Wednesday, 10 September 2025

பயறணீச்சுரம் என்ற உடையார் பாளையம்..

 பயறணீச்சுரமென்ற உடையார் பாளையம்.


தமிழ்நாட்டிலுள்ள பழைய ஜமீன்களுள் உடையார் பாளையம்

ஒன்று. வீரத்துக்கும் தியாகத்துக்கும் கல்விக்கும் பெயர்பெற்ற

பல ஜமீன்தார்கள் இதனை யாண்டு இங்கு புகழை நாட்டியிருக்

கிறார்கள். இவ்வூருக்குப் பயறணீச்சுரமென்னும் பெயர் முன்பு

வழக்கிலிருந்தது. மலைநாட்டின்கண் திவாகரபுரமென்னும்

ஊரிலிருந்த வணிகர் ஒருவர் அங்கிருந்து மிளகுப் பொதிகளை

மாடுகளின்மேல் ஏற்றிக் கொணர்ந்து சமவெளியிலிருந்த சோழ

நாட்டிலும் அருகிலிருந்த பிற நாடுகளிலும் வணிகம் புரிந்து வந்தார்.

ஒருசமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்துக்குப் போனார். அந்நாளில்

விருத்தாசலத்தில் ஒரு சுங்கச்சாவடி யிருந்தது. மிளகுப் பொதிக்கு

அதிக வரி விதிக்கப்படுவது வழக்கம். வரியைக் குறைக்க, மிளகுப்

பொதிகளைப் பயறு மூட்டைகள் என்று பொய் சொல்லிச் சாவடியைக்

கடந்து சென்றார். விருத்தாசலத்தை அடைந்த அவர் அங்கு மூட்டைகளை

அவிழ்த்துப் பார்த்தால் மிளகே காணப்படவில்லை. பதிலாக, பயறு தான்

எல்லா மூட்டைகளிலும் இருந்தது. தாம் பொய் சொன்ன காரணத்தால்

பழமலைநாதர் தண்டித்து விட்டாரோ? என்று பதறித் துடித்தார். அப்பொழுது

"கெட்ட இடத்திலே போய்த் தேடு" என்றொரு அசரீரி கேட்டதாகவும் அதன்படி

பயறணீச்சுரத்துக்குவந்து பயறணிநாதரிடம்  மனமுருகி வேண்டிக்கொண்டதாகவும்

அதன்பின்னர் தெய்வத்தின் திருவருளால் பயறெல்லாம் பழையபடி மிளகாக

உருமாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது.


இந்த ஊரையாண்ட ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய

பெயரையும், காலாட்கள் தோழ  உடையார் என்னும் பட்டப் பெயரையும்

உடையவர்கள். தங்கள் படைகளுடன் இங்கு தங்கிய காரணத்தால் இந்த

ஊர் உடையார் பாளையம் என்று அழைக்கப்படலாயிற்று. இவர்களுடைய

முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்த காரணத்தால்

கச்சி என்னும் அடைமொழி பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது.

பல வீரர்களுக்குத் தலைவர்களாகிய விசயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும்

போரில் உதவி புரிந்தவர்கள் ஆதலால் " காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப்

பெயர் இணைந்து கொண்டது.


விசயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரசிம்மராயர் என்னும் அரசருடைய ஆட்சிக்

காலத்தில் காஞ்சிபுரத்தில் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் என்பவர் பாளையக்

காரராக ஆண்டுவந்தார். அவருக்குப் பின் அவர் மூத்த மகன் பெரிய நல்லப்ப

உடையாரும், அவருக்குப் பின் அவர் தம்பி சின்ன நல்லப்ப உடையாரும்  பாளையக்

காரர்களாக ஆட்சி செய்தனர். சின்ன நல்லப்ப உடையார் சிதம்பரம் நடராசப் பெருமான்

மீது பக்தி கொண்டவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர்

காலத்தில் சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயர் என்னும் பெரியவரிடம்  உபதேசம்

பெற்றவர். ஒருமுறை தீர்த்த யாத்திரை செல்ல எண்ணிய நல்லப்ப உடையார்

சிதம்பரத்துக்குச் சென்று நடராசரைக் கண்டு வணங்கிய பின் தம் குரு நமச்சிவாயர்

ஆசியும் பெற்று வேதாரண்யம் நோக்கிப் பயணப்பட்டார். அன்று வழியில் ஒரு

சிவாலயத்தையும், அதனருகே அமைந்துள்ள தடாகத்தையும் கண்டு அவ்விடத்திலேயே

தங்கினார். நல்ல தூக்கத்தில் அவர் கனவில் சிவபெருமான் தோன்றியதாகவும் அவ்

வூரையே தலைநகரமாக மாற்றிக்கொள்ளுமாறு கூறியதாகவும சொல்லப்படுகிறது.

அதன்படியே அவ்வூரில் அரண்மனையை எழுப்பித் தம் படை, பரிவாரங்களை வரவழைத்து

அவ்வூரில் நிலையாகத் தங்கச்செய்தார். அவ்வூரே உடையார்பாளையம் என் அழைக்கப்

படுகிறது. நல்லப்ப உடையார் பல அரசர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தார்.

முஸ்லீம் படையெடுப்புக் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காமாட்சியம்மன் சிலை, வரத

ராசர் சிலை இங்கே கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. உடையார் பாளையத்துக்குச்

சென்றால் அச்சமின்றி இருக்கலாம் என்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்துவந்தது. புலவர்கள் நல்லப்ப உடையாரைப் பாராட்டிப் பாடல்கள் இயற்றினர்.


அவர் காலத்துக்குப் பின் பல ஜமீன்தார்கள் பட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் காட்டைத் திருத்தி நாடாக்கினர். அதனால் உடையார்

பாளையத்துக்கு வருவாய் குவிந்தது. ஜமீன்தார்கள் பற்பல அறச்

செயல்கள் செய்தனர். ரங்கப்ப உடையார் என்னும் ஜமீன்தார்

தமிழ், வட மொழிகளில் புலமை மிக்கவராகத்  திகழ்ந்த போதிலும்

ஞானியைப் போல் பற்றற்ற மனநிலையில் ஆட்சி நடத்தினார்.

துறவுகொள்ள விரும்பித் தம் மகன் யுவரங்க உடையாரிடம் ஆட்சிப்

பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தவம்புரியலானார்.


உடையார் பாளையத்தில் ஆட்சிபுரிந்த ஜமீன்தார்களிலேயே யுவரங்க

உடையார் புகழ் மற்றவர்களை விஞ்சி நிற்கிறது. அவர் தமிழில் நிகரற்ற

புலமையுடன் திகழ்ந்தார். வடமொழியிலும், இசையிலும் மிகச்சிறந்த

பயிற்சி பெற்றிருந்தார். தமிழ்ப் புலவர்களாயினும், வடமொழி விற்பன்னர்க

ளாயினும், இசை மேதைகள் ஆயினும் , யுவரங்க உடையாரிடம் தம் திறனை

வெளிப்படுத்திப் பரிசில் பெறுவதையே இலக்காகக் கொண்டிருந்தனர்.

யுவரங்க உடையார் பயறணீச்சுரத்து அம்மன் மீது நறுமலர்ப் பூங்குழல்

நாயகி மாலை என்னும் சிற்றிலக்கியம் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல்:

"தனந்தரு வாய்கல்வி கற்கும் அறிவொடு சாந்தமிகு

மனந்தரு வாய்நின்னைப் போற்றும் தகைக்குவண் சாதுசங்க

இனந்தரு வாய்நின் திருநோக்கம் வைக்க இலங்குறும்ஆ

னனந்தரு வாய்நல் நறுமலர்ப் பூங்குழல் நாயகியே!"

(இலங்குறும் ஆனனம்=விளங்கும் முகம்; ஆனனம்=முகம்).

ஒரு புலவர் திருவரங்கருக்கு இணையாக யுவரங்கரை ஒப்பிட்டுப்

பாடியுள்ளார். பிடல் பின்வருமாறு:

"கச்சி யுவரங்கன், காவேரி அந்தரங்கன்,

இச்சகத்தில் என்றும் இரண்டரங்கர்--மெச்சுறவே

இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பான் என்றெண்ணி

அந்தரங்கன் கண்ணுறங்கி னான்."


இதைவிடவும் ஒரு புலவர் யுவரங்கர் மட்டுமே முழுத் தாதா

(வள்ளல், கொடையாளி) ஏனையோர் வீசம், அரைக்கால், கால்,

அரை மற்றும் முக்கால் அளவுக்கு வள்ளல்/கொடையாளி ஆவர்

என்று உரத்துப் பாடியுள்ளார். பாடல் பின்வருமாறு:

" சந்திரன்வீ  சம்குமணர் அரைக்கால் தாதா;

   சவிதாவின் கான்முளையே  கால்தா தாவாம் 

இந்தெனும்வாள் நுதலாள்தன் பாகத்(து) 

   எம்மான்

     ஈசனையே அரைத்தாதா என்ன லாகும்;

வந்(து)இரக்கும் முகுந்தனுக்(கு)ஈ  முக்கால்  

     தாதா

மாவலியே எனப்பெரியோர் வழங்கு வார்கள்;

இந்திரனாம் கச்சியுவ ரங்க மன்னன்

    என்றுமுழுத் தாதாவென்(று) இயம்ப லாமே.

(குறிப்பு: தாதா என்னும் சொல் தந்தை, தாத்தா, பெரியோன்,

கொடையாளி, பிரமன் முதலான பொருளைத் தரும். தற்காலத்தில்

அச்சொல் லுக்கு வேறுவிதமான அர்த்தம் கொள்கின்றனர்).

பாடலின் பொருள்:

பதினாறு கலைகளையுடைய நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு கலையே

சூரியனுக்குத் தருவதால் வீசம் அளவு கொடையாளி. தம் தலையையே புலவருக்குத்

தானமாகக் கொடுக்க முன்வந்த குமணர் அரைக்கால் அளவுக்கு வள்ளல்;

ஏனெனில் உடலில் எட்டில் ஒரு பங்கு தலையாகும். அதாவது அரைக்கால் அளவே

கொடை தர முன்வந்தார். அதனால் அரைக்கால் கொடையாளி யாவார்.

சவிதாவின் கான்முளை--சூரியனின் மகனான கர்ணன் ஒரு நாளில் 15

நாழிகை மட்டுமே கொடை கொடுப்பார். அதனால் கால் அளவு கொடையாளி.

பிறை நிலவு போன்ற நெற்றியையுடைய பார்வதியை இடப்பாகத்தில்

கொண்ட சிவபெருமான் அரைக் கொடையாளி. மகாபலி சக்கரவர்த்தியிடம்

வாமன உருவத்தில் வந்து யாசித்து மூன்றடி மண்ணைக் கொடையாகப்

பெற்றார் விஷ்ணு. மகாபலியின்கொடை முக்கால் கொடையாகும். ஆனால்,

இந்திரனைப் போன்ற பாளையக்காரரான யுவரங்கர் முழுக் கொடையாளி

என்று உறுதியாகச் சொல்லலாமே.


உடையார் பாளையத்தில் யுவரங்க உடையாருக்குப் பின் பற்பல ஜமீன்தார்கள்

ஆண்டனர். பிற்பாடு ஜமீன்தாரி முறையை ஒழித்து விட்டார்கள். உடையார்

பாளையம் சரித்திரத்தில் யுவரங்க உடையார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.


பார்வை:

'நல்லுரைக் கோவை'(இரண்டாம் பாகம்)--நூலாசிரியர் டாக்டர் உ. வே.சாமிநாதையர்.

No comments:

Post a Comment