Wednesday, 4 July 2018

இல்வாழ்வா? துறவுவாழ்வா?

 இல்வாழ்வா?  துறவுவாழ்வா? எது  நல்லது?

1)சாதலே  வந்த  போதும்
        தரணியே  எதிர்த்து  நின்று
    மோதலே  செய்த  போதும்
        மூண்டெழு  சீற்றம்  பொங்க
    வேதனை  தந்த  போதும்
       வேடிக்கை  புரிந்த  போதும்
    காதலைப்  பாடேன்;  ஆனால்
       கடவுளைப்  பாடு  வேனே!
   
2)மண்ணினைப்  பாடு  கின்றேன்;
மாக்கடல்  பாடு  கின்றேன்;
   விண்ணினைப்  பாடு  கின்றேன்;
        வெற்பினைப்  பாடு கின்றேன்;
   கண்ணினில்  தோன்றும்  நல்ல
காட்சிகள்  பாடு  கின்றேன்;
  பெண்ணினைப்  பாடல்  முற்றும்
பிழையென  எண்ணு  வேனே!

3)இப்படி  யெல்லாம்  பேசும்
        இறுகிய  மனத்தர்  ஓர்நாள்
    செப்பினில்  வடித்த  ஏரார்
சிலைநிகர்  பெண்ணைக் கண்டால்
    தப்படி  அடியேன்  சொன்ன(து)
அனைத்துமே  தப்பு; தப்பே;
   ஒப்புக்கொள்  கின்றேன்  குற்றம்;
    உன்னிடம்  காதல்  என்பார்.

4)அன்பெனும்  வலைக்குள்  ஆண்பெண்
            அகப்படல்  முற்றும்  இந்த
    மன்பதை  போற்றி  வந்த
             வழிவழி  மரபு  நேர்வு;
    மென்மைசேர்  பெண்ணைக்  கண்டு
             விழிகளில்  திகைப்பு  தேங்க
    வன்மைசேர்  ஈர்ப்பால்  ஆணே
             மகிழ்ந்திடல்  இயற்கை  தானே!

5)கயலொத்த  விழியி  ரண்டும்
காரொத்த  கூந்தல்  தானும்
   நயமிக்க  முத்துப்  பல்லும்
நாணத்தில்  செம்மை  காட்டும்
  வியத்தக்க  கன்னம்  மற்றும்
       வெண்ணிலா  முகமும்  இன்னும்
  செயலற்றுத்  திகைக்கச்  செய்யும்
பிறபிற  அழகும்  வாட்டும்.

 (  6  )ஆகவே  இயற்கை  நீதிக்(கு)
            அடங்கியே  வாழு  வீரே!
 நோகவே  உடல்வ  ருத்தும்
துறவிகள்  வாழ்க்கை  வேண்டா;
    தேகத்தின்  சுகத்தைப்  பேணத்
தெரிவைகை  பற்றல்  வேண்டும்;
    ஓகைகொள்  குடும்ப  வாழ்வை
ஒழுக்கமாய்  வாழ்வீர்  மாதோ!
(தெரிவை≠ பெண்;  ஓகை=உவகை--மகிழ்ச்சி)

7)மரபினை  மீறி  மக்கள்
       வாலிப  வயதில்  கன்னி
   கரத்தினைப்  பற்றி  டாமல்
காலத்தைக்  கழித்தல்  நன்றோ?
   வரமெனும்  குடும்ப  வாழ்வை
       மதிப்புடன்  நடத்தி  வந்தால்
  நிரந்தர  இன்பம்  கிட்டும்;
நிலைத்திடும்  அமைதி  தானே!

8)பற்றற்ற  வாழ்வு  தன்னால்
        பயனொன்றும்  இல்லை  பாரில்;
   சுற்றத்தார்  நண்பர்  சூழத்
        தூயநல்  லன்பு  பேணி
  எற்றைக்கும்  எல்லோ  ருக்கும்
இயன்றிடும்  உதவி  செய்து
  மற்றின்பம்  அடைவோம்;  மாந்தர்
வருத்தத்தைப்  போக்கு  வேமே!







No comments:

Post a Comment