Tuesday, 1 May 2018

சங்க இலக்கியத்தில் ஒரு சொல்லோவியம்

சங்க  காலத்தில்  நிலவிய  உண்வுப்  பழக்கம்  ஒன்றையும்   அந்த  உணவைப்
புதிதாகத்   திருமணமான  பெண்  தன்  கணவனுக்காக  எவ்வளவு  ஆர்வமாகச்
சமைத்தாள்  என்பதையும்  சங்கப்பாடல்  ஒன்றின்  வாயிலாக  அறிவோம்.
தன்  கணவனுக்காக  எவ்வளவு  மெனக்கெட்டுச்  சமைக்கின்றாள்  என்பதைப்
படிக்கும்  போது  அப்பெண்ணை   மெச்சிப்   பாராட்ட   வேண்டும்   என்று
தோன்றுகின்றது.  அருமையான  சொல்லோவியம்..  அந்த   நிகழ்வைப்
பற்றிப்   பார்ப்போம்.  சங்க  இலக்கியமான  குறுந்தொகையில்
ஒரு  அருமையான  கவிதை  காணப்படுகிறது.  இந்தக்  கவிதை
அடிப்படையில்   அகத்துறைப்   பாடலாகும்.   அதாவது   கணவன்
மனைவிக்  கிடையே   நிகழும்   அன்பு. நிகழ்வாகும்..  புதிதாகத்
திருமணமான  ஒரு  பெண்  தன்   கணவனை   எவ்வாறு   உபசரிக்
கின்றாள்  என்பதைச்  சொல்லோவியமாகக்  காட்டுகின்றார்.  தன்
வீட்டுக்கு  வந்த  கணவனுக்கு   உணவு  ஆயத்தம்  செய்தல்  வேண்டும்.
அதையும்  அவர்க்குப்  பிடித்த  வகையில்  விரும்பும்  உணவை  மிக
விரைவில்  செய்து  முடித்தல்  வேண்டும்.  கவிதை  பின்வருமாறு:
"முளிதயிர்  பிசைந்த  காந்தள்  மெல்விரல்
தழுவுறு  கலிங்கம்  கழாஅது  உடீஇக்
குவளை  உண்கண்  குய்ப்புகை  கமழத்
தான்துழந்  தட்ட  தீம்புளிப்  பாகர்
இனிதெனக்  கணவன்  உண்டலின்
நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே".
தன்கணவனின்  பசியை  ஆற்றவேண்டி  அவர்க்குப்  பிடித்தமான
தயிர்க்குழம்பைச்  சமைத்துக்கொண்டிருக்  கின்றாள்.  அவசரமாக
முற்றிய  தயிருள்ள  பாத்திரத்தில்   தன்  காந்தள்  போன்ற  மெல்லிய
விரல்களை  விட்டுப்  பிசைந்து   விரல்களில்   ஒட்டியிருக்கும்  தயிரைத்
தன்  பட்டாடையில்  துடைத்துக்  கொண்டு   அந்த  ஆடையைக்  களைந்து
துவைக்காமல்  அப்படியே  உடுத்திக்கொண்டு  தனது  குவளை  மலர்
போன்ற  மைதீட்டிய  கண்களில்  தாளிக்கும்  புகை  கமழத்  தானே  துழாவிச்
சமைத்த  இனிய  புளிப்பை  உடைய  குழம்பைத்  தன். காதல். கணவன்
உண்பதைக்  கண்டு  காதல்  மனைவியின்   அழகிய  நெற்றியை   உடைய
முகம்  நுட்பமாக  மலர்ந்தது.  சங்க  நூல்களில்  உள்ள
சிறப்பு  என்னவென்றால்  எதையும்  மிகைப்படுத்தாமல்
உள்ளதை  உள்ளபடி  சொல்லோவியமாக  வரைவதுதான்.

அடுத்து  வேறொரு  காட்சியைப்  பார்ப்போம்.  ஆசுகவி
பாடுவதில்  காளமேகப்  புலவர்  மிகவும்  புகழ்
பெற்றவர்.  அவரிடம்  கரி  என்ற  சொல்லை  முதலாகக்
கொண்டு  உமி  என்ற  சொல்லில்  முடியுமாறு  ஒரு
வெண்பாப்  பாடுமாறு  கோரிக்கை  விடப்பட்டது.
"கரிக்காய்  பொரித்தாள்கன்  னிக்காயைத்  தீய்த்தாள்;
பரிக்காயைப்  பச்சடியாய்ப்  பண்ணாள்--உருக்கமுள்ள
அப்பைக்காய்  நெய்துவட்டல்  ஆனாள்அத்  தைமகள்
உப்புக்காண்  சீச்சி  உமி".
அத்தைமகள்  அத்திக்காயைப்  பொரித்தாள்;(கரிக்காய்=
அத்திக்காய்)  கன்னிக்காய்(வாழைக்காய்)  தன்னைத்
தீய்த்தாள்;  பரிக்காய்(மாங்காய்)  தன்னைப்  பச்சடி யாய்ப்
பண்ணினாள்;  அப்பைக்காய்(கத்திரிக்காய்)  தன்னை
நெய்துவட்டல்  செய்தாள்.  ஆனால்  உப்பு  கூடிவிட்டது.
அதனால்  சீச்சி  அனைத்தையும்  உமிழ்ந்துவிடு.
உமிழ்  என்ற  சொல்லில்  உள்ள  கடைசி  எழுத்தான
'ழ்'  என்பது  கெட்டு  மறைந்தது  கடைக்குறை.
ஆக,"கரி"  என்று  எடுத்து  "உமி"  என்று  முடித்தார்.

அண்மைக்  காலங்களில்  நடைபெற்ற  சுவையான
நிகழ்ச்சிகளைப்  பார்ப்போம்.  ஒரு  திருமண விழாவில்
கவிஞர்  ஒருவர்  நீண்ட  பாடலைப்  படித்தார்.  அதில்
உள்ள  முக்கியமான  அம்சங்கள்  வருமாறு:
"ஊறுகாய்  ஒன்றே  உலகை  விலைகொள்ளும்;
வேறுகாய்  வர்க்கங்கள்  வேண்டாவே".
"பாயாசம்  கொஞ்சம்  பருகினா  லும்போதும்
ஆயாசம்  எல்லாம்  அகன்றோடும்."
"வைத்தரசம்  உண்டோர்  வானத்  தமுதரசம்
 கைத்தரசம்  என்றே  கருதுவர்"
இப்படியாகப்  பாடினார்.
மற்றும்   ஒரு  புலவர்  நண்பர்  ஒருவரின்   வீட்டில்  நிகழ்ந்த
விருந்தோம்பலைப்  பற்றிப்  பின்வருமாறு   பாடியுள்ளார்:
"காரமின்றி  உப்பின்  கடுப்பு  புளிப்பின்றிச்
சாரமுள்ள  தாயுண்ணத்  தக்கதாய்--ஆரமுதம்
போலும்  சுவையடிசில்  போதுதவ  றாதளித்தான்
சீல  இசையரசு  தேர்ந்து."
இன்னும்  எத்தனையோ  பெரியோர்கள்  எத்தனையோ
சூழ்நிலைகளில்  எத்தனை  எத்தனையோ  பாடல்
களைப்  பாடியுள்ளனர்.  அவற்றையெல்லாம்  எழுதப்
புகின்  இக்கட்டுரை  விரிந்து  மிகப்பெரிதாகிவிடும்.

மேலும்   ஒரே  ஒரு  பாடலைச்  சொல்லி  முடிக்கின்றேன்:
சைவ  மடங்களிலே  தமிழ்  வகுப்புகள்  நடத்தப்படுவதுண்டு.
ஒரு. நாள்  மட்த்துச்  சமையல்கார்ர்  இன்றைக்கு   என்ன   சமையல்
சமைத்தல்   வேண்டும்?   என்று   ஆதீனத்தலைவரைக்  கேட்டார்.
அவர்  தமிழ்  வகுப்பு  நடத்திக்  கொண்டிருந்தார்.   எனவே  இடையிடையே
உத்தரவு   இட்டுக்கொண்டிருந்தார்..  சற்றே   துவையல்   அரை   என்பார்.
பிறகு  பாடம்  நடத்துவார்.  தம்பி!   ஒரு  பச்சடிவை   என்பார்.  பிறகு
பாடத்தைத்   தொடருவார்.  சமையல்  செய்பவருக்கும்   ஓரளவு  தமிழ்
ஞானம்  இருந்ததால்  இடையிடையே  வந்த  உத்தரவுகளை   மனதளவில்
தொகுத்துக்  கவனித்த  பொழுது   கீழ்வரும்   பாடல்   புலப்பட்டது:

"சற்றே  துவையலரை ;  தம்பியொரு   பச்சடிவை;
வற்றலே   தேனும்  வறுத்துவை;--குற்றமிலை;
காயமிட்டுக்  கீரைகடை;  கம்மென  வேமிள
காயரைத்து  வைப்பாய்  கறி."

தமிழ்வகுப்பும்  நன்றாகவே  நடந்து  முடிந்தது.  தேவையான  சமையல்
பட்டியலும்  தரப்பட்டது.   இதுபோல  இன்னும்   எத்தனையோ   சுவையான
நிகழ்ச்சிகள்  நடந்தேறியுள்ளன.  அவற்றையெல்லாம்   எழுதப்புகின்
மிகப்  பெரிதாகிவிடும் .  இத்தோடு   முடித்துக்  கொள்ளலாம்.


1 comment: