Saturday, 27 April 2024

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி..

 தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி.


அது பதின்மூன்றாம் நூற்றாண்டுக் காலம். தமிழகத்தில் ஒன்பதாம்

நூற்றாண்டு தொடங்கிப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இடைக்

காலச் சோழர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலம். ஏறத்தாழ

நானூறு ஆண்டுகளுக்கு மேல் பேரரசைக் கட்டியாண்ட சோழர்கள்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஆட்சிப் பரப்பை

இழக்கத் தொடங்கியிருந்த காலம். அதேநேரம் இடைக்காலப் பாண்டி

யர்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலம். முதலாம் சடையவர்மன்

சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் அரியணை ஏறி ஆட்சி நடத்திக்

கொண்டிருந்தார். கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகச்

சோழர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பாண்டியர்கள் எழுச்சி பெறத்

தொடங்கினர்.


கொங்கு நாடு சங்க காலத்திலிருந்தே குறுநில மன்னர்களால் ஆளப்

பட்டு வந்தது. அவ்வப்பொழுது சேர, சோழ மற்றும் பாண்டிய வேந்தர்கள்

கொங்குப் பகுதியைக் கைப்பற்றித் தம் ஆளுகைக்கீழ்க் கொண்டு வருவர்.

பிறகு அது அவர்களின் பிடியிலிருந்து விலகி ஆங்காங்கே குறுநில மன்னர்களின்

ஆட்சிக்கீழ் சென்றுவிடும். கொங்கு நாட்டில் வீரம் செறிந்த தலைவர்கள்

பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தமக்குரிய சிறு படையைத் திரட்டித்

தத்தம் நிலப் பகுதியைப் பாதுகாத்துக் கொள்வர். சேர, சோழ, மற்றும்

பாண்டிய வேந்தர்கள் தேவைப்படும் பொழுது இவர்  போன்ற குறுநில

மன்னர்களின் உதவியை நாடுவர். இவர்களும் அவர்கள் அழைப்புக்கு

இணங்கி உதவி செய்துவிட்டு உரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்வர்.


அக்காலக் கட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழைய கோட்டை

என்ற ஊர் சிறப்போடு விளங்கியது. அங்கு வாழ்ந்த கொங்கு வேளாளர்

தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக்காரர் என்ற பெயர் நிலவியது.

அவர் கொங்கு வேளாளரின் நலம் கருதி நாட்டாண்மை செலுத்துவார்.

அந்த ஊருக்குக் காரை என்ற மற்றொரு பெயரும் இருந்தது. நத்தக்காரையூர்

என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் காலத்தில் மேற்படி ஊரில்

சர்க்கரை மன்றாடியார் என்ற தலைவர் வாழ்ந்துவந்தார். சர்க்கரை என்பது

இயற்பெயர். மன்றாடியார் என்பது குலப்பெயர். மன்று என்பது கிராம நீதி

மன்றம் போன்றது. தம் குலத்தினரின் வழக்குகளை விசாரித்து நீதி/தீர்ப்பு

வழங்கியமையால்  மன்றாடியார் என்னும் பெயர் வாய்த்தது.


சர்க்கரை மன்றாடியார் காலத்தில் கொங்குப் பகுதி பாண்டியர் ஆட்சிக் கீழ்

இருந்தது. பாண்டியர் ஒருமுறை கொங்குப் பகுதிக்கு வந்தபோது சர்க்கரை

மன்றாடியார் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது

பாண்டியர் தமது படையில் கொங்கு வீரர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை

உருவாக்க விரும்புவதாகவும் சர்க்கரையார் அப்பிரிவுக்குச் சேனாபதியாகப்

பணிபுரிதல் வேண்டும் என்றும் கோரினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அவர்

சம்மதித்தார்.


பாண்டியர் படையில் கொங்குப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டதை அறியாத

சோழ வேந்தர் சர்க்கரையாருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.. அதில் "வழக்கம்

போல  நீங்கள் உங்கள் படையை அனுப்பி உதவி புரியவும். தக்க ஊதியம்

வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. உடனே சர்க்கரையார் " நான் கூலிப்படை

திரட்டி வைத்திருக்கவில்லை. எனவே அனுப்ப இயலாது" என்று மறுமொழி

அனுப்பினார். சோழன் மிக்க சினமடைந்து " தாங்கள் படையை அனுப்பாவிட்டால்

தங்கள் பகுதி மீது போர்தொடுப்பேன்" என்று மிரட்டி ஓலைவிடுத்தார்.. சர்க்கரையார்

ஓலையைத் தூக்கி எறிந்து விட்டார்.

பாண்டிய உளவு வீரர்கள் இச்செய்தியைப் பாண்டிய வேந்தருக்குத் தெரிவித்தனர்.

பாண்டியர் சர்க்கரையாருக்கு அவசரமாக ஓலையை அனுப்பி" படையுதவி தேவையா?"

என்று விசாரித்தார். " படை ஏதும் அனுப்ப வேண்டாம். நாங்களே சமாளித்து விடுவோம்"

என்று பதில் ஓலை அனுப்பினார் சர்க்கரையார். சோழன் சொன்னபடியே படையெடுத்து

வந்து கருவூருக்குள் நுழைந்து விட்டார்.. சர்க்கரையார் தமது கொங்குப் படைவீரர்களோடு

சோழ நாட்டுப் படைகளை எதிர்கொண்டார். கடுமையான போர் நிகழ்ந்தது. குருதி

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சோழப்படைகளுக்குப் பெருத்த இழப்பு நேரிட்டது.

சர்க்கரையாரும் சோழ வேந்தனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர். இடையில்

இருபதடித் தொலைவே இருந்தது. சர்க்கரையார் தொடுத்த அம்பு சோழனின் தலைக்

கவசத்தை வீழ்த்தியது. அடுத்து அவர் விடுத்த அம்பு சோழனின் தலைமுடியை உரசிச்

சென்றது. உரசிய வேகத்தில் அவர் தலைமுடியைப் பிய்த்துச் சென்றது. சோழனின்

சுருண்ட முடிக் கற்றை போர்க்களம் எங்கும் பரவலாகச் சிதறியது. தலைக்கு வந்த

தீங்கு தலைக் கேசத்தோடு போனது என்று எண்ணிய சோழன் புறங்காட்டி ஓடினார்..

அவரைத் தொடர்ந்து எஞ்சிய சோழ வீரர்களும் ஓடத் தொடங்கினர். போர்க்களக்

காட்சியை யாரோ ஒரு புலவர் மிக அருமையாக விவரித்துப் பாடியுள்ளார்:

"ஆறெல்லாம் செந்நீர்; அவனியெல்லாம் பல்பிணங்கள்;

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி---வீறுபெறு

கன்னிக்கோன் ஏவலினால் காரைக்கோன் பின்தொடரப்

பொன்னிக்கோன் போன பொழுது".

(தூறு=புதர்; சுரிகுஞ்சி= சருண்ட தலைமுடி; கன்னிக்கோன்=கன்னியாகுமரிக்குத்

தலைவனான பாண்டியன்; காரைக்கோன்= நத்தக்காரையூர்த் தலைவனான

சர்க்கரை மன்றாடியார்; பொன்னிக்கோன்= காவிரிநாட்டுக்குத் தலைவனான

சோழன்).


வெற்றிக்குப் பிறகு சர்க்கரை மன்றாடியார் சடையவர்மன் சுந்தர பாண்டியனை

மதுரையில் சந்தித்துப் போர்க்களச் செய்திகளை எடுத்துரைத்தார். பாண்டியர்

பெருமகிழ்ச்சியடைந்து பலப்பல பரிசுகளைச் சர்க்கரையாருக்கு அளித்தார்.

மேலும்" இன்றுமுதல் நீங்கள் வெறும் சேனாபதியல்லர்; நல்ல சேனாபதி" என்ற

பட்டத்தையும் நல்கினார். அன்றுமுதல் அவர் பழையகோட்டைப் பட்டக்காரர்

நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் ஆனார். அவரின் வழித் தோன்றல்கள்

மேற்படி பட்டத்தை இன்றும் தம் பெயருக்குப்பின் சூடிக் கொள்கின்றனர்.


பார்வை: 'நல்ல சேனாபதி' நூல்-- ஆசிரியர் தமிழறிஞர் கி.வா.ஜெகந்நாதனார்.

No comments:

Post a Comment