Tuesday, 2 October 2018

வாராது வந்த மாமணியே! வாழ்கவே!

வாராது வந்த மாமணியே வாழ்கவே!

அணிதிகழ் குசராத் நாட்டில்
அவதரித் திட்டார்; தாயார்
மணிநிகர்  பொறுமை, வாய்மை
மகிமையைக்  கற்றுத்  தந்தார்;
பணிபுரி  வதிலே என்றும்
பரந்தபே  ரின்பங்  கண்டார்;
துணிவுடைக் காந்தி வெள்ளைத்
       துரைகளை விரட்டி  னாரே!

குடியினாற்  கெட்ட மக்கள்
குடிகளை உயர்த்தல்  வேண்டிப்
படிமிசை  மதுவி  லக்கைப்
        பரப்பிய  பண்பின்  மிக்கார்;
தடியொரு  கையில்  ஊன்றித்
        தளர்நடை  நடந்த  போதும்
மடியொரு  சிறிதும்  இன்றி
        மாண்புறத்  தொண்டு  செய்தார்.

வெள்ளையர்  ஆட்சி  யென்னும்
        விலங்கினைத்  தகர்த்தெ றிந்தே
ஒள்ளிய  பார  தத்தாய்
        உற்றிடு  சிறையை  மீட்ட
தெள்ளியர்;  சேவை  மூலம்
சிறந்தவிந்  தியர்கள்  நெஞ்சை
அள்ளிய  புனிதர்; காந்தி
       அடிகளை  நிகர்ப்பார்  யாரே!

நல்லபாம்  பென்ன  வந்த
நாதுராம்  விநாயக்  கோட்சே
மெல்லென  அருகில்  வந்து
விசைபடச் சுட்ட  காலை
ஒல்லென  அரேராம்  என்ற
உரையுடன்  மண்ம  டந்தை
புல்லநீர் வீழ்ந்த  காட்சி
புகலுதற்  கெளிய  தாமோ?

அண்ணலே!  பிறருக்  காக
அனைத்தையும்  துறத்கும்  நல்ல
எண்ணமிக்  குடையோய்!  யார்க்கும்
இன்மொழி  புகட்டு  கின்ற
புண்ணிய!  குண்டு  தைத்த
புண்ணொடும் உமது  மேனி
மண்ணிடை  வீழ்ந்த  காட்சி
       மறக்கலாம்  காட்சி  யாமோ?

மதவெறி  கூடா  தென்று
மாநில  மாந்தர்க்  கெல்லாம்
இதமுறப்  புகட்டி  வந்த
எந்தையே!  உமது  மேனி
மதவெறிக்  கிலக்கே  யாகி
       மடிந்ததை  யெண்ணும்  போழ்தில்
இதயமே  நின்று  போகும்;
எனிற்பிற உரைப்ப  தென்னே!

ஆயுதம்  ஏந்த  வில்லை;
அடிதடி  நிகழ்த்த  வில்லை;
ஓயுதல்  இல்லா  வண்ணம்
உண்மையாய் உழைத்தார், காந்தி;
தீயதாம்  அடிமை  நீக்கிச்
       செயல்களில்  வெற்றி  பெற்றார்;
தேயுதல்  நேரா  வண்ணம்
தேசத்தைக்  காப்போம்  வாரீர்!

அழுதோம்; புரண்டோம்; அலறித் துடித்தோம்;
எழுந்தோம்; புலம்பினோம்; ஏங்கி---விழுந்தோம்நாம்;
தப்பறவே வாழ்ந்திட்ட  சால்புமிகு  காந்தியை
எப்பொழுது  காண்போம்  இனி?

அண்ணல்  மகாத்மா  அருமைத்தாய்  நாட்டினில்தம்
எண்ணரிய  ஆவி  இழந்தாலும் ---கண்ணைநிகர்
இந்தியநன்  னாட்டுமக்கள்  ஏற்றமுடன் வாழ்ந்திடவே
வந்தா  தரிப்பார்  மறைந்து.

வாழி!  மகாத்மாவே,  வாழி!யிந்தப்  பாரதமே,
வாழி!  அவர்பேர்  வழுத்துபவர்---வாழியரோ!
அன்னாரைப்  போற்றுபவர்; அண்ணல்  வழிநடப்போர்
எந்நாளும்  வாழ்க !  இனிது.

அரும் சொற் பொருள்: படிமிசை--உலகத்தில்;  மடி--சோம்பல்;
நிகர்ப்பார்-ஒப்பாவார்;  விசைபட---வேகமாக;  சுட்டகாலை--
சுட்ட பொழுது;  மண்மடந்தை--பூமிப்பெண்; புல்லுதல்--தழுவு
தல்; சால்பு--பண்பு;  வந்து ஆதரிப்பார் மறைந்து--தோன்றாத்
துணையாய் வந்து ஆதரிப்பார்;  வழுத்துபவர்--சொல்பவர்.

1 comment: