Sunday, 6 May 2018

சங்க காலத்தில் நிலவிய வீர வாழ்க்கை

இன்றைக்கு  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்
உலகம்  முழுவதிலும்  வாழ்ந்த  மக்கள்  யாவரும்
வீரச்  சிந்தனையோடு  திகழ்ந்தார்கள்.  எல்லா  மொழி
களிலும்  உருவான  இலக்கியங்கள்  வீரத்தை  முன்னிலைப்
படுத்தின.  காரணம்  என்னவென்றால்  மலைக்  குகை
களிலும்,  காடுகளிலும்  மனிதர்கள்  வாழ்ந்த  பொழுது
புலி, சிங்கம், கரடி, யானை  முதலான  விலங்குகளோடும்
சில  சமயங்களில்  மனிதர்களோடும்போர்  புரிய  நேர்ந்தது.
பிற்பாடு  நிரந்தரமாக  இருப்பிடங்களை  உருவாக்கி
அதன்  தொடர்ச்சியாக  அரசுகளை  ஏற்படுத்தினர்.
இத்தகைய  அரசுகள்  யாது  காரணத்தாலோ  தமக்குள்
போரிட்டன.  இப்படியாக  உலகம்  முழுவதும்  அடிக்கடி
போர்  நடைபெறுவதும்  அவற்றில்  மக்கள்  தங்களை
மிகவும்  ஈடுபடுத்திக்  கொள்வதும்  இதன்  விளைவாக
ஆண்கள்  மட்டும்  அல்லாமல்  பெண்களும்  வீர  உணர்வு
மிக்கு   வாழ்வதும்  இயற்கையாயிற்று.  எல்லா  மொழிகளிலும்
வீரத்தைப்  புகழ்ந்து  இலக்கியங்கள்  தோன்றலாயின.

தமிழ்நாட்டிலும்  ஆணும்  பெண்ணும்  வீர  உணர்வோடு
வாழ்ந்ததில்  விய்ப்பொன்றும்  இல்லையல்லவா?  சங்க
காலத்தில்  தமிழ்மக்கள்  காதலையும்  வீரத்தையும்  இரு
கண்களாகக்  கருதினர்.  சங்க  இலக்கியங்களான  எட்டுத்
தொகையும்  பத்துப்பாட்டும்  காதலை  அகத்துறையில்
வைத்து  வீரத்தைப்  புறத்துறையில்  சேர்த்துப்  போற்றி
வளர்த்தன.  சங்க  இலக்கியமான  புறநானூற்றில்  வீரம்
எப்படி  கையாளப்  பட்டது  என்று  பார்ப்போம்.
காவற்பெண்டு  என்னும்  பெண்பாற்  புலவர்  பின்வருமாறு
பாடியுள்ளார்:
"சிற்றில்  நற்றூண்  பற்றி  நின்மகன்
யாண்டுள  னோவென  வினவுதி  யாயின்
என்மகன்  யாண்டுளன்  ஆயினும்  அறியேன்;
புலியிருந்து  போகிய  கல்லளை  போல
ஈன்ற  வயிறோ  இதுவே;
தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே."
"நின்மகன்  எங்கிருக்கிறான்?  எனக்  கேட்பவர்க்கு
அவன்  எங்கிருக்கிறான்  என்பதை  அறியேன்.  அவனை
ஈன்ற  வயிறு  புலியிருந்து  வெளியேறிய  கற்குகை  போல
இதோ  இருக்கிறது.  அவன்  ஏதாவது  போர்க்களத்தில்
தோன்றுவான்"  என்று  பதில்  அளிக்கின்றாள்.

வேறொரு  பெண்  நடந்துகொள்ளும்  விதத்தைப்
பார்ப்போம்.  நேற்றைக்கு  முந்திய  நாளில்  இவள்  தந்தை
போர்க்களம்  சென்று  யானையோடு  போரிட்டு  மடிந்தனன்.
நேற்று  நிகழ்ந்த  போரில்  இவள்  கணவன்  பகைவரோடு
போரிட்டு  இறந்தான்.  இன்றும்  போர்ப்பறைச்  சத்தம்
கேட்டுத்  தனக்கு  ஒரே  மகன்தான்  இருக்கிறான்
என்பதையும்  புறந்தள்ளி  அவனுக்கு  வெள்ளாடை
உடுத்திவிட்டுத்  தலையில்  எண்ணெய்  தடவிச்  சீவி
அவன்கையில்  வேலைக்  கொடுத்துப்  போர்க்களம்
நோக்கிச்  செல்க"  என்று  அனுப்பி  வைத்த  மனவுறுதி
யை  என்னவென்று  இயம்புவது?  பாடல்  பின்வருமாறு:
"கெடுக  சிந்தை;  கடிதிவள்  துணிவே;
மூதிற்  பெண்டிர்  ஆதல்  தகுமே;
மேனாள்  உற்ற  செருவில்  இவள்தன்னை
யானை  எறிந்து  களத்தொழிந்  தனனே;
நெருநல்  உற்ற  செருவிற்  கிவள்கொழுநன்
பொருநரை  விலங்கி  ஆண்டுப்பட்  டனனே;
இன்றும்  செருப்பறை  கேட்டு  விருப்புற்று
வேல்கைக்   கொடுத்த  வெளிதுவிர்த்த  உடீஇ
பாறுமயிர்க்  குடுமி  எண்ணெய்  நீவி
ஒருமகன்  அல்லது  இல்லோள்
செருமுக  நோக்கிச்  செல்கென  விடுமே!
இந்தப்  பெண்  புரிந்த  செயல்  மிகவும்  அதிர்ச்சியை
உண்டாக்குவது.  ஏனென்றால்  தந்தையை
இழந்து,  கணவனை  இழந்து,  கொள்ளிவைக்க
இருக்கின்ற  ஒரே  மகனையும்  இழக்கத்  துணி
கின்றாள்  என்றால்  வீர  உணர்வு  இந்தப்  பெண்ணை
எவ்வளவு  அழுத்தமாக  ஆட்கொண்டிருப்பது
புலப்படும்.

வேறு  ஒரு  பெண்  எந்த  வகை  உணர்வைக்
கொண்டிருந்தாள்  என்று  பார்ப்போம்.  இந்தப்
பெண்ணின்  மகன்  பகைவரிடம்  புறமுதுகு
காட்டிப்  போர்க்களத்திலிருந்து  திரும்பியதாகக்
கேள்வியுற்றாள்.  உடனே  வெகுண்டெழுந்து  அவ்வாறு
என்மகன்  புறமுதுகு  காட்டித்  திரும்பியிருந்தால்
அவன்  குழந்தையாயிருந்த  போது  அவனுக்குப்
பாலூட்டிய  என்  முலையை  அறுத்தெறிவேன்
என்று  வஞ்சினம்  கூறி  வாளொடு  செருக்களம்
சென்று  அங்கே  கிடந்த  பிணங்களைப்  புரட்டிப்
பார்த்துத்  தன்மகன்  பிணத்தைக்  கண்டுபிடித்து
அது  சிதைந்து  கிடந்தமைகண்டு  தன்மகன்
புறமுதுகு  காட்டித்  திரும்பிலன்;  போரில்  வீர
மரணம்  அடைந்தான்  என்று  உறுதிசெய்து
கொண்டு  அவனைப்  பெற்ற  பொழுதைக்
காட்டிலும்  மிகமிக  மகிழ்ந்தனள்.  இவளது  வீர
உணர்வு  மெய்சிலிர்க்க  வைக்கிறது.  இனி
பாடலைப்  பார்ப்போம்:
நரம்பெழுந்  துலறிய  நிரம்பா  மொன்தோள்
முளரி  மருங்கின்  முதியோள்  சிறுவன்
படையழிந்து  மாறினன்  என்றுபலர்  கூற
மண்டமர்க்  குடைந்தனன்  ஆயின்  உண்டவென்
முலையறுத்  திடுவென்  யானெனச்  சினைஇக்
கொண்ட  வாளொடு  படுபிணம்  பெயராச்
செங்களம்  துழவுவோள்  சிதைந்துவே  றாகிய
படுமகன்  கிடக்கை  காணூஉ
ஈன்ற  ஞான்றினும்  பெரிதுவந்  தனளே.
அப்பப்பா!  இந்த  வீர  உணர்வை  என்னவென்று
சொல்வது.  சங்க  காலத்தில்  ஆணும்  பெண்ணும்
மெய்சிலிர்த்து  மயிர்க்கூச்செறியும்  வண்ணம்
வீர  உணர்வை  வெளிப்படுத்தினர்  என்பதில்
எள்ளளவேனும்  ஐயமில்லை.










No comments:

Post a Comment