Saturday, 9 June 2018

தாத்தாவும் பேரப் பிள்ளைகளும்

வம்பிழுக்கும்  ஆற்றல்மிகு  மூத்த  பேரன்
   வாஞ்சையுடன்  என்னருகே  வந்து  நின்று
"தம்பியவன்  செயும்குறும்பைச்  செவிம  டுப்பாய்;
   தான்விரும்பும்  தொலைக்காட்சி  நிகழ்ச்சி  யெல்லாம்
வெம்பிமனம்  வெறுப்படையப்  பார்க்கின்  றானே;
   விரும்பிநான்  தொலைஇயக்கி  தன்னைக்  கேட்டால்
தும்பியெனப்  பறந்திடுவான்; கேலி  செய்வான்;
   தொல்லைதரும்  அவனையடி  தாத்தா"  என்றான்.
 (தொலைஇயக்கி= ரிமோட்கண்ட்ரோல்  சுவிட்ச்)

சின்னவனை  யானழைத்துன் "அண்ண  னையேன்
  சினமடையச்  செய்கின்றாய்;  கருவி  தன்னை
அன்னவனின்  மனம்குளிர  உடனே  தாராய்;
  ஆசையுடன்  நிகழ்ச்சியெலாம்  பார்க்கச்  செய்வாய்;
என்னவனே  இளம்பேரா!"  எனநான்  சொன்னேன்.
  "ஏன்தாத்தா!  அண்ணனையே  எந்தப்  போதும்
மன்னவனைப்  போல்நீயும்  கொஞ்சு  கின்றாய்;
  மாறாத  அன்பெனக்கும்  நல்காய்"  என்றான்.

மூத்தவனும்  சின்னவனும்   போட்டி போட்டு
  மோதுவதைத்  திகைப்போடு  பார்த்து  நின்றேன்;
பேத்தியவள்  சிணுங்கியவா(று)  அருகில்  வந்தாள்;
  "பெரியவனும்  சின்னவனும்  விரும்பும்  வண்ணம்
பார்த்திடுவர்  தொலைக்காட்சி  நிகழ்ச்சி  யெல்லாம்;
  பாவைநான்  யாதொன்றும்  பார்க்க  வில்லை;
தாத்தாநீ  தக்கதொரு  நீதி  நல்கித்
 தண்டித்துத்  திருத்(து)அவரை " என்று  சொன்னாள்.

இம்மட்டோ  இவர்கள்சண்டை?  இன்னும்  போகும்.
   இவர்களில்லா  விடிலெவர்க்கும்  பொழுதே  போகா(து);
அம்மட்டும்  ஆறுதலாய்  ஒருநற்  செய்தி;
  அலைபேசி  தனிலுள்ள  நல்ல  அம்சம்
 எம்மட்டும்  முயன்றாலும்  மூத்தோர்  கற்க
   இயலாதிப்  பிள்ளைகளால்  இயலும்  எல்லாம்;
அம்புட்டு   வசதியையும்  அலசி  ஆய்ந்து
  ஆசிரியர்  போலெனக்குச்  சொல்லித்  தந்தார்.

ஆனாலும்  நமக்கொருபேர்  அச்சம்  உண்டு;
  அறிவியலின்   கருவிகளால்  தீங்கும்  உண்டு;
வானாரப்  புகழும்அலை   பேசி  தன்னால்
நீலத்தி  மிங்கிலம்போல்  நிகழ்ச்சி  தோன்றும்;
தேனாகப்  பிள்ளைகட்குத்  தெரியும்  காட்சி
தீங்கான  நிகழ்ச்சியென  நமக்குத்  தோன்றும்;
தானாகப்  பகுத்தறியும்  ஆற்றல்  பெற்றால்
  தரமாக  வளர்ந்திடுவர்  பிள்ளை  யெல்லாம்.
(நீலத்  திமிங்கிலம்--புளூ  வேல்)

ஆண்டவனே!  உன்னிடத்தில்  ஒருவிண்  ணப்பம்;
   அறிவியலின்  துணையாலே தோற்று விக்கும்
வேண்டியநற்  கருவிகளால்  பிள்ளை   கட்குத்
   தீங்கொன்றும்  நேராமற்  காப்பாய்;  மக்கள்
ஆண்டாண்டுக்  கணக்காக  விவேகம்,  வீரம்
   அமைந்திங்கு  வாழ்ந்திடவே  அருள்செய்  வாயே!
வேண்டாவே  பிள்ளைகட்குத்  தரம்இல்  கல்வி;
   மேதினியில்  என்றென்றும்  அறிவே  வெல்க!





No comments:

Post a Comment