Monday, 15 October 2018

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் சங்க காலத்
தைச் சேர்ந்தவர். ஆண்பாற் புலவர்களுக்குச் சமமான
புலமையும்  கவிபுனையும் ஆற்றலும் உடையவர்.அன்
றைய சமுதாயத்தில் நிகழ்ந்த பழக்க வழக்கஙகள்,  நெறி
முறைகளைக் கூர்ந்து கவனித்தவர். இவர் சேரமான்
பெருஞ்சேரல் இரும்பொறையின் காலத்தவர். இவர்
இயற்றியதாகப் புறநானூற்றில் மூன்று பாடல்களும்
தகடூர் யாத்திரை என்னும் நூலில் சில செய்யுட்களும்
உள்ளன.

புறநானூற்றில் 299 ஆம் பாடலில் பெண்கள் 'அந்த' மூன்று
நாட்களில் முருகன் கோவிலில் பூசைப் பாத்திரங்களைத்
தொடாமல் ஒதுங்கி நிற்கும் வழக்கத்தை எடுத்துரைக்கின்
றார்.  ஒரு குறுநில மன்னனின் குதிரைப்படை வீரத்தை
வர்ணிக்கும்போது" பருத்தி வேலி சூழ்ந்த சிறந்த  ஊருக்
குரிய மன்னனின் குதிரைப்படைக் குதிரைகள் உழுந்து
உமியைத் தின்று கொழுத்த நடையுடையனவாக  விளங்கு
கின்றன; கடலைக் கிழித்துச் செல்லும்  தோணியைப் போலப்
பகைவர் படைமுகத்தைக் கிழித்துச் செல்கின்றன.; ஆனால்
பகைவர் குதிரைப்படைக் குதிரைகளோ, நெய் கலந்த கவளம்
உண்ட போதிலும்  முனைப்போடு  முன்செல்லாமல், முருகன்
கோவிலில் பெண்கள் 'அந்த' மூன்று நாட்களில் ஒதுங்கி
நிற்பது போலப் படைமுகத்தில்ஒதுங்கி நிற்கின்றன  என்று
விவரிக்கின்றார். பாடலைப் பார்ப்போம்:
"பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உடுத்ததர்  உண்ட ஓய்நடைப்  புரவி,
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ,
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்நுநின் றவ்வே".
(திணை: நொச்சி; துறை: குதிரைமறம்)

புறம் 310 ஆம் பாடலில் ஒரு மறக்குலப் பெண்ணின்
வீரத்தை விவரிக்கின்றார் பொன்முடியார். அந்த மறக்
குலப் பெண்ணின் கணவன் பெரும்போரிட்டு மடிந்
தனன். அத்தகைய மாவீரனின் மகன் சிறுவயதில்
பால் உண்ண மறுத்து அடம்பிடிக்கும் போது ஒரு சிறு
கோலால் அவனை மிரட்டிக் குடிக்க வைத்தனள்.
ஆனால் பெரியவன் ஆனபிறகு மறைந்த தன் தந்தை
யைப் போல வீரத்துடன் போரிட்டுக் களிறுகளைக்
கொன்றும் அமையாது தொடர்ந்து போரிட்டு  மார்பிலே
அம்பு பாய்ந்து கேடயத்தின்மேல் வீழ்ந்து கிடந்தான்.
அம் மறக்குலப் பெண் அவனைத் தூக்கித் தன்மடியில்
கிடத்தி ஐயோ, மார்பில் அம்பு தைத்துவிட்டதே என்று
புலம்பினாள். ஆனால் அவனோ, அப்படியா? எனக்குத்
தெரியாதே என்று சர்வ சாதாரணமாகப் பதில்  கூறி
னான். மாபெரும் வீரன் மகன் அல்லவா?, அவன்.
பாடலைப் பார்ப்போம்:
"பால்கொண்டு மடுப்பவும்  உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்(டு)ஆனான்;
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்(று)அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்லண லோனே!".

இனி, புறநானூறு 312 ஆம் பாடலைப் பார்ப்போம்:
ஒரு வீரத்தாய் கூறுவதாகப் பொன்முடியார் பாடு
கின்றார். அந்த வீரத்தாயானவள் நாட்டில் ஒவ்வொரு
வரது கடமையையும் எடுத்தோதுகின்றாள். பெற்றுப்
பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்துவிடுவது  எனது
கடமையாகும். அவனை வீரப் புதல்வனாகப் போர்க்
கலைகளையும் ஆயுதங்களைக் கையாள்வதைப்
பற்றியும் கற்பித்துச் சான்றோன், அதாவது, நாட்டைக்
காப்பாற்றும் வீரம் செறிந்த போர் வீரனாக்குவது
தந்தையின் கடமையாகும். இவனுக்கும் இவனைப்
போன்ற போர்வீரர்களுக்கும் உரிய ஆயுதங்களைச்
செம்மையாகவும், கூர்மையாகவும் வடித்துக் கொடுத்
தல் கொல்லர்களுடைய கடமையாகும். இவன் வீரத்
தைக் கவனித்து, உறசாகமூட்டி, ஊக்குவித்துப் போர்
முனையில் திறமை காட்ட வைத்தல் அரசனது கடமை
யாகும். அது மட்டும் அன்று; இவன் வீரத்தை மெச்சிப்
பாராட்டிப் பரிசு நல்குதலும் அரசனது கடமைதான்.
போர்க்களத்தில்  ஒளிவிடுகின்ற வாளால் சிறக்கச்
சண்டை செய்து பகைவரை வீழ்த்துதலும், யானை
களை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடித் திரும்பு
தலும் காளை போன்ற வீரர்களது கடமையாகும்.
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களி(று) எறிந்து  பெயர்தல் காளைக்குக் கடனே".
அருஞ்சொற் பொருள்:
ஈன்று புறந்தருதல்--பெற்றுப் பாதுகாத்தல்
சான்றோன் ஆக்குதல் --ஆயுதப் பயிற்சியில்
  தேர்ந்தவனாக ஆக்குதல்.
நன்னடை நல்கல்--நல்ல வீரச்செயலுக்கு
   மகிழ்ந்து பரிசளித்தல்.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி--ஒளிவிடுகின்ற
வாட்போரில் பகைவரை அழித்து
களிறு எறிந்து பெயர்தல்--ஆண் யானைகளை
  வெட்டி வீழ்த்தி வெற்றியுடன் திரும்புதல்.
பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடல்கள்
மூன்றுமே படித்து இன்புறத் தக்கன.


No comments:

Post a Comment