பிரிந்த தலைவன் வருகைக்காகக் கூடல் இழைத்தும் கோடு எண்ணியும்
வருத்திக் கொண்ட தலைவி--கை சிவந்தது--காரியம் கைகூடவில்லை.
களவியல் காதல் நிகழ்த்திய ஒரு தலைவனும் தலைவியும் அறத்தொடு நின்று
(காதலை வெளிப்படுத்தி) வரைவுக்கு(திருமணத்துக்கு)ச் சம்மதம் தெரிவித்துப்
பெற்றோர் மற்றும் உற்றார் முன்னிலையில் திருமணத்தை உறுதிசெய்து கொண்டனர்.
பரியமாக(பெண்ணுக்குரிய பரிசமாக) ஆறு வளையல்கள், மெட்டி(மிஞ்சி) போன்ற
பொன்நகைகள் தலைவிக்கு அணிவித்தல் வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.
(சங்க காலத்தில் வரதட்சணை கொடுக்கும் வழக்கமில்லை. பெண்ணுக்குத்தான்
பரியம் கொடுப்பது வழக்கம்). அக்கால வழக்கப்படி பொன்நகைகளுக்கான பணத்தைத்
தேடிப் பெறுவதற்காக வெளியூர்க்குச் சென்றுவிட்டான்.(இதைத்தான் வரைவிடை
வைத்துப் பொருள் வயின் பிரிதல் என்று அந்நாளில் கூறினர்).
தலைவன் பிரிந்து சென்ற நாள் தொடங்கித் தலைவி சரியாக உண்ணாமலும், உறங்கா
மலும் நிறம் மாறியும் பொலிவு குன்றியும் நடைப்பிணம்போல் திரிந்தாள். வீட்டுக்கு
வெளியே மணலைக் குவித்து அதில் வட்டமாகக் கோட்டை இழைக்க முயற்சிசெய்தாள்.
கோடு இழைக்கும் பொழுது கண்ணை மூடிக் கொள்ளல் வேண்டும். இது முக்கியமான
நிபந்தனை. இதனைக் கூடல் இழைத்தல் என்ற பெயரால் அழைத்தனர். கூடல்
இயைதல், கோடியைதல், சுழியிடுதல், மணற்சுழிச் சோதிடம், அதிசயச் சுழி என்ற
மாற்றுப் பெயர்களும் வழங்கின. கண்ணை மூடிக் கொண்டு கோட்டை இழைக்கையில்
கோட்டின் இரு முனைகளும் ஒன்றாகப் பொருந்தல் வேண்டும். பொருந்தினால்
தலைவன் தலைவி விரைவில் கூடுவர் என்பது அக்கால நம்பிக்கை. தலைவியின்
போதாத நேரம் கோட்டின் இருமுனைகளும் பொருந்தவே பொருந்தாமல் அவள்
மனத்துயரை மிகுதியாக்கியது. அவள் கோட்டை அழித்துப் புதிதாக இழைத்தாலும்
இருமுனைகளும் கூடாமல் அவள் பொறுமையைச் சோதித்தன. அழித்து அழித்துப்
புதிதாகக் கோடு இழைத்து இழைத்து அவள் கை சிவந்து விட்டது. கோட்டின் இருமுனை
களும் பொருந்தவேயில்லை.மேலும் ஒரு கொடுமை என்னவென்றால் தலைவன்
பிரிந்து சென்ற நாள் தொட்டு ஒவ்வொரு நாளும் சுவரில் சிறிய கோடு வரைந்து
அவைகளை நாடோறும் தடவித் தடவி எண்ணிவந்தாள். இதனால் அவளது
மற்றொருகை அதைவிட அதிகமாகச் சிவந்து விட்டது. கைசிவந்ததுதான் மிச்சம். அவள்
எண்ணம் ஈடேறவில்லை. அவள் என்னதான் செய்வாள்? பாடல் பின்வருமாறு:
"புழைத்த கைச்சி றுத்த கட்பெ ருத்த மத்த முகபடாம்
புகர்மு கக்க பால போக போத கத்தின் விரைதரும்
மழைத்த டக்கை மான மீளி கொங்கர் பூபன் வக்கைசூழ்
மலைய வெற்ப கன்று போய்ம றக்க வல்லா தான்வர
விழிக்க டற்கொ ழித்த முத்தம் வடகு நாட்டின் மூழ்கவே
மெய்ப சந்து மையல் தந்து வீதி வாய்ம ணற்சுழித்(து)
அழித்த ழித்த றச்சி வந்த தொருகை மற்ற தொருகையும்
அகன்ற நாள்தொ டங்கி யெண்ணி அதனி னுஞ்சி வந்ததே".
(இது சந்த விருத்தம் ஆதலால் சீர்பிரித்து எழுத வாய்ப்பில்லை.
ஏனென்றால் சீர்பிரித்து எழுதினால் ஓசைநயம் கெட்டுவிடும்).
பொருள்:
துளையை யுடைய கையும், சிறிய கண்ணும், பெரிய மத்தகமும்,
முகபடாமும், புள்ளிகளை யுடைய முகமும், கபாலமும் உடைய
இனிய யானைகளைத் தொகுதியாக வழங்கும், மழைபோலும்
பெரிய கைகளையுடைய கொங்கர் தலைவனாகிய பூபன் என்னும்
வள்ளலின் வக்கை நாட்டைச் சூழ்ந்துள்ள மலைய வெற்பைக்
கடந்து சென்று என்னை மறக்க வல்லவனாகிய தலைவன் தான்வரும்
வரவை எண்ணி விழியாகிய கடல்கொழித்த கண்ணீர் முத்துக்கள்
வடமலையின் உச்சியும் மூழ்குமாறு பெருக, உடம்பு பசலை பூத்து
எனக்கு மயக்கத்தைத் தருவதால், தெருவில் மணலைப் பரப்பி வட்ட
மாகச் சுழி வரைந்து, அச்சுழியின் இருமுனையும் கூடாமையால்
அழித்து அழித்து மீண்டும் சுழித்தலால், ஒருகை சிவந்து விட்டது. மற்றொரு
கையானது தலைவன் பிரிந்த நாள்தொட்டு ஒவ்வொரு நாளையும்
கோடிட்டு எண்ணியெண்ணிச் சிவந்து விட்டது. இனி என்ன செய்வேன்?
இனி, வேறொரு காட்சியைப் பார்ப்போம்:
"வழுதி பதியை மணலில் எழுதி
எழுதி யழித்தோமென்(று) ஏங்கிப்-புழுதிதனை
ஆலிங் கனம்பண்ணி அந்திபட நிற்குமே
காலிங்கன் கப்பற் கரும்பு".
பொருள்:
காலிங்க மன்னனுடைய கப்பலென்னும் நாட்டிற் பிறந்த கரும்பனைய
இத்தலைவி, தன்பதியாகிய வழுதி வந்து கூடுவான் என்று மணலிற்
கூடல் வளைத்துப் பல்கால் அழித்தெழுதியும் கூடல் வாய்க்கப் பெறாமையால்
'ஓம்' என்று அழுது ஏங்கி அம்மணற் புழுதியைக் கட்டியணைத்து, அந்திப்
பொழுது ஆனபின்னும் வருந்திநிற்பாள். இதற்கு என் செய்வது?
பார்வை:
தனிப்பாடல் திரட்டு(முதற்பாகம்)--சரசுவதிமகால் நூலகம் வெளியீடு--உரை
எழுதியவர்: வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி,
தஞ்சாவூர்.
No comments:
Post a Comment