Monday, 8 October 2018

அருமையாய் நமைவளர்த்த அன்னைக்கோர் கலிவெண்பா

வையத்தில் பெற்றெடுத்த மாதாவைக்
    கண்கண்ட
தெய்வத்துக் கீடாகச் சிந்தித்தே---
     உய்கின்றோம்;

பற்றற்ற ஞானியரும் பாங்காக
     அன்னையரை
உற்ற முறையில் உயர்வுசெய்வர்---
      சற்றேனும்

ஓய்வே இலாதுழைக்கும் உத்தமத்
      தாய்மார்கள்
தூய்மைமனத் தோடு துலங்கிடுவர்---
      வாய்மையே;

இத்தகைய சீர்த்தியனைக்(கு)  எப்படி
      வாய்த்ததெனச்
சித்தத்தில் ஓர்ந்தால் தெளிவுறுவோம்---
       இத்தரையில்

உண்டான நாள்முதலாய் ஓம்பத்
       தொடங்கிடுவர்;
கண்டதெலாம் உண்பதனைக் கண்டிப்பாய்த்---துண்டிப்பர்;

பக்குவமாய்த் தேர்ந்துண்டு பத்தியங்கள்
       பேணிடுவர்;
தக்கபடி பிள்ளை தழைத்திடவும்---
       சிக்கலின்றி

நன்கு  வளர்ந்திடவும் நாளும்
       பணிசெய்வர்;
அன்பு மிகுந்தே அடிவயிற்றை---
        மென்மையாய்

நீவித்  தடவிடுவர்; நிம்மதி யில்லாமல்
ஆவி தளர்ந்திடுவர்; அச்சத்தால்---
         கூவிடுவர்;

மெய்யெலாம் வாடிட மேனி மெலிவுறத்
துய்க்கும் உணவு சுவையின்றிக்---
         கைக்குமே;

வேண்டாத தெய்வமெலாம் வேண்டிப்பல்
         நோன்பிருந்து
நீண்டபத்து மாதம் நிறைவயிற்றால்---
          மூண்டதுயர்

கொஞ்சநஞசம் அன்று; குழந்தைக்காய்த்
           தாங்கிடுவர்;
பிஞ்சு மகவினைப் பெற்றெடுத்துக்---
            கொஞ்சும்

விழைவால் பொறுத்திடுவர்; வேளைவரும்  போதில்
அழைப்பர் கடவுளை; ஆர்த்தே---உழல்வர்;

ஒருவாறு பெற்றபின்னர் ஒண்முகம்
           நோக்கிப்
பெருமைமிகப் பல்விதமாய்ப் பேசிச்---
            சிரித்திடுவர்;

பிள்ளைப்பே  றென்பது  பெண்டிர்தம்
             இன்னுயிரைக்
கொள்ளை யடிக்கும் கொடியதாம்---
              சள்ளைவிதி;

தப்பிப்  பிழைத்தால் தனக்கு மறுபிறவிக்
கொப்பான வாழ்வென்பர்; உண்மையிது--- தப்பில்லை;

பெற்றெடுத்த பின்னரும் பெண்டிர்பா(டு)
              ஓய்ந்திலது;
பற்றுடனே தம்குருதி  பாலாக்கி---
              உற்றவன்பால்

ஊட்டி  மகிழ்ந்திடுவர்; ஊட்டம்
              அளித்திடுவர்;
வீட்டு மருத்துவத்தால் வேதனை,நோய்---
               ஓட்டிடுவர்;

நோவு பெரிதென்றால் நோய்நீக்கும்
               வைத்தியர்பால்
ஆவலுடன் காட்டிடுவர்;ஆதரவாய்க்---
                காவல்செய்வர்;

கண்ணயர்தல் இன்றிக் கவனமாய்ப்
                பேணிடுவர்;
உண்ணவும் தூங்கவும் ஓர்ந்திடார்---
                 கண்ணனைய

பிள்ளைக்காய் வாழ்ந்திடுவர்; பேசப்
                  பழக்கிடுவர்;
'கள்ளம்  கபடு களை'யென்பர்;---
                  விள்ளரிய

நீதிக் கதைசொல்லி நேர்மை
                  யுறவளர்ப்பர்;
சாதி,மதம் போன்றவற்றைத்
    தக்கதல்ல---தீதென்பர்;

முன்னர்நமைப் பெற்றெடுக்க முந்நூறு
                  நாள்சுமந்த
அன்னையரின் தாள்பணிவோம் ஆர்த்து.

அரும்சொற் பொருள்:
உய்கின்றோம்--வாழ்கின்றோம்
துலங்கிடுவர்--விளங்கிடுவர்
சீர்த்தியனைக்கு--சிறப்பு அன்னைக்கு;
அன்னை, அனை யானது இடைக்குறை.
ஓர்ந்தால்--நினைத்தால்
உண்டான நாள்---கருத்தரித்த நாள்
கைக்கும்--கசக்கும்
மகவு--குழந்தை
விழைவு--ஆவல்
ஆர்த்து--ஒலி எழுப்பி
ஒண்முகம்--ஒளி பொருந்திய முகம்
சள்ளை விதி--தொந்தரவு தரும் விதி
கண்ணனைய--கண் போன்ற
விள்ளரிய--சொல்ல அரிதான
ஓம்புதல்--பேணுதல்
உற்றவன்பால்--உற்ற அன்பால்
         
 
       





     


No comments:

Post a Comment