Thursday, 14 June 2018

நெகிழி (பிளாஸ்டிக்) என்னும் அரக்கன்

நெகிழி  (பிளாஸ்டிக்)  என்னும்  அரக்கன்
நெஞ்சுதனை  நிமிர்த்திடலாம்  நெகிழியினைப்  படைத்ததற்கு;
விஞ்சுகின்ற  சிறப்புண்டு;  விலைமலிவு ;  திடத்தன்மை;

பலவகையாம்  வடிவத்தில்  பாங்காக  உருவாக்கல்;
உலகெங்கும்  வாழ்வோர்கள்  உபயோகிக்  கும்பொருளாம்;

இன்னுமின்னும்சொல்லிடலாம்   இருந்தாலும்  தீமைமிகு
தன்மைகளும்  உள்ளனவே;  தயக்கமின்றி  ஆராய்வோம்.

உற்பத்தி  செயும்நேரம்  உயிருக்கும். உடலுக்கும்
சுற்றியுள்ள  சூழலுக்கும் தொல்லை நச்சுப் பொருள்பரவிக்

காற்றுவெளி  நிலத்தடிநீர்  கழனிவயல்  பாழாகும்;
தேற்றுதற்கு  வழியில்லை;  தீமைபல  இன்னுமுள;

பெயர்தெரியாப்  புதுநோய்கள்  பெரியோரைச்  சிறியோரை
அயர்வுறவே  செய்துவிடும்;  ஆஸ்துமா   தொல்லைவரும்;

மற்றும்பல்  நோய்நொடிகள்  வரிசைகட்டி. வந்துநிற்கும்;
புற்றுநோய்க்  காரணிகள்  புயலெனவே  தோன்றிவிடும்;

விளைச்சல்  நிலமெல்லாம்  வீணாகி  மனத்தளவில்
உளைச்சல்  உருவாகும்;  உய்திபெற  வழியுண்டோ?

காகிதம்,  தாவரத்தின்  கழிவுகள்போல்   நெகிழியிங்கு
சீக்கிரத்தில்  மட்காது;  தேயாது;  மறையாது;

வீதிகளில்  குவிகின்ற  வீணான  குப்பைகளில்
தீதுமிகும்  நெகிழிப்பை சிதைந்திருக்கும்  துண்டு,துகள்

போல்வன  சேர்ந்திங்கே  புழங்குவதால்  கால்நடைகள்
தீவனமாய்த்  தின்று  திணறிச் சா கின்றனவே;

நிலபுலங்கள்   ஆறுகுளம்  நெடுங்கடல்  இங்கெல்லாம்
வலம்வரும்தீதான  மட்காத  நெகிழியினால்

கடல்வாழும்  உயிரினங்கள்  கயல்நண்டு  கடலாமை
உடல்பருத்த  திமிங்கிலங்கள்  உணராமல்  தின்றுவிட்டுச்

செரித்திடவே  இயலாமல்  செத்துமடி  கின்றனவே;
வருத்தமிகும்  செய்தியிஃது;  வழியென்ன?  சரிசெய்ய.

மட்கிவிடும்  தன்மையே  வாய்க்காத  நெகிழியினைக்
கட்டுக்குள்  வைத்திருக்கக்  கச்சிதமாய்த்  திட்டம்நல்கீர்;

நெகிழியினைப்  பயன்படுத்தல்  நிச்சயமாய்க்  குறைந்துவிட்டால்
வெகுவிரைவில்  உற்பத்தி  மிகமிகவே  அருகிவிடும்.

நெகிழியினால்  உருவாகும்  நீர்க்குவளை,  பை,தட்டு
தகுதியினால்  காகிதம்,நற்  பாக்குமட்டை  போன்றவற்றால்

உண்டாக்கல்  சாத்தியமே;  ஒருசிறிதும்  ஐயமிலை;
கொண்டாடி  மகிழ்வோமே;  குறைத்திடுவீர்  நெகிழியினை;

நெகிழிக்  கழிவுகளை  மறுபயன்  பாட்டினுக்கே
உகந்தவை  அல்லாத  வையென்று  பிரித்தெடுப்பீர்;

மறுபயன்பாட்  டுக்குகந்த  கழிவுகளால்  நாற்காலி
சிறு,பெரிய  பீடம்போல்  செய்திடலாம்  உலகத்தீர்!

எஞ்சியுள்ள  கழிவுகளை  எக்கார  ணம்கொண்டும்
கொஞ்சமுமே  தீவைத்துக்  கொளுத்துதல்  செய்யாதீர்;

ஏனென்றால்  நச்சுவளி  உருவாகிச்  சுற்றியுள்ள
வானத்தைப்  பூமிதனை  மாசு  படுத்திவிடும்;

நானிலத்தில்  நெகிழிமட்க  நானூறாண்  டாகிடுமாம்;
மாநிலத்து  மனிதர்களே!  வகைவகையாய்ச்  சிந்திப்பீர;

அரக்கர்களை  வதம்செய்ய  அவதரித்த  ஆண்டவனே!
வரம்தந்(து)இந்  நெகிழியினை  வதம்செய்ய   வழிசொல்க.

தக்க  வழிகண்டு  சாதிப்போம்   பூவுலகில்
ஒக்க  உழைத்தால்  உயர்வு.




No comments:

Post a Comment