Thursday, 28 June 2018

சீனா நட்பு நாடா? பகை நாடா?

 சீனா  நட்பு  நாடா? பகை  நாடா?
பாக்கிஸ்தான்  செஞ்சீனா  இவ்விரண்டு  நாடுகளும்
பகைவர் நாடே;
நோக்கிடிலோ  முதல்நாடு  வெளிப்படையாம்  பகைவரென
நொந்து  கொள்வோம்;
ஏய்க்கின்ற  நாடென்றே இரண்டாம்நாட்  டைச்சொல்வோம்;
        ஏனென்  றாலே
தீக்குணத்தை  மறைத்திடுமே;  வெளியினிலே நடித்திடுமே:
தெரிந்து  கொள்வோம்.

நன்னெறியைக்  கடைப்பிடிக்கும்  பாரத்த்தைப்  பாக்கிஸ்தான்
        வெற்றி  கொள்ள
என்னவழி  முயன்றாலும்  இயலாது;  பேருண்மை;
இரண்டாம்  நாடு
தன்னலமும் சூழ்ச்சிகளும்  தந்திரமும்  கொண்டிலங்கும்
தாழ்ந்த  நாடு;
என்னவிலை  கொடுத்தேனும்  எதிர்கொண்டு  முறியடிப்போம;
       எமக்கே  வெற்றி!

சிவகாசி  நகரினிலே  உருவாகும்  பட்டாசைத்
       தேசம்  எல்லாம்
நவமான  பொருளென்றே  வாங்கிமனம்  மகிழ்ந்தனவே;
       நயனில்  சீனம்
தவறாது  பட்டாசை  அதிகளவில்  தள்ளிவிட்டுச்
சந்தை  தன்னில்
எவராலும்  தரவியலா  விலைக்குறைப்பால்   நம்மவர்க்கே
       இழப்பை   நல்கும்.

மக்கள்  தொகையில்  வளங்களிலே
      மன்னும்  நமது  பாரதமும்
சிக்கல்   நல்கும்  சீனாவும்
     தேரின்  இரண்டும்  சம்ம்ஆகும;
அக்கம்  பக்கம்  நமைநாடி
    ஆத   ரிக்கும்  நாடில்லை;
தக்க  துணையாய்ச்  சீனத்தைத்
    தாங்கும்  நாடு  பலவுளவே.

ஆத  லாலே  நம்நாட்டில்
    அனைத்துப்  பாது  காப்பினையும்
தோது  படவே  மேற்கொள்வோம்;
    சுற்று  முற்றும்  கவனிப்போம;
யாது  வழியில்  படைவரினும்
   ஏற்ற  முறையில்  எதிர்கொள்வோம்;
தீது  சிறிதும்  அண்டாமல்
   தெய்வத்  திருநாட்  டைக்காப்போம்.

பார  தத்தைச்  சந்தையெனப்
    பயன்ப  டுத்த  நினைக்கின்ற
கார  ணத்தால்  படையெடுப்பைக்
    கபட  மாகத்  தவிர்த்திடுமே;
தீர  மிக்க  இந்தியரே!
   சீனப்  பொருளைப்  புறக்கணிப்போம்;
போரை  வெறுப்போம்;  வந்துவிட்டால்
    புயலைப்  போலப்  பாய்ந்திடுவோம்.

சீனத்தில்  உருவாக்கும்  பொருள்களைநாம்  மலிவென்றே
ஈனத்  தனமாய்  இறக்குமதி  செய்கின்றோம;
தேனொத்த  பொருளெனினும்  தீதெண்ணும்  சீனத்தை
மானமிகு  இந்தியர்கள்  வாழ்வித்தல்  முறையாமோ?

வல்லரசாய்  மாறியிந்த  மண்டலத்தில்  பவனிவர
எல்லையிலா  ஆசையுடன்  இறுமாந்து  நடக்கிறது;
தொல்லைதரும்  சீனத்தைச்  சூழ்ச்சிக்கோர்  உறைவிடத்தைச்
சொல்லொணாத்  தீமையினைத்  தோற்கடிக்க  முயல்வோமே!

வரவிருக்கும்  விழாக்களிலே  வழக்கம்போல்  சிவகாசித்
தரமிகுந்த  பட்டாசைத்  தடையின்றி  வாங்கிடுவோம;
அரசு,நம்மை  அச்சுறுத்தும்  அந்நாட்டுப்  பொருள்களையே
இரக்கமின்றித்  தடைசெய்க;  எம்மக்கள்  வாழ்கவே!

நன்னெறியிற்  செல்பவரே  நன்மை  அடைந்திடுவர்;
புன்னெறியிற்  செல்பவர்  பொன்றிடுவர்; --உன்னதமாம்
பாரத்த்தைத்  தாக்கவெண்ணும்  பாக்கிஸ்தான்  சீனமிவை
போரதனில்  வீழும்  புகல்.

வடகிழக்கு  மாநிலத்தில்  வாலாட்டும்  சீனம்
தடதடவென்  றுள்நுழைந்து  தாக்கும்--இடரிதனை
எப்பொழுதும்  சிந்தித் (து)  எதிர்நோக்கி  எச்சரிக்கை
தப்பாமல்  மேற்கொள்வோம்  சார்ந்து.

அறுபத்  திரண்டில்  அறமல்லாப்  போரில்
சிறுமைத்  தனம்செய்து  சீனம்--பெருநிலத்தைக்
கைப்பற்றிக்  கொண்டு  களியாட்டம்  போட்டதிதை
எப்பொழுது  மீட்போம்  இனி?












1 comment:

  1. சீனத்தின் நரித்தனத்தை நயமாக எடுத்துரைத்துள்ளீர்கள்

    ReplyDelete