பண்டைத் தமிழகத்தின் செல்வச் செழிப்பு.
பண்டைய தமிழ்மக்கள் பல்வேறு தொழில்கள் புரிவதிலும்
வாணிகம் செய்வதிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.
வாணிகம் என்பது உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு
வாணிகத்தையும் குறிக்கும். வெளிநாட்டு வாணிகத்தை
மேற்கொள்வதற்காகக் கடற்பயணத்தை மேற்கொண்டார்கள்.
கடற்பயணத்துக்காக நாவாய் என்னும் கலம் உருவாக்கினார்கள்.
காற்று எந்தத் திசையில் வீசுகிறது? அதன் வேகமென்ன? ஆமை
கைக்கொள்ளும் வழித்தடங்கள் எவை?போன்ற சகல நுட்பங்களையும்
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ வேந்தர்கள் தெரிந்து வைத்
திருந்தனர். புறம் 66ஆம் எண் பாடல் வெண்ணிக் குயத்தியார்
கரிகாற் பெருவளத்தான் மீது பாடியது. அதில் கரிகாலனின் முன்
னோர் கடற் காற்றின் நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள் என்று
பாராட்டியுள்ளார். அவ் வரிகள்பின் வருமாறு:
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"
சோழரைப் போலவே சேர, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களும்
இந்த நுட்பத்தை அறிந்திருந்தனர். எனவே தம் மக்களை ரோமானிய,
கிரேக்க, எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சீன, மற்றும் பிற நாடு
கருடன் வாணிகம் செய்யுமாறு ஊக்கினர். வாணிகர்களுக்குக்
கடற் கொள்ளைக் காரர்களால் இன்னல்கள் நிகழ்ந்த போது
தம் கடற்படை வீரர்களை அனுப்பிப் பாதுகாப்பு அளித்தனர். இதனால்
வெளிநாட்டு வாணிகம் செழித்தது. தமிழ்நாட்டில் செல்வம் குவிந்தது.
ரோமானிய, கிரேக்க வணிகர்கள் யவனர் எனப்பட்டனர். அரபு
நாட்டைச் சேர்ந்தவர்கள் சோனகர் எனப்பட்டனர். ஏனைய நாட்டினர்
மிலேச்சர் எனப்பட்டனர். ரோமானிய மற்றும் கிரேக்க நாட்டினர்
பொன்னொடு வந்து கறியொடு(மிளகு) சென்றார்கள்.மேலும் முத்து,
மஸ்லின் துணி, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள் தமிழ்
நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து
கண்ணாடி, மது வகைகள், நறுமணத் திரவியங்கள், சாடிகள், சூது
பவளங்கள், மணிவகைகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன.
அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ரோமா
னியரும் கிரேக்கரும் பொன்னைக் கொட்டிக் குவித்தார்கள். ரோமானிய
அரசனிடம் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் "நமது நாட்டுச் செல்வம்,
குறிப்பாகப் பொன், தமிழ்நாட்டுடனான வாணிகத்தால் பறிபோகிறது;
அரசுக் கருவூலம் காலியாகிறது. தமிழ்நாட்டுடனான வாணிகத்தைக்
குறைத்துக் கொள்க" என்று எச்சரித்ததாகத் தகவல் உண்டு. எனவே தான்,
பெரிய அளவில் தங்கச் சுரங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத நிலையிலும்
பொன் இங்கே அதிகமாக மக்களிடம் புழங்கியது. முத்தொள்ளாயிரம்
என்னும் இலக்கியத்தில் பாண்டிய நாட்டைப் புகழும் போது
"பார்படுப செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நால்" என்று விவரிக்கிறது.
அவ்வளவு செம்பொன் வருவதற்குக் காரணம் கொற்கை முத்தாகும்.
கொற்கைப் பட்டினத்தில் கடற்கரையில் கடல் அலை குவிக்கும் முத்துக்கள்
செல்வர் ஏறி வரும் குதிரைகளின் குளம்புகளுக்குள் மாட்டி அவைகளின்
நடமாட்டத்துக்கு இடையூறாக அமைந்துவிடும். பா.எ. அகம்.296--10.:
"இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கையம் முன்றுறை"
மேலும், அங்கு உப்பு விளைவிக்கும் உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்
களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகட்கு விளையாட்டுக் காட்டுவர்.
"நளிநீர் முத்தம் வாள்வாய் எருத்தின்
வயிற்றகத்தடக்கி உமட்டியர் புதல்வரொடு
கிலிகிலி ஆடும்..........",சிறுபாணாற்றுப்படை பா.எ.62.
சேர, சோழ, பல்லவர்க்கு மிளகு, ஏலம், கிராம்பு, தேக்கு, அகில், மஸ்லின்
துணி போன்ற பொருட்களால் செல்வம் வந்து குவிந்தது.
சோழ மன்னன் பராக்கிரம பாகு என்பவன் ஆறையெனும் பகுதியை
ஆண்டுவந்தவன். அவனது செல்வச் செழிப்பை ஒரு புலவர் எவ்வாறு
விவரித்துள்ளார் என்று பார்ப்போம்:
"பூழியர் சோரப் பொருப்பினுள் வானவர் போய்மறைய
ஆழி எறிந்த பராக்ரம பாகுவின் ஆறையிலே
மேழிகொள் மள்ளர் மடைதோ றடைப்பதும் வெண்தரளம்;
கோழிகள் சீய்க்கும் தெருத்தொறும் மாணிக்கக் குப்பைகளே".
பொருள்: பாண்டியர் சோர்ந்து போகவும், சேரர்கள் ஒளிந்து
கொள்ளவும் நன்முறையில் ஆறையெனும் பகுதியில் ஆட்சி
நடத்தும் பராக்கிரம பாகு என்னும் சோழனின் நாட்டிலே கலப்பை
ஏந்தும் மள்ளர்கள் வாய்க்காலை வெண்மையான முத்துக்களால்
அடைப்பார்கள்; தெருக்கள் தோறும் மாணிக்கங்கள் குப்பையிலே
கொட்டப்பட்டுக் குவிந்து கிடக்கும் அவற்றைக் கோழிகள் கிளறும்.
(மேழி=கலப்பை; சீய்க்கும்=கிளறும்). பண்டைத் தமிழகத்தில்
செல்வம் கொழித்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
No comments:
Post a Comment