Thursday, 31 May 2018

புறநானூற்றில் சில நெஞ்சைத் தொடும் காட்சிகள்

 புறநானூற்றில்  சில  நெஞ்சைத்   தொடும்  காட்சிகள்

தொடித்தலை   விழுத்தண்டினார்  என்னும்  புலவர்
ஒல்லையூர்  கிழான்  மகனான  பெருஞ்சாத்தனைப்
பார்க்கச்  சென்றபோது  அவன்  வேறு  சில   சான்றோ
ரோடு   பேசிக்கொண்டிருந்தான்.  அக்கூட்டத்தில்
இளமைக்காலச்  சிறப்பைப்  பற்றிய  உரையாடல்
நிகழ்ந்தது.  தற்காலத்தில்  பேசப்படும்  மலரும்  நினைவு
களைப்  போன்ற  உரையாடல்  நடைபெற்றது.  அக்கூட்டத்தில்
தொடித்தலை  விழுத்தண்டினார்  மிகவும்  முதுமையுற்றவர்.
அவர்  தமது  இளமைக் காலத்தில்  தாம்செய்த  குறும்புச்
செய்கைகளை  விவரித்தபொழுது  அனைவரும்  மிக்க
உவகையுடன் கேட்டு  இரசித்து  மகிழ்ந்தனர்.  பாடல்
பின்வருமாறு:
"இனிநினைந்  திரக்கம்  ஆகின்று;  திணிமணல்
செய்வுறு  பாவைக்குக்   கொய்பூத்  தைஇத்
தண்கயம்  ஆடும்  மகளிரொடு  கைபிணைந்து,
தழுவுவழித்  தழீஇத்,  தூங்குவழித்  தூங்கி
மறையெனல்  அறியா  மாயமில்  ஆயமொடு
உயர்சினை  மருதத்  துறையுறத்  தாழ்ந்து
நீர்நணிப்  படிகொ  டேறிச்  சீர்மிக
கரையவர்  மருளத்  திரையகம்  பிதிர
நெடுநீர்க்  குட்டத்துத்  துடுமெனப்  பாய்ந்து
குளித்துமணற்  கொண்ட  கல்லா  இளமை
அளிதோ  தானே!  யாண்டுண்டு  கொல்லோ?
தொடித்தலை  விழுத்தண்   டூன்றி  நடுக்குற்று
இருமிடை  மிடைந்த  சிலசொல்
பெருமூ  தாளரேம்  ஆகிய  எமக்கே!"

பொருள்:
இப்போது  நினைத்தாலும்  எம்  முதுமையை
எண்ணும்போது  பரிதாபமாக  உள்ளதே.  மணலிலே
வண்டல்  இழைத்து  வண்டல்  பாவைக்குப்  பூச்
சூட்டிக்  குளிர்ந்த. பொய்கையிலே  விளையாடும்
பெண்களோடு  கைகோர்த்து  ஆடினோமே!  அவர்
தழுவத்  தழுவி  அசைத்த  விடத்து  அசைத்து
விளையாடினோமே!  வஞ்சனையறியாத  எம்மொத்த
இளைஞருடன்  நீர்த்துறை அருகே  தாழ்ந்த  கிளை
யையுடைய  மருதமரத்தில்  ஏறி  மடுநீருட்  பாய்ந்து
மூழ்கி  அடியில்  இருந்த  மணலை  முகந்து  காட்டி
னோமே!  அவ்விளமை  இனிமேல்  திரும்புமோ?
அதனினும்  சிறந்த  பருவம்  எங்குள்ளது?  பூண்
போட்ட  தண்டினை ஊன்றி  இருமல்  இடையிடையே
தொல்லைதரச் சிலசில  வார்த்தைகளே  பேசி  வாடும்
எமக்கும்  அவ்விளமை  இனித்  திரும்புமா?

இனி  வேறு  ஒரு  காட்சியைப்  பார்ப்போம்:
மாறோக்கத்து நப்பசலையார்  ஒருசமயம்
போர்முடிவில்  ஒரு  தலைவன்  மனைக்குச்
சென்றார்.  அவன்  பகைவரோடு  போர்  புரிந்து  பெரும்
அளவில்  விழுப்புண்பட்டு  இறுதியெய்தும்  நிலையில்
இருந்தான்.இதனை  அவன்  மனைவி  உணர்ந்து
கொண்டாள்.  அவள்  வீரம்  செறிந்த  மறக்குலப்பெண்
ஆதலால்  மனத்தைத்  தேற்றிக்கொண்டு  தன்  கணவனை
நம்பி  வாழ்ந்துவரும்  துடியன்  பாணன், விறலி  முத
லானோரைப்  பார்த்துப்  பேசினாள்:" என்  கணவன்
உடம்பில்  உண்டான  புண்கள்  பெரியனவாயும்,
தும்பிகள்  மொய்க்கும்  நிலையிலும்  உள்ளன.  ஏற்றிய
விளக்கும்  அவிந்துபோகிறது.  சிலநாட்களாகச்  சரி
யாகத்  தூங்காத  காரணத்தால்  உறக்கம்வருகிறது.
கூகை  குழறுகிறது.  விரிச்சி  ஓர்க்கும்   செம்முது
பெண்டிரின்  சொற்கள்  பலிக்கவில்லை.  என்
கணவர்  இறப்பது  உறுதி.  நீங்கள்  இங்கு  தொடர்ந்து
வாழ்வது  இயலாது.  ஏனென்றால்  என்  கணவர்
மறைவுக்குப்  பிறகு  நான் உயிர்  வாழேன்.  கைம்மை
நோன்பு  நோற்று(அதாவது  மொட்டையடித்து  வெறும்
தரையில்  தூங்கி அல்லியரிசி  உணவுண்டு) உயிர்
வாழ்தல் இயலாது.  என்  கணவர் இறந்தவுடன்
யானும்  இறப்பேன்."  இவ்வாறு  அம்மறக்குல
மகள்  சொல்லக்கேட்ட  புலவர்  மனம்நொந்து
இப்பாடலைப்  பாடியுள்ளார்.  அக்காலத்தில்
கணவரை  இழந்த  பெண்கள்  உடன்கட்டை
ஏறவேண்டும்  அல்லது  கடுமையான  கைம்மை
நோன்பு  நோற்று வாழ்தல்  வேண்டும்.  இப்
பெண்ணின்  நெஞ்சுரம்  பாராட்டத்  தக்கது.

இனி  மற்றுமொரு  காட்சியைப். பார்ப்போம்:
வீரப்போர்  புரிந்த  ஒரு  தலைமகன்  புண்பட்டு  மாண்டான்.
அவன்  மனைவி  அவன்  இறந்துபட்ட  இடத்துக்குச்  சென்று
அவன்  உடலைத்தழுவிக்  கண்ணீர்  சிந்தினாள்.  "ஐயோ
என்று  வாய்விட்டுக்  கதறி  அழுதால்  புலி்வந்து இவன்
உடலைத்  தூக்கிச்  செல்லும்.  நானே  இவனைத்  தூக்கிச்
செல்லலாம்  என்றால்  அகன்ற  மார்புடைய
இவனைத்  தூக்குதல்  என்னால்  இயலாது.
ஒரு  குற்றமும்  புரியாத  என்னைத்  துன்
புறுத்தும்  கூற்றே!  நீயும்  என்னைப்  போலத்
துன்பம்  அடைக.  என்  கணவனே!  வளையல்
அணிந்த  என்  முன்கை  பற்றி  மெல்ல
மெல்ல  நடந்து  அந்த  மலைநிழலைச்
சென்று  சேர்வோம்"  என்று  இயம்பினாள்.
பாடலைப்  பார்ப்போம்:
"ஐயோ  எனின்யான்  புலிஅஞ்  சுவலே;
அணைத்தனன் கொளினே  அகன்மார்பு  எடுக்கல்லேன்;
என்போல்  பெருவிதிர்ப்பு  உறுக,  நின்னை
இன்னாது  உற்ற  அறனில்  கூற்றே!
நிரைவளை  முன்கை  பற்றி
வரைநிழல்  சேர்கம்  நடந்திசின்  சிறிதே!
சோகத்தின்  உச்சக்  காட்சியிது.

இதைப்போலவே  சோகமான  பிறிதொரு  பாடலைப்
பார்ப்போம்:
காதற்கொழுநனுடன்  சுரத்திடை  ஒருத்தி
வந்து  கொண்டிருந்த  போது  நிகழ்ந்த
போரில்  அவள்  காதற்கொழுநன்  புண்பட்டு
இறந்து  போனான். அவனைக்  கவித்தற்கு
ஒரு  ஈமத்தாழி  தேவைப்பட்டது.  அவனோடு
வந்த  அவள் அவனில்லாமல்  வாழப்போவ
தில்லை.  எனவே  அவ்வூர்க்  குயவனிடம்
" சக்கரத்தின்  ஆரத்தில்  பொருந்திய  பல்லி
போல  இவ்வீரனோடு  சுற்றி வந்தேன்.
இவன்  இறந்ததனால்இவனைக்கவிக்க
ஒரு  ஈமத்தாழி  தேவைப்  படுகிறது.  நீயோ
ஒருவர்க்குரிய  அகலத்தில்  தாழி  செய்து
வைத்திருப்பாய்.  இவனோடு  என்னையும்
சேர்த்துக்  கவிக்கத்  தேவையான  அகலத்தில்
ஈமத்தாழி  செய்வாயாக!"  என்று  கூறினாள்.
பாடல்  பின்வருமாறு:
"கலம்செய்  கோவே!  கலம்செய்  கோவே!
அச்சுடைச்  சாகாட்டு  ஆரம்  பொருந்திய
சிறுவெண்  பல்லி  போலத்  தன்னொடு
சுரம்பல  வந்த  எமக்கும்  அருளி
வியன்மலர்  அகன்பொழில்  ஈமத்  தாழி
அகலிது  ஆக  வனைமோ.
நனந்தலை  மூதூர்க்  கலம்செய்  கோவே!"

பூதப்பாண்டியன்  என்னும்  மன்னன்  இறந்த
பொழுது  அவன்   மனைவி  கோப்பெரும்பெண்டு
"பெருங்கோட்டுப்  பண்ணிய  கருங்கோட்டு  ஈமம்
நுமக்கரி  தாகுக  தில்ல  எமக்கெம்
பெருந்தோள்  கணவன்  மாய்ந்தென  அரும்பற
வள்ளிதழ்  அவிழ்ந்த  தாமரை
நள்ளிரும்  பொய்கையும்  தீயம்  ஓரற்றே!
எனவுரைத்து  உடன்கட்டை  ஏறி  மாய்ந்தாள்.
அந்தக்  காலத்தில்  நிலவிய  கைம்மை  வாழ்க்கை
மிக மிக  கடுமையாகவும்   கொடுமையாகவும்
இருந்த்து  போலும்.  கூந்தலை  மழித்து  அல்லது
குறைத்து  பரற்கற்கள்  பதித்த  தரையில்  பாயின்றிப்
படுத்து  வெள்ளரிவிதை  போன்ற  நெய்யற்ற
நீர்ச்சோறு  எள்ளுத்துவை  வேளையிலை  உணவுகளை
உண்டு  உயிர்வாழ்தல்  பலபெண்களுக்குப்  பிடிக்காமற்
போயிருக்கும்.  அதனால்  சர்வ  சாதாரணமாக  உடன்
கட்டை ஏறி  உயிர்துறந்தனர்.  மேலும்  உடன்கட்டை
ஏறி  உயிர்துறந்த  பெண்கள்  தங்கள்கணவன்மாருடன்
சொர்க்கத்தில்  வாழலாம்  என்ற  நம்பிக்கையும்  நிலவி
யிருக்கும்.  இந்த  நாளிலும்  சதி  என்ற  பெயரில்  வட
மாநிலங்களில்  உடன்கட்டை  ஏறும்  வழக்கம்  அவ்வப்
பொழுது  நிகழத்தான்  செய்கிறது.  தமிழ்நாட்டில்
இக்கொடிய  வழக்கம்  ஒழிந்துவிட்டது.
மனைவி  இறந்த  பின்னர்  அவளை  நினைந்து
மனம்  நொந்து  அவளோடு  தானும்  உயிர்விட
வில்லையே  என்று  சேரமான்  கோட்டம்பலத்துத்
துஞ்சிய  மாக்கோதை  கசிந்து  உருகியதாகப்
புறநானூறு  தெரிவிக்கிறது.  பாடல்  பின்வருமாறு:
" யாங்குப்  பெரிதாயினும்  நோயளவு  எனைத்தே
உயிர்செகுக்  கல்லா  மதுகைத்  தண்மையின்?

கள்ளி  போகிய  களரியம்  பறந்தலை
வெள்ளிடைப்  பொத்திய  விளைவிறகு  ஈமத்து
ஒள்ளழற்  பள்ளிப்  பாயல்  சேர்த்தி
ஞாங்கர்  மாய்ந்தனள்  மடந்தை
இன்னும்  வாழ்வல்  என்னிதன்  பண்பே!
என்  மனைவி  மாய்ந்த  பின்னரும்  நான்  உயிர்
வாழ்கிறேனே  என்று  சேரமன்னன்  மனம்நொந்து
பாடியுள்ளார்.

புறநானூற்றைப்  படிக்குந்  தோறும்  தமிழ்நாட்டில்
அக்காலத்தில்  நிலவிய  உயர்ந்த  நெறிகள்,  பழக்க
வழக்கங்கள்,  வீர  உணர்வு,  மான  உணர்ச்சி,
செய்ந்நன்றி  யறிதல்,  கற்பொழுக்கம்  பேணுதல்,
மனைவி  கணவன்  மீதும்  கணவன்  மனைவி  மீதும்
அன்பு  பூண்டுஒழுகுதல்  முதலான  எத்தனையோ
செய்திகள்  உள்ளன.  இக்காலத்துக்கு  ஏற்றபடி
அவற்றைப்  பின்பற்றி  உயர்வடைவோம்.











2 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல் தொகுப்பு வழங்கியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமை.....தொடர்ந்து பதிவுகள் செய்ய வேண்டுகிறோம்

    ReplyDelete