Tuesday, 1 January 2019

இலக்கியம் காட்டும் புலவிநுணுக்கம்

             தோற்றவர்  வென்றார்.

திருவள்ளுவர் தான் இவ்வாறு  குறிப்பிடுகின்றார். திருக்
குறளில் காமத்துப்  பாலில்  கற்பியலில்  உள்ள கடைசி
மூன்று அதிகாரங்கள்  புலவி, புலவி நுணுக்கம் மற்றும்
ஊடல் உவகை  என்னும் தலைப்புகளைக் கொண்டவை.
இல்வாழ்வில்  கூடல்(ஆணும் பெண்ணும் இணைவது)
எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு ஊடலும்
இன்றியமையாததாகும்.  புலத்தல் என்றால் ஊடுதல்
என்பது பொருளாகும். அதாவது,  கணவன்- மனைவிக்குள்
உருவாகும் பிணக்கு அல்லது மனத் தாங்கல் அல்லது
செல்லச் சண்டை என்று எடுத்துக் கொள்ளலாம். ஊடல்
இல்லாவிட்டால் இல்வாழ்வு சுவைக்காது. திருவள்ளுவர்
"துனியும்  புலவியும்  இல்லாயின்  காமம்
கனியும்  கருக்காயும்  அற்று." (குறள்: 1306)
என்று கூறியுள்ளார். துனி என்பது பெரும் பிணக்கை
யும் புலவி என்பது அளவான பிணக்கையும் குறிக்கும்.
துனி மிகக் கனிந்து பதங்கெட்ட பழம் போன்றது. புலவி
பக்குவமான கனி போன்றது. புலவி இல்லாமை கருக்
காய் போன்றது. அதனால் கனி போன்ற புலவி அவசியம்
என்று கூறினார்.

இனி, திருக்குறளில் ஊடல் எவ்வாறு சித்திரிக்கப்  பட்டுள்
ளது என்று பார்ப்போம்.
"உள்ளினேன்  என்றேன்மற்(று) என்மறந்  தீர்என்று
புல்லாள்  புலத்தக்  கனள்."(குறள்:1316)
பொருள்:
கணவன் கூற்று: உன்னை நினைத்தேன் என்றேன்.
உடனே, அவளை நான் மறந்திருந்து  தற்போது நினைவு
படுத்திக் கொண்டதாகக் கருதி இடையில் என்னை
ஏன் மறந்தீர்?' என்று கூறிவிட்டு என்னைத் தழுவ வந்த
அவள் தழுவாமல்  ஊடல் கொண்டுவிட்டாள்.  கணவன்
எக்குற்றமும் செய்யாத போதும் குற்றம் இழைத்ததாகத்
தானே மனத்தில் கற்பித்துக் கொண்டு செல்லக் கோபம்
காட்டுவதுதானே ஊடல்.

இனி, கம்பராமாயணத்தில்  கம்பர் சித்திரிக்கும் ஊடற்
காட்சியைக் காண்போம். 
பால காண்டம், பூக் கொய் படலம்:
"மைதாழ் கருங்கண்கள் சிவப்புற வந்து தோன்ற
நெய்தாவும் வேலானொடு நெஞ்சு புலந்துநின்றாள்;
எய்தாது  நின்றம் மலர்நோக்கி எனக்கிது ஈண்டக்
கொய்துஈதி என்றோர் குயிலைக் கரம் கூப்புகின்றாள்".
இது அன்றாடம் வீடு தோறும் நடக்கின்ற நிகழ்வை
நினைவு படுத்தும்.  கணவன்- மனைவிக்குள் சிறு
பிணக்கு ஏற்படும் பொழுது தமக்குள் பேசிக் கொள்ளாமல்
தம் குழந்தை மூலமாகப் பேசிக் கொள்வார்கள். அது
போலவே இங்கு ஒரு காட்சி நடக்கிறது.  
பொருள்: நெய் பூசப் பெற்ற வேலேந்திய தன் கணவ
னோடு யாது காரணத்தாலோ(ஊடலுக்குத்தான்
காரணமே தேவையில்லையே!) நெஞ்சம் புலந்து
நின்ற  ஒருத்தி மை தீட்டப்பட்ட கரிய கண்களில்
செந்நிறம் வந்து தோன்ற( அதாவது சினந்து)  நின்றாள்.
தனது கைகளுக்கு எட்டாமல் இருந்த மலரைக் கண்டு
அதனை விரும்பினள். கணவன் அவள் அருகேதான்
வீற்றிருந்தான். இருப்பினும் ஊடல் காரணமாக, 
அவனிடம் வேண்டாமல் பக்கத்தில் ஒரு மரத்தில்
தங்கியிருந்த ஒரு குயிலைப் பார்த்துக்  கரம்கூப்பி
அம்மலரைப்  பறித்துத்  தருமாறு  மிகக் கெஞ்சி
வேண்டிக் கொண்டாள். ஊடல் நேரத்தில் உயர்திணை,
அஃறிணை  என்ற பாகுபாடு கூடத் தோன்றவில்லை.
இதில் கவனிக்கத் தக்க செய்தி என்னவென்றால்
நெய் பூசிய வேலைக் கைக்கொண்டவன்,  கண்மைபூசிய
மனைவியிடம் பணிய வேண்டியுள்ளது. 

"கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி  பணிந்தபின் இரங்கின்று"
பொருள்: தலைவன் கூப்பிய கையொடு தலைவியின்
பாடகம்(ஒருவித அணிகலன்--பாதத்தில் அணிவது)
அணிந்த அவளது சிறற்றடியில்  வணங்கிய பின்பு
அவள் நெஞ்சு நெகிழ்ந்தது.
"அணி வரும் பூச்சிலம்(பு)  ஆர்க்கும் அடிமேல்
மணிவரை மார்பன்  மயங்கிப்---பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய்  சிறுவரை
நிற்கென்றி  வாழியர்  நீ".
பொருள்: அழகு மிகும் பொலிவுடைய சிலம்பு ஆரவாரிக்கும்
அடிகளிலே  மலைபோன்ற  மார்பையுடையவன் கலங்கி வணங்கி
னாலும சிறிது நேரம் ஊடல் தீராது நிற்பேன் என்று  சொல்வாயாக".
புறப்பொருள் வெண்பாமாலை --பாடல் எண்:322.

அவ்வளவு வல்லமை யுள்ளவன் இந்த மெல்லியலாளிடம்
தோற்றுத்தான் போவான். தோற்றால்தான் இல்லறத்
தில் வெற்றிபெற முடியும்.  ஊடலில் கணவன் தோற்றால்
அடுத்து நிகழவிருக்கும் கூடலில் வெற்றிபெற முடியும்.
எனவேதான்  திருவள்ளுவர் தோற்றவர் வென்றார் என்றார்.
"ஊடலின் தோற்றவர்  வென்றார்; அதுமன்னும்
கூடலிற்  காணப் படும்".(குறள்: 1327)
பொருள்: ஊடலில் தோற்றவரே  வென்றவராவர். அவ்வெற்றி
ஊடல் தீர்ந்தபின் கூடி மகிழ்தலில் அவரால் மிகுதியாக
அறியப்படும்.

ஊடலில்  கவனமாக இருக்க வேண்டிய செய்தி என்னவென்
றால் அதை அளவாகக் கையாள வேண்டும் என்பதுதான்.
சரியான நேரத்தில் ஊடலை நிறுத்திவிட வேண்டும். இல்லை
யெனில்  வெறுப்பு உருவாகி நாளடைவில் பிரிவுக்கும் வழி
வகுத்துவிடும். எனவேதான் திருவள்ளுவர் திருக்குறளில்
"உப்பமைந்  தற்றால்  புலவி; அதுசிறிது
மிக்கற்றால்  நீள விடல்"(குறள்:1302) என்று பாடியுள்ளார்.
உணவில் உப்பை அளவோடு சேர்ப்பது போல இல்வாழ்வில்
புலவி என்னும் ஊடலை அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.
இறுதியாக ஒரு செய்தி.
"ஊடுதல் காமத்திற்(கு) இன்பம்; அதற்கின்பம்
கூடி  முயங்கப்  பெறின்".(குறள்:1330)
காமத்திற்கு இன்பமாவது  ஊடுதலாகும்.  ஊடல் நீங்கிக்
கணவன்-மனைவி கருத்தொன்றி  இணைசேர்ந்தால்,
அப்புணர்ச்சியே  ஊடலுக்கு  இன்பமாகும்.





No comments:

Post a Comment