Wednesday, 10 September 2025

பயறணீச்சுரம் என்ற உடையார் பாளையம்..

 பயறணீச்சுரமென்ற உடையார் பாளையம்.


தமிழ்நாட்டிலுள்ள பழைய ஜமீன்களுள் உடையார் பாளையம்

ஒன்று. வீரத்துக்கும் தியாகத்துக்கும் கல்விக்கும் பெயர்பெற்ற

பல ஜமீன்தார்கள் இதனை யாண்டு இங்கு புகழை நாட்டியிருக்

கிறார்கள். இவ்வூருக்குப் பயறணீச்சுரமென்னும் பெயர் முன்பு

வழக்கிலிருந்தது. மலைநாட்டின்கண் திவாகரபுரமென்னும்

ஊரிலிருந்த வணிகர் ஒருவர் அங்கிருந்து மிளகுப் பொதிகளை

மாடுகளின்மேல் ஏற்றிக் கொணர்ந்து சமவெளியிலிருந்த சோழ

நாட்டிலும் அருகிலிருந்த பிற நாடுகளிலும் வணிகம் புரிந்து வந்தார்.

ஒருசமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்துக்குப் போனார். அந்நாளில்

விருத்தாசலத்தில் ஒரு சுங்கச்சாவடி யிருந்தது. மிளகுப் பொதிக்கு

அதிக வரி விதிக்கப்படுவது வழக்கம். வரியைக் குறைக்க, மிளகுப்

பொதிகளைப் பயறு மூட்டைகள் என்று பொய் சொல்லிச் சாவடியைக்

கடந்து சென்றார். விருத்தாசலத்தை அடைந்த அவர் அங்கு மூட்டைகளை

அவிழ்த்துப் பார்த்தால் மிளகே காணப்படவில்லை. பதிலாக, பயறு தான்

எல்லா மூட்டைகளிலும் இருந்தது. தாம் பொய் சொன்ன காரணத்தால்

பழமலைநாதர் தண்டித்து விட்டாரோ? என்று பதறித் துடித்தார். அப்பொழுது

"கெட்ட இடத்திலே போய்த் தேடு" என்றொரு அசரீரி கேட்டதாகவும் அதன்படி

பயறணீச்சுரத்துக்குவந்து பயறணிநாதரிடம்  மனமுருகி வேண்டிக்கொண்டதாகவும்

அதன்பின்னர் தெய்வத்தின் திருவருளால் பயறெல்லாம் பழையபடி மிளகாக

உருமாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது.


இந்த ஊரையாண்ட ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய

பெயரையும், காலாட்கள் தோழ  உடையார் என்னும் பட்டப் பெயரையும்

உடையவர்கள். தங்கள் படைகளுடன் இங்கு தங்கிய காரணத்தால் இந்த

ஊர் உடையார் பாளையம் என்று அழைக்கப்படலாயிற்று. இவர்களுடைய

முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்த காரணத்தால்

கச்சி என்னும் அடைமொழி பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது.

பல வீரர்களுக்குத் தலைவர்களாகிய விசயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும்

போரில் உதவி புரிந்தவர்கள் ஆதலால் " காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப்

பெயர் இணைந்து கொண்டது.


விசயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரசிம்மராயர் என்னும் அரசருடைய ஆட்சிக்

காலத்தில் காஞ்சிபுரத்தில் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் என்பவர் பாளையக்

காரராக ஆண்டுவந்தார். அவருக்குப் பின் அவர் மூத்த மகன் பெரிய நல்லப்ப

உடையாரும், அவருக்குப் பின் அவர் தம்பி சின்ன நல்லப்ப உடையாரும்  பாளையக்

காரர்களாக ஆட்சி செய்தனர். சின்ன நல்லப்ப உடையார் சிதம்பரம் நடராசப் பெருமான்

மீது பக்தி கொண்டவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர்

காலத்தில் சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயர் என்னும் பெரியவரிடம்  உபதேசம்

பெற்றவர். ஒருமுறை தீர்த்த யாத்திரை செல்ல எண்ணிய நல்லப்ப உடையார்

சிதம்பரத்துக்குச் சென்று நடராசரைக் கண்டு வணங்கிய பின் தம் குரு நமச்சிவாயர்

ஆசியும் பெற்று வேதாரண்யம் நோக்கிப் பயணப்பட்டார். அன்று வழியில் ஒரு

சிவாலயத்தையும், அதனருகே அமைந்துள்ள தடாகத்தையும் கண்டு அவ்விடத்திலேயே

தங்கினார். நல்ல தூக்கத்தில் அவர் கனவில் சிவபெருமான் தோன்றியதாகவும் அவ்

வூரையே தலைநகரமாக மாற்றிக்கொள்ளுமாறு கூறியதாகவும சொல்லப்படுகிறது.

அதன்படியே அவ்வூரில் அரண்மனையை எழுப்பித் தம் படை, பரிவாரங்களை வரவழைத்து

அவ்வூரில் நிலையாகத் தங்கச்செய்தார். அவ்வூரே உடையார்பாளையம் என் அழைக்கப்

படுகிறது. நல்லப்ப உடையார் பல அரசர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தார்.

முஸ்லீம் படையெடுப்புக் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காமாட்சியம்மன் சிலை, வரத

ராசர் சிலை இங்கே கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. உடையார் பாளையத்துக்குச்

சென்றால் அச்சமின்றி இருக்கலாம் என்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்துவந்தது. புலவர்கள் நல்லப்ப உடையாரைப் பாராட்டிப் பாடல்கள் இயற்றினர்.


அவர் காலத்துக்குப் பின் பல ஜமீன்தார்கள் பட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் காட்டைத் திருத்தி நாடாக்கினர். அதனால் உடையார்

பாளையத்துக்கு வருவாய் குவிந்தது. ஜமீன்தார்கள் பற்பல அறச்

செயல்கள் செய்தனர். ரங்கப்ப உடையார் என்னும் ஜமீன்தார்

தமிழ், வட மொழிகளில் புலமை மிக்கவராகத்  திகழ்ந்த போதிலும்

ஞானியைப் போல் பற்றற்ற மனநிலையில் ஆட்சி நடத்தினார்.

துறவுகொள்ள விரும்பித் தம் மகன் யுவரங்க உடையாரிடம் ஆட்சிப்

பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தவம்புரியலானார்.


உடையார் பாளையத்தில் ஆட்சிபுரிந்த ஜமீன்தார்களிலேயே யுவரங்க

உடையார் புகழ் மற்றவர்களை விஞ்சி நிற்கிறது. அவர் தமிழில் நிகரற்ற

புலமையுடன் திகழ்ந்தார். வடமொழியிலும், இசையிலும் மிகச்சிறந்த

பயிற்சி பெற்றிருந்தார். தமிழ்ப் புலவர்களாயினும், வடமொழி விற்பன்னர்க

ளாயினும், இசை மேதைகள் ஆயினும் , யுவரங்க உடையாரிடம் தம் திறனை

வெளிப்படுத்திப் பரிசில் பெறுவதையே இலக்காகக் கொண்டிருந்தனர்.

யுவரங்க உடையார் பயறணீச்சுரத்து அம்மன் மீது நறுமலர்ப் பூங்குழல்

நாயகி மாலை என்னும் சிற்றிலக்கியம் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல்:

"தனந்தரு வாய்கல்வி கற்கும் அறிவொடு சாந்தமிகு

மனந்தரு வாய்நின்னைப் போற்றும் தகைக்குவண் சாதுசங்க

இனந்தரு வாய்நின் திருநோக்கம் வைக்க இலங்குறும்ஆ

னனந்தரு வாய்நல் நறுமலர்ப் பூங்குழல் நாயகியே!"

(இலங்குறும் ஆனனம்=விளங்கும் முகம்; ஆனனம்=முகம்).

ஒரு புலவர் திருவரங்கருக்கு இணையாக யுவரங்கரை ஒப்பிட்டுப்

பாடியுள்ளார். பிடல் பின்வருமாறு:

"கச்சி யுவரங்கன், காவேரி அந்தரங்கன்,

இச்சகத்தில் என்றும் இரண்டரங்கர்--மெச்சுறவே

இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பான் என்றெண்ணி

அந்தரங்கன் கண்ணுறங்கி னான்."


இதைவிடவும் ஒரு புலவர் யுவரங்கர் மட்டுமே முழுத் தாதா

(வள்ளல், கொடையாளி) ஏனையோர் வீசம், அரைக்கால், கால்,

அரை மற்றும் முக்கால் அளவுக்கு வள்ளல்/கொடையாளி ஆவர்

என்று உரத்துப் பாடியுள்ளார். பாடல் பின்வருமாறு:

" சந்திரன்வீ  சம்குமணர் அரைக்கால் தாதா;

   சவிதாவின் கான்முளையே  கால்தா தாவாம் 

இந்தெனும்வாள் நுதலாள்தன் பாகத்(து) 

   எம்மான்

     ஈசனையே அரைத்தாதா என்ன லாகும்;

வந்(து)இரக்கும் முகுந்தனுக்(கு)ஈ  முக்கால்  

     தாதா

மாவலியே எனப்பெரியோர் வழங்கு வார்கள்;

இந்திரனாம் கச்சியுவ ரங்க மன்னன்

    என்றுமுழுத் தாதாவென்(று) இயம்ப லாமே.

(குறிப்பு: தாதா என்னும் சொல் தந்தை, தாத்தா, பெரியோன்,

கொடையாளி, பிரமன் முதலான பொருளைத் தரும். தற்காலத்தில்

அச்சொல் லுக்கு வேறுவிதமான அர்த்தம் கொள்கின்றனர்).

பாடலின் பொருள்:

பதினாறு கலைகளையுடைய நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு கலையே

சூரியனுக்குத் தருவதால் வீசம் அளவு கொடையாளி. தம் தலையையே புலவருக்குத்

தானமாகக் கொடுக்க முன்வந்த குமணர் அரைக்கால் அளவுக்கு வள்ளல்;

ஏனெனில் உடலில் எட்டில் ஒரு பங்கு தலையாகும். அதாவது அரைக்கால் அளவே

கொடை தர முன்வந்தார். அதனால் அரைக்கால் கொடையாளி யாவார்.

சவிதாவின் கான்முளை--சூரியனின் மகனான கர்ணன் ஒரு நாளில் 15

நாழிகை மட்டுமே கொடை கொடுப்பார். அதனால் கால் அளவு கொடையாளி.

பிறை நிலவு போன்ற நெற்றியையுடைய பார்வதியை இடப்பாகத்தில்

கொண்ட சிவபெருமான் அரைக் கொடையாளி. மகாபலி சக்கரவர்த்தியிடம்

வாமன உருவத்தில் வந்து யாசித்து மூன்றடி மண்ணைக் கொடையாகப்

பெற்றார் விஷ்ணு. மகாபலியின்கொடை முக்கால் கொடையாகும். ஆனால்,

இந்திரனைப் போன்ற பாளையக்காரரான யுவரங்கர் முழுக் கொடையாளி

என்று உறுதியாகச் சொல்லலாமே.


உடையார் பாளையத்தில் யுவரங்க உடையாருக்குப் பின் பற்பல ஜமீன்தார்கள்

ஆண்டனர். பிற்பாடு ஜமீன்தாரி முறையை ஒழித்து விட்டார்கள். உடையார்

பாளையம் சரித்திரத்தில் யுவரங்க உடையார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.


பார்வை:

'நல்லுரைக் கோவை'(இரண்டாம் பாகம்)--நூலாசிரியர் டாக்டர் உ. வே.சாமிநாதையர்.

Wednesday, 27 August 2025

மானம் காத்த மைந்தர்.

 தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்-நீரோ டுலாவிவரும்

நெல்லை.


மதுரைக்குக் கிழக்கே ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில்

அமைந்துள்ள சிற்றூர் வேம்பற்றூர்(வேம்பத்தூர்--மக்கள் வழக்கு). சங்க

காலம் முதல் அண்மைக் காலம்வரை தமிழ்ப் புலவர்கள்/கவிஞர்கள்

வாழந்துவந்த  சீரூர். வேம்பற்றூர்க் குமரன் என்னும் சங்கப் புலவர்

இவ்வூரைச் சேர்ந்தவர் எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். சிலேடைப்

புலி என்ற அடைமொழிக்குரிய பிச்சுவையர், வேம்பு ஐயர் முதலான

பிராமண குலத் தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர். முறையாகத் தமிழ் இலக்கிய,

இலக்கணங்களைக் கற்றுப் புலமை யடைந்து தமிழ்நாட்டிலுள்ள

வள்ளல்கள், பெருநிலக்கிழார்கள், சமீன்தார்கள், மருது சகோதரர்கள்,

இராமநாதபுரம் சேதுபதிகள் முதலான பிரபுக்களின் முன்பு புலமையையும்

திறமையையும் வெளிப்படுத்திப் பரிசில், நிலக்கொடை போன்றவற்றைப்

பெற்றவர்கள். இவ்வூரைச் சேர்ந்த பெருமாளையர் என்ற தமிழறிஞர்

திருநெல்வேலிக்குச் சென்று அங்குள்ள பெருநிலக்கிழார்களின் ஆதரவைப்

பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.


திருநெல்வேலிப் பிரபுக்கள் தூண்டுதலால் வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்

இயற்ற முடிவுசெய்தார். உயிரெழுத்துக்கள், மொழிக்கு முதலாக வரத்தகுதியுள்ள

உயிரமெய்யெழுத்துக்கள் இவைகளில் ஒவ்வொன்றை எடுத்துப் பாடலின் முதலில்

வருமாறு அகப்பொருள் துறைப் பாடலைப் பாடுவது வருக்கக் கோவையாகும்.

எடுத்துக்காட்டாக, மாறன் வருக்கக்கோவை, பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலானவை.

நூலை இயற்றி முடித்தவுடன் பெருமாளையர் இதனை அரங்கேற்றம் செய்யத் திட்ட

மிட்டார்.


அதன்படி, திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீசாலிவாடீசுவரப் பெருமான் சந்நிதியில்

அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழன்பர்கள் குழுமியிருந்தனர்.

பெருமாளையரின் மாணவர்களில் ஒருவர் நூலின் முதற் பாடலான காப்புச்

செய்யுளைப் படித்து முடித்தார். பாடல் பின்வருமாறு:

"தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும்

நீரோ(டு) உலாவிவரும் நெல்லையே!---காரோடும்

கந்தரத்தர் அந்தரத்தர்; கந்தரத்தர் அந்தரத்தர்;

கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு".

மாணவர் படித்தவுடன் கூட்டத்திலிருந்த அரைகுறைத் தமிழறிவு கொண்ட ஒருவர்

எழுந்து  "தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும்

நெல்லை எனப் பாடப்பட்டுள்ளது. தேரோடும் வீதியில் அவ்வாறு நடைபெறுகிறதா?"

என்று ஐயம் எழுப்பினார். மாணவர் அருகில் அமர்ந்திருந்த நூலாசிரியர் பெருமாளையர்

திகைத்துப் போனார். தமது பாடலில் குறை காணும் தகுதியுள்ள புலவர் திருநெல்வேலியில்

இல்லை என்று நம்பினவர் மனக்கிலேசத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

மேடையில் வீற்றிருந்த அறிஞர்கள் யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல்

அமைதியாய் இருந்தனர். உரைநடை வேறு; கவிதை வேறு. உரைநடையில்

சொல்லப்பட்ட செய்திகளுக்கு நேரடியாகச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே

பொருள் கூறிடலாம். ஆனால் கவிதை அப்படிப்பட்டது அன்று. அதற்கு, எதுகை,மோனை,

சீர், தளை, அடி, தொடை, அணி முதலான கூறுகள் உண்டு. அவைகளுக்கும் கட்டுப்பட்டே

கவிதையை இயற்ற முடியும். பொருள் கொள்ளும் முறைக்கும் இலக்கணம் உண்டு.

தொல்காப்பியம் நான்கு விதமான பொருள் கொள்ளும் முறைகளை விவரிக்கிறது.

நன்னூல் எட்டுவிதமான முறைகளைக் கூறுகிறது. " சுரை ஆழ, அம்மி மிதப்ப" என்ற

சொற்றொடரில் அப்படியே படித்துப் பொருள்கொண்டால்  மிகத் தவறாகும். மிதக்கும்

தன்மையையுடைய சுரையை நீரில் மூழ்கும் என்று பொருள்கொள்வது நகைப்புக்கிடமாகும்.

அதுபோலவே, அம்மி மிதப்ப என்ற சொற்றொடரும் தவறாக மாறும். நாம் இந்தச் 

சொற்களை மாற்றியமைத்துக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அதாவது,

"சுரை மிதப்ப, அம்மி ஆழ" என்று மாற்றிப் பொருள் கொள்ளவேண்டும். இதுபோன்ற

விதிவிலக்குகள், சலுகைகள் கவிதை படைப்பவர்களுக்கு உள்ளன.. மேலே கண்ட

காப்புச் செய்யுளிலும்  "தேரோடும் வீதியெலாம்" என்பதோடு நிறுத்திப் பொருள்

கொள்ளல் வேண்டும். "செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும் நெல்லை"

என்று படித்துப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, வீதியெல்லாம் தேரோடுகிறது;

தாமிரபரணி ஆற்று நீரிலே செங்கயலும் சங்கினமும் உலாவி வருகின்றன. இப்படியாகத்

தனித்தனியாகப் படித்துப் பார்த்தால் எப் பிழையும் வர வாய்ப்பில்லை. ஐயம்

எழுப்பியவர் தமிழிலக்கணம் முழுமையாகப் படித்திருந்தால் இந்த ஐயம் தோன்றியிராது.

அவர் கிளப்பிய ஐயத்தால் மனமுடைந்து போன நூலாசிரியர் பெருமாளையர்

அரங்கேற்ற நிகழ்வைத் தள்ளி வைத்துவிட்டார். நூல் அரங்கேற்றம் செய்யப்படவில்லை.


ஆண்டுகள் உருண்டோடின. பெருமாளையருக்கு ஒரு தவப்புதல்வன் பிறந்தான்  அவன்

தகப்பனாரைப்போலவே தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்

புலமையடைந்தான். ஒருநாள் தகப்பனார் எழுதிய வருக்கக் கோவை நூலைப் பரணிலே

கண்டு தன் தாயாரிடத்திலே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டறிந்தான்.

தானே இந்நூலை அரங்கேற்றம் செய்து தகப்பனார்க்கு நேர்ந்த இழி சொல்லைத் 

துடைத்தெறிய முடிவெடுத்தான். அதன்படி ஸ்ரீஅனவரத நாயகர் சந்நிதியில் அரங்கேற்றம்

ஏற்பாடு செய்யப்பட்டது. காப்புச் செய்யுளை ஒரு மாணவர் மூலமாகப் படிக்கச்செய்து

முதல் இரண்டு அடிகளில் யாதொரு பிழையும் இல்லை என்று நிறுவினான். பின்

இரண்டு அடிகளில் பயின்று வரும் மடக்கு(யமகம்)எனப்படும் சொல் அலங்காரத்தை

விளக்கலானான்:

காரோடும்=கருநிறம் பரவிய(அமுதம் பெறக் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால

                      நஞ்சை உண்டதால் கழுத்தில் கருநிறம் பரவியது).

கந்தரத்தர்=கந்தரம்=கழுத்து(நீல கண்டர்)-கறுத்த கழுத்தையுடையவர்.

அந்தரத்தர்=அந்தரம்= ஆகாயம்; ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவர்.

கந்து+அரத்தர்=கந்து=பற்றுக் கோடு=பற்றுக்கோடாகிய செம்மைநிறமுடையவர்.

அந்தரத்தர்= அம்+தரத்தர்=அம்=நீர்= திருமுடியில் நீரைத் தாங்கியவர்(நீர்=கங்கை);

கந்தரத்தர்=கந்தர்+அத்தர்=முருகக் கடவுளின் தந்தையானவர்.

அந்தரத்தர்=அம்+தரத்தர்= அழகிய தகுதியை உடையவர்.

முழுப் பாடலின் பொருள்:

நெல்லையில் வீதியெலாம் தேரோடும்; தாமிரவருணி யாற்று நீரினிலே செங்கயலும்

சங்கினமும் உலாவிவரும். அந்த நெல்லைப் பதியில் கருநிறம் பரவிய கழுத்தை

உடையவரும், ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவரும், பற்றுக் கோடாகிய

செம்மை நிறமுடையவரும், திருமுடியில் கங்கையைத் தாங்கியவரும், முருகக்

கடவுளின் தந்தையானவரும்,  அழகிய தகுதியை உடையவருமான சிவபெருமான்

காவல் புரிந்து வீற்றிருக்கின்றார். அவர் நமக்குக் காப்பாக விளங்குகிறார்.


பார்வை: "நான் கண்டதும் கேட்டதும்"

                   நூலாசிரியர்: டாக்டர் உ.வே.சா.

Sunday, 10 August 2025

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில் மூதேவி ஏன்பிறந்தாள் முன்?

 சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?


அந்தகக்கவி வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள

பூதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். பிறவியிலேயே கண்பார்வை

யற்றவராக உதித்த போதும் "ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகர்" ஆனார். பூதூரில் பிறந்தாலும் வாழ்ந்த ஊர்

பொன் விளைந்த களத்தூராகும். பல வள்ளல்களாலும்  ஈழத்து மன்னர்

பரராச சிங்கம் என்பவராலும் ஆதரிக்கப் பெற்றவர். பல சிற்றிலக்கியங்களையும்

தனிப்பாடல்களையும் இயற்றியவர்.


ஒருமுறை திருவேங்கடம் என்னும் வள்ளலிடம் பாடிப் பரிசில் பெற எண்ணிச்

சென்றிருந்தார். திருவேங்கடம் புலவர்களைப் பேணுபவர். தாராளமாகப்

பரிசில்கள் வழங்குபவர். ஆனால் அவருக்கு ஒரு தமையன் இருந்தார்  அவர்

தமிழ்ப் பற்றோ, புலவர்களைப் பாராட்டும் எண்ணமோ இல்லாதவர். புலவர்

களுக்குப் பரிசில் கொடுப்பதைத் தடுக்க முயல்பவர். புலவர் பாடி முடித்தவுடன்

தன் இளவல் திருவேங்கடத்திடம்  "சிறிய அளவில் பரிசிலைக் கொடுத்தனுப்பு;

பெரிதாக எதுவும் கொடுத்துவிடாதே" என்று புலவரின் காதுபடவே கூறினார்.

வள்ளலின் தமையன் பெயர் கண்ணுக்கினியான். ஆனால் அவர் யாருக்கும்

இனியவராக நடந்துகொண்டதே இல்லை. தமையனின் சொற்களைப் பொருட்

படுத்தாத வள்ளல் திருவேங்கடம் புலவருக்குத் தம் வழக்கப்படியே தாராளமாகப்

பரிசில் கொடுத்துச் சிறப்புச் செய்து அனுப்பிவைத்தார். திரும்பும் பொழுது

புலவர் ஒரு பாடலைத் தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்:

"தேன்பொழிந்த வாயான் திருவேங்  கடத்துடனே

ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே--வான்சிறந்த

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?"

செம்மையான திருப்பாற்கடலில் மிகவும் சிறப்புடைய சீதேவிக்கு முன்னதாக

மூதேவி பிறந்ததைப் போல, கனிவு மிக்க வள்ளல் திருவேங்கடத்தாருக்கு

முன்னவனாகக் கண்ணுக்கினியான் பிறந்துள்ளான்.


ஒருமுறை புலவர் வழக்கமாகத் துணைக்கு வரும் சிறுவனோடு வெளியூர்

செல்ல நேர்ந்தது. பயணத்தில் களைப்பும் சோர்வும் ஏற்படின் புசித்துப்

பசியாறக் கைவசம் கட்டுச் சோற்று மூட்டையையும் சிறுவனிடம் கொடுத்துக்

கொண்டுவரப் பணித்திருந்தார். வெய்யில் கடுமையாகக் கொளுத்தியதால்

ஒரு பெரிய ஆலமரநிழலில் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று நினைத்து

 இருவரும் மரத்தடியில் அமர்ந்தனர். அப்பொழுது இதமான தென்றல் வீசியதால்

இருவரும் சற்றே கண்ணயர்ந்து விட்டனர். ஒரு நாழிகை கடந்த பின்னர்

தூக்கம் கலைந்து எழுந்த புலவர் சிறுவனையும் எழுப்பி விட்டுக் "கட்டுச் சோற்று

மூட்டையைப் பிரி; உணவுண்போம் என்றார்". துயிலெழுந்து உட்கார்ந்த சிறுவன்

"ஐயா! கட்டுச் சோற்றை நாய் உண்டுகொண்டிருக்கிறது" என்று அலறினான்.

புலவருக்கும் மிகுந்த மனவேதனை வாட்டியது. தன் வேதனையை ஒரு பாடலில்

கொட்டித் தீர்த்தார்:

"சீராடை யற்ற  வைரவன் வாகனம் சேரவந்து

பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாரா யணனுயர் வாகன மாயிற்று; நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே".

பொருள்:

சீராடையற்ற வைரவன் வாகனம்=கீளைத் தவிர(கோவணம்) வேறு நல்ல ஆடையை                                                              உடுத்தியிராத   பைரவரின் வாகனம் நாயாகும்.

சேரவந்து                                             =நெருங்கி வந்து.     

நான்முகன் வாகனம்                         =அன்னம்(உணவு--இங்கே கட்டுச் சோறு)

நாராயணன் உயர் வாகனம்.          =பருந்து.

மை வாகனன் -மை=ஆடு; ஆட்டை வாகனமாகக் கொண்ட                                 =நெருப்புக் கடவுள்(அக்னி).

தெளிவுரை:

தாமும் உதவிக்கு வந்த சிறுவனும் கண் அயர்ந்திருந்த நேரத்தில்

பைரவரின் வாகனமான நாய் ஒன்று நெருங்கி வந்து, பிரம்மாவின்

வாகனமான அன்னத்தை(அன்னப் பறவையன்று--உணவு-கட்டுச்சோறு)ப்

பற்றிக் கௌவி நாராயணனின் வாகனமான பருந்தைப் போல விரைவாக

ஓடி மறைந்துவிட்டது. ஆட்டை வாகனமாகக் கொண்ட தீக்கடவுள்

(அக்னி) எம் இருவர் வயிற்றைப் பற்றிக் கொண்டனன். பசி வயிற்றைப்

பிராண்டியது.

Friday, 1 August 2025

ஐந்திணை ஐம்பது.

 ஐந்திணை ஐம்பது.


மாறன் பொறையனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

இது பதினெண்கீழ்க்கணக்கு என்ற பிரிவிலுள்ள பதினெட்டு நூல்களில்

ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டவை

யல்ல. சங்கம் மருவிய காலத்தில்(சங்ககாலம் முடிவடைந்த பிற்பாடு இயங்கிய

காலம்) இயற்றப்பட்டது என்று புலவர்கள் கருதுகின்றனர். இது அகப்பொருளைப்

பற்றிப் பாடும் நூல். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில்

திணைக்குப் பத்துப் பாடல்கள்  என்ற கணக்கில் மொத்தமாக ஐம்பது பாடல்களைக்

கொண்டு திகழ்கிறது. இதில் குறிஞ்சித்திணையில் காணப்படும் ஓரினிய

பாடலைக் காண்போம்::

"கொடுவரி  வேங்கை  பிழைத்துக்கோட்   பட்டு

மடிசெவி  வேழம்  இரீஇ---அடியோசை

அஞ்சி  யொதுங்கும்  அதருள்ளி  ஆரிருள்

துஞ்சா  சுடர்த்தொடி  கண்".

திணை: குறிஞ்சி; துறை: இரவுக்குறி வந்து திரும்பும் தலைவனைக் கண்ணுற்று

நின்ற தோழி வரைவு(திருமணம்)  கடாயது(புரிந்து கொள்ளும்படி கோரியது).

இரவுக்குறி: காதலர்கள் இரவில் பிறர் அறியாமல் சந்தித்துக் கொள்ளும் இடம்.

பாடல் எண்16.

பொருள்:

வளைந்த வரிகளையுடைய வேங்கைப் புலியாலே பிடிக்கப்பட்டுப் பெரும்

போராட்டத்துக்குப் பின்னர் ஒருவாறு தப்பிப் பிழைத்த, மடிந்த முறம் போன்ற

காதுகளைக் கொண்ட யானையானது, அஞ்சிப் பின் வாங்கித் "தான் நடப்பதால்

கிளம்பும் ஒலி புலிக்குக் கேட்டுவிடக்கூடாது என்ற உதறலில் மெல்ல நடந்து

செல்லும் அச்சுறுத்தும் வழியையுடைய காடு அது.  தலைவியுடன் கலந்துரையாடித்

திரும்பிச் செல்லும் போது  ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புண்டு. இந்த எண்ணம்

உதித்ததால் ஒளியுடைய வளையலை அணிந்த தலைவிக்குத் தூக்கம் வரவேயில்லை.

இவ்வாறாக  அவளை அச்சத்துக்கு ஆளாக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ வழிசெய்க.

அதற்காக, மேற்கொண்டு கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ளத்

தேவையான முயற்சிகளைச் செய்தல் சாலவும் நன்று.  இவ்வாறாகத் தோழி

தலைவனிடம் வற்புறுத்திக் கூறினாள்.


காட்டில் திரியும் விலங்குகளின் இயல்பையும், நடந்துகொள்ளும் முறையையும்

மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. யானை

பருத்த உடலையும், கூரிய கொம்புகளையும்  கொண்டிருந்தாலும் புலி பாய்ந்து

தாக்கும்போது அஞ்சிப்பின்வாங்கும். புலிக்கு ஊக்கமும் மனவலிமையும்

யானையை விடவும் அதிக அளவில் உள்ளன. எனவே, உரமும் வலிமையும்

உடைய யானை தன்னை விடவும் வலிமை குறைந்த புலியால் கொல்லப்படும்

வாய்ப்புண்டு. களிறு என அழைக்கப்படும் ஆண் யானையே அஞ்சும் பொழுது

பிடி என அழைக்கப்படும் பெண் யானையைப் பற்றிப் பேசவே வாய்ப்பில்லை.

ஆனால் மதங்கொண்ட யானை புலியுடன் மூர்க்கமாகப் போராடி வெல்லும்.

சங்க இலக்கியத்தில் யானை--,புலி இவைகட்கிடையே நிகழ்ந்த சண்டைகளைப்

பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் புலி யானையைக் கொன்ற

தாகவும், சிலவற்றில் யானை புலியைக் கொன்றதாகவும் குறித்துள்ளனர்.

"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்"  (திருக்குறள் எண்: 599)

என்ற குறளில் யானையின் ஊக்கமின்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

(வெரூஉம்=அஞ்சி நடுங்கும்).


இனி, ஐந்திணை எழுபது என்னும் நூலில் காணப்படும் ஊக்கமுடைய யானை

யைப் பற்றிய பாடலைப் பார்ப்போம்:

இந்நூலை இயற்றியவர் மூவாதியார் என்னும் புலவர்.

துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது உரைத்தது.

பாடல் எண்:37; திணை: பாலை.

"கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி

கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டும்;

நெடுவரை அத்தம் இரப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்கும் சுரம்."

பொருள்:

தலைவி தோழியிடம் கூறியது:

"தோழியே! புலியானது பாய்ந்ததால் தன் துணையான பிடியைப்

பறிகொடுத்து அச்சமடைந்து அப்பால் போய் மாவிலங்குமரம்

வாடிநிற்கும் பாறைதளுக்கிடையில் உள்ள வழியில் நிற்கும்

களிறு(ஆண் யானை) தன் துணையான பெண் யானையைக்

கொன்ற புலியினது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.

இத்தகைய பாலை நிலத்திலுள்ள நீண்ட மலைத்தொடர்களைக்

கொண்ட அரிய வழியில் நம்மைப் பிரிந்து தலைவன் கடந்து

போவாரோ?".

Tuesday, 15 July 2025

எலியும் பூனையும் போல் விளங்கியவர் இரதி-மன்மதன் போல மாறியது எப்படி?து

 எலியும் பூனையும் போல விளங்கியவர் இரதியும் மன்மதனும் போல

மாறியதற்குக் காரணம் என்ன?


இவளோ வாலைப்பெண்(பன்னிரு வயதுப் பெண்.) பக்கத்து வீட்டில்

வாழும் இவனோ பதினான்கு வயதுச் சிறுவன்.;முரடன்.;இருவரும்

எப்பொழுதும் மோதல் போக்கை மேற்கொண்டனர்.இவன் இவளின்

கூந்தலைப் பிடித்திழுத்துத் துன்பம் தருவதும், இவள் பதிலடியாக இவனின்

தலைமுடியைப் பிடித்து ஆட்டிவிட்டு ஓடுவதும் அன்புடைய செவிலித்தாய்

இவர்களின் செயல்களைத் தடுப்பதும் வழக்கமாக நிகழ்வதுதான். ஏனென்

றால் இவர்கள் இருவரும் எப்பொழுதும் எலியும் பூனையும் போல நடந்து

கொள்வர். அடிக்கடி சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வர்.


ஆனால் இவர்கள் வளரந்து பெரியவர்கள் ஆன பிறகு(பருவ வயது அடைந்த

பிறகு) ஊழின் வலிமையால் இவர்கள் சண்டைக்குணம் மாறி ஒருவர் மற்றவர்

பால் ஈர்ப்பும் அன்பும் காட்டி நாளடைவில் காதலர்களாக மாறிவிட்டனர். எனினும்

இவர்கள் காதல் விவகாரம் மற்றவர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. இருப்

பினும் காதல்வயப்பட்ட இவள் நடத்தையில் ஐயம் கொண்ட இவள் அன்னை

இவளை  இற்செறிப்புச் செய்துவிட்டாள்.(இவள் வெளியேறிச் செல்லாவாறு வீட்

டிலேயே சிறைவைத்துவிட்டாள்). இருந்த போதிலும் இவள் கட்டுக் காவலை மீறிக்

காதலனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். 


பாலைநிலத்தில் இவள் தன் காதலனோடு சென்ற பொழுது  இவர்களைப் பார்த்த

வர்கள் மிகுந்த வியப்புக்கு உள்ளானார்கள். எலியும் பூனையும் போலச் சதா சர்வ

காலமும் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள்  இரதியும் மன்மதனும் போலக் காத

லால் கட்டுண்டு  கணவன் மனைவி ஆனமை ஊழின் வலிமையால் ஏற்பட்டதுதான்

என்று  தமக்குள் கூறிக்கொண்டனர்.


இது தொடர்பான குறுந்தொகைப் பாடலைப் பார்ப்போம்:

குறுந்தொகைப் பாடல் எண்: 229; புலவர்: மோதாசனார்.

பாலைநிலத்தில் இவர்களைக் கண்டோர் தமக்குள் கூறிக்

கொண்டது.

"இவன்இவள்  ஐம்பால்  பற்றவும்  இவள்இவன்

புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்

காதல் செவிலியர்  தவிர்ப்பவும் தவிரா(து)

ஏதில் சிறுசெரு  வுறுப மன்னோ.

நல்லைமன்(று) அம்ம! பாலே மெல்லியல்

துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்

மணமகிழ் இயற்கை  காட்டி  யோயே!"

அருஞ்சொற் பொருள்:

ஐம்பால்--ஐந்து விதமாகப் பகுக்கப்பட்ட  கூந்தல்.

ஓரி--ஆணின் தலைமுடி; பரியவும்--ஓடவும்.

ஏதில்-- ஏது இல்--காரணம் இன்றி; சிறு செரு--சிறு சண்டை

பாலே--விதியே.

ஏதில் சிறுசெரு உறுப--காரணமின்றிச் சிறு சண்டை செய்வர்.

மலர்த் துணைப் பிணையல் அன்ன இவர்--மலரைப் பிணைத்த

இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்.

மணம் மகிழ் இயற்கை காட்டியோய்--மணம் புரியும் இயல்பை

உருவாக்கினாய்.; பாலே--விதியே!

மன்ற நல்லை--நீ நிச்சயமாக நன்மையை  உடையாய்.

இச் செய்தியைத் தெரிவிக்கும் என் பாடல்கள்:

முன்னாளில் மீசைஇனும் அரும்பாத 

             இளவயது முரட்டுப்  பையன்

வன்னமுறும் அண்டையில்லச் சிறுமியுடன் 

     பலமுறையும் வம்பு செய்தான்;

அன்னவன்அச்  சிறுமியுடைக் கூந்தலினை 

             இழுத்தாட்டி  அல்லல்  தந்தான்;

பன்னரிய  சிறுமிபதி  லடியாக 

             அவன்முடியைப்  பற்றி   நைத்தாள்.


விதியின்விளை  யாட்டாலே  வளர்ந்தவுடன் 

             அவர்களுக்குள்  மெல்லக்  காதல்

உதித்திடவே பேரன்பைப் பரிமாறிப்  

              பழகினரே,  உண்மைக்  காதல்

அதிகரித்த  வேளையிலே  அன்னையவள்

              தடைசெய்ய அதனை மீறிப்

பதியகன்றே உடன்போக்கை மேற்கொண்டு 

              கொடுமைமிகு பாலை  வந்தார்.


பாலைதனைக்  கடக்கின்ற  வேளைதனில்

              அன்னவரைப்  பார்த்த  மாந்தர்

கோலமிகும் காதலர்கள் அந்நாளில் 

              சண்டையிட்ட. குறும்பை  எண்ணிக்

காலமவர் மனந்தனைநல் மாற்றமுறச் 

              செய்ததற்குக்  கார  ணம்என்?

சாலவுமே நல்லதொரு செயல்செய்தாய்

               விதியே! உன்  தகைமை  நன்றே!

Sunday, 29 June 2025

வியப்பூட்டும் பாடல்கள்.

 வியப்பூட்டும் பாடல்கள்.

"முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவார்;

அக்கண்ணற்(கு) உள்ள(து) அரைக்கண்ணே;---மிக்க

உமையாள்கண் ஒன்றரை;மற்  றூன்வேடன் கண்,ஒன்(று)

அமையுமித னாலென்(று) அறி".

பொருள்:

சிவபெருமான் முக்கண்களை யுடையவரென்று  நம் மூதாதையர்

கூறியுள்ளனர். உண்மை என்னவெனில், அக்கு(எலும்பு) அணிந்த

அப் பெருமானுக்கு அரைக்கண்ணே சொந்தம். எவ்வாறெனில்,

சிவபெருமான் தம் உடலில் சரிபாதியைத் தம் மனைவிக்குக்

கொடுத்துவிட்டதாகப் புராணம் கூறும். ஆக, உமையவளுக்கு

ஒன்றரைக் கண் சொந்தம். மேலும், வேடராகிய கண்ணப்ப

நாயனாரைச் சோதிக்கத் தம் கண்ணிலிருந்து  இரத்தத்தை

வழியவிட,, அதைப்பார்த்த கண்ணப்பர் அந்தக்கண்ணை அகற்றி

அந்த இடத்தில் தமது கண்ணைத் தோண்டி யப்பினதாகப் பெரிய

புராணம் கூறும். எனவே, ஒன்றரையும் ஒன்றும் சேர்ந்து  இரண்டரைக்

கண்கள் சிவபெருமானுக்குச் சொந்தமில்லாமற் போயின. ஆக,

அவருக்கு மிச்சம் இருப்பது அரைக்கண்ணே! அதைத்தான் பாடல்

கூறுகிறது. புலவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.அவர் கற்பனை

வியப்பூட்டுவதாகவுள்ளது.


வேறொரு வியப்பூட்டும் பாடலைப் பார்ப்போம்:

"கைத்தலம் தன்னில் பசும்பொன் வளையல் கலகலெனச்

சத்தம் ஒலித்திட நூபுரம் பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடம்செய்சம் பீசர்தம் சந்நிதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல் சுமந்து திரிந்தனளே!"

பொருள்:

கைகளில் அணிந்துள்ள புதிய தங்க வளையல்கள் கலகலவென்று

ஓசை செய்யவும், கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கிண்கிணியும்

மெதுவாய் ஓசையெழுப்பவும், தத்திமியென்று தாளத்தோடு நடனமாடு

கின்ற சம்புகேசப் பெருமானது சந்நிதிப் பெண் சாமந்திப் பூவைத்

(சா+மந்தி= செத்த குரங்கு) தலையில் சூடிக்கொண்டு திரிந்தனளே!

இந்தப் புலவரின் வார்த்தை விளையாட்டு வியப்பூட்டுகிறது.(புலவர்

பெயர் தெரியவில்லை).


அந்தகக்கவி வீரராகவ முதலியார் தானன் என்னும் வள்ளல் தமக்கு

யானையைப் பரிசாக வழங்கினதைப் போற்றிப் பாடியது:

இல்லையெனும்  சொல்லறியாச் சீகையில்வாழ்

தானனனைப்போய்  யாழ்ப்பா  ணன்யான்

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்

        பழந்தூசும். பாலி யாமல்

கொல்லநினைந் தேதனது நால்வாயைப்

பரிசென்று  கொடுத்தான்; பார்க்குள்

தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கும்

இரையெங்கே  துரப்பு வேனே!

பொருள்:

ஈயென இரந்து வருவோர்க்கு "இல்லை" என்று சொல்லத் தெரியாத

சீகை என்னும் பதியில் வாழந்துவரும் தானன் என்னும் பெயருடைய

வள்ளலிடம் போய் எனது வறுமை நிலைமையைப் பற்றிச் சொல்லி

எனக்குத் தேவையானதை நயந்து கேட்டால், தூய்மையான வெள்ளைச்

சோறும் பழைய துணியும் தராமல், என் உயிர்போக்க எண்ணி

நால்வாயாகிய தனது யானையைப் பரிசாக அளித்தான். உலகத்தில்

பசியால் துன்புறுகின்ற எனது ஒரு வாயோடு இன்னும் நால்வாய்க்கும்

உணவை எங்கே கண்டு நிரப்புவேன்?

(நால்வாய்--நாலும் வாய்--தொங்குகின்ற வாயையுடைய யானையைக்

குறிக்கும். யானைப் பரிசில் என்பது வெறும் யானையை மட்டும்  பரிசாகக்

கொடுப்பதன்று;; யானையையும் அந்த யானைக்குத் தீனி போடுவதற்கான

செலவைச் சமாளிக்கத் தேவையான  பணத்தையும் பரிசாகக் கொடுப்பது

வழக்கம்.)


பார்வை:

தனிப் பாடல் திரட்டு(1&2ஆம் பாகங்கள்)--சாரதா பதிப்பகம்.

உரையாசிரியர்: கா சுப்பிரமணிய பிள்ளை.







Saturday, 14 June 2025

தாத்தா பாட்டியைப் போற்றிடுவோம்.

 தாத்தா பாட்டியைப் போற்றுவோம்.


பிள்ளைகளை வளர்ப்பதிலே  வீட்டிலுள்ள 

       மூத்தோர்க்குப் பெரும்பங்(கு) உண்டு;

விள்ளரிய  அறம், அன்பு  நீதி, நெறி

       கடைப்பிடித்தல் வேண்டும்  என்று

கள்ளமிலாப்  பிஞ்சுளத்தில்  பதியவைத்துப்

        பின்பற்றக் கதைகள்  மூலம்

தள்ளரிய நல்லொழுக்க  வழிமுறையைக்

         காட்டிடுவர் தாத்தா பாட்டி.


காலையிலே  துயிலெழுப்பிப்  பல்துலக்கல்

         நீராடல் கடவுள் பேணல்

வேலைகளை  முறையாகச் செயத்தூண்டி

         நல்லுணவை விரும்பி  யூட்டிச்

சீலமிகு  கல்விகற்கப்  பள்ளியினுக்(கு)  

         அனுப்பிடுவர்; சீராய்க்  கற்று

மாலையிலே  மனைதிரும்பும் பிள்ளைகளை 

         எதிர்கொண்டு வரவேற்  பாரே.


அந்தியிலே  சிறிதமயம்  விளையாடச்

          செய்துபின்னர் அமர வைத்துச்

சிந்தைகளி கூர்ந்திடவே  இன்குரலில்

           பாடவைத்துச்  சிலிர்க்கச் செய்வர்.

விந்தைமிகு  கல்விகற்கத்  தூண்டிடுவர்;  

          பள்ளிதந்த  வீட்டுப் பாடம்

எந்தவிதத் பிழையுமின்றி முடிப்பதற்குத்

          துணைசெய்வர்  இன்னும்  உண்டே.


இரவுணவைப் படைக்கின்ற  வேளையிலே

          நன்னெறியை  எடுத்துச்  சொல்லும்

தருமமிகு கதைபகர்ந்து  வயிறார  

          உணச்செயவர்;  தமிழில்  நல்ல

சுருதியுடன்  இதமான  இராகத்தில்  

          தாலாட்டைச் சுகமாய்ப்  பாடி

விரைவினிலே  துயிலும்வகை  உடல்நீவித் 

           தூங்க வைப்பர்; மேன்மை  மிக்கார்.


ஒவ்வொருவர்  வாழ்வினிலும்  நற்குழவிப்  

           பருவத்தில்  உயர்ந்த  மூத்தோர்

செவ்வியதாம்  முறையினிலே வளர்ப்பதற்கு  

           நற்றுணையாய்த்  திகழ்வர்; மேலும்

ஔவியமும்  கொடுஞ்சினமும்  தீச்செயலும்  

            தவிர்ப்பீரென்(று) அறைவர்  அன்னார்;

எவ்விதத்தில்  இவர்க்குநன்றி கூறிடுவோம்? 

             கண்கண்ட  இறைவன்  தானே!