Monday, 29 October 2018

தீபவொளி(தீபாவளி)ப் பண்டிகைக் கொண்டாட்டம்

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் எல்லாம்
விழிபிதுங்கி நிற்கையிலே பண்டி கையைக்
குலையாத மகிழ்ச்சியுடன் குதுக லித்துக்
கொண்டாட வழியில்லை;இருந்த போதும்
சிலைபோல நில்லாமல் கட்டுச் செட்டாய்
தீபவொளி கொண்டாட முடிவு செய்து
மலைபோலத் துணைபுரியும் மனைவி
யோடு
வரவுசெல வுத்திட்டம் தீட்ட லானேன்.


புத்தாடை, பட்டாசு வாங்கல் வேண்டும்;
புசித்திடத்தின் பண்டங்கள் சமைத்தல்
வேண்டும்;
முத்தான பேரர்களும் பேத்தி மாரும்
முற்றாகக் குதுகலிக்கப் பரிசுப் பண்டம்,
வித்தார அணிகலன்கள் கடையில் வாங்கி
மேனியிலே சூட்டியெழில் பார்த்தல்
வேண்டும்;
எத்தாலும் இவைவாங்கச் செலவே யாகும்;
இதையெல்லாம் சிந்தித்துத் திட்டம்
போட்டோம்.


கேசரி,மை சூர்ப்பா(கு)இ லட்டு பூந்தி
கிறங்கச்செய் குளோப்ஜாமுன், பாது
ஷாவாம்
வாசமிகு அல்வா,சோன் பப்டி யின்னும்
வகைவகையாய் வடை,முறுக்கு, பஜ்ஜி,
சொஜ்ஜி
ஆசையுடன் உண்பதற்காம் பண்டம்
எல்லாம்
அருமையாய்ச் சமைத்திடுவோம்;அகத்தி
லேயே;
பூசனைகள் முடிந்தபின்பு வயிறு முட்டப்
புசித்திடுவோம்;களிகொள்வோம்; உண்மை தானே!


கேடறுதீப் பெட்டி,கம்பி மத்தாப்பு,சாட்டை
கிளர்ந்தெழுந்து பூப்பூவாய் உதிரும்பூ
வாணம்,
நாடுமெழில் சக்கரம்போல் சுழலும்மத்
தாப்பு,
நயமாகப் பிள்ளையெலாம் விரும்பும்துப்
பாக்கி,
நீடுபுகழ் ஆயிரமாம் எண்ணிக்கை
கொண்ட
நெடியசர வெடிவகைகள் ஏவுகணை
போன்ற
பீடுறவே பாய்கின்ற வேட்டுகளைப்
போட்டுப்
பெரிதாக மகிழ்ந்திடுவோம் துயரெதுவும்
உண்டோ?


பட்டாலே உருவான பாவாடை, பெண்டிர்
பாங்காக அணிகின்ற தாவணிகள்
வேண்டார்;
கட்டாயம் நாகரிகச் சுரிதார்,துப் பட்டா
கவுன்,சல்வார் போன்றவற்றை
விரும்பிடுவர்; வாங்கித்
தட்டாமல் உடுத்திடுவர்; குற்றமிலை;
நன்றே;
தையலர்க்கு ஜீன்(சு)அன்ன உடலிறுக்
கும் ஆடை
கட்டாயம் தேவையிலை;உடற்(கு)இன்
னல் நல்கும்;
கண்டிப்பாய்ப் பின்பற்றி நலம்பேணு
வீரே!


ஆடவர்கள் வேட்டி,துண்டு விரும்பிடுதல்
இல்லை;
அணிகின்ற பேண்ட்சட்டை குற்றமிலை;
நன்றே;
நாடதனில் புகழ்பெற்ற ஜீன்ஸ்முதலாம்
ஆடை
நன்றன்று; உடல்தன்னை இறுக்குவ
தால் கேடாம்;
தேடரிய பெருஞ்செல்வம் உடல்நலமே
யாகும்;
சிந்தித்துச் சிறப்பான ஆடையினை
வாங்கி
ஈடிணையே இல்லாத தீபவொளி நாளில்
எல்லையிலா மகிழ்வோடு கொண்டாடு
வீரே!


மாவுயர் நீதி மன்றம்
     வகுத்திடும் வழிபின் பற்றித்
தீவிபத்(து) ஏற்ப டாமல்
      செம்மையாய் வாணம் மத்தாப்(பு)
ஏவியே மகிழ்வீர்; எந்த
       இன்னலும் மக்க ளுக்கு
நேர்வதைத் தடுத்தல் வேண்டும்;
        நினைவினிற் கொள்வீர் மாதோ!


செவி,விழி பாதிக் காத
        சிறந்தநற் பட்டா சைத்தான்
கவனமாய்த் தயார்செய் வீரே;
        காற்றுமண் டலத்தில் மாசு
தவறியும் கூடி டாமல்
        தயார்செயும் நிறுவ னங்கள்
அவசியம் நோக்கல் வேண்டும்;
        ஆயத்தம் செய்தல் வேண்டும்.


சுற்றுச் சூழல் தூய்மைமிக்குத்
   துலங்கல் வேண்டும்; உயிர்க்காற்று
சற்றும் நஞ்சே யில்லாது
   தவழ்தல் வேண்டும்; புத்துணர்ச்சி
பெற்றுப் பொலிந்து சுறுசுறுப்பாய்ப்
   பிறங்கல் வேண்டும்; ஞாலத்தில்
வெற்று முழக்கம் தேவையிலை;
   மேன்மைச் செய்கை வேண்டுவமே!


நெருப்புப் பட்டு விபத்தெதுவும்
   நேர்ந்தி டாமல் கவனமொடு
கருத்தாய் வெடியைக் கையாள்வீர்;
   கண்ணைக் காதைக் காத்திடுவீர்;
விருப்பத் தோடு வெடிவகையை
   விரலில் பிடித்துக் கொளுத்தாதீர்;
அருமை உயிரை, உடல்தன்னை
    அக்க றையாய்ப் பேணுகவே!


இந்திய நாட்டிலுள்ள எல்லாப் பகுதியிலும்
சிந்தைகளி கூரவைக்கும் தீபவொளிப்
பண்டிகையைத்
தந்தம் நிலைக்கேற்பச் சால்புடன்கொண்
டாடுகின்றார்;
விந்தையிந்த ஒற்றுமையை விள்ளத்தான் கூடுமோ?


ஏழை, பணக்காரன் என்றவொரு பேதமிலை;
மாழை யுடையோரும் வறியோரும்
ஒன்றாவர்;
வாழையடி வாழையென மக்கள்நன்கு
போற்றுகின்ற
பீழையிலாத் தீபவொளி பெட்புடன்கொண் டாடுகவே!

அருஞ்சொற் பொருள்:
பீடு--பெருமை; தையல்--பெண்;
மாவுயர் நீதி மன்றம்---உச்சநீதிமன்றம்
துலங்கல்--விளங்கிடுதல்
பிறங்கு--விளங்கு; ஞாலம்---பூமி
தந்தம்--தம்தம்;சால்பு---பெருமை
விள்ளுதல்---சொல்லுதல்
மாழை---பொன்;பீழை---துன்பம்
பெட்பு---சிறப்பு



Monday, 22 October 2018

மடலூர்தல் அல்லது மடலேறுதல்

மடலேற்றம்  அல்லது மடலூர்தல் என்பது
பழந்தமிழகத்தில் நிலவிய ஒரு விந்தை
யான பழக்கம் ஆகும்.  பெண் ஒருத்தி
யை விரும்பிய தலைவன் அப்பெண் தனக்குக் கிடைக்காவிடில் பனைமடலாற்
குதிரை போன்ற உருவம் அமைத்துத் தன் படத்தையும் தன் தலைவியின் படத்
தையும் ஓவியமாக எழுதிக் கிழியினைக்
(ஓவியம் வரையப்பட்ட துணி) கையில்
வைத்துக் கொண்டு வீதியின் இடையே
ஊர்ந்து வருதலாகும்.

பனைமரத்தின் கிளை பனைமட்டை யெனப் படும். இது இரண்டு பக்கங்களி
லும் கூரிய முள் போன்ற பாகங்களைக்
கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின்
கிளையால் குதிரை போன்ற உருவத்தை
உருவாக்கி இதன்மேல் தலைவன் அமர்ந்
திருப்பான். இதன்கீழ் உருளை பொருத்
தப் பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி
ஊரார்,குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
செல்வர். இதுவே மடல் என்பதாகும்.

காமம் முற்றிய தலைவன் மடலேறுங் கா
லத்தில் எருக்கங் கண்ணியைச் சூடிக்
கொள்வான். வெண்மையான எலும்பு
களை அணிந்து கொள்வான்.மடல் குதி
ரைக்கு மயில்தோகை, பூளைப்பூ, ஆவி
ரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் தொடுக்
கப் பட்ட  மாலையை அணிவிப்பான்.
உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்
பான். தான் கையில் பிடித்திருக்கும்
கிழி(ஓவியம் வரையப்பட்ட துணி)யை
யே பார்த்துக் கொண்டிருப்பான். வேறு
எந்தவிதமான உணர்வையும் காட்ட
மாட்டான். மழை, காற்று, வெயில்,தீ
போன்ற எதைப் பற்றியும் பொருட்படுத்த
மாட்டான்.

நாணத்தை முற்றிலுமாகக் கைவிட்டு
"இன்னாள் செய்தது இது" என்று வெளி
ப் படையாகக் கூறுவான். சங்க இலக்கி
யங்களில் மடலேறுதலைப் பற்றிப் பல
பாடல்கள் உள்ளன. திருக்குறளில்
"காமம் உழந்து வருந்தினார்க்(கு) ஏமம்
மடலல்ல(து) இல்லை வலி".(தி.கு.1131)
குறுந்தொகையில்(பாடல் 14)
"அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொ
    ழி அரிவையைப்
பெருகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே, மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே".


மடலூர்ந்து வரும் தலைவன் நாணத்
தைத் துறந்து எவ்வித உணர்வையும்
காட்டாது வீதியில் சுற்றி வருவான்.
அப்பொழுது தலைவன்"இந்தப் பெண்
எனக்குக் கிடைத்து விட்டால் மகிழ்வேன்.
இந்த நல்ல பெண்ணுக்குக் கணவன்
இவன் என ஊரார் கூறும்போது நான்
சிறிது நாணமடைவேன்" எனக் கூறிக்
கொள்வான். குறுந்தொகை 17ஆம்
பாடலில்  மடலேறுவதைப் பற்றியும்
எருக்கங்கண்ணி சூடுவதைப் பற்றியும்
"மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே"
என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தலைவியைச் சுட்டி இன்னாள்
தான் இதற்குக் காரணம் என்பதைக்
குறுந்தொகையில் 173 ஆம் பாடலில்
"பொன்னேர் ஆவிரைப் புதுமலர்
      மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாணட்(டு)
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னாள் செய்த(து) இதுவென
   முன்னின்(று)
அவன்பழி நுவலும் இவ்வூர்"
என்றவாறு கூறப்படடுள்ளது. மடலை
ஊரார், குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
சென்ற செய்தி நற்றிணை 220 ஆம்
பாடலில் கூறப்பட்டுள்ளது.
"சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு
      நிறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்".


வெள்ளென்பு அணிவதையும், நாணத்
தைத் துறந்து மடலூர்வதையும் குறுந்
தொகை 182ஆம் பாடலில் காணலாம்.
"விழுத்தலைப் பெண்ணை வினையன்
       மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்(பு) அணிந்துபிறர் எள்ளத்
    தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவில் நியலவுந் தருவது கொல்லோ
கவிழ்ந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில னாம்விடற் கமைந்த தூதே".


இதையெல்லாம் கண்ட சான்றோர் பெரு
மக்கள் இத்தலைவனுக்குத் தலைவியை
மணம் முடித்துவைக்கும் முயற்சிகளை
மேற்கொள்வர். இந்த முயற்சி வெற்றி
பெற்றால் தலைவன்  மகிழ்ச்சியுறுவான்.
இம்முறையில் வெற்றி பெற்ற தலைவன்
ஒருவன் தான் மடலேறியதையும், அதன்
விளைவாகத் தலைவியை அடைந்ததை
யும் தன் பாங்கனிடம்(தோழனிடம்) கூறு
வதாகக் கலித் தொகை 138 ஆம் பாடல்
இயம்புகிறது.
"எழில்மருப்பு எழில்வேழம் இகுதரு
     கடாத்தால்
தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை
     நிமிர்ந்தாங்கு
அறிவும், நம்அறி(வு) ஆய்ந்த அடக்கமும்,
     நாணொடு
வறிதாகப் பிறர்என்னை நகுபவும்
     நகுபுடன்
மின்அவிர் நுடக்கமும் கனவும்போல்,
     மெய்காட்டி
என்நெஞ்சம் என்னோடு நில்லாமை
      நனிவௌவி
தன்னலம் கரந்தாளைத் தலைப்படும்
      ஆ(று)எவன்கொலோ?
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு
        பிணித்தியாத்து
மல்லல்ஊர் மறுகின்கண் இவட்பாடும்,
        இஃதொத்தன்
எல்லீரும் கேட்டீமின் என்று.............."
இவ்வாறாகப் பாடல் பகர்கிறது.


"மங்கையர்தம் கண்ணான் மயங்கினார்;
    வெள்ளெலும்பும்
துங்க எருக்கும்  தொடுத்தணிந்து--
     அங்கமெலாம்
வெந்தாறு சாம்பல் மிகவணிந்து
      வீதிதொறும்
வந்தேறி  யூர்வர்  மடல்."
மடலேறும் நிகழ்வை ஒருவெண்பாவில்
சுருக்கமாகவும் அழகாகவும்  குறுந்தொகை  மூலமும் உரையும் என்ற
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலித்தொகை, நற்றிணை,குறுந்தொகை
முதலான சங்க நூல்களில் ஆங்காங்கே
இதைப் பற்றிய பாடல்கள் பரவிக் கிடக்
கினாறன.


மடலேறுதல் வெற்றிபெறாவிட்டால் அடு
த்து என்ன நிகழும்? மடலேறிய பின்ன
ரும் தலைவியோ, அவளைப் பெற்றவர்
களோ திருமணத்துக்குச் சம்மதம் தெரி
விக்காவிட்டால் தலைவன் தன்வாழ்வை
முடித்துக் கொள்வான். மலையிலிருந்து
வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான்.
இந்நிகழ்வை 'வரைபாய்தல்'  என்று
இலக்கியங்கள் இயம்புகின்றன.
குறுந்தொகையில்(பாடல் 17)
"மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப  காமங்காழ்க் கொளினே"
மடலேறுதல் வெற்றி பெறாவிட்டால்,
தலைவனுக்குத் தலைவியின் பாலுள்ள
காமம் அதிகமானால் வரைபாய்தல் மூல
மாகத் தலைவன் உயிரைத் துறப்பான்
(பிறிதும் ஆகுப) என்று கூறப்பட்டுள்ளது.


மடலேறும் நிகழ்ச்சி , தன்னை விரும்பாத
பெண்பொருட்டு நிகழ்ந்தால் அது கைக்
கிளை ஒழுக்கம் எனப்படும்.(ஒரு தலைக்
காதல்). சிலசமயங்களில் தலைவனும்
தலைவியும் ஒருவரையொருவர் விரும்
பிய போதிலும் பெற்றோர் மறுப்புகாரண
மாகவும் நிகழக்கூடும். அப்பொழுது
இயற்கையான ஐந்திணை ஒழுக்கத்தில்
அடங்கும்.

மடல் கூறல், மடல்விலக்கு என்ற இரு
நிலைகளும் உள்ளன. தலைவன் தலை
வியை அடைய மடலேறுவேன் என்று
சொல்வது மடல்கூறல் ஆகும். மடலேற
வேண்டாவெனத் தடுப்பது மடல் விலக்கு
எனப்படும்.


பெண்கள் மடலேறுதல் தமிழர் மரபில்
இல்லை என்று தொல்காப்பியம் பேசு
கிறது. திருக்குறளும் இக்கருத்தை
வலியுறுத்துகின்றது. (தி.கு.1137)
"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."
ஆனால் வடநூலார் மரபைப் பின்பற்றித்
திருமங்கை ஆழ்வார், நாயகி பாவத்தில்
பெருமாளுக்காக மடலேறுதல் போன்று
சிறிய மடல், பெரியமடல் பாடியுள்ளார்.


மடலேறுதல் சங்க காலத்தில் நிலவிய
ஏனைய சில பழக்கங்களைப் போலவே,
(அதாவது உடன்கட்டை ஏறுதல், வடக்கி
ருத்தல் போன்றவற்றைப் போலவே)
காலப்போக்கில் மறைந்து போயிற்று.
இது குறித்து நாம் வருந்தத்தேவை
யில்லை.  ஏனென்றால் மடலேறுதல்
நிகழ்வு  தற்காலத்தில் நிலவுகின்ற
ஒருதலைக்காதலை ஒத்திருக்கிறது.
தற்காலத்தில் ஒருதலைக் காதலால்
மகளிர் கடும் அவதிப்படுவதைக்
காண்கின்றோம். அமில வீச்சு, கொலை
வெறி, கொடூரக்கொலை இவற்றைக்
கண்ணுறும்போது, மடலேறுதல் என்னும்
பழக்கம் மறைந்து போனது குறித்து
வருத்தப்படத் தேவையில்லை.தற்காலத்
துக்குச் சற்றும் பொருந்தாது; தேவையும்
இல்லை.

Monday, 15 October 2018

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் சங்க காலத்
தைச் சேர்ந்தவர். ஆண்பாற் புலவர்களுக்குச் சமமான
புலமையும்  கவிபுனையும் ஆற்றலும் உடையவர்.அன்
றைய சமுதாயத்தில் நிகழ்ந்த பழக்க வழக்கஙகள்,  நெறி
முறைகளைக் கூர்ந்து கவனித்தவர். இவர் சேரமான்
பெருஞ்சேரல் இரும்பொறையின் காலத்தவர். இவர்
இயற்றியதாகப் புறநானூற்றில் மூன்று பாடல்களும்
தகடூர் யாத்திரை என்னும் நூலில் சில செய்யுட்களும்
உள்ளன.

புறநானூற்றில் 299 ஆம் பாடலில் பெண்கள் 'அந்த' மூன்று
நாட்களில் முருகன் கோவிலில் பூசைப் பாத்திரங்களைத்
தொடாமல் ஒதுங்கி நிற்கும் வழக்கத்தை எடுத்துரைக்கின்
றார்.  ஒரு குறுநில மன்னனின் குதிரைப்படை வீரத்தை
வர்ணிக்கும்போது" பருத்தி வேலி சூழ்ந்த சிறந்த  ஊருக்
குரிய மன்னனின் குதிரைப்படைக் குதிரைகள் உழுந்து
உமியைத் தின்று கொழுத்த நடையுடையனவாக  விளங்கு
கின்றன; கடலைக் கிழித்துச் செல்லும்  தோணியைப் போலப்
பகைவர் படைமுகத்தைக் கிழித்துச் செல்கின்றன.; ஆனால்
பகைவர் குதிரைப்படைக் குதிரைகளோ, நெய் கலந்த கவளம்
உண்ட போதிலும்  முனைப்போடு  முன்செல்லாமல், முருகன்
கோவிலில் பெண்கள் 'அந்த' மூன்று நாட்களில் ஒதுங்கி
நிற்பது போலப் படைமுகத்தில்ஒதுங்கி நிற்கின்றன  என்று
விவரிக்கின்றார். பாடலைப் பார்ப்போம்:
"பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உடுத்ததர்  உண்ட ஓய்நடைப்  புரவி,
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ,
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்நுநின் றவ்வே".
(திணை: நொச்சி; துறை: குதிரைமறம்)

புறம் 310 ஆம் பாடலில் ஒரு மறக்குலப் பெண்ணின்
வீரத்தை விவரிக்கின்றார் பொன்முடியார். அந்த மறக்
குலப் பெண்ணின் கணவன் பெரும்போரிட்டு மடிந்
தனன். அத்தகைய மாவீரனின் மகன் சிறுவயதில்
பால் உண்ண மறுத்து அடம்பிடிக்கும் போது ஒரு சிறு
கோலால் அவனை மிரட்டிக் குடிக்க வைத்தனள்.
ஆனால் பெரியவன் ஆனபிறகு மறைந்த தன் தந்தை
யைப் போல வீரத்துடன் போரிட்டுக் களிறுகளைக்
கொன்றும் அமையாது தொடர்ந்து போரிட்டு  மார்பிலே
அம்பு பாய்ந்து கேடயத்தின்மேல் வீழ்ந்து கிடந்தான்.
அம் மறக்குலப் பெண் அவனைத் தூக்கித் தன்மடியில்
கிடத்தி ஐயோ, மார்பில் அம்பு தைத்துவிட்டதே என்று
புலம்பினாள். ஆனால் அவனோ, அப்படியா? எனக்குத்
தெரியாதே என்று சர்வ சாதாரணமாகப் பதில்  கூறி
னான். மாபெரும் வீரன் மகன் அல்லவா?, அவன்.
பாடலைப் பார்ப்போம்:
"பால்கொண்டு மடுப்பவும்  உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்(டு)ஆனான்;
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்(று)அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்லண லோனே!".

இனி, புறநானூறு 312 ஆம் பாடலைப் பார்ப்போம்:
ஒரு வீரத்தாய் கூறுவதாகப் பொன்முடியார் பாடு
கின்றார். அந்த வீரத்தாயானவள் நாட்டில் ஒவ்வொரு
வரது கடமையையும் எடுத்தோதுகின்றாள். பெற்றுப்
பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்துவிடுவது  எனது
கடமையாகும். அவனை வீரப் புதல்வனாகப் போர்க்
கலைகளையும் ஆயுதங்களைக் கையாள்வதைப்
பற்றியும் கற்பித்துச் சான்றோன், அதாவது, நாட்டைக்
காப்பாற்றும் வீரம் செறிந்த போர் வீரனாக்குவது
தந்தையின் கடமையாகும். இவனுக்கும் இவனைப்
போன்ற போர்வீரர்களுக்கும் உரிய ஆயுதங்களைச்
செம்மையாகவும், கூர்மையாகவும் வடித்துக் கொடுத்
தல் கொல்லர்களுடைய கடமையாகும். இவன் வீரத்
தைக் கவனித்து, உறசாகமூட்டி, ஊக்குவித்துப் போர்
முனையில் திறமை காட்ட வைத்தல் அரசனது கடமை
யாகும். அது மட்டும் அன்று; இவன் வீரத்தை மெச்சிப்
பாராட்டிப் பரிசு நல்குதலும் அரசனது கடமைதான்.
போர்க்களத்தில்  ஒளிவிடுகின்ற வாளால் சிறக்கச்
சண்டை செய்து பகைவரை வீழ்த்துதலும், யானை
களை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடித் திரும்பு
தலும் காளை போன்ற வீரர்களது கடமையாகும்.
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களி(று) எறிந்து  பெயர்தல் காளைக்குக் கடனே".
அருஞ்சொற் பொருள்:
ஈன்று புறந்தருதல்--பெற்றுப் பாதுகாத்தல்
சான்றோன் ஆக்குதல் --ஆயுதப் பயிற்சியில்
  தேர்ந்தவனாக ஆக்குதல்.
நன்னடை நல்கல்--நல்ல வீரச்செயலுக்கு
   மகிழ்ந்து பரிசளித்தல்.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி--ஒளிவிடுகின்ற
வாட்போரில் பகைவரை அழித்து
களிறு எறிந்து பெயர்தல்--ஆண் யானைகளை
  வெட்டி வீழ்த்தி வெற்றியுடன் திரும்புதல்.
பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடல்கள்
மூன்றுமே படித்து இன்புறத் தக்கன.


Monday, 8 October 2018

அருமையாய் நமைவளர்த்த அன்னைக்கோர் கலிவெண்பா

வையத்தில் பெற்றெடுத்த மாதாவைக்
    கண்கண்ட
தெய்வத்துக் கீடாகச் சிந்தித்தே---
     உய்கின்றோம்;

பற்றற்ற ஞானியரும் பாங்காக
     அன்னையரை
உற்ற முறையில் உயர்வுசெய்வர்---
      சற்றேனும்

ஓய்வே இலாதுழைக்கும் உத்தமத்
      தாய்மார்கள்
தூய்மைமனத் தோடு துலங்கிடுவர்---
      வாய்மையே;

இத்தகைய சீர்த்தியனைக்(கு)  எப்படி
      வாய்த்ததெனச்
சித்தத்தில் ஓர்ந்தால் தெளிவுறுவோம்---
       இத்தரையில்

உண்டான நாள்முதலாய் ஓம்பத்
       தொடங்கிடுவர்;
கண்டதெலாம் உண்பதனைக் கண்டிப்பாய்த்---துண்டிப்பர்;

பக்குவமாய்த் தேர்ந்துண்டு பத்தியங்கள்
       பேணிடுவர்;
தக்கபடி பிள்ளை தழைத்திடவும்---
       சிக்கலின்றி

நன்கு  வளர்ந்திடவும் நாளும்
       பணிசெய்வர்;
அன்பு மிகுந்தே அடிவயிற்றை---
        மென்மையாய்

நீவித்  தடவிடுவர்; நிம்மதி யில்லாமல்
ஆவி தளர்ந்திடுவர்; அச்சத்தால்---
         கூவிடுவர்;

மெய்யெலாம் வாடிட மேனி மெலிவுறத்
துய்க்கும் உணவு சுவையின்றிக்---
         கைக்குமே;

வேண்டாத தெய்வமெலாம் வேண்டிப்பல்
         நோன்பிருந்து
நீண்டபத்து மாதம் நிறைவயிற்றால்---
          மூண்டதுயர்

கொஞ்சநஞசம் அன்று; குழந்தைக்காய்த்
           தாங்கிடுவர்;
பிஞ்சு மகவினைப் பெற்றெடுத்துக்---
            கொஞ்சும்

விழைவால் பொறுத்திடுவர்; வேளைவரும்  போதில்
அழைப்பர் கடவுளை; ஆர்த்தே---உழல்வர்;

ஒருவாறு பெற்றபின்னர் ஒண்முகம்
           நோக்கிப்
பெருமைமிகப் பல்விதமாய்ப் பேசிச்---
            சிரித்திடுவர்;

பிள்ளைப்பே  றென்பது  பெண்டிர்தம்
             இன்னுயிரைக்
கொள்ளை யடிக்கும் கொடியதாம்---
              சள்ளைவிதி;

தப்பிப்  பிழைத்தால் தனக்கு மறுபிறவிக்
கொப்பான வாழ்வென்பர்; உண்மையிது--- தப்பில்லை;

பெற்றெடுத்த பின்னரும் பெண்டிர்பா(டு)
              ஓய்ந்திலது;
பற்றுடனே தம்குருதி  பாலாக்கி---
              உற்றவன்பால்

ஊட்டி  மகிழ்ந்திடுவர்; ஊட்டம்
              அளித்திடுவர்;
வீட்டு மருத்துவத்தால் வேதனை,நோய்---
               ஓட்டிடுவர்;

நோவு பெரிதென்றால் நோய்நீக்கும்
               வைத்தியர்பால்
ஆவலுடன் காட்டிடுவர்;ஆதரவாய்க்---
                காவல்செய்வர்;

கண்ணயர்தல் இன்றிக் கவனமாய்ப்
                பேணிடுவர்;
உண்ணவும் தூங்கவும் ஓர்ந்திடார்---
                 கண்ணனைய

பிள்ளைக்காய் வாழ்ந்திடுவர்; பேசப்
                  பழக்கிடுவர்;
'கள்ளம்  கபடு களை'யென்பர்;---
                  விள்ளரிய

நீதிக் கதைசொல்லி நேர்மை
                  யுறவளர்ப்பர்;
சாதி,மதம் போன்றவற்றைத்
    தக்கதல்ல---தீதென்பர்;

முன்னர்நமைப் பெற்றெடுக்க முந்நூறு
                  நாள்சுமந்த
அன்னையரின் தாள்பணிவோம் ஆர்த்து.

அரும்சொற் பொருள்:
உய்கின்றோம்--வாழ்கின்றோம்
துலங்கிடுவர்--விளங்கிடுவர்
சீர்த்தியனைக்கு--சிறப்பு அன்னைக்கு;
அன்னை, அனை யானது இடைக்குறை.
ஓர்ந்தால்--நினைத்தால்
உண்டான நாள்---கருத்தரித்த நாள்
கைக்கும்--கசக்கும்
மகவு--குழந்தை
விழைவு--ஆவல்
ஆர்த்து--ஒலி எழுப்பி
ஒண்முகம்--ஒளி பொருந்திய முகம்
சள்ளை விதி--தொந்தரவு தரும் விதி
கண்ணனைய--கண் போன்ற
விள்ளரிய--சொல்ல அரிதான
ஓம்புதல்--பேணுதல்
உற்றவன்பால்--உற்ற அன்பால்
         
 
       





     


Tuesday, 2 October 2018

வாராது வந்த மாமணியே! வாழ்கவே!

வாராது வந்த மாமணியே வாழ்கவே!

அணிதிகழ் குசராத் நாட்டில்
அவதரித் திட்டார்; தாயார்
மணிநிகர்  பொறுமை, வாய்மை
மகிமையைக்  கற்றுத்  தந்தார்;
பணிபுரி  வதிலே என்றும்
பரந்தபே  ரின்பங்  கண்டார்;
துணிவுடைக் காந்தி வெள்ளைத்
       துரைகளை விரட்டி  னாரே!

குடியினாற்  கெட்ட மக்கள்
குடிகளை உயர்த்தல்  வேண்டிப்
படிமிசை  மதுவி  லக்கைப்
        பரப்பிய  பண்பின்  மிக்கார்;
தடியொரு  கையில்  ஊன்றித்
        தளர்நடை  நடந்த  போதும்
மடியொரு  சிறிதும்  இன்றி
        மாண்புறத்  தொண்டு  செய்தார்.

வெள்ளையர்  ஆட்சி  யென்னும்
        விலங்கினைத்  தகர்த்தெ றிந்தே
ஒள்ளிய  பார  தத்தாய்
        உற்றிடு  சிறையை  மீட்ட
தெள்ளியர்;  சேவை  மூலம்
சிறந்தவிந்  தியர்கள்  நெஞ்சை
அள்ளிய  புனிதர்; காந்தி
       அடிகளை  நிகர்ப்பார்  யாரே!

நல்லபாம்  பென்ன  வந்த
நாதுராம்  விநாயக்  கோட்சே
மெல்லென  அருகில்  வந்து
விசைபடச் சுட்ட  காலை
ஒல்லென  அரேராம்  என்ற
உரையுடன்  மண்ம  டந்தை
புல்லநீர் வீழ்ந்த  காட்சி
புகலுதற்  கெளிய  தாமோ?

அண்ணலே!  பிறருக்  காக
அனைத்தையும்  துறத்கும்  நல்ல
எண்ணமிக்  குடையோய்!  யார்க்கும்
இன்மொழி  புகட்டு  கின்ற
புண்ணிய!  குண்டு  தைத்த
புண்ணொடும் உமது  மேனி
மண்ணிடை  வீழ்ந்த  காட்சி
       மறக்கலாம்  காட்சி  யாமோ?

மதவெறி  கூடா  தென்று
மாநில  மாந்தர்க்  கெல்லாம்
இதமுறப்  புகட்டி  வந்த
எந்தையே!  உமது  மேனி
மதவெறிக்  கிலக்கே  யாகி
       மடிந்ததை  யெண்ணும்  போழ்தில்
இதயமே  நின்று  போகும்;
எனிற்பிற உரைப்ப  தென்னே!

ஆயுதம்  ஏந்த  வில்லை;
அடிதடி  நிகழ்த்த  வில்லை;
ஓயுதல்  இல்லா  வண்ணம்
உண்மையாய் உழைத்தார், காந்தி;
தீயதாம்  அடிமை  நீக்கிச்
       செயல்களில்  வெற்றி  பெற்றார்;
தேயுதல்  நேரா  வண்ணம்
தேசத்தைக்  காப்போம்  வாரீர்!

அழுதோம்; புரண்டோம்; அலறித் துடித்தோம்;
எழுந்தோம்; புலம்பினோம்; ஏங்கி---விழுந்தோம்நாம்;
தப்பறவே வாழ்ந்திட்ட  சால்புமிகு  காந்தியை
எப்பொழுது  காண்போம்  இனி?

அண்ணல்  மகாத்மா  அருமைத்தாய்  நாட்டினில்தம்
எண்ணரிய  ஆவி  இழந்தாலும் ---கண்ணைநிகர்
இந்தியநன்  னாட்டுமக்கள்  ஏற்றமுடன் வாழ்ந்திடவே
வந்தா  தரிப்பார்  மறைந்து.

வாழி!  மகாத்மாவே,  வாழி!யிந்தப்  பாரதமே,
வாழி!  அவர்பேர்  வழுத்துபவர்---வாழியரோ!
அன்னாரைப்  போற்றுபவர்; அண்ணல்  வழிநடப்போர்
எந்நாளும்  வாழ்க !  இனிது.

அரும் சொற் பொருள்: படிமிசை--உலகத்தில்;  மடி--சோம்பல்;
நிகர்ப்பார்-ஒப்பாவார்;  விசைபட---வேகமாக;  சுட்டகாலை--
சுட்ட பொழுது;  மண்மடந்தை--பூமிப்பெண்; புல்லுதல்--தழுவு
தல்; சால்பு--பண்பு;  வந்து ஆதரிப்பார் மறைந்து--தோன்றாத்
துணையாய் வந்து ஆதரிப்பார்;  வழுத்துபவர்--சொல்பவர்.