Sunday, 25 November 2018

சங்க காலத் தமிழ்ச் சான்றோர் கபிலர்.

சங்க  காலப்  புலவர் கபிலர்

கபிலரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பக்
காலமாகும். இவர் தன்னை அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்
என்று கூறுகிறார். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என
மாறோக்கத்து நப்பசலையார் என்னும் சமகாலப் புலவர்
தெரிவிக்கிறார். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சங்கப்
பாடல்கள் 2381.  இதில் பத்தில் ஒருபங்குப் பாடல்கள் கபிலர்
பாடியவைதாம். சங்க இலக்கியங்களில் அதிகப் பாடல்கள்
பாடியவர் கபிலர்.  இவர் பாடல்களிலேயே மிகச் சிறப்பானது
பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும்.  இதில் குறிஞ்சி
நிலத்தில்  பூத்துக் கிடந்த 99 பூக்களைப் பற்றியும் 12 ஆண்டுக்கு
ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் பற்றியும் கூறியுளார்.
கபிலர் பாடிய மொத்தப் பாடல்கள் 235.  அவற்றைப் பற்றிக்
கீழே  காண்போம்:
புறப்பொருள் பற்றியவை:
புறநானூறு --- 28                 
பதிற்றுப்பத்து10                 
மொத்தம்.         38

அகப்போருள் பற்றியவை:
அகநானூறு----18
குறுந்தொகை 29
நற்றிணை        20
கலித்தொகை  29
ஐங்குறுநூறு   100
குறிஞ்சிப்பாட்டு 1
மொத்தம்           197       
                                           
                                             
                                         
                                                 
ஆக மொத்தமாக 235 பாடல்கள் கபிலர் பாடியுளார்.
பெயர் தெரிந்த சங்கப் புலவர்கள் 475 பேரில் கபிலர்
அதிகப் பாடல்கள் பாடியவராக முன்னிற்கிறார்.

கபிலரால் பாடப்பட்ட பெருமக்கள்:
அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன்,
சேரமான் மாந்தரஞ்  சேரல்  இரும்பொறை, ஓரி, நள்ளி,
மலையமான்  திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன்,
வையாவிக் கோப்பெரும் பேகன், வேள்பாரி. இவர்களில்
செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப் பத்தில்
புகழ்ந்து பாடி நூறாயிரம் காணமும், நன்றா என்னும்
மலையில் நின்று கண்ணுக்கெட்டிய நிலத்தையும் பரிசு
ஆகப் பெற்றார். வேள் பாரியுடன் மிகமிக நெருக்கமான
நட்புப் பாராட்டியவர். புறநானூற்றில் உள்ள இவர்தம்
பாடல்கள் 28இல் பெரும்பான்மையான பாடல்கள் பாரி
யைப் பற்றிப் பாடியவைதாம். கபிலர் குறிஞ்சித்திணை
பற்றிப் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

குறிஞ்சிப் பாட்டு:
சங்க காலத்தில் நிலவிய களவு ஒழுக்கம் பற்றி ஆரிய
அரசன் பிரகத்தன் என்பவனுக்குச் சரியான புரிதல்
இல்லாமையால் களவு ஒழுக்க நெறியைக் குறை
கூறினன்.  அவனுக்கு விளக்கும் பொருட்டு இந்தப்
பாட்டைக் கபிலர் இயற்றி இந்நூலில் களவு ஒழுக்கம்
வெகு விரைவில் கற்பொழுக்கமாக மாறும் என்றும்
இதற்கிடையே காதலர்க்குள் இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்தாலும் நெறி முறைகளுக்கு உட்பட்டே நடக்
கும் என்றும் தெளிவித்தார். களவு ஒழுக்கம் வடக்கே
நிலவிய காந்தர்வ மணத்துக்குச் சமம் என்பதைச்
சுட்டி விளக்கினார். இந்தக் குறிஞ்சிப் பாட்டில் தலைவி
தன் தோழிமாருடன் கூடித் தொண்ணூற்றொன்பது
வகையான பூக்களைச் சேகரித்து அவற்றை மழை
பொழிந்து கழுவிய பாறைமீது குவித்து விளையாடிய
தாகச்சொல்லப்பட்டுள்ளது..  99 வகைப் பூக்களின்
பெயர்களும் அழகுறத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காதலர் தாமே கூடிப் பின் மணந்து கொள்ளும் தமிழ்
நெறியைக் குறைத்துப் பேசிய ஆரிய அரசனுக்குத்தமிழ்
நெறி மிகவும் சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக
உணர்த்தவே இந்தப் பாட்டு இயற்றப்பட்டது.  களவு
ஒழுக்கத்தை எவ்வளவு விரைவில் கற்பு ஒழுக்கமாக
மாற்றமுடியும் என்பதில் தோழி, தாய்மார்(பெற்ற தாய்
மற்றும் செவிலித் தாய்) தீவிரமாகச் சிந்திப்பார்கள்.
இல்லாவிட்டால் ஊரார் அலர்(பழிச்சொல்) தூற்றத்
தொடங்கிடுவர். அதனால் தோழி தலைவியைச் சந்திக்க
வரும் தலைவனிடம் வரைவு கடாதல் பற்றி வலியுறுத்து
வாள். வரைவு கடாதல் என்பது திருமணம் பேசி முடிப்பது.
இப்பாட்டில் 99 வகைப் பூக்களின் பெயர்களைத் தெரிவித்
துக் கபிலர் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.  இதனால் தான்
குறிஞ்சிப் பாட்டு மிகமிகச் சிறப்புப் பெற்றது. மற்றபடி
ஏனைய அகத்திணைப் பாடல்களைப் போலவே தலைவன்,
தலைவி செயல்பாடுகளை விவரித்துச் சொல்லும்.

பதிற்றுப் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும்
சேர வேந்தனைப்  பாடிப் பரிசு வென்றார். ஒருமுறை சேர
வேந்தன் கபிலரின் கை மென்மையாக உள்ளதைச் சுட்டி
வியந்தனன். உடனே கபிலர் "போர்க்களத்தில்யானையை
முன்னே செலுத்திப் பின்னர் தோட்டி(அங்குசத்தால்) யால்
அதனை நிறுத்தி வைப்பதும், குதிரையைச் செலுத்தி  அது
அகழியில் விழுந்துவிடாமல் அதன் சேணத்தை யிழுத்து
நிறுத்தி வைப்பதும், வில்லின் நாணை இழுத்துப் பகைவர்
மேல் அம்பு தொடுப்பதும், புலவர், பாணர், விறலியர்
முதலானோர்க்குப் பரிசு வழங்குவதும் ஆகிய செயல்களைச்
செய்வதனால் உமது  கை கரடு முரடாக வன்மையாக
உள்ளது; புலவனாகிய நான் ஊன்துவை கறிச்சோறுண்டு
வேறு யாதொரு பணியும் செய்யாமல் இருத்தலால் எமது
கை மென்மையாகவுள்ளது" என்று விடையிறுத்தார்.
"வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ; ஊன்துவை
கறிச்சோ றுண்டு வருந்துதொழில்  அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே!"
புறம்:14.

வேள்பாரியுடன் கபிலர் கொண்டிருந்த நட்பு மிகமிக
நெருக்கமானது.  புறநானூற்றில் 105ஆம் பாடல்
முதல் 120 ஆம் பாடல் முடிய 16 பாடல்கள் பாரியைப்
பற்றியும் அவனது பறம்பு பலையைப் பற்றியும்
பாடியுள்ளார்.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே".(புறம்:107)
செந்நாப் புலவர் பாரி பாரி என்று ஒருவனையே
புகழ்கின்றனர்.  வழங்குவது பாரி மட்டும் தானா?
உலகம் காப்பதற்கு மாரி(மழை)யும் இங்கே உள்ளது
அல்லவா? இதுபோலப் பாரியின் கொடைத்தன்மை
பற்றியும் அவனது பறம்பு மலையின் வளம்பற்றி
யும் புகழ்ந்து பாடியுள்ளார். பாரியின் வீரத்தையும்
அவன் படைவீரர்களின் நெஞ்சுறுதியையும்
விசுவாசத்தையும் பாராட்டியுள்ளார். மூவேந்தராலும்
போரிட்டு வெல்ல முடியாது. இரவலர் போலவந்து
இரந்து கேட்டால் பறம்பு மலையை அடையலாம்
என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார்.

ஆனால் மூவேந்தர்கள் அவனை வெல்லச் சமயம்
பார்த்திருந்தனர். ஏற்கெனவே பாரி தன் மகளிரை
மகட்கொடை(பெண்கொடுக்க மறுப்பது) மறுத்த
அவமானத்தால் நொந்திருந்த மூவேந்தர்கள் சதி
வேலை புரிந்து பாரியைக் கொன்றுவிட்டனர்.
புறம் 113:
"பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும்; வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே."
ஐயகோ!இப்பொழுது பாரி இறந்து விட்டான்.
அவன் பெண்மக்களுக்கு உரிய கணவரைத்
தேடி நான் எங்கோ செல்கின்றேன். பெருமை
பெற்ற பறம்பு மலையே! கலங்கிச் செயல்
இழந்தவனாகக் கண்ணீர் மல்க உன்னைத்
தொழுது வாழ்த்திச் செல்கின்றேன்.

பறம்பில் வாழ்ந்த மக்களும் பாரியின் மறைவுக்
குப்பின் வெளியேறிவிட்டனர்.  பாரியின் பெண்
மக்களோடு கபிலர் விச்சிக்கோன் என்ற மன்னன்
ஊருக்குச் சென்று அவனிடம் பாரி மகளிரை
மணம் செய்துகொள்ளுமாறு கோரினார். ஆனால்
மூவேந்தரின் பகைவருமோ என்ற அச்சத்தில்
அவன் மறுத்துவிட்டான்.(புறம்:200).  பிற்பாடு
இருங்கோவேள் என்ற அரசனை நாடிச் சென்றார்.
அவ்வரசனும் மணம்புரிய மறுத்துவிட்டான்.
புறம்:201, 202.

இந்நிகழ்வுகளால் கபிலர் நொந்துபோனார்.
மேலும் பாரியின் பிரிவையும் அவரால் தாங்க
இயலவில்லை.தக்கவர்களிடம் பாதுகாப்பாகப்
பாரிமகளிரை அடைக்கலமாக ஒப்படைத்து
விட்டபிறகு வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு
செய்தார்.(புறம்:236)
"பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது
ஒருங்குவரல் விடாது ஒழிக எனக்கூறி
இனயை ஆதலின் நினக்கு மற்றியான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!"
"பெருமை தங்கிய சிறந்த நட்பிற்கு ஒவ்வாமல்,
நீ இறந்த போது நின்னுடன் என்னையும் வர
விடாது இங்கேயே தவிர்க எனச் சொல்லிச்
சென்றுவிட்டாய். உனக்கு நான் பொருத்தமான
நண்பன் இல்லையா? இருப்பினும் இங்கிருந்தது
போலவே அங்கும் இடைவிடாது உன்னுடன்
இருந்து உன்னைக் கண்டு வாழும் நிலையை,
இனியாகிலும் எனக்குத் தருவாயாக." என்று
புலம்பி வடக்கிருந்து உயிர்நீத்தார். உயர்ந்த
நட்புக்குக் கபிலர்--பாரி எடுத்துக்காட்டாக
வாழ்ந்து மடிந்தனர் என்றால் மிகையன்று.









2 comments:

  1. வேள்பாரியுடன் கபிலரின் நட்பை பாங்குற எடுத்துரைத்துள்ளீர்கள் நன்றி !

    ReplyDelete