Wednesday, 19 December 2018

நற்றிணை நானூறு.

      நற்றிணை  நானூறு

சங்க  இலக்கியங்கள் இரண்டு பெரும் பிரிவாகப்
பிரிக்கப்படும்.  அவையாவன: பதினெண் மேற்
கணக்கு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு என்பன
வாகும்.  பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை
மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பகுப்பின்கீழ் முறையே
எட்டுத் தொகை நூல்களும்,  பத்துப்  பெரும் தனி
நூல்களும் அடங்கும்.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்
கள் அடியளவு குறைந்த அறநூல்கள் ஆகும். மேற்
கணக்கு நூல்கள் அடியளவு மிக்கவை.  கீழ்க்கணக்கு
நூல்கள் இரண்டு அடி முதல் நான்கடி உள்ளிட்ட பாடல்
களைக் கொண்டவை. மேற்கணக்கு நூல்கள்நான்கு
அடி முதல் எத்தனை  அடி முடிய வேண்டுமென்றாலும்
எழுத இடம் தருபவை.  பதினெண்மேற்கணக்கு நூல்
களில் நாம் பார்க்கவிருக்கும் நூல் எட்டுத்தொகைப்
பிரிவில்  அடங்கிய நற்றிணை நானூறு என்னும்
நூலாகும்.  எட்டுத்தொகை நூல்கள் எவை எவை?
"நற்றிணை  நல்ல  குறுந்தொகை  ஐங்குறுநூ(று)
ஒத்த  பதிற்றுப்பத்(து)  ஓங்கு  பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு)  அகம்,புறம்என்(று)
இத்திறத்த  எட்டுத்  தொகை."
அதாவது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,
புறநானூறு என்னும் எட்டு நூல்களாகும்.  இவை ஒவ்
வொன்றும் தனித்தனிப் புலவரால் பாடப்பட்டதன்று.
பல புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடிய
பாடல்களை அடி வரையறைப்படி பிரித்து ஒவ்வொரு
நூலையும் தொகுத்து உருவாக்கினார்கள். அதன்படி,
நற்றிணை என்பது ஒன்பது அடி முதலாகப் பன்னிரண்டு
அடி  முடிய உள்ள நானூறு பாடல்களைக் கொண்டதாக
உருவாக்கினார்கள். அகப்பொருள் குறித்த பாடல்களைக்
கொண்ட நூல். நற்றிணை நானூறு என்பதுதான் இந்
நூலின் பெயர் ஆகும்.  காலப்போக்கில் நற்றிணை
என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. நூல் முழுவதும்
அகவற் பாக்களால் பாடப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்த
புலவர் யாரெனத் தெரியவில்லை.  ஆனால் தொகுப்பித்
தோர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி ஆவார்.

இனி, ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாடல் வீதம் ஐந்து
திணைகளுக்கும் ஐந்து பாடல்களைப் பார்ப்போம்:
குறிஞ்சித் திணை: (புலவர்:கயமனார்)எண்:324
"அந்தோ! தானே  அளியள்  தாயே;
நொந்தழி  அவலமொடு  என்னாகு  வள்கொல்,
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள்;
கோடுமுற்று  யானை  காடுடன்  நிறைதர,
நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை  வரைப்பின்,
ஆடுபந்து உருட்டுநள்  போல  ஓடி,
அம்சில்  ஓதி இவளுறும்
பஞ்சி  மெல்லடி  நடைபயிற்  றும்மே".
பொருள்:
காதலியின் நடை எழிலைக் கண்டு வியந்த காதலன்
தன் தோழனிடம் கூறியது:
"அந்தோ பரிதாபம்.  இவள் தாய் இரக்கப்பட வேண்டியவள்.
பொன் போன்ற மேனியை யுடைய தன் மகள் நலத்தை
விரும்பும் அத்தாயானவள் எவ்வளவு அவலம் அடைகின்
றாள்.  இவள் தந்தை  யானையின்  முற்றிய தந்தம் போல்
நெய் தடவப்பட்ட  வேலைக் கொண்டு  காக்கும் செல்வம்
உடையவன். அவன் வீடு அகன்று பரந்துள்ளது. அவ்வீட்டி
னுள் சில கூந்தல்முடி பறக்க ஓடும் பந்தைக் காலால்
உருட்டும் மகளுக்குக் கால் நோகுமே யென்று அன்னாள்
கூடவே ஓடும் தாய் இரக்கப்படவேண்டியவள் தான். மகளின்
பஞ்சு போன்ற பாதம் நோகுமே என்று தாய் வருந்த, மகளோ
தாய்க்கே நடை பயிற்றுவது போல முன்னால் ஓடுகின்றாள்.
உண்மையிலேயே தாய் பரிதாபத்துக்குரியவளதான்.
அந்நாட்களில் பெண்டிர் கால்பந்து விளையாடினர் என்னும்
செய்தி கவனத்துக்கு உரியது.

முல்லைத் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:169
"முன்னியது  முடித்தனம்  ஆயின், நன்னுதல்
வருவம்  என்னும்  பருவரல். தீர,
படும்கொல், வாழி, நெடும்சுவர்ப் பல்லி
பரல்தலை போகிய   சிரல்தலைக்  கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு  முல்லை
ஆடுதலைத்  துருவின்  தோடுதலைப்  பெயர்க்கும்
வன்கை  இடையன் எல்லிப்  பரீஇ,
வெண்போழ்  தைஇய  அலங்கல்அம்  தொடலை
மறுகுடன்  கமழும் மாலை,
சிறுகுடிப்  பாக்கத்தெம்  பெருநக  ரானே!"
பொருள்:
வினைமுற்றி  மறுத்தரா நின்ற தலைவன் தன்
நெஞ்சிற்குக்  கூறியது. ஒரு செயல் கருதி யாம்
பிரிந்து சென்ற பொழுது' என்று திரும்பி வருவீர்?'
என்று வருத்தத்துடன் வினவிய தலைவிக்கு
'யாம் எந்தச் செயலுக்காகச் செல்கின்றோமோ,
அச்செயல் முடிந்தவுடனே அன்றே திரும்பிடுவோம்
என உரைத்த பொழுது வருத்தமுற்றாள்.அந்தத் துயரைப்
போக்கும் விதமாக யாம்  திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.
எமது வருகையை எமது பெரிய மாளிகைச் சுவரில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி அறிகுறியாக அடித்துத்
தெரிவிக்குமா? எனத் தலைவன் தன் நெஞ்சுக்குச்
சொல்லுகின்றான்.. பல்லி எழுப்பும் ஒலிக்குப் பலன்
பார்க்கும் வழக்கம் முன்னரே நிலவியது போலும்.
வினை என்பது பொருள் ஈட்டுதலைக் குறித்தது.

நெய்தல் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:172
"விளையாடு  ஆயமொடு வெண்மணல்  அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
'நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகுமென்று'
அன்னை கூறினள், புன்னையது  நலனே,
அம்ம| நாணுதும், நும்மொடு  நகையே;
விருந்தின்  பாணர்  விளரிசை  கடுப்ப,
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறை கெழு  கொண்க! நீநல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"
பொருள்:
சிறுவயதில் தோழியருடன் கிச்சுக்கிச்சுத்
தம்பலம் விளையாடும் போது புன்னங் கொட்
டையை மறைத்து விளையாடினோம். அதனை
எடுக்க மறந்துவிட்டோம். அப்புன்னை முளைத்து
மரமாக வளர்ந்து விட்டது. அப்புன்னை உனக்குத்
தங்கை என்று என் அன்னை கூறினள். அதனால்
நெய்பெய்த பாலை அதற்கு ஊற்றிவளர்த்து
வந்தேன். இப்போது பெரிய மரமாக வளர்ந்துளது.
இது என் நுவ்வை யானதால் இதனடியில் நின்று
நும்மோடு உரையாட எனக்குக் கூச்சமாக உள்ளது.
இப் புன்னையின்  உயர்ந்த நிழலில் ஏனைய உயிர்
இனங்களும் தங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது நீவிர் எனக்கு உம்மைக் கொடுத்தால்
அச்செய்கை எனக்குக் கூச்சத்தை உண்டாக்கும்.
தலைவி தலைவனிடம் இவ்வாறு கூறியது தமிழ்
இனத்தார் அனைத்து உயிர்களையும் நேசித்து
வாழ்ந்தமையைப் புலப்படுத்தும். மேலும் ஆண்--
பெண் இடையே நிகழ்பவற்றை  மற்றவர் முன்
வெளிப்படுத்தக் கூசினர் என்றும் அறிகிறோம்.

மருதத் திணை:(புலவர்:பரணர்)எண்:300
"சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென, அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு  தாஅங்கு,
உறுகால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு  இறைஞ்சும்  தண்துறை  ஊரன்
சிறுவளை  விலையெனப் பெருந்தேர் பண்ணி,எம்
முன்கடை  நிறீஇச்  சென்றிசி  னோனே!
நீயும்  தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய்வார்ந்  தன்ன துய்யடங்கு  நரம்பின்
இரும்பாண் ஒக்கல் தலைவன்! பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சைசூழ் பெருங்களிறு போல,எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!"
தோழி தலைவியைப் பற்றித் தலைவனுக்குச்
சொல்லியது. "என் தலைவியை மணக்க விரும்
பியவன்  அவள் வளையல் செய்து அணிந்து
கொள்ளட்டும் என்று தனது பெரிய தேரை
ஓட்டிவந்து  எமது வீட்டு வாயில் முன் நிறுத்தி
விட்டுச் சென்றனன். உனக்கும் அவளை மணம்
செய்து கொள்ள ஆவல் இருந்தால் தேரோடு
வருக; திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடு.
பாணர்களின் தலைவன் அரசன் தழும்பன். அவன்
நகரம் ஊணூர். அந்த ஊரில் யானைகளைப்
பிச்சை யெடுக்கப் பழக்குவர் போலும். அது போலப்
பழக்கப்பட்ட ஆண்யானை போலத் தலைவியின்
இல்லத்துக்கு வந்து தலைவி வீட்டு அட்டிலில்
(சமையல் அறை) கிடைக்கும் கஞ்சியை வாங்கிக்
குடித்துக் கொண்டு தலைவியின் பெற்றோர்
அவளை மணம் முடித்துத் தரும்வரை காத்திருப்
பாய்."  தோழியின் இக்கூற்று வாயிலாக, அந்நாளில்
இக்காலம்போலப்  பரிசம் போட்டுப் பெண்களுக்குப்
 பொருள் கொடுக்கும் வழக்கமும், யானை
யைக் கடைவீதிக்கும் இல்லங்களுக்கும் இட்டுச்
சென்று அன்பளிப்புப் பெறும் வழக்கமும் நிலவின
என்று அறிகின்றோம்.

பாலைத் திணை:(புலவர்:போதனார்) எண்:110
"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்  தொருகை  யேந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்'என்று  ஒக்குபு  பிழைப்ப, தெண்ணீர்
முத்தரிப்  பொற்சிலம்பு  ஒலிப்பத் தத்துற்று,
அரிநரைக்  கூந்தற்  செம்முது  செவிலியர்
பரிமெலிந்(து) ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறுவிளை  யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்(டு) உணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ்சோ(று) உள்ளாள்,
ஒழுகுநீர் நுணங்கறல் போல,
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே!"
பொருள்:
தேன்பெய்த தித்திக்கும் பாலை ஒளிர்கின்ற
தங்கக் கலத்தில் ஏந்திக்கொண்டு நரைமுடி
யுடைய செம்மைமிகு  வயதில் மூத்த செவிலித்
தாயர் 'உண்க' என்று அதட்டுகின்றனர். என்
மகளோ உண்ண மறுக்கின்றாள். அவர்கள்
தம் கையிலிருக்கும் சிறு கோலால் அடிப்பது
போல ஓங்குகின்றனர். என் மகள் தன் கால்
களில் பூட்டியுள்ள முத்துப்பரலைக் கொண்ட
சிலம்பு ஒலியெழுப்ப  வீட்டிலுள்ள  பந்தல்
முழுவதும் சுற்றிவந்து  செவிலித் தாயர் ஏவலை
மீறி நடக்கும் சிறு குறும்புகள் செய்யும் விளை
யாட்டுப் பிள்ளை யாகக் காட்டிக்கொள்கின்றாள்.
இவ்வளவு பொறுப்பற்ற, செல்வச் செழிப்பில்
மிதந்த குறும்புக்காரி திருமணத்துக்குப் பிறகு
தன் கணவன் குடும்பத்துக்குப் பெருமையைச்
சேர்க்கும் விதமாக நடந்து கொள்ள எங்கு கற்றுக்
கொண்டாள்.? அவள் கணவன் குடும்பம் சற்றே
வறுமையில் வாழும் குடும்பம்.  என்மகள் தன்
தந்தை அனுப்பி வைக்கும் உணவை உண்ண
மறுக்கிறாள். கணவன் வீட்டு நிலைமைக்கு ஏற்ப
ஒருவேளை பட்டினி கிடந்து மறுவேளை உண்ணு
கின்றாள். இவ்வளவு பாங்கையும் ஒழுகலாற்றையும்
எங்கு கற்றுக் கொண்டாள்?  என்மகளின் குடும்ப
ஒழுக்கம் வலிமையாயுள்ளது என்று கூறித் தாய்
வியக்கின்றாள்.

நற்றிணை நூலில் உள்ள நானூறு பாடல்களுமே
இலக்கியச்சுவை கொண்டவை.  மேலும் சங்க
காலத்தில்  நிலவிய  பழக்க வழக்கங்களை எடுத்துச்
சொல்வன. நற்றிணை நானூற்றைப் படித்து  மகிழ்
வோமே!










1 comment: