Wednesday, 12 December 2018

பெண்ணின் பெருமை

பல்வேறு  நிலைகளில் பெண்ணின்  பெருமை

காதலியாக:
இன்னமுதே! ஏந்திழையே!  என்றனுயிர்க்  காதல்
அன்னமுனைக் காணுகின்ற  ஆசையினால் வந்தேன்;
கன்னனிகர் பேச்சுடையாய்! காதலியே! பித்தன்
என்றனையுன் மூங்கைமொழி இன்னலுறச் செய்யும்.

காவிவிழிக் காரிகையே!  கண்ணசைவு காட்டாய்;
ஆவியினைப் போக்கினை,நீ; அஞ்சுகமே! பேசாய்;
ஓவியமே! பேரழகே! உள்ளமகிழ்  வெய்தத்
தேவதையே! வாய்திறந்து  சிற்சிலசொல் செப்பாய்.

பாலைநிலம், பூம்பொதும்பு  பார்க்குமிடந் தோறுங்
கோலமுகந்  தோன்றியதால் கூடிடுமே, யின்னல்;
மாலையினில் நேரில்வந்து வாஞ்சையுடன் சொல்வாய்;
சோலைதனில் பாடிடுவோம், துள்ளிவிளை  யாடி.

மனைவியாக:

தாய்க்குப்பின் தாரமெனச் சான்றோர்கள்
   மொழிந்திட்டார்; தக்க உண்மை;
நோய்நொடியில் நான்வீழ்ந்தால் அருகிருந்து
  துணைசெய்வாள்;  நொந்த போது
தாய்மடியில்  சாய்வதுபோல் அவள்மடியில்
  சாய்ந்திடுவேன்;  தளர்ச்சி  நீங்கும்;
தூய்மைமிகும்  அன்பாலே பிணைத்திடுவாள்;
   மீறமனம்  துணியா  தம்மா!

சிக்கல்வரும் போதெல்லாம் சிந்தித்துச்
   சீர்தூக்கிச்  சிறப்பு  மிக்க
தக்கதொரு  வழிசொல்வாள்; மதியமைச்சர்
  போல்நடப்பாள்;  தாயைப் போல
அக்கறையாய்ச்  சமைத்திடுவாள்; உடற்கின்னல்
  செய்யாத  அன்னம்  தோதாய்
எக்கணமும் நல்கிடுவாள்; பிள்ளைகளைப்
  பேணிடுவாள்;  எனையும்  தானே!

அன்னையையும்  மனைவியையும் ஒப்பிட்டுப்
   பார்க்கையிலே  அன்னார் சற்றும்
தன்னலத்தைப்  பேணாத  சால்புடையர்;
  அன்புடையர்;  தகைமை  சான்ற
தொன்மைமிகு  குடிப்பெருமை, குடும்பத்தின்
  மாண்புகளைக்  கொண்டு  செல்வர்;
முன்னவர்க்குப்  பின்வந்த  மற்றொருதாய்
  எனவேநான்  மொழிவேன்  மாதோ!

முதுமையில்  பாட்டியாக:

பாட்டியின்  பெருமை  தன்னைப்
   பகர்ந்திடல்  எளிய  தாமோ?
சேட்டைசெய்  பேரன்  பேத்தி
  சிந்தனை  செழிக்கும்  வண்ணம்
நாட்டினில்  வாழ்ந்த  வீரர்,
 நல்லவர்  கதையைச் சொல்லி
ஊட்டுவர்  உணவை,  மேலாம்
 உயர்ந்தநல்  நெறியும்  சேர்த்தே.

அன்னையோ,  தந்தை  யாரோ
  ஆத்திரம்  அடைந்து  பேரன்
தன்னையே திட்டும்  போதும்
  சற்றுக்கை  ஓங்கும்  போதும்
இன்னலை  நீக்கும்  பாட்டி
  இருப்பிடம் தேடி ஓட,
அன்னவன் அச்சம் போக்க
  ஆறுதல்  சொல்லு  வாரே!

கரும்பினைப்  போலும்  பேச்சால்
  கவர்ந்தநல்  காதல்  பெண்ணாய்,
உருகிடும்  அன்பால்  கொண்கன்
 உளம்கவர்  மனைவி  யாக,
பெருகிடும்  நேசம்  காட்டும்
  பேரன்புப்  பாட்டி  யாக
அரும்பெரும்  தொண்டு  செய்யும்
  அன்னையர்  குலமே  வாழ்க!

அருஞ்சொற் பொருள்:
மூங்கை---ஊமை; மூங்கைமொழி---மௌனமொழி;
காவி---குவளைமலர்; பொதும்பு---சோலை;
பிணைத்தல்---கட்டுதல்; கொண்கன்---கணவன்.
கன்னனிகர்--கன்னல்(கரும்பு)நிகர்




No comments:

Post a Comment