Sunday, 4 November 2018

சங்க இலக்கியம் குறிப்பிடும் வலசை போதல்

சங்க இலக்கியம் குறிப்பிடும்  வலசைபோதல்

பறவைகளின்  இடப்பெயர்ச்சியே  வலசைபோதல் எனச்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுங்குளிர்
மாதங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ர
வரி, மார்ச்சு ஆகிய காலங்களில் துருவப்பகுதியான
சைபீரியா ,ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, சீனா
முதலான பகுதிகளில் பனி உறைந்து  உயிரினங்களின்
இயக்கம்  முடக்கப்பட்டுவிடும். மனிதர்கள் எப்படியோ
சமாளித்து விடுவார்கள். ஏனென்றால் பாதுகாப்பான
உணவு, உறைவிடம் மற்றும் உடுக்கை முதலிய தேவை
களை நாமே உருவாக்கிக் கொள்வோம். ஆனால் மற்ற
உயிரினங்கள் இந்தக் காலங்களில்  தொல்லைகளுக்கு
ஆளாகின்றன. எனவே அவை கடுங்குளிர்ப்  பகுதிகளி
லிருந்து பாதுகாப்பான வெப்பமான இடங்களை  நோக்கி
நகர்கின்றன. உணவுத் தேவையும் ஒரு முக்கியமான
காரணமாகும்.  சில உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்
காகவும் இடப்பெயர்ச்சி செய்கின்றன. பறவைகள் புரியும்
இடப்பெயர்ச்சியை  வலசை போதல் என்று  தமிழ்இலக்
கியத்தில் குறிப்பிட்டனர்.  அதிலும், சங்க காலப் புலவர்
பெருமக்கள் இயற்கையை மிகவும் நேசித்து அதனுடன்
ஒன்றியே வாழ்க்கை நடத்தினர். இயற்கையை இரசித்து
ஊன்றிக் கவனித்தனர். அதனால் தான் பறவைகளின்
வலசைபோதலைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. பறவை
களின் சிற்றினங்களுக்குள் ஏற்படும்  உணவு, எல்லை,
கூடுகட்டுமிடம் முதலியவற்றை முன்னிட்டு ஏற்படும்
போட்டி,சூழல் மாற்றம், காற்றின் திசைமாற்றம் ஆகிய
வைகளும் வலசைபோதலுக்கான காரணங்களாகும்.

சங்கப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையார் தமது
காலத்தில் வலசைபோன அன்னச்சேவலைப்பார்த்துப்
பாடியதாகச் சொல்லப்படும்(புறம் 67ஆம் பாடல்)பாடலில்
தென்திசைக் குமரிக்கடலில் அயிரைமீனை யுண்டு
வடதிசை நோக்கி வலசை போனதாகத் தெரிவித்துள்ளார்.
"குமரியம்  பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழநன் னாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக்  குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை  அடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே."
தென்திசைக் குமரியிலிருந்து வடதிசை மலையை
நோக்கிப் பயணம் சென்று கொண்டிருந்த அன்னச்  சேவலை
இடையில் உறையூரில் இறங்கிக் கோப்பெருஞ் சோழ
வேந்தனைச் சந்தித்துத் தன்பெயரைச் சொன்னால்  பரிசு
கிடைக்கும் என்று சொன்னதாகப் பாடியுள்ளார்.

இது போலவே சத்திமுத்தம் என்னும் ஊரைச் சார்ந்த புலவர்
"நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!
நீயும்நின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீர் ஆயின் எம்மூர்ச்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி......."
என்று பாடியுள்ளார். இந்தப் பாடலில் புலவர் வலசை
போன பறவையை மட்டுமன்றித் தமது வறுமையைப்
பற்றியும் பாடியுள்ளார்.
"கையது கொண்டு மெய்யது போர்த்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை  யாளனைக் கண்டனம் எனுமே"
என்று தாம் வறுமையால் படும் துன்பத்தை உருக்க
மாக விவரித்துள்ளார்.

நற்றிணை 70ஆம் பாடலில் வெள்ளிவீதியார்
"சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி யன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்  குருகே!
எம்மூர் வந்தெம் உண்துறைத்  துழைஇ
சினைக்கெளிற் றார்கையை அவர்ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெருமறவி யையோ
ஆங்கண் தீம்புனல், ஈங்கண் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!"
என்று வலசை போய்க் கொண்டிருக்கும் சிறுவெள்
ளாங் குருகை அழைத்துத் தலைவி தன் தலைவனி
டம் தனது துன்பத்தைச் சொல்லக் கூறியதாக
எழுதப்பட்டுள்ளது.

நற்றிணை 356ஆம் பாடலில் புலவர் பரணர்
"நிலம்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்கு மென்தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட் டிமயத்  துச்சி
வான்அர மகளிர்க்கு மேவல் ஆகும்;
வளராப் பார்ப்பிற்(கு) அல்குஇரை ஒய்யும்;
அசைவில் நோன்பறை போலச் செலவர
வருந்தினை  வாழிஎன் னுள்ளம்  ஒருநாள்
காதலி உழைய ளாகக்
குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார்
வருமே".
இப்பாடலில் மெல்லிய சிறகுடைய செங்கால்
அன்னம் தென்திசைக் கடலில் தன் இரையை
மேய்ந்துவிட்டு இமயத்தின் உச்சியை நோக்கி
வலசைபோவதாகப் பாடியுள்ளார்.

அகநானூறு 208 ஆம் பாடலில் பரணர் வெளியன்
வேண்மான் ஆஅய் எயினன் பாழிப் பறந்தலை
என்னும் இடத்தில் கோசர் குடியைச் சேர்ந்த மிஞிலி
என்பவனோடு புரிந்த போரில் நண்பகல்வேளையில்
கடுமையான காயமடைந்து மரணத்தை நெருங்கிக்
கொண்டிருந்த பொழுது பறவைகளின் வலசை
நிகழ்ந்ததாகவும் பறவைகள் கூட்டமாகச் சிறகுகளை
விரித்துப்பறந்த விதம் ஆஅய் எயினனுக்கு நிழல்
தருவது போல இருந்ததாகவும் பாடியுள்ளார்.
"வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கி ஞாயிற்று
ஒண்கதிர் தெறிமை சிறகரிற் கோலி
நிழல்செய்து....."
பறவைகள் இயல்பாக வலசை செல்கையில்
கூட்டமாகப் பறந்ததனால் நிழல் உண்டாயிற்றா,
ஆஅய்எயினன் பறவைகளிடம் நட்பு பாராட்டிய
தால் அவை நிழல் கொடுத்தனவா என்பது நமக்கு
விளங்கவில்லை. ஆனால் புலவர் பரணர் அகநா
னூறு 148 மற்றும் 181ஆம் பாடல்களில் பறவைகள்
நிழல்கொடுத்ததாகவே பாடியுள்ளார்.

அகம். 273 ஆம் பாடலில் புலவர் ஔவையார்
"விசும்பு விசைத்தெறிந்த கூதளங் கோதையிற்
பசுங்கால் வெண்குருகு வரப்பறை வளைஇ
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப"
வெள்ளாங்குருகு வலசை போனதைப் பற்றிப்
பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறம்.
20ஆம் பாடலில்
"புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்"
என்று பாடியுள்ளார்.

கல்லாடனார் அகம்.113உம் பாடலில்
"அலங்கல் அம்சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு"
என்று பறவைகள் புலம்பெயர்தலைப் பாடி
யுள்ளார்.

மேலும் அகம் 100ஆம் பாடலில்
"வம்ப நாரை இனைஒலித் தன்ன" என்றும்
"வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு" என்றும்
(அகம்180), "வம்ப நாரை இரிய"(அகம் 189)
என்றும் இலக்கியங்களில் பாடப்பட்டுளது.
பழைய பறவை வலசை போவதும் புதிய
பறவை வலசை வருவதும் இயல்பாகவே
நடந்துள்ளன. இடப்பெயர்ச்சி செய்யாத,
அதாவது, வலசைபோகாத பறவைகளும்
இருந்துள்ளன. அவற்றை வதிகுரு என்று
அழைத்தனர். குறுந்தொகை 5ஆம்பாடலில்
"வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை"
என்று கூறப்பட்டுள்ளது.

இதுகாறும் பார்த்தவற்றால் பல்வேறு காரணங்
களை முன்னிட்டுப் பறவைகள் வலசை போவதையும்,
சில பறவையினஙகள் வலசை போவதில்லையென்
றும் அறிகிறோம். பறவைகளால் பல நன்மைகள்
மனித இனத்துக்குக் கிடைக்கின்றன. பறவைகள்
மூலம் தாவர வர்க்கம் பல்கிப்பெருகுகிறது. கொசு
போன்ற சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்வதனால்
சுற்றுச் சூழல் மேன்மையடைகிறது. பறவைகளின்
கழிவுகளால் இயற்கை உரங்கள் கிடைக்கின்றன.

எனவேதான் பறவைகளுக்கான சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் உள்ளன. உதாரணமாக,
வேடந்தாங்கல், கோடியக்கரை, கூத்தன்குளம் முத
லான இடங்களில் அமைக்கப் பட்டவை. நாம் இந்த
இடங்களில் மாசில்லாத சுற்றுச் சூழலை உருவாக்
கல் வேண்டும். பட்டாசு முதலானவை இவ்விடங்
களில் கொளுத்தத் தடைவிதித்தல் வேண்டும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."(குறள்)
இந்தப் பரந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்
சொந்தமன்று.மனிதரல்லாத ஏனைய உயிர்
களுக்கும் சொந்தமானதுதான். எல்லா உயிரி
னங்களையும் இயன்றவரை பேணிப் பாது
காத்திடுவோம்.










1 comment: