Wednesday, 27 August 2025

மானம் காத்த மைந்தர்.

 தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்-நீரோ டுலாவிவரும்

நெல்லை.


மதுரைக்குக் கிழக்கே ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில்

அமைந்துள்ள சிற்றூர் வேம்பற்றூர்(வேம்பத்தூர்--மக்கள் வழக்கு). சங்க

காலம் முதல் அண்மைக் காலம்வரை தமிழ்ப் புலவர்கள்/கவிஞர்கள்

வாழந்துவந்த  சீரூர். வேம்பற்றூர்க் குமரன் என்னும் சங்கப் புலவர்

இவ்வூரைச் சேர்ந்தவர் எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். சிலேடைப்

புலி என்ற அடைமொழிக்குரிய பிச்சுவையர், வேம்பு ஐயர் முதலான

பிராமண குலத் தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர். முறையாகத் தமிழ் இலக்கிய,

இலக்கணங்களைக் கற்றுப் புலமை யடைந்து தமிழ்நாட்டிலுள்ள

வள்ளல்கள், பெருநிலக்கிழார்கள், சமீன்தார்கள், மருது சகோதரர்கள்,

இராமநாதபுரம் சேதுபதிகள் முதலான பிரபுக்களின் முன்பு புலமையையும்

திறமையையும் வெளிப்படுத்திப் பரிசில், நிலக்கொடை போன்றவற்றைப்

பெற்றவர்கள். இவ்வூரைச் சேர்ந்த பெருமாளையர் என்ற தமிழறிஞர்

திருநெல்வேலிக்குச் சென்று அங்குள்ள பெருநிலக்கிழார்களின் ஆதரவைப்

பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.


திருநெல்வேலிப் பிரபுக்கள் தூண்டுதலால் வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்

இயற்ற முடிவுசெய்தார். உயிரெழுத்துக்கள், மொழிக்கு முதலாக வரத்தகுதியுள்ள

உயிரமெய்யெழுத்துக்கள் இவைகளில் ஒவ்வொன்றை எடுத்துப் பாடலின் முதலில்

வருமாறு அகப்பொருள் துறைப் பாடலைப் பாடுவது வருக்கக் கோவையாகும்.

எடுத்துக்காட்டாக, மாறன் வருக்கக்கோவை, பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலானவை.

நூலை இயற்றி முடித்தவுடன் பெருமாளையர் இதனை அரங்கேற்றம் செய்யத் திட்ட

மிட்டார்.


அதன்படி, திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீசாலிவாடீசுவரப் பெருமான் சந்நிதியில்

அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழன்பர்கள் குழுமியிருந்தனர்.

பெருமாளையரின் மாணவர்களில் ஒருவர் நூலின் முதற் பாடலான காப்புச்

செய்யுளைப் படித்து முடித்தார். பாடல் பின்வருமாறு:

"தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும்

நீரோ(டு) உலாவிவரும் நெல்லையே!---காரோடும்

கந்தரத்தர் அந்தரத்தர்; கந்தரத்தர் அந்தரத்தர்;

கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு".

மாணவர் படித்தவுடன் கூட்டத்திலிருந்த அரைகுறைத் தமிழறிவு கொண்ட ஒருவர்

எழுந்து  "தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும்

நெல்லை எனப் பாடப்பட்டுள்ளது. தேரோடும் வீதியில் அவ்வாறு நடைபெறுகிறதா?"

என்று ஐயம் எழுப்பினார். மாணவர் அருகில் அமர்ந்திருந்த நூலாசிரியர் பெருமாளையர்

திகைத்துப் போனார். தமது பாடலில் குறை காணும் தகுதியுள்ள புலவர் திருநெல்வேலியில்

இல்லை என்று நம்பினவர் மனக்கிலேசத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

மேடையில் வீற்றிருந்த அறிஞர்கள் யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல்

அமைதியாய் இருந்தனர். உரைநடை வேறு; கவிதை வேறு. உரைநடையில்

சொல்லப்பட்ட செய்திகளுக்கு நேரடியாகச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே

பொருள் கூறிடலாம். ஆனால் கவிதை அப்படிப்பட்டது அன்று. அதற்கு, எதுகை,மோனை,

சீர், தளை, அடி, தொடை, அணி முதலான கூறுகள் உண்டு. அவைகளுக்கும் கட்டுப்பட்டே

கவிதையை இயற்ற முடியும். பொருள் கொள்ளும் முறைக்கும் இலக்கணம் உண்டு.

தொல்காப்பியம் நான்கு விதமான பொருள் கொள்ளும் முறைகளை விவரிக்கிறது.

நன்னூல் எட்டுவிதமான முறைகளைக் கூறுகிறது. " சுரை ஆழ, அம்மி மிதப்ப" என்ற

சொற்றொடரில் அப்படியே படித்துப் பொருள்கொண்டால்  மிகத் தவறாகும். மிதக்கும்

தன்மையையுடைய சுரையை நீரில் மூழ்கும் என்று பொருள்கொள்வது நகைப்புக்கிடமாகும்.

அதுபோலவே, அம்மி மிதப்ப என்ற சொற்றொடரும் தவறாக மாறும். நாம் இந்தச் 

சொற்களை மாற்றியமைத்துக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அதாவது,

"சுரை மிதப்ப, அம்மி ஆழ" என்று மாற்றிப் பொருள் கொள்ளவேண்டும். இதுபோன்ற

விதிவிலக்குகள், சலுகைகள் கவிதை படைப்பவர்களுக்கு உள்ளன.. மேலே கண்ட

காப்புச் செய்யுளிலும்  "தேரோடும் வீதியெலாம்" என்பதோடு நிறுத்திப் பொருள்

கொள்ளல் வேண்டும். "செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும் நெல்லை"

என்று படித்துப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, வீதியெல்லாம் தேரோடுகிறது;

தாமிரபரணி ஆற்று நீரிலே செங்கயலும் சங்கினமும் உலாவி வருகின்றன. இப்படியாகத்

தனித்தனியாகப் படித்துப் பார்த்தால் எப் பிழையும் வர வாய்ப்பில்லை. ஐயம்

எழுப்பியவர் தமிழிலக்கணம் முழுமையாகப் படித்திருந்தால் இந்த ஐயம் தோன்றியிராது.

அவர் கிளப்பிய ஐயத்தால் மனமுடைந்து போன நூலாசிரியர் பெருமாளையர்

அரங்கேற்ற நிகழ்வைத் தள்ளி வைத்துவிட்டார். நூல் அரங்கேற்றம் செய்யப்படவில்லை.


ஆண்டுகள் உருண்டோடின. பெருமாளையருக்கு ஒரு தவப்புதல்வன் பிறந்தான்  அவன்

தகப்பனாரைப்போலவே தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்

புலமையடைந்தான். ஒருநாள் தகப்பனார் எழுதிய வருக்கக் கோவை நூலைப் பரணிலே

கண்டு தன் தாயாரிடத்திலே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டறிந்தான்.

தானே இந்நூலை அரங்கேற்றம் செய்து தகப்பனார்க்கு நேர்ந்த இழி சொல்லைத் 

துடைத்தெறிய முடிவெடுத்தான். அதன்படி ஸ்ரீஅனவரத நாயகர் சந்நிதியில் அரங்கேற்றம்

ஏற்பாடு செய்யப்பட்டது. காப்புச் செய்யுளை ஒரு மாணவர் மூலமாகப் படிக்கச்செய்து

முதல் இரண்டு அடிகளில் யாதொரு பிழையும் இல்லை என்று நிறுவினான். பின்

இரண்டு அடிகளில் பயின்று வரும் மடக்கு(யமகம்)எனப்படும் சொல் அலங்காரத்தை

விளக்கலானான்:

காரோடும்=கருநிறம் பரவிய(அமுதம் பெறக் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால

                      நஞ்சை உண்டதால் கழுத்தில் கருநிறம் பரவியது).

கந்தரத்தர்=கந்தரம்=கழுத்து(நீல கண்டர்)-கறுத்த கழுத்தையுடையவர்.

அந்தரத்தர்=அந்தரம்= ஆகாயம்; ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவர்.

கந்து+அரத்தர்=கந்து=பற்றுக் கோடு=பற்றுக்கோடாகிய செம்மைநிறமுடையவர்.

அந்தரத்தர்= அம்+தரத்தர்=அம்=நீர்= திருமுடியில் நீரைத் தாங்கியவர்(நீர்=கங்கை);

கந்தரத்தர்=கந்தர்+அத்தர்=முருகக் கடவுளின் தந்தையானவர்.

அந்தரத்தர்=அம்+தரத்தர்= அழகிய தகுதியை உடையவர்.

முழுப் பாடலின் பொருள்:

நெல்லையில் வீதியெலாம் தேரோடும்; தாமிரவருணி யாற்று நீரினிலே செங்கயலும்

சங்கினமும் உலாவிவரும். அந்த நெல்லைப் பதியில் கருநிறம் பரவிய கழுத்தை

உடையவரும், ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவரும், பற்றுக் கோடாகிய

செம்மை நிறமுடையவரும், திருமுடியில் கங்கையைத் தாங்கியவரும், முருகக்

கடவுளின் தந்தையானவரும்,  அழகிய தகுதியை உடையவருமான சிவபெருமான்

காவல் புரிந்து வீற்றிருக்கின்றார். அவர் நமக்குக் காப்பாக விளங்குகிறார்.


பார்வை: "நான் கண்டதும் கேட்டதும்"

                   நூலாசிரியர்: டாக்டர் உ.வே.சா.

Sunday, 10 August 2025

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில் மூதேவி ஏன்பிறந்தாள் முன்?

 சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?


அந்தகக்கவி வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள

பூதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். பிறவியிலேயே கண்பார்வை

யற்றவராக உதித்த போதும் "ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகர்" ஆனார். பூதூரில் பிறந்தாலும் வாழ்ந்த ஊர்

பொன் விளைந்த களத்தூராகும். பல வள்ளல்களாலும்  ஈழத்து மன்னர்

பரராச சிங்கம் என்பவராலும் ஆதரிக்கப் பெற்றவர். பல சிற்றிலக்கியங்களையும்

தனிப்பாடல்களையும் இயற்றியவர்.


ஒருமுறை திருவேங்கடம் என்னும் வள்ளலிடம் பாடிப் பரிசில் பெற எண்ணிச்

சென்றிருந்தார். திருவேங்கடம் புலவர்களைப் பேணுபவர். தாராளமாகப்

பரிசில்கள் வழங்குபவர். ஆனால் அவருக்கு ஒரு தமையன் இருந்தார்  அவர்

தமிழ்ப் பற்றோ, புலவர்களைப் பாராட்டும் எண்ணமோ இல்லாதவர். புலவர்

களுக்குப் பரிசில் கொடுப்பதைத் தடுக்க முயல்பவர். புலவர் பாடி முடித்தவுடன்

தன் இளவல் திருவேங்கடத்திடம்  "சிறிய அளவில் பரிசிலைக் கொடுத்தனுப்பு;

பெரிதாக எதுவும் கொடுத்துவிடாதே" என்று புலவரின் காதுபடவே கூறினார்.

வள்ளலின் தமையன் பெயர் கண்ணுக்கினியான். ஆனால் அவர் யாருக்கும்

இனியவராக நடந்துகொண்டதே இல்லை. தமையனின் சொற்களைப் பொருட்

படுத்தாத வள்ளல் திருவேங்கடம் புலவருக்குத் தம் வழக்கப்படியே தாராளமாகப்

பரிசில் கொடுத்துச் சிறப்புச் செய்து அனுப்பிவைத்தார். திரும்பும் பொழுது

புலவர் ஒரு பாடலைத் தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்:

"தேன்பொழிந்த வாயான் திருவேங்  கடத்துடனே

ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே--வான்சிறந்த

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?"

செம்மையான திருப்பாற்கடலில் மிகவும் சிறப்புடைய சீதேவிக்கு முன்னதாக

மூதேவி பிறந்ததைப் போல, கனிவு மிக்க வள்ளல் திருவேங்கடத்தாருக்கு

முன்னவனாகக் கண்ணுக்கினியான் பிறந்துள்ளான்.


ஒருமுறை புலவர் வழக்கமாகத் துணைக்கு வரும் சிறுவனோடு வெளியூர்

செல்ல நேர்ந்தது. பயணத்தில் களைப்பும் சோர்வும் ஏற்படின் புசித்துப்

பசியாறக் கைவசம் கட்டுச் சோற்று மூட்டையையும் சிறுவனிடம் கொடுத்துக்

கொண்டுவரப் பணித்திருந்தார். வெய்யில் கடுமையாகக் கொளுத்தியதால்

ஒரு பெரிய ஆலமரநிழலில் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று நினைத்து

 இருவரும் மரத்தடியில் அமர்ந்தனர். அப்பொழுது இதமான தென்றல் வீசியதால்

இருவரும் சற்றே கண்ணயர்ந்து விட்டனர். ஒரு நாழிகை கடந்த பின்னர்

தூக்கம் கலைந்து எழுந்த புலவர் சிறுவனையும் எழுப்பி விட்டுக் "கட்டுச் சோற்று

மூட்டையைப் பிரி; உணவுண்போம் என்றார்". துயிலெழுந்து உட்கார்ந்த சிறுவன்

"ஐயா! கட்டுச் சோற்றை நாய் உண்டுகொண்டிருக்கிறது" என்று அலறினான்.

புலவருக்கும் மிகுந்த மனவேதனை வாட்டியது. தன் வேதனையை ஒரு பாடலில்

கொட்டித் தீர்த்தார்:

"சீராடை யற்ற  வைரவன் வாகனம் சேரவந்து

பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாரா யணனுயர் வாகன மாயிற்று; நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே".

பொருள்:

சீராடையற்ற வைரவன் வாகனம்=கீளைத் தவிர(கோவணம்) வேறு நல்ல ஆடையை                                                              உடுத்தியிராத   பைரவரின் வாகனம் நாயாகும்.

சேரவந்து                                             =நெருங்கி வந்து.     

நான்முகன் வாகனம்                         =அன்னம்(உணவு--இங்கே கட்டுச் சோறு)

நாராயணன் உயர் வாகனம்.          =பருந்து.

மை வாகனன் -மை=ஆடு; ஆட்டை வாகனமாகக் கொண்ட                                 =நெருப்புக் கடவுள்(அக்னி).

தெளிவுரை:

தாமும் உதவிக்கு வந்த சிறுவனும் கண் அயர்ந்திருந்த நேரத்தில்

பைரவரின் வாகனமான நாய் ஒன்று நெருங்கி வந்து, பிரம்மாவின்

வாகனமான அன்னத்தை(அன்னப் பறவையன்று--உணவு-கட்டுச்சோறு)ப்

பற்றிக் கௌவி நாராயணனின் வாகனமான பருந்தைப் போல விரைவாக

ஓடி மறைந்துவிட்டது. ஆட்டை வாகனமாகக் கொண்ட தீக்கடவுள்

(அக்னி) எம் இருவர் வயிற்றைப் பற்றிக் கொண்டனன். பசி வயிற்றைப்

பிராண்டியது.

Friday, 1 August 2025

ஐந்திணை ஐம்பது.

 ஐந்திணை ஐம்பது.


மாறன் பொறையனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

இது பதினெண்கீழ்க்கணக்கு என்ற பிரிவிலுள்ள பதினெட்டு நூல்களில்

ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டவை

யல்ல. சங்கம் மருவிய காலத்தில்(சங்ககாலம் முடிவடைந்த பிற்பாடு இயங்கிய

காலம்) இயற்றப்பட்டது என்று புலவர்கள் கருதுகின்றனர். இது அகப்பொருளைப்

பற்றிப் பாடும் நூல். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில்

திணைக்குப் பத்துப் பாடல்கள்  என்ற கணக்கில் மொத்தமாக ஐம்பது பாடல்களைக்

கொண்டு திகழ்கிறது. இதில் குறிஞ்சித்திணையில் காணப்படும் ஓரினிய

பாடலைக் காண்போம்::

"கொடுவரி  வேங்கை  பிழைத்துக்கோட்   பட்டு

மடிசெவி  வேழம்  இரீஇ---அடியோசை

அஞ்சி  யொதுங்கும்  அதருள்ளி  ஆரிருள்

துஞ்சா  சுடர்த்தொடி  கண்".

திணை: குறிஞ்சி; துறை: இரவுக்குறி வந்து திரும்பும் தலைவனைக் கண்ணுற்று

நின்ற தோழி வரைவு(திருமணம்)  கடாயது(புரிந்து கொள்ளும்படி கோரியது).

இரவுக்குறி: காதலர்கள் இரவில் பிறர் அறியாமல் சந்தித்துக் கொள்ளும் இடம்.

பாடல் எண்16.

பொருள்:

வளைந்த வரிகளையுடைய வேங்கைப் புலியாலே பிடிக்கப்பட்டுப் பெரும்

போராட்டத்துக்குப் பின்னர் ஒருவாறு தப்பிப் பிழைத்த, மடிந்த முறம் போன்ற

காதுகளைக் கொண்ட யானையானது, அஞ்சிப் பின் வாங்கித் "தான் நடப்பதால்

கிளம்பும் ஒலி புலிக்குக் கேட்டுவிடக்கூடாது என்ற உதறலில் மெல்ல நடந்து

செல்லும் அச்சுறுத்தும் வழியையுடைய காடு அது.  தலைவியுடன் கலந்துரையாடித்

திரும்பிச் செல்லும் போது  ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புண்டு. இந்த எண்ணம்

உதித்ததால் ஒளியுடைய வளையலை அணிந்த தலைவிக்குத் தூக்கம் வரவேயில்லை.

இவ்வாறாக  அவளை அச்சத்துக்கு ஆளாக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ வழிசெய்க.

அதற்காக, மேற்கொண்டு கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ளத்

தேவையான முயற்சிகளைச் செய்தல் சாலவும் நன்று.  இவ்வாறாகத் தோழி

தலைவனிடம் வற்புறுத்திக் கூறினாள்.


காட்டில் திரியும் விலங்குகளின் இயல்பையும், நடந்துகொள்ளும் முறையையும்

மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. யானை

பருத்த உடலையும், கூரிய கொம்புகளையும்  கொண்டிருந்தாலும் புலி பாய்ந்து

தாக்கும்போது அஞ்சிப்பின்வாங்கும். புலிக்கு ஊக்கமும் மனவலிமையும்

யானையை விடவும் அதிக அளவில் உள்ளன. எனவே, உரமும் வலிமையும்

உடைய யானை தன்னை விடவும் வலிமை குறைந்த புலியால் கொல்லப்படும்

வாய்ப்புண்டு. களிறு என அழைக்கப்படும் ஆண் யானையே அஞ்சும் பொழுது

பிடி என அழைக்கப்படும் பெண் யானையைப் பற்றிப் பேசவே வாய்ப்பில்லை.

ஆனால் மதங்கொண்ட யானை புலியுடன் மூர்க்கமாகப் போராடி வெல்லும்.

சங்க இலக்கியத்தில் யானை--,புலி இவைகட்கிடையே நிகழ்ந்த சண்டைகளைப்

பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் புலி யானையைக் கொன்ற

தாகவும், சிலவற்றில் யானை புலியைக் கொன்றதாகவும் குறித்துள்ளனர்.

"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்"  (திருக்குறள் எண்: 599)

என்ற குறளில் யானையின் ஊக்கமின்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

(வெரூஉம்=அஞ்சி நடுங்கும்).


இனி, ஐந்திணை எழுபது என்னும் நூலில் காணப்படும் ஊக்கமுடைய யானை

யைப் பற்றிய பாடலைப் பார்ப்போம்:

இந்நூலை இயற்றியவர் மூவாதியார் என்னும் புலவர்.

துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது உரைத்தது.

பாடல் எண்:37; திணை: பாலை.

"கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி

கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டும்;

நெடுவரை அத்தம் இரப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்கும் சுரம்."

பொருள்:

தலைவி தோழியிடம் கூறியது:

"தோழியே! புலியானது பாய்ந்ததால் தன் துணையான பிடியைப்

பறிகொடுத்து அச்சமடைந்து அப்பால் போய் மாவிலங்குமரம்

வாடிநிற்கும் பாறைதளுக்கிடையில் உள்ள வழியில் நிற்கும்

களிறு(ஆண் யானை) தன் துணையான பெண் யானையைக்

கொன்ற புலியினது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.

இத்தகைய பாலை நிலத்திலுள்ள நீண்ட மலைத்தொடர்களைக்

கொண்ட அரிய வழியில் நம்மைப் பிரிந்து தலைவன் கடந்து

போவாரோ?".