Tuesday, 16 December 2025

குமரிக்குள் கன்னியாகுமரியல்லால் மற்றில்லைப் பெண் குமரி தானே!ரிறில்லை

 குமரிக்குள் கன்னியா குமரியல்லால் மற்றிலைப்பெண் குமரி தானே!


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம் பகுதிக்குச்

சேதுபதியாக இருந்தவர் முத்துராமலிங்க சேதுபதி. மந்திரியாக இருந்

தவர் முத்திருளப்ப பிள்ளை என்னும் மதியூகி.  ஒருமுறை  புலவர் ஒருவர்

முத்திருளப்பருக்குச் சீட்டுக்கவி ஒன்றை எழுதியனுப்பினார். அதில் ஓர்

உதவி கோரியிருந்தார். நாட்கள் கடந்தன, ஆனால் புலவரின் கோரிக்கை

நிறைவேறவில்லை. சீட்டுக்கவி கிடைத்ததா? அல்லவா? என்ற விவரமும்

அறிய இயலவில்லை. நினைவூட்டுக் கடிதம் எழுதலாம் என்ற எண்ணத்தில்

மீண்டும் ஒரு கவிதையை இயற்றி அனுப்பிவைத்தார்:

"உறுக்குமதி வேந்தருக்கும் கள்வருக்கும்

         நீதிதப்பி  ஒளிக்கின்  றோர்க்கும்

கிறுக்குவரச் செயுந்துரையே, பாவாணர்

         ஓலையினும்  கிறுக்குண்  டாமோ?

பொறுக்குமர சுரிமைமுத்து ராமலிங்க

          சேதுபதி  பூமி  யெல்லாம்

நிறுக்குமதி மந்திரிமுத் திருளப்பா,

           அருளப்பா  நிருபம் தானே!

பொருள்:

குடிமக்களை அச்சுறுத்தும் பகைவேந்தருக்கும் கள்வருக்கும் நீதிக்கு எதிராக

அறந்தவறிய செயல் செய்து ஓடி ஒளிபவர்க்கும் நியாயமான நடவடிக்கை

மூலமாகக் கிறுக்குவரச் செய்யும் அமைச்சர் அவர்களே! யான் அனுப்பியிருந்த

சீட்டுக்கவியில் கிறுக்குத்தனமாக ஏதாவது எழுதியிருந்தேனா? பாவணர்

எழுதியனுப்பும் சீட்டுக்கவியில் கிறுக்குவர வாய்ப்பில்லை. தப்பித் தவறி

ஏதாவது எழுதியிருப்பினும் பொறுத்துக்கொள்ளும் அரசர் முத்துராமலிங்க

சேதுபதி அவர்களும், இந்தப் பகுதியெல்லம் அவர் புகழை நிலைக்கச்செய்

யும் அமைச்சரும் இருக்கையில் கவலைப்பட ஏதுமில்லை. என் சீட்டுக்கவிக்கு பதில்கடிதம்

அனுப்புக(என் கோரிக்கையை நிறைவேற்றுக). நிருபம்=கடிதம்.


ஒருமுறை ஏழைப்பெண்கள் சிலர் அமைச்சரைச் சந்தித்து"ஐயா, நாங்கள் மிக்க

ஏழ்மைநிலையில் வாழ்கிறோம். எங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்வித்து

அவர்களை வாழவைக்க வழியின்றித் தவிக்கிறோம். அரசு இதுதொடர்பாக உதவி

செய்தல் வேண்டும்" என்று கோரினர். முத்திருளப்பர் சேதுபதி யவர்களோடு இது

தொடர்பாகக் கலந்து ஆலோசித்துத் தம் இராமநாதபுரப் பகுதியில் வாழ்ந்துவரும்

ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க முடிவெடுத்தனர். திருமணம் நல்ல

முறையில் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்த குடிமக்கள் அரசை வாழ்த்தினர்.

புலவர் ஒருவர் புகழ்மாலை சூட்டினார்:

"அமரிக்கை யாளன்முத்து ராமலிங்க

        சேதுபதி  அவனிக்  கெல்லாம்

சுமுகப்ர தாபனெங்கள் முத்திருளப்

        பேந்திரனார்  துலங்கும் நாளில்

சமருக்கென் றெதிர்மன்னர் தரையிலிலை,

         மதனொருவன் தவிர, மின்னார்

குமரிக்குள் கன்னியா குமரியல்லால்

          மற்றிலைப்பெண்  குமரி தானே!

பொருள்: 

அமைதியை விரும்பும் முத்துராமலிங்க சேதுபதி மன்னரும் அமைச்சர் முத்திருளப்பரும்

போரை விலக்கி அமைதி நிலவச் செய்கின்றனர். அதனால் போர்புரிய நினைப்பவர்

எவரும் இல்லை. மன்மதன் மட்டும் கரும்பு வில்லில் பூங்கணைகளைத் தொடுததுப்

போர்புரிகின்றான்(இது இயற்கை நிகழ்ச்சிதான்). இந்த இராமநாதபுரப் பகுதியில்

குமரிகளே யாரும் இல்லை. அனைத்துக் குமரிகளுக்கும் திருமணம் நடைபெற்று

மணமக்கள் மன்மதனுடன் போர்புரிகின்றனர். அருகில் ஒரே ஒரு குமரிதான் இருக்

கின்றாள். அவள் அகிலத்தை ஆளும் கன்னியாகுமரி. அவளுக்குத் திருமணம்

செய்விக்க மனிதர்கள் எவராலும் இயலவே இயலாது.


இராமேசுவர ஆலயத்தில் உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரம் உள்ளது.

1740ஆம் ஆண்டில் தொடங்கிய அந்தப்பணி இருபது ஆண்டுகள் கடந்த பிறகு

முடிவுற்றது. நூல் பிடித்தாற்போல நேர்த்தியான வரிசையில் தூண்கள் கட்டப்

பட்டு மிளிர்கின்றன. அந்தப் பிராகாரத் தூண்களில் அமைச்சர் முத்திருளப்ப

பிள்ளையின் திருவுருவமும் அவருக்கு உதவியாக இருந்த சின்னப் பிரதானி

கிருட்டிண ஐயங்காரின் திருவுருவமும் அமைக்கப்படடுள்ளன.


பார்வை:'முந்நீர்விழா' நூலாசிரியர் வாகீச கலாநிதி கி. வா.ஜகந்நாதன்.

No comments:

Post a Comment