Sunday, 18 November 2018

புறநானூற்றில் சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

 புறநானூற்றில்  சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

மகட்பாற் காஞ்சியாவது, நின் மகளைத் தருக  எனக்
கோரும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.  இற்றை
நாளிலும்  இந்த வீம்பு மிக்க பழக்கம் நிலவி வருகிறது.
அத்தை மகள் அம்மான்(மாமன்) மகன்  என்ற நெருங்கிய
உறவினர்க்குள்ளும் பெண் கொடுத்தல் அல்லது பெண்
எடுத்தல் நிகழாமல் சில தலைமுறைகள் கடந்துள்ளன.
காரணம், அவர்களுக்குள் மனக்கசப்பு, சொத்துத் தகராறு
நிகழ்ந்திருக்கலாம். இதன் விளைவாக யாதொரு தொடர்
பும் இன்றி ஆண்டுகள் கடந்திருக்கலாம். சாதாரண, சுமுக
மான பேச்சு வார்த்தையே நடைபெறாத பொழுது, பெண்
கொடுத்தல் அல்லது பெண் எடுத்தல் நிகழ வாய்ப்பேயில்லை.
தப்பித் தவறி ஏதாவது ஒரு குடும்பம் பெண் எடுக்க முயன்று
அதற்காகச் சில நடுநிலை உறவினர் மற்றும் நண்பரைத் தூது
அனுப்பி னால் பெண்ணின் தந்தை சினத்தை வெளிப் படுத்திப்
பெண்கேட்டு வந்தவர்களை இழிவுசெய்தும், தமது குடும்ப
நிலையை உயர்வாகப் பேசியும் பெண்கொடுக்க மறுப்பைத்
தெரிவிப்பார். இது இன்று நேற்று உதித்த பழக்கம் அன்று.
சங்க இலக்கியமாம் புறநானூற்றில் விரிவாகச் சொல்லப்
பட்டுள்ள மிகப் பழைய பழக்கம்.  மகட்பாற் காஞ்சி என்னும்
துறையில் அற்றை நாளில் மக்கள்/மன்னர்கள் நடந்துகொண்ட
முறையை எடுத்தியம்பியுள்ளனர்.

புறநானூற்றில் பரணர் பாடிய பாடலைப் பார்ப்போம்.(புறம்:
336) பெண்கேட்டு வந்த  வேந்தனும் மிகுந்த சினத்தையுடை
யவன்; இப் பெண்ணின் தநதையோ காலாகாலத்தில் செய்ய
வேண்டியதைச் செய்யாது செயல்மறந்து  தற்சமயம் சினத்தைக்
காட்டி நின்றனன். களிறுகள் கடிமரத்திலே அமையாது சீறி
நின்றன. மறவரும் சினந்து இதழ் மடித்தனர். இவ்வாறு இவள்
தந்தையும் இவளைப் பெண் கேட்டுவந்த அவனும் போருக்கு
எழுந்தனர். தன்மகளை வளர்த்துப் பருவம் ஆக்கியது மட்டும்
அல்லாமல் கூடவே பகையையும் வளர்த்த தாயானவள் பண்பும்
அறனும் இல்லாதவளாவாள்.(பெண்ணின் பேரழகே இத்தனை
சிக்கலுக்கும் காரணமாகும் என்ற கருத்தை உள்ளடக்கியது). இனி.
பாடலைப் பார்ப்போம்.:
"வேட்ட வேந்தனும்  வெஞ்சினத்  தனனே;
கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத் தேந்திய  வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும்  அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடிமூதூர்;
அறனிலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப் பேந்திய முற்றா இளமுலைத்
தகவளர்த் தெடுத்த நகையொடு,
பகைவளர்த் திருந்தவிப் பண்பில் தாயே!".
மகட்பாற் காஞ்சியாவது, நின்மகளைத் தருக
என்னும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.
பிற்காலத்தில் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய
நூல்களில்  மகட்பாற் காஞ்சி "மறம்" என்னும் ஒரு
உறுப்பாகச் சேர்க்கப்பட்டு வளமான கற்பனை நயங்
களையும் சொல் ஓவியங்களையும் வளர்த்தெடுத்தது.

புறம் 337. பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் மன்னன்
பாரியும் தன்னிடம்  பெண்கேட்டு வந்த சோழ அரசனிடம்
 மறுப்புத் தெரிவித்து அவனைத் திருப்பி அனுப்பினன்.
பாரியின்நண்பரான கபிலர் "யாராகுவர்கொல் இப்
பெண்டிரை மணப்பவர்?" என்று புலம்பிப் பாடினார்.
"வருத  லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்றிவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா  குவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வனமுலை ஞெமுக்கு வோரே?"
சோழ வேந்தனிடம் பெண்கொடுக்க மறுத்துச்
செய்தி சொல்லித் திருப்பி அனுப்பியபின்
அவன் தன்நாட்டுக்குத் திரும்பாமல் பாரியின்
பறம்பு மலையிலேயே தங்கித் தன்  போர்யானை
களைக் கவளம் ஊட்டிப் பேண ஆரம்பித்தனன்.
போருக்கு ஆயத்தம் செய்ததால் மீண்டும் பெண்
கேட்டு வந்திலன்.  பெண்ணுக்குத் தமையன்
மாரோ பொருசமம் பலகடந்த வெற்றி வேலைத்
தாங்கிப் பகைவரின் குருதி தோய்ந்த தலைகளைக்
கையிலே நாளும் கொண்டவராயினர். என்னே
இவர் வீரம் இருந்தவாறு!  இவ்வாறு பெண்கேட்டு
வருபவரோடெல்லாம் மறுத்துப் போர்செய்தால்  இப்
பெண்ணை அணைந்து  வாழவரும் மணவாளர்தாம்
யாவரோ? தெளிவாகக் கூறுக எனக் கபிலர் புலம்பினார்.

புறம் 338ஆம் பாடலில்  குன்றூர் கிழார் மகனார் தம் பாட
லில் ஓரெயில் மன்னன்தன்  ஒருமடமகளை மணம் கேட்டு
வந்த பலரும் சம்மதம் பெறாது வீணே திரும்பியதை விவ
ரிக்கின்றார். மூவேந்தரே பெண்கேட்டு வரினும், தன் தகுதிக்
கேற்ப  வணங்கிக் கேட்டாலன்றித் தன் மகளை யார்க்கும்
தரமாட்டேன் என்று முழங்கினான். மூவேந்தர்க்கே பெண்ணைக்
கொடுக்க மறுப்பவன் சாதாரண அரசனுக்குப் பெண் கொடுப்
பானா என்ன?

புறம்339ஆம் பாடலும் ஒரு பெண்ணைப் பலரும் விரும்பிப்
பெண்கேட்டு நிறைவேறாது வறிதே திரும்பிய செய்தியை
எடுத்துரைக்கினாறது. புறம் 340ஆம் பாடலில் ஒரு பெண்ணை
ஒரு மன்னனுக்கு வரைவு(நிச்சயம்) செய்தும் அவளுக்கு மணம்
முடியாதிருக்கும் செய்தியைச் சொல்கிறது.

புறம் 341ஆம் பாடலில் ஓர்அரசன் பெண்கேட்டு வந்ததாகவும்,
பெண்ணின் தந்தை பெண்கொடுக்க மறுத்துப் போர்க்கு எழச்
சொன்னதாகவும் மறுநாள் நிகழவிருக்கும் போரில் என்ன
நடக்கும் என்று தெரியாது என்று பெண்கேட்டவன் சொன்னதாகவும்
இயற்றப்பட்டுள்ளது. புறம் 342ஆம் பாடலில் ஓர்அரச கன்னியை
வரும்பிய இளைஞனிடம் அப்பெண் ஆபத்தானவள் என்றும்
அவளை விழைவதைத் தவிர்ப்பதே நல்லதென்றும் இயற்றிய
புலவர் கூறியதாகப் பாடல் இயம்புகிறது.

புறம் 343 ஆம் பாடலில் பெண்ணின் தந்தை மகட்கொடை மறுத்
ததைத் தொடர்ந்து பெண்கேட்டு வந்தவன் ஊரை முற்றுகையிட
ஏணிகளைச் சார்த்தி வைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. புறம்
344 ஆம் பாடலில் மிகுந்த செல்வத்தைப்பெண்ணின் தந்தை
யிடம் அளித்துப் பணிவாகப் பெண்தருமாறு கேட்பது அல்லது
பகைத்துப் போர்புரிவது என்னும் இரண்டில் எது நல்லதோ
அதைச் சிந்தித்துச் செயல்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

புறம் 345ஆம் பாடலில் நிரல் அல்லார்க்குத் தரல் இல்லை
எனப் பெண்ணின் தந்தை கூறியதால் இரு தரப்பினர்க்கும்
போர் மூண்டால் என்ன நேருமோ? என்று அஞ்சுவதாகப்
புலவர் தெரிவித்துள்ளார். புறம் 346 ஆம் பாடலில் ஊரில்
உள்ளார் அனைவரது அழிவுக்கும் இப்பெண்ணின் எழில்
காரணமாகிவிடுமோ? என்று புலவர் அச்சம் தெரிவிக்கி
றார்.

புறம் 347ஆம் பாடலில் இப்பெண்ணின் அழகை விரும்பி
வேந்தர் பலர் பெண்கேட்க, அப் பெண்ணின் தந்தை மறுத்
ததைத் தொடர்ந்து வேந்தர்கள் அவ்வூரிலேயே தங்கிப்
பாடி எடுத்தனர்(போருக்கான சகல ஆயத்தமும் செய்தனர்)
யானைகளை மரங்களில் பிணித்ததால் மரங்களின் வேர்
கள் வெளிக் கிளம்பின. ஊர் என்னாகுமோ? என்று புலவர்
கிலேசம் அடைந்தார். புறம் 348ஆம் பாடலில் இப் பெண்
பிறவாமல் இருந்திருக்கலாம் என்றும் இவளால் ஊர்க்கு
ஏகப்பட்ட இடர்கள் நேர்ந்துவிட்டன என்றும் புலவர் புலம்
பினார். புறம் 349ஆம் பாடலில் இப்பெண் இவ்வூர்க்கு
அணங்கு(வருத்தும் மோகினி) ஆயினள் எனப் புலவர்
வருந்தினார். புறம் 350 ஆம் பாடலில் ஏற்கெனவே போருக்
கான ஆயத்தம் செய்ததில் அகழி. தூர்ந்து விட்டது. மதிற்
சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நிகழுமோ?
எனப் புலவர் கவலைப் பட்டார். புறம் 351ஆம் பாடலில்
வளமிக்க மருத நிலம் இந்தப் போரால் என்னாகுமோ?
என்று கவலையுற்றார். புறம் 352 ஆம் பாடலில் இவளை
யார்தாம் மணப்பரோ? என்று புலவர் வினவினார். புறம்
353 மற்றும் 354ஆம் பாடல்களில் இவள் அழகால் இந்த
ஊருக்கு என்ன ஆபத்து நேருமோ? என்று கவலையுற்
றார். ஆக இந்த விடயத்தில் இரு தரப்பினரும் வீம்பு
காட்டியும் வறட்டு கௌரவம் காட்டியும் ஊரிலுள்ள மக்களை
அச்சத்தில் ஆழ்த்தினார்கள் என்றால் மிகையன்று.

சங்க காலத்தில் நிலவிய இப்பழக்கம் இன்றுவரை வேரூன்
றிவிட்டது. இடைக்காலத்தில் சிற்றிலக்கியத்தில் நுழைந்து
ஆழமாகக் கால் பதித்து விட்டது. சிற்றிலக்கியங்களில்
மறம் என்ற உறுப்பாகப் புகுந்துவிட்டது. கலம்பகம் என்னும்
சிற்றிலக்கியங்களில் புலவர் பெருமக்கள்  அவரவர் கற்பனைத்
திறனுக்கேற்பச் சுவையான பாடல்களை இயற்றியுள்ளனர்.
எடுத்துக் காட்டாக மூத்த கலம்பகமான நந்திக்கலம்பகத்தில்
"அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன்
அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார்
மன்னர் தூதர்;
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம்
        சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும்
குனிந்து பாரே!
எனும் பாடல் பயின்று வருகிறது.
பொருள்:
பெண்ணின் தந்தை தூதுவனிடம் கூறியது:
மன்னன் அனுப்பிய தூதனே! என்வில் ஒடிந்துள்ளது.
அதன் பூட்டுக் கயிறு அறுந்துள்ளது. நான் மூப்பு
எய்திவிட்டேன் என்று எண்ணியா உன் மன்னன்
உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க
கூந்தலையுடையவள் என் மகள். இவளைப் பெண்
கேட்டு உன்னை அனுப்பியுள்ளான் உன் மன்னன்.
என் இந்தச் சின்னஞ் சிறிய குடிலைப் பார். இதில்
சிறிய தூண்களும் நீண்ட வளைச்சட்டங்களும்
உள்ளன. அவை எவற்றால் ஆனவை என்று தெரி
யுமா? நந்திவர்மனாகிய என் வேந்தன் தெள்ளாற்
றுப் போரில் பகை அரசர்களின் யானைப் படையை
அழித்தான். அந்த யானைகளின் கொம்புகளே
இந்தத் தூண்கள்; நெடிய வளைச் சட்டங்கள். ஐயம்
இருந்தால் நீ இக்குடிசையில் குனிந்து பார்.

இன்னும் கச்சிக் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், புள்ளிருக்கு
வேளூர்க் கலம்பகம், கண்ணப்பர் கலம்பகம், அழகர் கலம்பகம்,
திருப் பேரூர்க் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திருவரங்கக்
கலம்பகம், திருவருணைக் கலம்பகம் என எண்ணிலடங்காக்
கலம்பக நூல்கள் உள்ளன. புலவர் பெருமக்கள் தம் புலமை
யை வெளிப் படுத்தும் விதமாக எத்தனையோ சுவையான
பாடல்களை 'மறம்' என்னும் துறையில் இயற்றியுள்ளனர்.
அவை படித்து இன்புறத் தக்கவை.



.












1 comment:

  1. புறநானூற்றுப்பாடல்களில் சொல்லப்பட்ட மகட் கொடை மறுத்தல் பற்றிய விளக்கம் அருமை !

    ReplyDelete