Saturday, 14 June 2025

தாத்தா பாட்டியைப் போற்றிடுவோம்.

 தாத்தா பாட்டியைப் போற்றுவோம்.


பிள்ளைகளை வளர்ப்பதிலே  வீட்டிலுள்ள 

       மூத்தோர்க்குப் பெரும்பங்(கு) உண்டு;

விள்ளரிய  அறம், அன்பு  நீதி, நெறி

       கடைப்பிடித்தல் வேண்டும்  என்று

கள்ளமிலாப்  பிஞ்சுளத்தில்  பதியவைத்துப்

        பின்பற்றக் கதைகள்  மூலம்

தள்ளரிய நல்லொழுக்க  வழிமுறையைக்

         காட்டிடுவர் தாத்தா பாட்டி.


காலையிலே  துயிலெழுப்பிப்  பல்துலக்கல்

         நீராடல் கடவுள் பேணல்

வேலைகளை  முறையாகச் செயத்தூண்டி

         நல்லுணவை விரும்பி  யூட்டிச்

சீலமிகு  கல்விகற்கப்  பள்ளியினுக்(கு)  

         அனுப்பிடுவர்; சீராய்க்  கற்று

மாலையிலே  மனைதிரும்பும் பிள்ளைகளை 

         எதிர்கொண்டு வரவேற்  பாரே.


அந்தியிலே  சிறிதமயம்  விளையாடச்

          செய்துபின்னர் அமர வைத்துச்

சிந்தைகளி கூர்ந்திடவே  இன்குரலில்

           பாடவைத்துச்  சிலிர்க்கச் செய்வர்.

விந்தைமிகு  கல்விகற்கத்  தூண்டிடுவர்;  

          பள்ளிதந்த  வீட்டுப் பாடம்

எந்தவிதத் பிழையுமின்றி முடிப்பதற்குத்

          துணைசெய்வர்  இன்னும்  உண்டே.


இரவுணவைப் படைக்கின்ற  வேளையிலே

          நன்னெறியை  எடுத்துச்  சொல்லும்

தருமமிகு கதைபகர்ந்து  வயிறார  

          உணச்செயவர்;  தமிழில்  நல்ல

சுருதியுடன்  இதமான  இராகத்தில்  

          தாலாட்டைச் சுகமாய்ப்  பாடி

விரைவினிலே  துயிலும்வகை  உடல்நீவித் 

           தூங்க வைப்பர்; மேன்மை  மிக்கார்.


ஒவ்வொருவர்  வாழ்வினிலும்  நற்குழவிப்  

           பருவத்தில்  உயர்ந்த  மூத்தோர்

செவ்வியதாம்  முறையினிலே வளர்ப்பதற்கு  

           நற்றுணையாய்த்  திகழ்வர்; மேலும்

ஔவியமும்  கொடுஞ்சினமும்  தீச்செயலும்  

            தவிர்ப்பீரென்(று) அறைவர்  அன்னார்;

எவ்விதத்தில்  இவர்க்குநன்றி கூறிடுவோம்? 

             கண்கண்ட  இறைவன்  தானே!










No comments:

Post a Comment