண்ட
குதிரையாகும். இதனால் ஆஸ்தான மல்லரோடு யாரும் வம்பு, வழக்கு வைத்துக்
கொள்வதில்லை. அவருடன் யாதொரு மோதலும் மேற்கொள்ளாமல் மன்னரைப்
பார்த்து வணங்கிப் பரிசு ஏதேனும் கிடைத்தால் பெற்றுக்கொண்டு ஆஸ்தான
மல்லருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவர். இப்படியாக ஆஸ்தான
மல்லர் போட்டி அரசு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் நம் குப்பிச்சி ஆஸ்தான மல்லருடன் மற்போர் நிகழ்த்தத்
தனக்குச் சம்மதம் என்று பலர் முன்னிலையில் அறிவித்துவிட்டார். ஆஸ்தான
மல்லர் திகைத்துப் போனார். தன்னோடு மற்போர் புரிய யாரும் இதுகாறும்
முன்வந்ததில்லை. அந்த அளவுக்கு அனைவரையும் அரட்டி உருட்டி வைத்திருந்தார்.
தற்பொழுது வெளியூர்க்காரர் தனக்கு அறைகூவல் விடுவதை ஏற்றுக்கொள்ள
இயலவில்லை. வேறுவழியின்றித் தானும் சம்மதிப்பதாகக் கூறினார். மன்னர்
காதுக்கு இந்தச் செய்தி எட்டியது. மளமளவென மற்போருக்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. அரங்கம் தயார் செய்யப் பட்டது. பொதுமக்கள் ஏராளமாகக்
குழுமிவிட்டனர். மற்போர் தொடங்கியது. ஆஸ்தான மல்லர் வெகுநாட்கள் மற்போர்
புரியாமல் சுகவாசியாக இருந்தமையால் தொடக்கத்திலிருந்தே சுணக்கம்
காட்டினார். நம் குப்பிச்சியோ வெளிநாட்டில் தன் திறமையைக் காட்ட எண்ணி
முனைப்புடன் மற்போர் நிகழ்த்தினார். பிறகென்ன? குப்பிச்சி ஆஸ்தான மல்லரை
வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டினார்.
ஆஸ்தான மல்லர் உடனே குப்பிச்சியிடம் அறைகூவல் விடுக்கலானார். "என் முரட்டுக்
குதிரையை அடக்கினால்தான் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன்" என்றார்.
குப்பிச்சி அறைகூவலை ஏற்றக்கொண்டார். "நாளை இதே நேரத்தில் குதிரையை
அடக்கும் போட்டியை நடத்தலாம்" என்றார். மன்னர்"அப்படியே ஆகட்டும்" என்றார்.
குப்பிச்சி அன்றைய மாலைப் பொழுதில் சுண்ணாம்புக் கற்களை ஒரு துணியில்
நிரப்பி அதனை நன்கு மடித்துக் கொண்டார். குதிரையின் சேணத்தின்மீது இந்தச்
சுண்ணாம்புக்கல் கொண்ட துணியைத் தோதாகச் சுற்றிக் கொண்டால் குதிரை
ஆற்றுக்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும் முன்பே சுண்ணாம்புக் கற்கள்
பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தும். சூட்டைத் தாங்க முடியாமல்
குதிரை கரைக்குத் திரும்பும் என்று தந்திரமாகத் திட்டமிட்டார்.
மறுநாள் மன்னர் முன்னிலையில் பொதுமக்கள் கூடினர். ஆஸ்தான மல்லரும்
குப்பிச்சியும் வருகை புரிந்தனர். குதிரை கொண்டுவரப்பட்டது. ஆஸ்தான மல்லர்
குதிரைக்குத் தேவையான போதையூட்டிக் கொண்டு வந்திருந்தார். போட்டி
தொடங்கியது. குப்பிச்சி குதிரையை நெருங்கிச் சேணம், கடிவாளம் போன்றவற்றைச்
சரிசெய்வதுபோல் தான் தயாரித்து வைத்த சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணியைச்
சேணத்தின் மீது சுற்றி வைத்துக் குதிரையின்மீது தாவியேறினார். சுண்ணாம்புக்
கற்கள் நிரம்பிய பகுதி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது.
குப்பிச்சி ஏறியவுடன் குதிரை சிலிர்த்துக்கொண்டு குதித்தது; சுழன்றது; தாவியது;
அதிவேகமாக ஓடியது. குப்பிச்சி குதிரையின் மீது படுத்தவண்ணம் அதன் கழுத்தை
இறுகப் பற்றிக் கொண்டார். குதிரையால் அவரைக் கீழே தள்ள இயலவில்லை. எனவே,
ஏரியை நோக்கி ஓடி அதற்குள் இறங்கியது ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல முயன்றது.
இதற்குள் சேணத்தைச் சுற்றியுள்ள துணியில் இருந்த சுண்ணாம்புக் கற்கள் தண்ணீர்
பட்டவுடன் பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தியது.
சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்
ததால் வெப்பம் அதன் அடிவயிற்றைத் தாக்கியது. சூட்டைத் தாள மாட்டாத குதிரை
மேற்கொண்டு ஆழத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பிக் கரையை நோக்கி வரத்
தொடங்கியது. சுண்ணாம்புச் சூட்டால் குதிரையின் வெறி, வேகம் எல்லாம் தணிந்து
மெதுவாக நடை பயின்று கரையேறியது. மன்னருக்கும், ஆஸ்தான மல்லருக்கும்,
குழுமியிருந்த பொதுமக்களுக்கும் இந்தத் தந்திரம் தெரியாததால் குதிரையின்
ஆவேசம் தணிந்ததற்குக் காரணம் விளங்காமல் குப்பிச்சிக்குக் கிடைத்த தெய்வ
அருள் அவரைக் காப்பாற்றியதாக நம்பினர். குப்பிச்சி வெற்றி வீரராக அரங்கை
வலம்வந்தார். ஆஸ்தான மல்லர் நிறுவிய சங்கிலியை அகற்ற வேண்டுகோள்
வைத்தார். மன்னரும் பரிசுகள் நல்கி அவர் கோரிக்கையை நிறைவேற்றினார்.
இந்த நிகழ்வைக் கொங்கு மண்டல சதகம் என்ற நூல் விவரிக்கிறது(பா.எ.56):
"தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்
வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்
டேசற் படுமய மாவினை யாட்டி யெவருமெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே."
விளக்கம்: விசயநகர அரசில் ஆஸ்தான மல்லரை வெற்றி கண்டு அவரது முரட்டுக்
குதிரையை அடக்கி எல்லோரும் மெச்ச அந்நாட்டில் சிறப்படைந்த குப்பிச்சி
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே.
பார்வை: நினைவு மஞ்சரி 2ஆம் பாகம்(நூல்)
ஆசிரியர்: தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்
No comments:
Post a Comment