Wednesday, 26 December 2018

அகமா? புறமா? எது சிறந்தது?

அகமா?  புறமா?  எது  சிறந்தது?

அகமும்  புறமும்  தமிழ்ப்பண்பை
   அழகாய்  இயம்பும்  கூறுகளாம்;
நகமும்  தசையும்  போல்,ஆண்,பெண்
   நடத்தும் வாழ்க்கை  அகமாகும்;
வெகுண்டு  பகைவர்  தமையெதிர்த்து
   வீர மாகப்  பொருதல்,புறம்;
தகைமை  சான்ற  இப்பகுப்பே
   தமிழர்  புகழும்  இலக்கியமாம்.

வையம்  முழுதும்  வீரத்தை
  வணங்கிப்  புகழ்ந்த  காலமது;
நையும்  மேனி  துவண்டாலும்
  நமனே  எதிர்த்துப்  பொருதாலும்
செய்யும்  போரில்  பின்வாங்கார்;
  செத்தால்  நடுகல்  நிறுவி,மக்கள்
தெய்வம்  போலத்  தொழுதிடுவர்;
  சிறிதும்  தயக்கம்  காட்டாரே.

"போரில்  வீர  மரணமுற்றார்,
   புகுவர்  துறக்கம்,  நிச்சயமாய்;"
பாரில்  மக்கள்  இவ்வாறு
    பறைதல்  வழக்கம்;  ஆதலினால்
நேரில்  யானை  பிளிறிடினும்
    நெஞ்சை  நிமிர்த்தி  எதிர்த்திட்டார்;
ஊரில்  மக்கள்  புகழ்வரென
  ஒப்பில்  வீரம்  காட்டினரே.

சண்டை  தனிலே, போர்செய்யும்
  சமயம்  மார்பில்  புண்,காயம்
உண்டா  கும்;போர்க்  காயத்தை
  உயர்வாய்  மதிப்பர், பொதுமக்கள்;
அண்டும்  பகைவர்  தமைக்கண்டே
  அஞ்சி  யோடிப்  புறங்கொடுக்கின்
மண்டும்  வார்த்தை  யாற்சுடுவர்;
  மானம்  காற்றில்  பறந்திடுமே.

வீரம்  என்னும்  போதையினால்
  விளைந்த  சேதம்  ஏராளம்;
தாரம்  பல்லோர்  கணவர்களைச்
  சமரில்  இழந்து  விதவையெனும்
பேரைப்  பெற்றுச் சீரழிந்தார்;
  பிள்ளை, தமையன், பெற்றவனைப்
போரில்  இழந்து  பெண்டிர்பலர்
  புலம்பி  யழுது  புரண்டனரே.

உலகம் முழுதும்  இதேநிலைதான்;
  உரம்சேர்  வீரக்  களிவெறியால்
பலதே  சத்தின்  மாந்தர்களும்
 பகைத்துப்  போரில்  அழிந்தனரே;
அலகில்  அழிவைத்  தடுத்திடத்தான்
  அறிஞர்  காதல்  உணர்வுகளைத்
தலைமைப்  பண்பாய்  முன்மொழிந்தார்;
  சற்றே  வீரம்  சரிந்ததுவே.

இனிய  தமிழில்  புறப்பொருளை
  இரண்டே  நூல்கள்  எடுத்தியம்பும்;
கனிபோற்  புறநா னூறு, மற்றும்
  கவரும்  பதிற்றுப்  பத்துமவை.
நனிஇன்  பத்தை  நல்குகின்ற
  நற்றி  ணைபோல்  பலநூல்கள்
தனித்த  சுவைசேர்  அகப்பொருளைச்
  சாற்றும்  வகையில்  தோன்றினவே.

காதல்  வீரம்  இவையிரண்டில்
  காதல்  சற்றே  உயர்வுடைத்தாம்;
மோதல் , சண்டை, தவிர்த்திடலாம்;
 மூளும்  போரை  விலக்கிடலாம்;
தீதில்  அன்பைப்  பரப்பிடுவீர்;
  தேவை  யிலாத  போர்,தவிர்ப்பீர்;
ஆத  லாலே  காதலினால்
  அனைவர்  மனத்தைக்  கவர்வீரே.

தேவை  யின்றி  வீரத்தைச்
   சிறிதும்  காட்ட  எண்ணாதீர்;
சாவை  நல்கும்  போரினைத்தான்
   தவிர்க்க  வேண்டின்  மாந்தரெலாம்
பூவை  யொடுவாழ்  இல்லறத்தைப்
  பொலிவாய்  நடத்தி  உய்ந்திடுதல்
தீர்வை  யளிக்கும்; அகவாழ்வைச்
  சிறக்க  வாழ்வீர்  புவியோரே!

நமது  நாட்டைக்  காப்பதற்கு
  நயஞ்சேர்  வீரம்  அவசியம்தான்;
அமைதி  குலைந்து  போர்மூண்டால்
  அழிவும்  இழப்பும்  ஏராளம்;
சமுகம்  மக்கள் தொகையிழப்பால்
  சந்திக்  கின்ற  சிக்கல்பல;
கமழும்  காதல்  அகவாழ்வால்
  காணும்  நன்மை  பலப்பலவே.

மனைவி  யொடுவாழ்  அகவாழ்வால்
 மக்கள்  தொகையைப்  பெருக்கிடலாம்;
நினைக்கும்  அமைதி  நிலவிடுமே;
  நேர்மை  யில்லாப்  பிறநாட்டார்,
தினையின்  அளவும்  நம்நிலத்தைத்
  திருட்டுத்  தனமாய்  அபகரிக்க
வினைகள்  செய்தால், மும்மடங்கு
  வீரம்  காட்டி  முறியடிப்போம்.

அருஞ்சொற்  பொருள்:
பொருதல்--போர்புரிதல்; நமன்---யமன்;
துறக்கம்--சொர்க்கம்; அண்டும்--நெருங்கும்;
புறங்கொடுக்கின்--புறமுதுகு  காட்டினால்
சமர்--போர்; பூவை--பெண்டிர்
தகைமை--மேன்மை;








   

1 comment: