Wednesday, 22 October 2025

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சாய்வு நாற்காலிப் பாட்டு.

 மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சாய்வு நாற்காலிப் பாட்டு.


பிற்காலக் கம்பர் என்று புகழப்பட்ட மகாவித்துவான் மீனாட்சி

சுந்தரம் பிள்ளையவர்கள்  இயற்றிய கவிதைகள் எண்ணிலடங்

காதவை. கம்பர் இயற்றிய பாடல்கள் பத்தாயிரத்துச் சொச்சம்.

பிள்ளையவர்கள் இயற்றியவை  பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனப் புலவராகப் பணி

புரியும் காலத்தில் அடிக்கடி மயிலாடுதுறைக்குச் சென்று சில

நாட்கள் தங்கியிருந்து விட்டுத் திரும்புவது வழக்கம். ஒருமுறை

அவ்வாறு சென்ற பொழுது இவருக்குக் காய்ச்சல்நோய்  கண்டது.

காய்ச்சலால் அவர் உடல் தளர்ச்சியடைந்தது. முன் போலத் தொடர்ந்து

அமர்ந்திருக்கவும், படுத்திருக்கவும் இயலவில்லை. மருத்துவர்கள்

அவர் ஒரு சாய்வு நாற்காலியைப் பயன்படுத்திக் கொண்டால் நலமாக

இருக்கும் என்று  கருத்துரைத்தனர். அந்தக் காலக் கட்டத்தில், தரங்கம்பாடி

நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வேதநாயகம் பிள்ளையின் தம்பி

ஞானப்பிரகாசம் பிள்ளைக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அதில்  தமக்கு

ஏற்பட்ட உடல்நலக் குறைவைச்  சொல்லி  வருந்தினார். சாய்வு நாற்காலி

யைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியதையும் தெரிவித்துக்கொண்டார்.

சாய்வு நாற்காலி  பயன்படுத்தச் சொன்ன மருத்துவ அறிவுரையைக்

காரணமாகக் காட்டிச் சாய்வு நாற்காலி ஒன்றை வாங்கி அனுப்புமாறு

வேண்டுகோள் விடுத்தார்.


தரங்கம்பாடி நெய்தல்நிலப்பகுதியாகும்(கடல் சார்ந்த பகுதியாகும்). அங்கே

படகு கட்டும் மரத்தச்சர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது இயல்பு. மேலும்

படகு கட்டத் தேவையான உறுதியான மரங்களும் அதிக அளவில் கிடைக்கும்.

நல்ல உறுதியான சாய்வு நாற்காலி ஒன்றை உருவாக்குதல் எளிதாகும். இதனைக்

கருத்தில்கொண்டு வேதநாயகம் பிள்ளை இளவலிடம்(தம்பியிடம்) இப்பணியை

ஒப்படைக்க எண்ணிக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தார். கடிதம் கவிதை வடிவில்

இருந்தது. அது பின்வருமாறு:

1)குறள் வெண்பா:

" பேராளா! ஞானப் பிரகாச வள்ளலெனும்

சீராளா! இக்கடிதம் தேர்".

2&3 விருத்தம்:

"உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த

      நாற்காலி ஒன்று வேண்டும்;

மறுவறுநாற் காலியெனல் யானையன்று;

      குதிரையன்று;  வல்லே(று) அன்று;

கறுவகல்பாற் பசுவன்றால்; இவையெல்லாம்

      இயங்குதல்செய்  கடன்மேற் கொள்ளும்;

பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்

       தேயிருக்கப்  பெற்ற  தாமே.


அத்தகைய தொன்றனுப்பின் அதிலமர்ந்து

          மிக்கசுகம்  அடைவேன் யானும்;

உத்தமநற் குணத்திலுயர் நீயுமிகு

          சீர்த்தியடைந்(து) ஒளிரா நிற்பை;

வித்தக!மற் றஃதவ்வா(று) இருப்பதற்கும்

           இடங்கொடுத்தல்  வேண்டும்; ஏய

சுத்தமிகும் அதனைவரு பவன்பாலே

           யனுப்பிடுதல் தூய தாமே.

பொருள்:

உறுதியும் வனப்பும்(அழகும்) அமைந்த நாற்காலி ஒன்று வேண்டும்;

நாற்காலி என்றால் விலங்கு எதனையும் குறிக்காது. யானையும்

இல்லை; குதிரையும் இல்லை; எருதும் இல்லை; கறவைப் பாற்பசு

வும் இல்லை. இவையெல்லாம் நடமாடி இயங்குபவை. இயங்காமல்

வைத்தவிடத்தே அலுங்காமல் நிலைத்திருக்கும் தன்மையுடைய

நாற்காலி ஒன்று வேண்டும். அத்தகைய ஒன்றை நீ அனுப்பிவைத்தால்

அதில் அமர்ந்து மிக்க சுகம் அடைவேன்; நீயும் எனக்கிந்த உதவி

செய்வதனால் சிறப்படைந்து ஒளிருவாய். அதனால் நன்கு உருவாக்கப்

பட்ட சாய்வு நாற்காலியை அனுப்பி வைத்தல் நலம் பயக்கும்.

மேற்படி மூன்று பாடல்களையும் எழுதி ஒரு பணியாள் வாயிலாகக்

கொடுத்தனுப்பினார். பிள்ளையவர்கள் கேட்டது கிடைக்காமல் போகுமா?

ஞானப் பிரகாசம் அவர் கோரிய படியே சாய்வு நாற்காலியை அனுப்பி

வைத்தார். அந்த நாற்காலி பிள்ளையவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்

பயன்பாட்டில் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


பார்வை:

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

சரித்திரம்(முதற் பாகம்)--எழுதியவர்

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள்.

No comments:

Post a Comment