"சாதலே வந்த போதும்
தந்தைதாய் எதிர்த்த போதும்
காதலி உன்னை நானே
கைவிடேன்" என்று சொன்னார்;
ஆதலின் அதனை நம்பி
ஆனந்தக் கடலில் ஆழ்ந்தேன்;
பாதகர் என்னைப் பார்த்துப்
பதுங்குவ(து) ஏனோ? சொல்லீர்!
வீரமும் காதல் தானும்
விழியெனக் கருதும் நாட்டில்
யார்எவர் கொளினும் காதல்
இதயத்தில் உதித்த தாக
நேர்மையாய் உண்மை யாக
நிலைத்திவண் இருத்தல் வேண்டும்;
ஊரவர் போற்றும் சாதி
மத தடை தகர்த்தல் வேண்டும்.
ஒருதலைக் காதல் வேண்டா;
ஒழுக்கமில் காதல் வேண்டா;
இருநிலத்(து) இந்த நாட்டில்
இருபது நூற்றாண் டாக
மருவிடும் நெறிபின் பற்றி
மக்களே! காதல் செய்வீர்!
உருக்கமாய்க் காதல் செய்தால்
உள்ளன்பு வெற்றி சேர்க்கும்!
விருப்பொடு பெண்ணும் ஆணும்
மனம்விட்டுக் கலந்து பேசித்
தருவது பெறுவ(து) இன்றி
தட்சணை தங்கம் இன்றி
ஒருவனுக் கொருத்தி என்னும்
உயர்பண்பு நெறியைப் பற்றி
அரும்பெரும் குடும்ப வாழ்வை
அமைத்திட வாரீர்! வாரீர்!
ஏறினைத் தழுவி வென்ற
இளைஞர்க்குப் பெண்ணைத் தந்தார்;
மாறிய(து) இந்த வீர
வழக்கமே; நல்ல வேளை;
சீறிடும் விலையேற் றத்தால்
திகைக்கின்ற குடும்ப வாழ்வு;
மீறியே வாழ்ந்து வென்றால்
காளையை அடக்கல் போலாம்.
No comments:
Post a Comment