Wednesday, 31 December 2025

மயூரகிரிக் கோவை.

 மயூரகிரிக் கோவை.


மயூரகிரி என்னும் பெயர் மயில்மலையாகிய குன்றக்குடியைக்

குறிக்கும். இந்த நூலை இயற்றியவர் சாந்துப் புலவர் ஆவார்.

இவர் குழந்தைக் கவிராயர் என்றும் வாலகவீசுவரர் என்றும்

அழைக்கப்பட்டார். இவர் மருதுபாண்டியருக்குப் பிடித்தமான

புலவர். பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய நோயான

இராஜப் பிளவை வந்து மிகுந்த தொல்லை கொடுத்தபொழுது

குன்றக்குடி முருகனைக் குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர்

திருநீறிட்டுக் குணமாக்கியதால் முருகனைப் போற்ற  எண்ணிய

மருது பாண்டியர் கேட்டுக்கொணடதனால் சாந்துப் புலவர் இந்த

மயூரகிரிக் கோவை பாடியதாக வரலாறு பேசுகிறது.


இராமநாதபுரம் சமஸ்தானப் புலவராக விளங்கியவர் சிறுகம்பையூரில்

வாழ்ந்த சர்க்கரைப்பலவர். இவர் நெட்டிமாலைக் கவிராயர் என

அழைக்கப்பட்ட ஆதி சர்க்கரைப்புலவர் வழித்தோன்றல். இந்தப் புலவர்

வழியில் பலர் சர்க்கரைப்புலவர் என்ற பெயரைத் தாங்கி வாழ்ந்தனர்.

கி. பி. 1645இல் இராமநாதபுரத்தை ஆட்சிசெய்த இரகுநாத சேதுபதி

என்ற திருமலைச் சேதுபதி காலம் முதல் இராமநாதபுர சமஸ்தானத்தில்

அரசவைப்புலவர்களாகத் தொண்டு புரிந்துவந்துள்ளனர். 


சிறுகம்பையூர்ச் சர்க்கரைப்புலவர், மருதுபாண்டியர்கள் சேதுவுக்குச்

செல்லும் வழியிலமைந்துள்ள கலியநகரிக்குச் சில அறப்பணிகளுக்காக

வரப் போவதாக அறிந்து மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்திக்க

எண்ணினார். பெரியவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குக்

கையுறை வழங்கி வணங்குவது மரபு. கையுறையாகச் சித்திரகவி

எழுதிய ஏட்டை வழங்க முடிவுசெய்து அதன்படியே அட்டநாகபந்தம்

என்ற அமைப்பில் ஒரு கவிதையை இயற்றி யதனை ஏட்டில் வரைந்து

ஆயத்தப்படுத்தினார். (சித்திர கவி என்பது ஒரு சித்திரம் வரைந்து

சிறுசிறு கட்டங்களை உருவாக்கி அக்கட்டங்களுக்குள் கவிதையை,

ஒரு கட்டத்துக்கு ஒரு எழுத்து என்ற முறையில் நிரப்புவதாகும். சித்திரம்

தேர், முரசு, வேல், நாகம், தேள், மயில் போன்ற ஏதாவது ஒரு வடிவத்தில்

எழுதப்படும். இதில் என்ன வியப்பு என்றால் கவிதை 70 எழுத்துகளைக்

கொண்டிருந்தால் சித்திரத்தில் நிரப்பப்படும் பொழுது 63 எழுத்துகளிலேயே

கவிதை முடிந்துவிடும். ஏனென்றால் ஒருவரியிலுள்ள எழுத்துகள் ஏற்கெனவே

வேறு வரிகளில் வருவதனால் அந்த வரி எழுத்துகள் மிச்சமாகும். இந்த

வகைக் கவிதை இயற்ற மிகவும் கடினமானது. சொல்லப்போனால் சித்திர

கவி இயற்றும் புலவர்கள் மிக மிகச் சிலரே. இடையில் சில நூற்றாணடுகள்

மிகவும் போற்றப்பட்ட சித்திரகவிதை தற்போது வழக்கிழந்து காணப்படுகிறது.)

சர்க்கரைப் புலவர் ஒரு ஏட்டில் அட்டநாகபந்தம் வரைந்து அக்கட்டங்களில் தமது

கவிதையை நிரப்பி அழகிய சித்திரகவிதையாக உருவாக்கிவிட்டுப் பூசை

அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். மருதுபாண்டியரைப்

பார்க்கச் செல்வதால் பட்டு வேட்டி, துண்டு முதலிய ஆடம்பரமான உடைகளை அணிந்து

கொண்டு கையில் கவிதை ஏட்டை எடுத்துக்கொண்டு மன்னர் தங்கியிருக்கும் இடத்துக்குப்

புறப்பட்டார்.


கலியநகரி ஊரையடைந்த புலவர் மருதுபாண்டியர் தங்கியுள்ள இடத்துக்குச் சென்று 

அவரை முறைப்படி வணங்கியபின்னர் தம் கையிலிருந்த சித்திரகவிதை ஏட்டை அவரிடம்

வழங்கினார். தம் கவிதையை மருதரசர் முன் பாடி அதன் பொருளை விளக்கினார்.

மருதுபாண்டியர் ஏட்டை வாங்கிக் கவிதையை வாசித்து மகிழ்ந்தார். அப்பொழுது அந்த

ஏட்டிற்குள் மற்றொரு ஏடு இருப்பதைக் கவனித்தார். அந்த ஏட்டிலும் அட்டநாகபந்தச்

சித்திரக்கவிதை எழுதப்பட்டிருந்தது. உடனே, மருதுபாண்டியர் புலவரை நோக்கி

"என்ன புலவரே, நீர் பாடிய கவிதை யல்லாத வேறொரு கவிதை தென்படுகிறதே,

பாம்புகள் குட்டி போட்டுவிட்டனவா?" என்று வினவினார். திகைத்துப் போன புலவர்

ஏட்டை வாங்கிப் பார்த்துவிட்டு"இது குழந்தையின் கவிதையாக இருக்கும்" என்றார்.

உடனே மருதரசர்"யார் குழந்தை? எங்கே இருக்கிறார்? " என்று வினவினார். புலவர்

உடனே"என் மகன்தான் அவன். வயது பதினாறு ஆகிறது. எனினும், குழந்தை என்று

அன்பால் அழைக்கிறோம்" என நவின்றார். மருதரசர்"நான் உடனடியாக அக்குழந்தையைப்

பார்க்கவேண்டும். சிவிகையைத் தங்கள் இல்லத்துக்கு அனுப்பிவைக்கட்டுமா? "

எனக் கூறினார். திகைப்படைந்த புலவர் மருதரசர் கோரிக்கையைப் புறந்தள்ள

இயலாமல் சம்மதம் தெரிவித்தார். சிவிகை அனுப்பப்பட, குழந்தைக் கவிராயர்

அரசர்முன் வந்து நின்றார். "இந்தச் சித்திரகவிதையை இயற்றியது யார்? நீரே இயற்றி

யிருப்பின் பொருள் கூறுக" என்று மருதரசர் இயம்பினார். "இந்தச் சித்திர கவிதையை

இயற்றியவன் யானே.," எனச்சொன்ன குழந்தைக் கவிராயர் அக்கவிதையின் பொருளை

விளக்கினார். அவரின் தமிழ்ப்புலமையை அறிந்த மருதரசர்"உம் புலமையை அறிந்து

பெருமகிழ்வடைகிறோம். நீர் இனிமேல் சாந்துப் புலவர் என அழைக்கப்படுவீர். " என

உரைத்தார். சர்க்கரைப் புலவரை நோக்கி"இனி உம் குழந்தைக் கவிராயர் இந்த

அரண்மனையிலேயே வளர்வார். நீரோ உமது மனைவியாரோ சாந்துப் புலவரைப்

பார்க்க விரும்பினால் சிவிகை ஏற்பாடு செய்யப்படும். அதில் வந்து பார்த்துச் செல்க.

மேற்கொண்டு இலக்கிய, இலக்கணம் கற்க விரும்பினால் வெண்பாப்புலிப்புலவர்,

முத்து மாரியப்பேந்திரக் கவிராயர், வால சரசுவதி முத்துவேலுக் கவிராசர் போன்ற

தமிழ்ப் புலவர்களிடம் கல்விகற்க ஏற்பாடு செய்வோம். நீவிர் யாதொரு கவலையும்

கொளளவேண்டா. " என்று மருதுபாண்டியர் இயம்பினார். மன்னர்

சொல்லை மறுத்துப் பேச முடியுமா? புலவர் குழந்தைக் கவிராயரை அங்கேயே

விட்டுச் சென்றர். அதுமுதல் குழந்தைக் கவிராயர் அரண்மனைக் கவிராயர் ஆனார்.

மருதுபாண்டியரின் கவசம் போல இருந்து அரசவைச் செயல்பாடுகளை நிர்வகித்து

வந்தார். அவர்புகழ் நாளும் வளர்ந்தது. இராஜ விசுவாசத்தை வெளிப்படுத்திய

சாந்துப் புலவர் மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்டார்.


இடையில், பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய இராஜப்பிளவை நோய்வந்து

சொல்லொணாத் துயருற்றார். அப்பொழுது ஒரு முதியவர் "குன்றக்குடி முருகனைக்

குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர் எவரேனும் திருநீறிட்டால் நோய் குணமாகும்"

என்றொரு ஆலோசனை கூறினார். அதன்படி, குனறக்குடி மதுரநாதரைக் குலதெய்வ

மாக வழிபடும் ஆத்தன்குடி நகரத்தார் மரபைச் சார்ந்த காடன்செட்டியார் திருநீறு

பூச நோய் தீர்ந்தது. அன்றிலிருந்து மருதுபாண்டியர் குன்றக்குடி முருகனுக்குத்

தீவிர மெய்யன்பர் ஆயினார். மருதுபாண்டியர் சாந்துப் புலவரிடம் குன்றக்குடி

முருகன்மீது நூல் ஏதேனும் பாடுக என்று பணித்தனர். அதன்படி சாந்துப் புலவர்

மயூரகிரிக் கோவை பாடினார். நூல் ஐந்நூற்று முப்பத்தாறு கட்டளைக் கலித்துறைப்

பாடல்களைக் கொண்டது. மயூரகிரிக் கோவையின் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறியது:

"செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்புகென்ன

மைந்தர்செல் வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப்

பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரைப் பாலனெங்கள்

இந்திரன் சாந்து மகிபாலன் வாலைக வீச்சுரனே".

இந்த நூலைப் பதிப்பித்தவர் அவர்வழிவந்த சர்க்கரை இராமசாமிப் புலவர் ஆவார்.

இந்நூலுக்குச் சன்மானமாக ஆடையும், பொன்னும், 'புலவன் மருதங்குடி' கிராமத்தையும்

வழங்கினார் மருதரசர். இப்படியெல்லாம் மருதுபாண்டியரோடு மிக நெருக்கமாகத்

தொண்டாற்றிய சாந்துப்புலவர் மனம் நொந்துபோகும்படி மருதுபாண்டியரும் வாரிசு

தாரர்களும் வெள்ளையரால் கொடுமைப் படுத்தப்பட்டபோதும், வீர மரணத்துக்கு

உள்ளாக்கப்பட்ட போதும்  சாந்துப்புலவர் சொல்லொணா மனத்துயருக்கு ஆளானார்.

சொந்த ஊரான சிறுகம்பையூருக்குச் சென்று வாழ்வை நடத்திய போதும் மனத்துயரம்

எல்லை மீறிப் போய் ஒரு வாரத்தில் உயிர்நீத்தார். சங்க காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்

சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர் நட்புப் போல மருதரசர்-சாந்துப்புலவர் நட்பு

விளங்கியது எனறால் மிகையில்லை.

பார்வை:

மயூரகிரிக் கோவை நூல்-பதிப்பாசிரியர் சர்க்கரை இராமசாமி.

No comments:

Post a Comment