Thursday, 13 September 2018

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

புறநானூற்றுப் பாடல் ஒன்று தமிழகத்தின்
இன்றைய தேவையை வலியுறுத்துவதாக
விளங்குகின்றது.  தமிழகத்தின்  இன்றைய
இன்றியமையாத தேவை நீர்மேலாண்மை
யாகும். நீர் மேலாண்மையின்  அவசியத்தைப்
பற்றிக் கூறும்  புறநானூற்றுப் பாடலை ஆய்வு
செய்வோம்.(புறம்:18).

இப்பாடலை இயற்றிய புலவர் குடபுலவியனார்.
பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.
நீர்நிலை பெருகினால் மட்டுமே அறம், பொருள்,
இன்பம்  எல்லாம் கிடைக்கும். "நீர்மையின்றி
உடல் வாழமுடியாது. உடலுக்கு உணவு கொடுத்தால்
மட்டுமே உயிர் நிலைக்கும். உணவு என்பது நிலத்
தால் கிடைக்கும் விளைச்சலும் நீரும் சேர்ந்தது
ஆகும். நிலத்தைப் பேணிப் பாதுகாப்பதும் நீர் வளத்
தைப்பெருக்குவதும்  வேளாண்மைத் தொழிலைச்
செழிக்கச் செய்யும். எவ்வளவு பரந்துபட்ட நிலமாயி
னும் நீர்வளம் இல்லாவிட்டால் புன்செய் என்றே
அழைக்கப்படும். அது அதிகப் பயன் தராது.

"எனவே , பாண்டியனே! இந்தச் செய்தியை எண்ணிப்
பார்த்திடுக!  குளம்தொட்டு(தோண்டி) வளம்பெருக்கி
நின் நாடு முழுவதையும் செழிப்படையச் செய்வாயாக!
இதனைச் செய்தோர் அறம், பொருள், இன்பம் என்னும்
மூன்றையும் பெற்றுப் புகழடைவர்; அல்லாதோர் புகழ்
பெறாது மாண்டுபோவர் என்பதை உணர்வாயாக!"
என்று புலவர் வேந்தர்க்கு அறிவுறுத்தினார்.

உழவுத் தொழில் செழித்தால்தான் நாடும் முன்னேறும்;
மன்னவர்க்குப் பேரும் புகழும் கிட்டும். பிற்காலத்தில்
ஔவையார் ஒரு வேந்தனை வாழ்த்தும் பொழுது "வரப்பு
உயர்க" என வாழ்த்தினார். வரப்பு உயர்ந்தால் நீர்மட்டம்
உயரும்; நீர் உயர்ந்தால் நெல்விளைச்சல் உயரும்; நெல்
விளைச்சல் உயர்ந்தால் குடி உயரும்(குடிமக்கள் வாழ்க்கைத்
தரம் உயரும்); குடிஉயர்ந்தால் கோன் உயர்வடைவான்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்நாட்டு முடி
யுடை மூவேந்தரும் ஏனைய குறுநில அரசர்களும்
ஏரி, குளம், கண்மாய்,கிணறு போன்ற நீர்நிலைகளை
வெட்டுவித்து அவ்வப்பொழுது பாதுகாத்துச் செப்பனிட்டு
வந்தனர். இயற்கையாக உருவான ஆறுகளைத் தூர்வாரிக்
கால்வாய் வெட்டி முறையாகப் பேணிவந்தனர். பெரிய
ஆறுகள் தமிழ்நாட்டில் தோன்றாவிடினும், சிற்றாறுகள்,
கிளை ஆறுகள் நிறையவே உள்ளன. அவைகளைப்
பேணிப் பாதுகாத்தாலே நீர்ப் பற்றாக்குறை ஏற்படவே
ஏற்படாது. ஆறுகளில் அதிக அளவில் மணல் அள்ளாமல்
பார்த்துக் கொள்ளல் வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெருக்
கிடவே எல்லாக் கோவில்களிலும் தெப்பக்குளம் வெட்டு
வித்தார்கள். கரிகால் பெருவளத்தான் காவிரியாற்றை
ஒழுங்குபடுத்தக் கல்லணை கட்டுவித்தார். இனி பாடலைப்
பார்ப்போம்:
"முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து  பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தற்புகழ் நிறீஇ,
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்(து) ஆகநின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக்க தூஉம் இனவாளை,
நுண்ஆரல்,பரு வரால்,
குரூஉக் கெடிற்ற குண்(டு) அகழி;

வான்உட்கும் வடிநீண்மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள!
நீரின்(று) அமையா யாக்கைக்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது  நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான்  நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்(று) ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்(கு)உத வாதே ;அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோரிவண் தள்ளா தோரே."

"ஒலி முழங்கும் கடல்சூழ்ந்த இந்தப் பரந்து
விரிந்த நாட்டைத் தம் அரிய முயற்சியால்
வெற்றிகொண்டு புகழ்பெற்றுத் தாமே
ஒரு குடைக்கீழ் அரசு ஆண்ட வலிமை
உடையவர் பாண்டியர்.அவர் வழியில் வந்த
வனே! கோடிக்குமேலான ஆண்டுகள் நின்
வாழ்நாள் நீடிப்பதாகுக! வாளைமீன்களும்,
ஆரல்களும், வரால்களும்,கெளிறுகளும்
நிறைந்த அகழி சூழ்ந்ததும் வானம் அளாவிய
மதிலைக் கொண்டதும் ஆகிய பழைய ஊரைத்
தலைநகராக உடையவனே! வலிமிக்க வேந்தனே!
நீ மறுமை இன்பத்தை விரும்பினாலும், உலகம்
முழுவதையும் வெல்ல வேண்டுமென நினைத்தா
லும், நிலைபெற்ற புகழை விரும்பினாலும் அதற்குச்
செய்ய வேண்டியவை  யாவை எனக் கேட்பாயாக!".
என்று உரைத்து மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை
இன்றியமையாத கருத்துக் களையும் புலவர் எடுத்
துரைத்தார். நீர் மேலாண்மை மிக மிக அவசியமான
தாகும். அவசரமாகச் செய்யப்பட வேண்டியதும்
ஆகும். தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள்  சுமுகம்
காட்டாமல் வெறுப்பை வெளிப்படுத்திவரும் சூழ்நிலை
யில் புறநானூற்றுப் பாடல் நீர்மேலாண்மையின்
தேவையைத் தெற்றென விளக்குகிறது. மாநில
மக்களும், மாநில அரசும்  அறிஞர் பெருமக்களைக்
கலந்து ஆலோசித்துத் தேவையான நடவடிக்கை
களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.

1 comment: