Thursday, 19 July 2018

ஊனத்தை வெல்வோம் உணர்ந்து.

அன்றொரு  நாள்பே ருந்தில்
   அவசரப்  பணிநி மித்தம்
சென்றுகொண்  டிருந்த போது
   தேவதை  போலோர்  நங்கை
பின்புற  இருக்கை  தன்னில்
   பேரழ  கோ(டு)இ  ருந்தாள்;
நின்றதவ்  வூர்தி;  அன்னாள்
நிறுத்தத்தில் இறங்க லானாள்

கையினில் கவைக்கோல்
    தாங்கிக்
   கால்தடு மாற  நின்றாள்;
மெய்யினில் ஒருகால் இல்லை
  வெறும்ஒற்றைக் காலை
    வைத்துப்
பையவே  விந்தி  விந்திப்
   பக்குவ மாய்ந  டந்தாள்;
ஐயகோ இதனைக் கண்ணுற்
 றடியனேன் நொந்துபோனேன்

பின்னர்நான் இறங்கிவிட்டேன்
  பேரன்மார் கேட்ட பண்டம்
இந்நகர்  தனிலே  எங்கே
  இருக்கின்ற தென்று தேடிப்
பன்னரும்  எழிலார் பையன்
பண்டம்விற்றிடநான்கண்டேன்
அன்னவன் தனைநெ ருங்கி
   ஆவலாய்ப் பேச லானேன்.

நல்லதோர் பேச்சால் நாங்கள்
   நனிஇன்பம் பெற்றோம்;
    பின்னர்
மெல்லவே  கிளம்ப  எண்ணி
   விடைகொடு பிள்ளாய்
   என்றேன்;
சொல்லவே  இயல  வில்லை;
சுடர்க்கண்ணில் பார்வை
இல்லை;
வல்லமை மிக்க தெய்வம்
வஞ்சித்து விட்ட தாமோ?.

செல்கின்ற  வழியில் எற்குத்
தெரிந்தவோர் சிறுவன்நின்று
பல்வித விளையாட்டெல்லாம்
 பயின்றிடும் சிறாரைப்
 பார்த்து
மல்கிடும் கண்ணீர் காட்டி
 மௌனமாய் நிற்க லானான்;
தொல்லையாம் செவிட்டுத்
 தன்மை
துயர்சொய்யும்; மறந்தே
 போனேன்.

மேதினி தனிலே நம்மை
  மேன்மையாய் இறைவன்
  செய்தான்;
வேதனை  சிலரே கொள்வர்,
 மேனியில் குறைபா டுள்ளோர்
ஆதலின்  அவர்கள் இஃதை
  அகத்தினில் கொண்டி டாமல்
சாதனை புரிந்து பாரில்
  தக்கவர் போற்ற வாழ்க!

ஒருத்திக்கோ ஒருகால்
  இல்லை;
  உள்ளத்தில் ஊனம் இல்லை
கருத்தினில் சிறந்த காளை
 கண்களில் பார்வை இல்லை
இருசெவி கேளாப் பிள்ளை
  இருக்கின்றான் மனத்தைத்
  தேற்றி;
திருத்தமாய் எல்லாம்
  கொண்டார்
சிந்தையில்  துயரம் ஏனோ?

செவிப்புலன் சிறிதும்
  கேளார்,
 செய்கைக்குக் கைகள்
  இல்லார்,
புவிமிசை கண்கள் இல்லார்,
 புகன்றிடப் பேச்சு இல்லார்,
தவித்திடும் கால்கள் இல்லார்,
 சாதிக்கும் போது நம்மில்
எவ்விதக் குறையும் இல்லார்
 ஏன்மிக  வருந்தல் வேண்டும்?


பின்  குறிப்பு:

மதுரைக்  கல்லூரி, மதுரை
நடத்திவரும்  பழைய மாண
வர்  சங்கத்தின் உறுப்பினர்
என்ற முறையில் எனக்கு
வந்த ஆங்கிலக் கவிதை(
இயற்றியவர் பெயர் தெரிய
வில்லை) யின் கருத்தை உள்
வாங்கிக் கொண்டு தமிழில்
புனையப்பட்ட கவிதை. முழு
மொழிபெயர்ப்பு  அன்று. அச்
சங்கத்துக்கு மிக்க நன்றி
உரித்தாகுக.











No comments:

Post a Comment