Wednesday, 24 November 2021

பிரிவுத் துன்பம்.

 பிரிவுத் துன்பம் போல் தொல்லைதரும் பிறதுன்பம் ஏதுமுண்டோ?


காதலன்-காதலி இடையே நிகழ்வதாயினும், கணவன்-மனைவி இடையே

நிகழ்வதாயினும் பிரிவு  எல்லையற்ற மனவுளைச்சலை உருவாக்குகிறது.

அகப்பொருள் இலக்கணத்தில் நான்கு விதமான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

1.பொருள் ஈட்டுவதற்கான பிரிவு 2.தூது நிமித்தமான பிரிவு 3.போருக்குச்

செல்ல நேர்ந்தமையால் பிரிவு 4. பரத்தையர் உறவால் பிரிவு.


பிரிவால் விளையும் துன்பம் சொல்லொணாதது. திருவள்ளுவர் தம் திருக்குறளில்

,"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்."(குறள்:1160)

பிரியும்பொழுது உருவாகும் துன்பத்தால் வருந்துவதையும் தவிர்த்து, பிரிந்தபின்

அப்பிரிவையும் தாங்கிக்கொண்டு அதன்பின்னும்  பற்பல மகளிர் உலகத்தில்

உயிர்தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.


இலக்கியங்களில் பிரிவுத்துன்பம் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்று காண்போம்:

குறுந்தொகை ஆறாம் பாடலில் புலவர் கயமனார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

"நள்ளென்(று) அன்றே யாமம், சொல்அவிந்(து)

இனி(து)அடங்  கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே".

காதலனைப் பிரிந்து வாடும் தலைவி புலம்பிப் பாடுகின்றாள்:

"பிரிவால் வாடும் காதலர்க்குப் பகையாய் விளங்குவன இரவுப்

பொழுதும் நிலவின் ஒளியும் ஆகும். நள்ளிரவு நேரம்; ஊர் மக்கள்

பேசுதல் நீக்கி(சொல் அவிந்து) அடங்கினர். என் பிரிவுத் துன்பத்

தைப் பற்றிக் கவலை கொள்ளாத மாக்கள்(ஆற்றாமையிலும், சினத்

திலும் தோய்ந்து உழலும் அவள் மக்களை மாக்கள் என்ற சொல்லால்

குறிப்பிடுகின்றாள்) எந்தவிதமான கவலையும் இன்றித் துயில்கின்

றனர். இந்த அகன்ற பெரிய உலகத்தில் நான் ஒருத்திதான் உறக்கம்

கொள்ளாமல் விழித்துக் கொண்டிருக்கின்றேன். ஏனையோர் அனை

வரும் ஆழ்துயிலில் ஈடுபட்டுள்ளனர்."🎂

இதே கருத்து திருக்குறளில் பயின்று வந்துள்ளது.(குறள்:1168):

"மன்னுயிர் எல்லாம் துயிற்றி யளித்திரா

என்னல்ல(து) இல்லை துணை".

"இரவுப் பொழுது பரிதாபமாகக் கழிகின்றது. மற்ற எல்லா உயிர்களையும்வவஒ

உறங்கவைத்துவிட்டதனால், இரவு முழுவதும் துயிலாதிருந்த என்னைத்

தவிர வேறு எந்த  ஒரு துணையும் இல்லாதிருக்கின்றது."


இனி, சிலப்பதிகாரத்தில் பயின்றுவரும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

"பையுள் நோய்கூரப் பகல்செய்வான் போய்வீழ

வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை!

மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை."

"பிரிவுத் துன்பமாகிய நோய் மிகுதி ஆகக் கதிரவனும் மேற்கில் மறைய

நாட்டில் உள்ளோரெல்லாம் நல்லுறக்கம் கொள்ள மனத்தை மயக்கும்

மாலைப் பொழுதே நீ தோன்றியுள்ளாய். மாலைப் பொழுது நீதான் என்

பது மெய்யென்றால், என்னைத் திருமணம் செய்து பின் இரக்கமின்றிப்

பிரிந்துசென்றவர் அவர்தான் என்பது உண்மையானால் இந்த உலகம்

துன்பத்தில் துடிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் செய்ய இயலாது.

அத்தகைய துன்பத்துக்குக் காரணமான மாலையே நீ வாழ்க!"


இனி, இடைக் காலப் புலவர் ஒருவர்(பெயர் தெரியவில்லை) இயற்றிய

பாடலை நோக்குவோம்:

பொருள் ஈட்டுவதற்காகச் சென்ற தலைவன் வினை முடிந்து ஊர்க்குத் 

திரும்பும் பொழுது தன் காதலி பிரிவுத் துயரால் வாடி வதங்கி நொந்து

நொம்பலப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பாள் என எண்ணி

வானில் உலவும் மேகங்களை அழைத்துத் தான் வந்து கொண்டிருக்கும்

செய்தியைச் சொல்லிச் செல்லுமாறு தெரிவிக்கின்றான்.பாடல் பின்வருமாறு:

"விண்வழியே ஓடுகின்ற மேகங்காள்! ஒருவார்த்தை

விளம்பிச் சேறீர்,

மண்வழியே புகழ்நிறுத்தும் மகதேச வாணன்தன்

        வரையிற் சென்றால்

கண்வழியே முத்தொழுகக் கைவழியே சங்கொழுகக்

         காமன் எய்த

புண்வழியே உயிரொழுக வரும்வழியே பார்த்திருக்கும்

         பூவை  யார்க்கே."

"விண்வழியே ஓடுகின்ற மேகங்களே! மகதேச வாணனின் மலைவழியே

செல்லும் பொழுது அவ்வூரில் கண்வழியே முத்து முத்தாகக் கண்ணீர்

உகுத்தும், கைவழியே சங்கு வளைகளை நெகிழவிட்டும், காமன் மலர்க்

கணையால் எய்த புண்வழியே தன் உயிரை இழந்தும் வாழ்ந்துவரும்  என்

காதலியைச் சந்தித்து அவளிடம் நான் ஊருக்குத் திரும்பிவரும் செய்தியைச்

சொல்லிவிட்டுச் செல்க."


பிரிவுத் துன்பம் மிகக் கொடுமையானது. ஊண், உறக்கத்தைக் கெடுத்துவிடும்.

மேனியை வாடச்செய்யும். மேனி நிறத்தை மாற்றிப் பசலைநிறம் அடையச் செய்

யும். கண்ணீர் சொரிய வைக்கும். தேம்பித் தேம்பி அழவைக்கும். இத்துயரம்

போக்கும் ஒரே மருந்து மீண்டும் காதலனை/கணவனைச் சந்திப்பது தான்.


 ஆடவர் போர்செய்தற் பொருட்டோ, பொருளீட்டுதல் பொருட்டோ, கல்வி

 கற்றல்  பொருட்டோ  வேறு ஊர்களுக்குச் செல்ல நேரிடும். அப்பொழுது

தலைவன் தலைவியைப் பிரிவது இயற்கை. வேறு ஊருக்குச் சென்ற 

தலைவன் தலைவியை நினைத்து ஏங்கினாலும் ஒருவாறு மனத்தைத்

தேற்றிக்கொண்டு எந்தப் பணிக்காக வந்தானோ அந்தப் பணியில் ஈடுபட்டுப்

பிரிவுத் துயரை ஆற்றிக் கொள்வான்.


 ஆனால் தலைவிக்கோ வேறு பணி

ஏதும் இல்லாததால் தலைவனைப் பற்றியும் அவனொடு கழித்த இன்பமான

பொழுது களைப் பற்றியும் சிந்தித்துச் சிந்தித்து  மென்மேலும் துயர் கொள்வாள்.

பொழுதைக் கழிப்பது மிக மிகத் தொல்லையாக விளங்கும். இதனால்தான்

திருவள்ளுவர் தமது 1269 ஆம் குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்:

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்  தேங்கு  பவர்க்கு."

பொருள்:

நெடுந்தொலைவு சென்ற தம் தலைவர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை

ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்  தலைவிக்கு அக்குறிப்பிட்ட நாள்

வரும்வரை ஒவ்வொரு நாள் கழிவதும் பலநாட்கள் கழிவது போலத் தோன்றும்.

சேண்=தொலைவு.


தனிப்பாடல் திரட்டிற் காணப்படும் ஒரு பாடலில் தலைவிக்கு ஒருநாள் கழிவது

ஐந்து உகம்(யுகம்) கழிவது  போலத்தோன்றியதாம். பாடலைப் பார்ப்போம்:

"கொத்தலரும் தாரான் குலசேக ரன்கூடல்

பத்தி இளங்கமுகின் பாளைதொறும்--தத்திவரும்

தாளஞ்  சுகமே!  தலைவர்  தமைப்பிரிந்த

நாளஞ்  சுகமே நமக்கு."

பொருள்:

கொத்துக் கொத்தாகப் பூத்த  மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்திருக்கும்

குலசேகர பாண்டியனின் கூடல் நகரில் சோலையிலுள்ள இளம் பாக்கு

மரப் பாளைகளில் தத்தி விளையாடும்  அழகிய கால்களையுடைய கிளியே!

(தாள் + அஞ்சுகம்= காலையுடைய கிளி). எம் தலைவர் எம்மைப் பிரிந்து

சென்றுள்ள காரணத்தால் ஒவ்வொரு நாள் கழிவதும் ஐந்து யுகம் கழிவது

போல நீண்டு தோன்றுகின்றது.(நாள் + அஞ்சு+ உகம்,). புலவரின் வார்த்தை

விளையாட்டைக் கவனிக்கவும். தாள் அஞ்சுகமே!(கிளியே!) ஒவ்வொரு நாள்

கழிவதும் ஐந்து யுகம் கழிவது போலத் தோன்றுகிறது(நாள் + அஞ்சு ,+ உகம்).

பிரிவுத் துயரம் மிகக் கொடுமையானது; அதைப் புலவர் வருணிப்பது மிகத்

திறமையானது.

No comments:

Post a Comment