Wednesday, 31 December 2025

மயூரகிரிக் கோவை.

 மயூரகிரிக் கோவை.


மயூரகிரி என்னும் பெயர் மயில்மலையாகிய குன்றக்குடியைக்

குறிக்கும். இந்த நூலை இயற்றியவர் சாந்துப் புலவர் ஆவார்.

இவர் குழந்தைக் கவிராயர் என்றும் வாலகவீசுவரர் என்றும்

அழைக்கப்பட்டார். இவர் மருதுபாண்டியருக்குப் பிடித்தமான

புலவர். பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய நோயான

இராஜப் பிளவை வந்து மிகுந்த தொல்லை கொடுத்தபொழுது

குன்றக்குடி முருகனைக் குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர்

திருநீறிட்டுக் குணமாக்கியதால் முருகனைப் போற்ற  எண்ணிய

மருது பாண்டியர் கேட்டுக்கொணடதனால் சாந்துப் புலவர் இந்த

மயூரகிரிக் கோவை பாடியதாக வரலாறு பேசுகிறது.


இராமநாதபுரம் சமஸ்தானப் புலவராக விளங்கியவர் சிறுகம்பையூரில்

வாழ்ந்த சர்க்கரைப்பலவர். இவர் நெட்டிமாலைக் கவிராயர் என

அழைக்கப்பட்ட ஆதி சர்க்கரைப்புலவர் வழித்தோன்றல். இந்தப் புலவர்

வழியில் பலர் சர்க்கரைப்புலவர் என்ற பெயரைத் தாங்கி வாழ்ந்தனர்.

கி. பி. 1645இல் இராமநாதபுரத்தை ஆட்சிசெய்த இரகுநாத சேதுபதி

என்ற திருமலைச் சேதுபதி காலம் முதல் இராமநாதபுர சமஸ்தானத்தில்

அரசவைப்புலவர்களாகத் தொண்டு புரிந்துவந்துள்ளனர். 


சிறுகம்பையூர்ச் சர்க்கரைப்புலவர், மருதுபாண்டியர்கள் சேதுவுக்குச்

செல்லும் வழியிலமைந்துள்ள கலியநகரிக்குச் சில அறப்பணிகளுக்காக

வரப் போவதாக அறிந்து மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்திக்க

எண்ணினார். பெரியவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குக்

கையுறை வழங்கி வணங்குவது மரபு. கையுறையாகச் சித்திரகவி

எழுதிய ஏட்டை வழங்க முடிவுசெய்து அதன்படியே அட்டநாகபந்தம்

என்ற அமைப்பில் ஒரு கவிதையை இயற்றி யதனை ஏட்டில் வரைந்து

ஆயத்தப்படுத்தினார். (சித்திர கவி என்பது ஒரு சித்திரம் வரைந்து

சிறுசிறு கட்டங்களை உருவாக்கி அக்கட்டங்களுக்குள் கவிதையை,

ஒரு கட்டத்துக்கு ஒரு எழுத்து என்ற முறையில் நிரப்புவதாகும். சித்திரம்

தேர், முரசு, வேல், நாகம், தேள், மயில் போன்ற ஏதாவது ஒரு வடிவத்தில்

எழுதப்படும். இதில் என்ன வியப்பு என்றால் கவிதை 70 எழுத்துகளைக்

கொண்டிருந்தால் சித்திரத்தில் நிரப்பப்படும் பொழுது 63 எழுத்துகளிலேயே

கவிதை முடிந்துவிடும். ஏனென்றால் ஒருவரியிலுள்ள எழுத்துகள் ஏற்கெனவே

வேறு வரிகளில் வருவதனால் அந்த வரி எழுத்துகள் மிச்சமாகும். இந்த

வகைக் கவிதை இயற்ற மிகவும் கடினமானது. சொல்லப்போனால் சித்திர

கவி இயற்றும் புலவர்கள் மிக மிகச் சிலரே. இடையில் சில நூற்றாணடுகள்

மிகவும் போற்றப்பட்ட சித்திரகவிதை தற்போது வழக்கிழந்து காணப்படுகிறது.)

சர்க்கரைப் புலவர் ஒரு ஏட்டில் அட்டநாகபந்தம் வரைந்து அக்கட்டங்களில் தமது

கவிதையை நிரப்பி அழகிய சித்திரகவிதையாக உருவாக்கிவிட்டுப் பூசை

அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். மருதுபாண்டியரைப்

பார்க்கச் செல்வதால் பட்டு வேட்டி, துண்டு முதலிய ஆடம்பரமான உடைகளை அணிந்து

கொண்டு கையில் கவிதை ஏட்டை எடுத்துக்கொண்டு மன்னர் தங்கியிருக்கும் இடத்துக்குப்

புறப்பட்டார்.


கலியநகரி ஊரையடைந்த புலவர் மருதுபாண்டியர் தங்கியுள்ள இடத்துக்குச் சென்று 

அவரை முறைப்படி வணங்கியபின்னர் தம் கையிலிருந்த சித்திரகவிதை ஏட்டை அவரிடம்

வழங்கினார். தம் கவிதையை மருதரசர் முன் பாடி அதன் பொருளை விளக்கினார்.

மருதுபாண்டியர் ஏட்டை வாங்கிக் கவிதையை வாசித்து மகிழ்ந்தார். அப்பொழுது அந்த

ஏட்டிற்குள் மற்றொரு ஏடு இருப்பதைக் கவனித்தார். அந்த ஏட்டிலும் அட்டநாகபந்தச்

சித்திரக்கவிதை எழுதப்பட்டிருந்தது. உடனே, மருதுபாண்டியர் புலவரை நோக்கி

"என்ன புலவரே, நீர் பாடிய கவிதை யல்லாத வேறொரு கவிதை தென்படுகிறதே,

பாம்புகள் குட்டி போட்டுவிட்டனவா?" என்று வினவினார். திகைத்துப் போன புலவர்

ஏட்டை வாங்கிப் பார்த்துவிட்டு"இது குழந்தையின் கவிதையாக இருக்கும்" என்றார்.

உடனே மருதரசர்"யார் குழந்தை? எங்கே இருக்கிறார்? " என்று வினவினார். புலவர்

உடனே"என் மகன்தான் அவன். வயது பதினாறு ஆகிறது. எனினும், குழந்தை என்று

அன்பால் அழைக்கிறோம்" என நவின்றார். மருதரசர்"நான் உடனடியாக அக்குழந்தையைப்

பார்க்கவேண்டும். சிவிகையைத் தங்கள் இல்லத்துக்கு அனுப்பிவைக்கட்டுமா? "

எனக் கூறினார். திகைப்படைந்த புலவர் மருதரசர் கோரிக்கையைப் புறந்தள்ள

இயலாமல் சம்மதம் தெரிவித்தார். சிவிகை அனுப்பப்பட, குழந்தைக் கவிராயர்

அரசர்முன் வந்து நின்றார். "இந்தச் சித்திரகவிதையை இயற்றியது யார்? நீரே இயற்றி

யிருப்பின் பொருள் கூறுக" என்று மருதரசர் இயம்பினார். "இந்தச் சித்திர கவிதையை

இயற்றியவன் யானே.," எனச்சொன்ன குழந்தைக் கவிராயர் அக்கவிதையின் பொருளை

விளக்கினார். அவரின் தமிழ்ப்புலமையை அறிந்த மருதரசர்"உம் புலமையை அறிந்து

பெருமகிழ்வடைகிறோம். நீர் இனிமேல் சாந்துப் புலவர் என அழைக்கப்படுவீர். " என

உரைத்தார். சர்க்கரைப் புலவரை நோக்கி"இனி உம் குழந்தைக் கவிராயர் இந்த

அரண்மனையிலேயே வளர்வார். நீரோ உமது மனைவியாரோ சாந்துப் புலவரைப்

பார்க்க விரும்பினால் சிவிகை ஏற்பாடு செய்யப்படும். அதில் வந்து பார்த்துச் செல்க.

மேற்கொண்டு இலக்கிய, இலக்கணம் கற்க விரும்பினால் வெண்பாப்புலிப்புலவர்,

முத்து மாரியப்பேந்திரக் கவிராயர், வால சரசுவதி முத்துவேலுக் கவிராசர் போன்ற

தமிழ்ப் புலவர்களிடம் கல்விகற்க ஏற்பாடு செய்வோம். நீவிர் யாதொரு கவலையும்

கொளளவேண்டா. " என்று மருதுபாண்டியர் இயம்பினார். மன்னர்

சொல்லை மறுத்துப் பேச முடியுமா? புலவர் குழந்தைக் கவிராயரை அங்கேயே

விட்டுச் சென்றர். அதுமுதல் குழந்தைக் கவிராயர் அரண்மனைக் கவிராயர் ஆனார்.

மருதுபாண்டியரின் கவசம் போல இருந்து அரசவைச் செயல்பாடுகளை நிர்வகித்து

வந்தார். அவர்புகழ் நாளும் வளர்ந்தது. இராஜ விசுவாசத்தை வெளிப்படுத்திய

சாந்துப் புலவர் மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்டார்.


இடையில், பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய இராஜப்பிளவை நோய்வந்து

சொல்லொணாத் துயருற்றார். அப்பொழுது ஒரு முதியவர் "குன்றக்குடி முருகனைக்

குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர் எவரேனும் திருநீறிட்டால் நோய் குணமாகும்"

என்றொரு ஆலோசனை கூறினார். அதன்படி, குனறக்குடி மதுரநாதரைக் குலதெய்வ

மாக வழிபடும் ஆத்தன்குடி நகரத்தார் மரபைச் சார்ந்த காடன்செட்டியார் திருநீறு

பூச நோய் தீர்ந்தது. அன்றிலிருந்து மருதுபாண்டியர் குன்றக்குடி முருகனுக்குத்

தீவிர மெய்யன்பர் ஆயினார். மருதுபாண்டியர் சாந்துப் புலவரிடம் குன்றக்குடி

முருகன்மீது நூல் ஏதேனும் பாடுக என்று பணித்தனர். அதன்படி சாந்துப் புலவர்

மயூரகிரிக் கோவை பாடினார். நூல் ஐந்நூற்று முப்பத்தாறு கட்டளைக் கலித்துறைப்

பாடல்களைக் கொண்டது. மயூரகிரிக் கோவையின் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறியது:

"செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்புகென்ன

மைந்தர்செல் வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப்

பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரைப் பாலனெங்கள்

இந்திரன் சாந்து மகிபாலன் வாலைக வீச்சுரனே".

இந்த நூலைப் பதிப்பித்தவர் அவர்வழிவந்த சர்க்கரை இராமசாமிப் புலவர் ஆவார்.

இந்நூலுக்குச் சன்மானமாக ஆடையும், பொன்னும், 'புலவன் மருதங்குடி' கிராமத்தையும்

வழங்கினார் மருதரசர். இப்படியெல்லாம் மருதுபாண்டியரோடு மிக நெருக்கமாகத்

தொண்டாற்றிய சாந்துப்புலவர் மனம் நொந்துபோகும்படி மருதுபாண்டியரும் வாரிசு

தாரர்களும் வெள்ளையரால் கொடுமைப் படுத்தப்பட்டபோதும், வீர மரணத்துக்கு

உள்ளாக்கப்பட்ட போதும்  சாந்துப்புலவர் சொல்லொணா மனத்துயருக்கு ஆளானார்.

சொந்த ஊரான சிறுகம்பையூருக்குச் சென்று வாழ்வை நடத்திய போதும் மனத்துயரம்

எல்லை மீறிப் போய் ஒரு வாரத்தில் உயிர்நீத்தார். சங்க காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்

சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர் நட்புப் போல மருதரசர்-சாந்துப்புலவர் நட்பு

விளங்கியது எனறால் மிகையில்லை.

பார்வை:

மயூரகிரிக் கோவை நூல்-பதிப்பாசிரியர் சர்க்கரை இராமசாமி.

Tuesday, 16 December 2025

குமரிக்குள் கன்னியாகுமரியல்லால் மற்றில்லைப் பெண் குமரி தானே!ரிறில்லை

 குமரிக்குள் கன்னியா குமரியல்லால் மற்றிலைப்பெண் குமரி தானே!


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம் பகுதிக்குச்

சேதுபதியாக இருந்தவர் முத்துராமலிங்க சேதுபதி. மந்திரியாக இருந்

தவர் முத்திருளப்ப பிள்ளை என்னும் மதியூகி.  ஒருமுறை  புலவர் ஒருவர்

முத்திருளப்பருக்குச் சீட்டுக்கவி ஒன்றை எழுதியனுப்பினார். அதில் ஓர்

உதவி கோரியிருந்தார். நாட்கள் கடந்தன, ஆனால் புலவரின் கோரிக்கை

நிறைவேறவில்லை. சீட்டுக்கவி கிடைத்ததா? அல்லவா? என்ற விவரமும்

அறிய இயலவில்லை. நினைவூட்டுக் கடிதம் எழுதலாம் என்ற எண்ணத்தில்

மீண்டும் ஒரு கவிதையை இயற்றி அனுப்பிவைத்தார்:

"உறுக்குமதி வேந்தருக்கும் கள்வருக்கும்

         நீதிதப்பி  ஒளிக்கின்  றோர்க்கும்

கிறுக்குவரச் செயுந்துரையே, பாவாணர்

         ஓலையினும்  கிறுக்குண்  டாமோ?

பொறுக்குமர சுரிமைமுத்து ராமலிங்க

          சேதுபதி  பூமி  யெல்லாம்

நிறுக்குமதி மந்திரிமுத் திருளப்பா,

           அருளப்பா  நிருபம் தானே!

பொருள்:

குடிமக்களை அச்சுறுத்தும் பகைவேந்தருக்கும் கள்வருக்கும் நீதிக்கு எதிராக

அறந்தவறிய செயல் செய்து ஓடி ஒளிபவர்க்கும் நியாயமான நடவடிக்கை

மூலமாகக் கிறுக்குவரச் செய்யும் அமைச்சர் அவர்களே! யான் அனுப்பியிருந்த

சீட்டுக்கவியில் கிறுக்குத்தனமாக ஏதாவது எழுதியிருந்தேனா? பாவணர்

எழுதியனுப்பும் சீட்டுக்கவியில் கிறுக்குவர வாய்ப்பில்லை. தப்பித் தவறி

ஏதாவது எழுதியிருப்பினும் பொறுத்துக்கொள்ளும் அரசர் முத்துராமலிங்க

சேதுபதி அவர்களும், இந்தப் பகுதியெல்லம் அவர் புகழை நிலைக்கச்செய்

யும் அமைச்சரும் இருக்கையில் கவலைப்பட ஏதுமில்லை. என் சீட்டுக்கவிக்கு பதில்கடிதம்

அனுப்புக(என் கோரிக்கையை நிறைவேற்றுக). நிருபம்=கடிதம்.


ஒருமுறை ஏழைப்பெண்கள் சிலர் அமைச்சரைச் சந்தித்து"ஐயா, நாங்கள் மிக்க

ஏழ்மைநிலையில் வாழ்கிறோம். எங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்வித்து

அவர்களை வாழவைக்க வழியின்றித் தவிக்கிறோம். அரசு இதுதொடர்பாக உதவி

செய்தல் வேண்டும்" என்று கோரினர். முத்திருளப்பர் சேதுபதி யவர்களோடு இது

தொடர்பாகக் கலந்து ஆலோசித்துத் தம் இராமநாதபுரப் பகுதியில் வாழ்ந்துவரும்

ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க முடிவெடுத்தனர். திருமணம் நல்ல

முறையில் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்த குடிமக்கள் அரசை வாழ்த்தினர்.

புலவர் ஒருவர் புகழ்மாலை சூட்டினார்:

"அமரிக்கை யாளன்முத்து ராமலிங்க

        சேதுபதி  அவனிக்  கெல்லாம்

சுமுகப்ர தாபனெங்கள் முத்திருளப்

        பேந்திரனார்  துலங்கும் நாளில்

சமருக்கென் றெதிர்மன்னர் தரையிலிலை,

         மதனொருவன் தவிர, மின்னார்

குமரிக்குள் கன்னியா குமரியல்லால்

          மற்றிலைப்பெண்  குமரி தானே!

பொருள்: 

அமைதியை விரும்பும் முத்துராமலிங்க சேதுபதி மன்னரும் அமைச்சர் முத்திருளப்பரும்

போரை விலக்கி அமைதி நிலவச் செய்கின்றனர். அதனால் போர்புரிய நினைப்பவர்

எவரும் இல்லை. மன்மதன் மட்டும் கரும்பு வில்லில் பூங்கணைகளைத் தொடுததுப்

போர்புரிகின்றான்(இது இயற்கை நிகழ்ச்சிதான்). இந்த இராமநாதபுரப் பகுதியில்

குமரிகளே யாரும் இல்லை. அனைத்துக் குமரிகளுக்கும் திருமணம் நடைபெற்று

மணமக்கள் மன்மதனுடன் போர்புரிகின்றனர். அருகில் ஒரே ஒரு குமரிதான் இருக்

கின்றாள். அவள் அகிலத்தை ஆளும் கன்னியாகுமரி. அவளுக்குத் திருமணம்

செய்விக்க மனிதர்கள் எவராலும் இயலவே இயலாது.


இராமேசுவர ஆலயத்தில் உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரம் உள்ளது.

1740ஆம் ஆண்டில் தொடங்கிய அந்தப்பணி இருபது ஆண்டுகள் கடந்த பிறகு

முடிவுற்றது. நூல் பிடித்தாற்போல நேர்த்தியான வரிசையில் தூண்கள் கட்டப்

பட்டு மிளிர்கின்றன. அந்தப் பிராகாரத் தூண்களில் அமைச்சர் முத்திருளப்ப

பிள்ளையின் திருவுருவமும் அவருக்கு உதவியாக இருந்த சின்னப் பிரதானி

கிருட்டிண ஐயங்காரின் திருவுருவமும் அமைக்கப்படடுள்ளன.


பார்வை:'முந்நீர்விழா' நூலாசிரியர் வாகீச கலாநிதி கி. வா.ஜகந்நாதன்.

Monday, 1 December 2025

சர்க்கரை தொண்டை மட்டும் சவ்வாது கண்டமட்டும்.

 சர்க்கரை தொண்டைமட்டும்;  சவ்வாது கண்ட மட்டும்.


இராமநாதபுரத்தைப்   பொதுயுகம்(கி.பி.) 1645 முதல் 1670 வரை அரசாட்சி

செய்துவந்த ரகுநாத சேதுபதி என்ற  திருமலைச் சேதுபதி அரசவையில்

சர்க்கரைப் புலவர், அமுதகவிராயர், சவ்வாதுப் புலவர் என்ற மூன்று பெரும்

புலவர்கள் வீற்றிருந்து தமிழ்ப்பணி புரிந்து வந்தனர். அமுத கவிராயர்

ரகுநாத சேதுபதி மீது 'நாணிக்கண் புதைத்தல்' என்ற துறையில் நானூறு

பாடல்களால் ஒரு சிற்றிலக்கியத்தை இயற்றினார்.அமுத கவிராயருக்குத்

தக்க சன்மானம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் புலவர் திருவாவடுதுறை ஆதீனத்தின்

சின்னப் பட்டத்தில்  மிகுந்த தமிழ்ப் புலமையுடன் தொண்டாற்றி வந்த சிவக்

கொழுந்து தேசிகரிடம் முறையாக இலக்கிய, இலக்கணங்களைக் கற்று மிகுந்த

தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு

கம்பராமாயணச் சொற்பொழிவாற்றுவதில் நிபுணராகத் திகழ்ந்தார். இஸ்லாமியரான

சவ்வாதுப் புலவரும் பெரும் புலவரே.


சர்க்கரைப் புலவர் இராமநாதபுர அரண்மனையில்  நாடோறும் கம்பராமாயணத்தை

ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும்  விரித்துரைப்பது வழக்கம். அவர் நிகழ்த்தும்

சொற்பொழிவைச்  சேதுபதி மன்னர்  மிகவும் இரசித்துக் கேட்டு மகிழ்ந்தார். இடையிடையே

சேதுபதி மீது பாடல்கள் புனைந்து பாடிக் காட்டும் வழக்கத்தையும் கைக்கொண்டிருந்தார்.

அதனால் சேதுபதி மன்னர் சர்க்கரைப் புலவரிடம் " உங்கள் சொற்பொழிவும் பாடல்களும்

சர்க்கரையைப் போல இனிக்கின்றன" என்று பாராட்டுவது அன்றாடம் நடைபெறும்

நிகழ்வு. உடனிருக்கும் சவ்வாதுப் புலவருக்கு எரிச்சல் ஏற்படும். ஒருநாள் வழக்கம்போல

இராமாயணச் சொற்பொழிவு முடிந்த பிற்பாடு வழக்கம்போலவே மன்னர் சர்க்கரைப்

புலவரிடம் "உங்கள்  பேச்சுத்திறன் சர்க்கரை போல் இனித்தது" என்றார். உடனே,

அருகிலிருந்த சவ்வாதுப்  புலவர் அடக்க மாட்டாத பொறாமை வெளிப்பட" சர்க்கரை 

தொண்டை மட்டும்" என்று  கூறினார். அவரது பொறாமை உணர்வை அறிந்துகொண்ட

சர்க்கரைப் புலவர் சற்றும் தாமதிக்காமல்" சவ்வாதோ?" என்று முழங்கினார். உடனே,

சவ்வாதுப் புலவர்"சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்" என்று

விடையளித்தார். அதாவது சர்க்கரை மென்று சுவைக்கும் வரை இனிக்கும்; சர்க்கரையை

விழுங்கிய பிறகு இனிப்புச் சுவை  மறைந்துவிடும். அதாவது, நெடுநேரம் இரசிப்பதற்கு

அதில் வாய்ப்பில்லை. சொற்ப நேர சுகமே கிட்டும். ஆனால், சவ்வாதோ, கண்பார்வையில்

படும் போதெல்லாம் மனத்துக்கு இனிமை தரும். நீண்ட நேர சுகம் கிட்டும். இவ்வாறு,

அழுக்காறு(பொறாமை) கொண்ட சவ்வாதுப் புலவரின் கூற்றுக்குச் சர்க்கரைப் புலவர்

சரியான பதிலடி கொடுத்தார். "கண்ட மட்டும்" என்ற சொற்றொடரைக்"கண்டம் மட்டும்"

என்று பிரிக்கலாம். அவ்வாறு பிரித்துப்  பொருள்கொண்டால்,  அதுவும்"தொண்டை மட்டும்"

என்ற பொருளையே தரும். எனவே, சர்க்கரையும் சவ்வாதும் சமமே என்று முடித்தார்.

அவர்களின் விவாதத்தைத் கேட்டுக் கொண்டிருந்த சேதுபதி மன்னர்"சர்க்கரைப் புலவரும்

சவ்வாதுப் புலவரும் சம அளவில் புலமையும், திறமையும் உடையவர்கள்" என்று தீர்ப்புக்

கூறினார்.கண்டம்=கழுத்து(வடமொழிச் சொல்).


அன்றாடம் நிகழ்ந்து வந்த இராமாயணச் சொற்பொழிவில்  அன்று 'அனுமன் கடல்தாவு

படலம்' விவரிக்கப்படல்  வேண்டும். சர்க்கரைப் புலவர் தமது திறமையை யெல்லாம்

ஒருங்கிணைத்துக் கடல்தாவு படலத்தை வருணித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சுத்

திறமையால் சேதுபதி மன்னர் இராமாயணக் கதையோடு ஒன்றிப் போனார்."அனுமன்

எவ்வாறு  கடலைத் தாவினார்?" என்று வினவினார். ஏற்கெனவே கதையோடு ஒன்றிப்

போயிருந்த சர்க்கரைப் புலவர் தம் இருக்கையிலிருந்து  ஒரே தாவாகத் தாவி மன்னர்

வீற்றிருந்த இருக்கையில்  வந்தமர்ந்தார். தாவும் பொழுதே" இதோ இப்படித்தான் அனுமன்

தாவினார்" என்று கூறினார். சர்க்கரைப் புலவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாவியதைப்

பார்த்த சேதுபதி மன்னர் தம் இருக்கையிலிருந்து எழுந்து வேறொரு இருக்கையில்

அமர்ந்துகொண்டார். சொற்பொழிவு நிகழ்ந்த அரங்கம் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பல வண்ண நெட்டிமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சர்க்கரைப் புலவர் தாவிய

வேகத்தில்  நெட்டி மாலை அறுந்து அவர் கழுத்தில் விழுந்தது. அதனைக் கவனித்த

சேதுபதி மன்னர்" அனுமன் உமக்கு அளித்த பரிசாகும் இது" என்று கூறினார். இதனால்

சர்க்கரைப் புலவர் 'நெட்டிமாலைக் கவிராயர்' என்றும், 'நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர்

என்றும் அழைக்கப்பட்டார். சர்க்கரைப் புலவருக்கும் ' நெட்டிமாலைக் கவிராயர்,' என்னும்

பட்டம் மிகவும் பிடித்துப் போயிற்று. தாம் விடுக்கும் சீட்டுக் கவிகளில் இதனைக் குறிப்பிடு

வது வழக்கமாயிற்று:

"வந்த ஜய பாரத  இராமாயணத்திலே  வாடாத நெட்டிமாலை

   மருவிட்ட திருவிட்டு வழுவாது நழுவாது வாசாம கோசரமதாய்ச்

சிந்தைமிக வேசற்றும் மலையாது சபையிலே செய்யும்பிர சங்க நிபுணன்

   சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக் கவிராச  சிங்கம்யாம் எழுதும் நிருபம்".


பார்வை: "முந்நீர் விழா" -நூலாசிரியர்  வாகீச .கலாநிதி கி. வா. ஜகந்நாதன்.