தமிழக மீனவரின் தணியாத துயரம்.
"இந்தியத் திருநாடே! ஏன் இந்தப் பராமுகம்?"--மக்கள்.
கடலன்னை வளர்த்தெடுக்கும் கண்ணியம்சேர் பெருமக்கள்
உடலாலும் உளத்தாலும் உரமிகுந்த பரதவர்கள்;
இயற்கைத்தாய் விளைவிக்கும் இடி,மின்னல்,ஆழிஅலை
அயர்வடையச் செய்துவிடும் அடைமழை,சூ றாவளியாம்
இத்தனையும் எதிர்கொள்ளும் எங்கள்தமிழ்த் தொல்குடியர்
நித்தநித்தம் சிறீலங்காக் கடற்படையால் துயரடைவர்;
அன்றாடம் அன்னவரால் அவதியுறும் மீனவர்க்கு
நன்றாகத் துணைசெய்ய நலம்நாடும் அரசில்லை;
கையகல இலங்கைசெயும் கள்ளமிகு செயலையெல்லாம்
மையப்பேர் அரசாங்கம் கண்டிப்ப தேயில்லை;
கண்டும்கா ணாததுபோல் கடமைசெயல் நன்றாமோ?
விண்டுரைப்பார் யாருமிலர்; வேதனைதீர்ப் பாருமிலர்;
இரவுபகல் பாராமல் இருங்கடலில் மீன்பிடிப்போர்
"வரம்பெல்லை தாண்டிவந்தார்; வலை,படகைப் பறித்திடுவோம்;"
எனவுரைத்தே இலங்கையர்கள் எள்ளளவும் இரக்கமின்றி
அனைவரையும் கைதுசெய்வர்; அடிதடியில் இறங்கிடுவர்;
மீன்களையும் பறித்திடுவர்; வலைகளையும் அறுத்தெறிவர்;
ஏனென்று கேட்பவரைத் துப்பாக்கி யால்சுடுவர்;
இன்றைக்கு வரையிலுமே எண்ணூறு நபர்வரையில்
கொன்றழித்த தீமைமிகு குள்ளநரி சிறீலங்கா;
தமிழகத்து மீனவரைத் தயக்கமின்றிக் கொல்வதற்குத்
திமிர்பிடித்த இலங்கையர்க்குத் துணிவெங்ஙன் வாய்த்ததம்மா?
எக்கொடுமை நேர்ந்திடினும் இந்தியநல் அரசாங்கம்
தக்கபடி உதவாது; சற்றேனும் வருந்தாது.
பாரதத்தின் புறக்கணிப்பால் பாதகர்கள் சிங்களவர்
கோரமிகு கொடுஞ்செயலைக் குதுகலித்து நிகழ்த்துகின்றார்;
இந்தியராம் செந்தமிழர் இடர்கண்டும் இரங்காமல்
மந்தமாய் வினையாற்றும் மையத்துப் பேரரசு;
எழுகோடி அபராதம் எனச்சொன்ன சிங்களவர்;
அழுதழுது கெஞ்சிடினும் அதைவிலக்க வேயில்லை;
"படகுகளை நாட்டுடைமை யாக்கிடுவோம்" எனச்சொல்லி
உடனடியாய்ச் சட்டத்தை உருவாக்கி இடர்செய்வர்;
தமிழ்நாட்டுக் குரியகச்சத் தீவுதனைக் கையளித்தோம்;
உமிழ்கின்றார் வெறுப்பினையே; ஒருநாளும் நன்றிசொலார்.
எத்தனையோ ஆண்டுகளாய் இராசேந்தி ரன்போன்றோர்
வித்தைபல புரிந்த,வங்க விரிகுடா தனிலின்று
சிற்றெலியை ஒத்தசிறு சிங்களவர் சுற்றிவந்து
குற்றங்கள் இழைக்கின்ற கொடுமையினை என்னசொல்ல?
பாரதத்துக் கடற்படையார் பராமுகத்தைக் காட்டுவதால்
சீரழியும் மீனவர்க்குச் சிறிதளவும் பயனில்லை;
தெரிந்தபகை நாடான செஞ்சீனா, பாக்கித்தான்
உரிமையுடன் இலங்கையர்க்கே உதவிசெய்து பயமுறுத்தும்;
மற்றவர்கள் துன்பத்தில் வலியவந்து பங்குகொண்டே
உற்றநல்ல உதவிசெயும் உணர்வுடைய பரதவர்கள்
துயரடையும் போதெவரும் துணைசெய்ய வந்திலரே;
அயர்வடையும் போதெவரும் அவர்கண்ணீர் துடைத்திலரே!
பரதவர்க்குக் கைகொடுத்துப் பக்கபல மாகநிற்போம்;
அரவணைத்தே அன்னவர்க்காய் ஆதரவுக் குரல்கொடுப்போம்;
அண்டைநட்பு நாடெனவே ஆதரிக்கும் பாரதமே!
சண்டையிட வேண்டா; நீர் தவறுசுட்டிக் காட்டிடுவீர்.
சேட்டைசெயும் சுண்டைக்காய்த் தேசத்தை எச்சரிப்பீர்!
வாட்டமுறும் மீனவர்கள் வாழ்வாதா ரம்காப்பீர்!
நங்கச்சத் தீவுதனை நயமாக மீட்டெடுப்பீர்!
சிங்களவர் கொட்டத்தைத் திட்டமிட்டே ஒடுக்கிடுவீர்!
ஓயாத துன்பத்தில் உழல்கின்ற மீனவரைத்
தாயாகக் காப்பீரே, சார்ந்து.
(பராமுகம்=பாராமுகம்; கவனிப்பு இல்லாமை)
கரிகால் சோழனைப் புகழந்த வெண்ணிக்குயத்தியார் என்ற
புலவர் புறம். 66ஆம் பாடலில் குறிப்பிட்டது:
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"
(முந்நீர்=கடல்; நாவாய்= கப்பல்; வளிதொழில்= காற்றின் செயல்பாடு)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 'வளிதொழில்' நுட்பத்தை
அறிந்து கடலில் ஆதிக்கம் செலுத்திய இனம் தமிழினம். இராச
ராசனும், இராசேந்திரனும் கடலாதிக்கத்தில் உச்சத்தைத் தொட்டவர்கள்.
இப்படிப்பட்ட நம்மைச் சுண்டைக்காய்த் தேசமான சிறீலங்கா இரண்டு
அல்லது மூன்று கப்பல்களை வைத்துக்கொண்டு மீனவரைத் துன்புறுத்து
வதும், கொலை செய்வதும் மிகப் பெரிய கொடுமைகள். இதுவரையில்,
எண்ணூறு மீனவர்களுக்குமேல் கொன்று குவித்துள்ளனர். இது
தொடர்பாக இந்தியத் திருநாடு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல்
மெளனம் கடைப்பிடிப்பது புரியாத புதிராகவுள்ளது. ஏனிந்தப் பாராமுகம்
காட்டுகின்றனர்? என்பது விளங்கவில்லை.
No comments:
Post a Comment