Sunday, 5 August 2018

தென்மேற்குப் பருவக் காற்றின் கருணையினால்.....

தென்மேற்குப் பருவக் காற்றின்
                       கருணையினால்.......

காவிரியை மீட்டெடுக்கக் கணக்கற்றோர்
    தமிழ்நாட்டில்
தீவிரமாய்ப்  போராடித் திகைக்கவைத்துச்
   சாதித்தார்;

வாரியத்தை வேண்டினோம், வாய்ப்பில்லை
   எனமறுத்துச்
சீரியதாம் அதிகாரம் செறிந்ததாம் என்றுரைத்தே

ஆணையத்தை அமைத்திட்டார்; அக்குழுவின்
    உறுப்பினர்கள்
நாணயமாய் நடந்துகரு நாட்டினர்க்கே
   ஆணையிட்டார்;

உச்சநீதி மன்றத்தின் உத்திரவை மதியாதார்
நிச்சயமாய் ஆணையத்தை அவமதிப்பர்
    எனநினைத்தோம்;

இயற்கையன்னை  தலையிட்டே
    இந்தமுறை  காத்துவிட்டாள்;
புயல்மழையைப்  பொழிவித்துப்
   பொன்னியினைக் கொண்டுவந்தாள்;

கன்னடத்து மக்கள்தம்மின் கண்ணசைவு
     தேவையின்றி
அன்னைநம் காவிரியை அமைதியாய்ப்
     பெற்றிட்டோம்;

ஆடிப்  பெருக்கில்  அனைவருமே
     உளமகிழ்வோ(டு)
ஓடிப்  பிடித்து விளையாடி
     ஆர்ப்பரித்தோம்;

இத்தனையும் இயற்கைத்தாய் இளகியநன்
     மனத்தாலே
உத்தமமாய் நிறைவேறி ஒப்பில்லாக்
    களிப்படைந்தோம;

மேட்டூரின் அணைநிரம்பி வேளாண்மை
   செழித்திடவே
பாட்டுகளைப் பாடிடுவோம் பாங்காக
   உழைத்திடுவோம்;

மிகைத்தண்ணீர் வீணாக விரிகடலில்
    கலக்காமல்
வகையாகச் சேமிக்க வழிசெய்வோம்
   பெருமக்காள்!

ஏரி,குளம் தூர்வாரி இயன்றளவு
   சேமிப்போம;
மாரிபெய்யின் ஒருசொட்டும் மாக்கடலில்
   கலக்காமல்

சேகரித்து  வைத்திடுவோம்; சிற்றணைகள்
   கட்டிடுவோம்;
போகம்மூன்(று) அடைந்திடவே பொறுப்பாய்ப்
   பணிசெய்வோம்;

சிக்கனமாய் நீர்புழங்கிச் சேமித்தால்
   என்றென்றும்
தக்கபடி வேளாண்மை  தழைத்திடுமே
   ஐயமிலை;

ஆண்டாண்டும் இதுபோல ஆதரவாய்
    மழைபெய்யும்,
வேண்டியநீர் கிடைக்குமென
    மெத்தனமாய் இருக்காதீர்;

வறட்சியினை எதிர்பார்த்து மழைநீரை
    மிகைநீரைத்
திறமையுடன் சேமிக்கத் திட்டங்கள்
   தீட்டிடுவோம்;

தென்னாட்டை வளஞ்செய்யும் தெய்வப்பொன்
    னித்தாயால்
எந்நாளும் நீர்கிடைக்க எமதிறைவா!
    வரம்தாராய்!

தென்மேற்குக் காற்றாலே செழிப்பான
    மழைபொழியும்;
உன்மேலே நமபிக்கை யுண்டு.

1 comment:

  1. நீர் மேலாண்ணமயின் அவசியத்தை உணர்த்தும் கவிதை மிக அருமை

    ReplyDelete