Sunday, 29 June 2025

வியப்பூட்டும் பாடல்கள்.

 வியப்பூட்டும் பாடல்கள்.

"முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவார்;

அக்கண்ணற்(கு) உள்ள(து) அரைக்கண்ணே;---மிக்க

உமையாள்கண் ஒன்றரை;மற்  றூன்வேடன் கண்,ஒன்(று)

அமையுமித னாலென்(று) அறி".

பொருள்:

சிவபெருமான் முக்கண்களை யுடையவரென்று  நம் மூதாதையர்

கூறியுள்ளனர். உண்மை என்னவெனில், அக்கு(எலும்பு) அணிந்த

அப் பெருமானுக்கு அரைக்கண்ணே சொந்தம். எவ்வாறெனில்,

சிவபெருமான் தம் உடலில் சரிபாதியைத் தம் மனைவிக்குக்

கொடுத்துவிட்டதாகப் புராணம் கூறும். ஆக, உமையவளுக்கு

ஒன்றரைக் கண் சொந்தம். மேலும், வேடராகிய கண்ணப்ப

நாயனாரைச் சோதிக்கத் தம் கண்ணிலிருந்து  இரத்தத்தை

வழியவிட,, அதைப்பார்த்த கண்ணப்பர் அந்தக்கண்ணை அகற்றி

அந்த இடத்தில் தமது கண்ணைத் தோண்டி யப்பினதாகப் பெரிய

புராணம் கூறும். எனவே, ஒன்றரையும் ஒன்றும் சேர்ந்து  இரண்டரைக்

கண்கள் சிவபெருமானுக்குச் சொந்தமில்லாமற் போயின. ஆக,

அவருக்கு மிச்சம் இருப்பது அரைக்கண்ணே! அதைத்தான் பாடல்

கூறுகிறது. புலவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.அவர் கற்பனை

வியப்பூட்டுவதாகவுள்ளது.


வேறொரு வியப்பூட்டும் பாடலைப் பார்ப்போம்:

"கைத்தலம் தன்னில் பசும்பொன் வளையல் கலகலெனச்

சத்தம் ஒலித்திட நூபுரம் பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடம்செய்சம் பீசர்தம் சந்நிதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல் சுமந்து திரிந்தனளே!"

பொருள்:

கைகளில் அணிந்துள்ள புதிய தங்க வளையல்கள் கலகலவென்று

ஓசை செய்யவும், கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கிண்கிணியும்

மெதுவாய் ஓசையெழுப்பவும், தத்திமியென்று தாளத்தோடு நடனமாடு

கின்ற சம்புகேசப் பெருமானது சந்நிதிப் பெண் சாமந்திப் பூவைத்

(சா+மந்தி= செத்த குரங்கு) தலையில் சூடிக்கொண்டு திரிந்தனளே!

இந்தப் புலவரின் வார்த்தை விளையாட்டு வியப்பூட்டுகிறது.(புலவர்

பெயர் தெரியவில்லை).


அந்தகக்கவி வீரராகவ முதலியார் தானன் என்னும் வள்ளல் தமக்கு

யானையைப் பரிசாக வழங்கினதைப் போற்றிப் பாடியது:

இல்லையெனும்  சொல்லறியாச் சீகையில்வாழ்

தானனனைப்போய்  யாழ்ப்பா  ணன்யான்

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்

        பழந்தூசும். பாலி யாமல்

கொல்லநினைந் தேதனது நால்வாயைப்

பரிசென்று  கொடுத்தான்; பார்க்குள்

தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கும்

இரையெங்கே  துரப்பு வேனே!

பொருள்:

ஈயென இரந்து வருவோர்க்கு "இல்லை" என்று சொல்லத் தெரியாத

சீகை என்னும் பதியில் வாழந்துவரும் தானன் என்னும் பெயருடைய

வள்ளலிடம் போய் எனது வறுமை நிலைமையைப் பற்றிச் சொல்லி

எனக்குத் தேவையானதை நயந்து கேட்டால், தூய்மையான வெள்ளைச்

சோறும் பழைய துணியும் தராமல், என் உயிர்போக்க எண்ணி

நால்வாயாகிய தனது யானையைப் பரிசாக அளித்தான். உலகத்தில்

பசியால் துன்புறுகின்ற எனது ஒரு வாயோடு இன்னும் நால்வாய்க்கும்

உணவை எங்கே கண்டு நிரப்புவேன்?

(நால்வாய்--நாலும் வாய்--தொங்குகின்ற வாயையுடைய யானையைக்

குறிக்கும். யானைப் பரிசில் என்பது வெறும் யானையை மட்டும்  பரிசாகக்

கொடுப்பதன்று;; யானையையும் அந்த யானைக்குத் தீனி போடுவதற்கான

செலவைச் சமாளிக்கத் தேவையான  பணத்தையும் பரிசாகக் கொடுப்பது

வழக்கம்.)


பார்வை:

தனிப் பாடல் திரட்டு(1&2ஆம் பாகங்கள்)--சாரதா பதிப்பகம்.

உரையாசிரியர்: கா சுப்பிரமணிய பிள்ளை.







Saturday, 14 June 2025

தாத்தா பாட்டியைப் போற்றிடுவோம்.

 தாத்தா பாட்டியைப் போற்றுவோம்.


பிள்ளைகளை வளர்ப்பதிலே  வீட்டிலுள்ள 

       மூத்தோர்க்குப் பெரும்பங்(கு) உண்டு;

விள்ளரிய  அறம், அன்பு  நீதி, நெறி

       கடைப்பிடித்தல் வேண்டும்  என்று

கள்ளமிலாப்  பிஞ்சுளத்தில்  பதியவைத்துப்

        பின்பற்றக் கதைகள்  மூலம்

தள்ளரிய நல்லொழுக்க  வழிமுறையைக்

         காட்டிடுவர் தாத்தா பாட்டி.


காலையிலே  துயிலெழுப்பிப்  பல்துலக்கல்

         நீராடல் கடவுள் பேணல்

வேலைகளை  முறையாகச் செயத்தூண்டி

         நல்லுணவை விரும்பி  யூட்டிச்

சீலமிகு  கல்விகற்கப்  பள்ளியினுக்(கு)  

         அனுப்பிடுவர்; சீராய்க்  கற்று

மாலையிலே  மனைதிரும்பும் பிள்ளைகளை 

         எதிர்கொண்டு வரவேற்  பாரே.


அந்தியிலே  சிறிதமயம்  விளையாடச்

          செய்துபின்னர் அமர வைத்துச்

சிந்தைகளி கூர்ந்திடவே  இன்குரலில்

           பாடவைத்துச்  சிலிர்க்கச் செய்வர்.

விந்தைமிகு  கல்விகற்கத்  தூண்டிடுவர்;  

          பள்ளிதந்த  வீட்டுப் பாடம்

எந்தவிதத் பிழையுமின்றி முடிப்பதற்குத்

          துணைசெய்வர்  இன்னும்  உண்டே.


இரவுணவைப் படைக்கின்ற  வேளையிலே

          நன்னெறியை  எடுத்துச்  சொல்லும்

தருமமிகு கதைபகர்ந்து  வயிறார  

          உணச்செயவர்;  தமிழில்  நல்ல

சுருதியுடன்  இதமான  இராகத்தில்  

          தாலாட்டைச் சுகமாய்ப்  பாடி

விரைவினிலே  துயிலும்வகை  உடல்நீவித் 

           தூங்க வைப்பர்; மேன்மை  மிக்கார்.


ஒவ்வொருவர்  வாழ்வினிலும்  நற்குழவிப்  

           பருவத்தில்  உயர்ந்த  மூத்தோர்

செவ்வியதாம்  முறையினிலே வளர்ப்பதற்கு  

           நற்றுணையாய்த்  திகழ்வர்; மேலும்

ஔவியமும்  கொடுஞ்சினமும்  தீச்செயலும்  

            தவிர்ப்பீரென்(று) அறைவர்  அன்னார்;

எவ்விதத்தில்  இவர்க்குநன்றி கூறிடுவோம்? 

             கண்கண்ட  இறைவன்  தானே!










Tuesday, 27 May 2025

மன்மதன் தன் ஐந்து கணையால் வாடினாள்.

 மன்மதன்தன் ஐந்துகணையால் வாடினாள்.


இரண்டாம் குலோத்துங்க சோழரின் அரசவையில் புலவர் பெருமக்களின்

ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் குரு

நாதரும் தலைமைப் புலவருமான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர்,

சோழ நாட்டின் ஏனைய புலவர்கள், சேர, பாண்டிய நாடுகளிலிருந்து வந்த

புலவர்கள் குழுமியிருந்தனர். வெகு தொலைவிலுள்ள ஊரிலிருந்து அப்

பொழுதுதான் வந்தடைந்த ஔவைப் பிராட்டியார்(இவர் இடைக் காலத்து

ஔவையார்--அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர் அல்லர்) தாமும் அக்

கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்ததால் குலோத்துங்கர்

கூத்தருக்கு எதிர்வரிசையில் நல்லதொரு இருக்கையில் அமரச் செய்தார்.


அவையிலிருந்த அனைவரும் ஔவையாரிடம் நலம் விசாரித்தனர். ஔவை

யாரும் தமது சுற்றுப் பயணத்தில் கண்ட மற்றும் கேட்டறிந்த செய்திகளைச்

சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது காலம் கடந்தபின் குலோத்துங்கர்"புலவர்

பெருமக்களே! தமிழாய்வைத் தொடங்குங்கள்'  என்று கூறினார். ஒவ்வொரு

புலவரும் தாங்கள் அண்மையில் இயற்றிய பாடலைச் சொல்லி அதன் பொரு

ளையும் நயத்தையும் கூறினர். இது முடிந்தவுடன் ஔவையார் கூத்தரை நோக்கி

'கவிச் சக்கரவர்த்திகளே! நான் சில முத்திரைகளைக் கைவிரல்களால் செய்து

காட்டுகிறேன். தாங்கள் அவற்றின் மெய்ப்பொருள் யாவையென விளக்குதல்

வேண்டும்" என்றார். ஒட்டக் கூத்தர் முதிய வயதினர்; எனவே செவிப் புலன்(காது)

சிறிது  வேலை செய்யாது. ஔவையார் நிபந்தனையாகச் சொன்ன மெய்ப்

பொருள் என்னும் சொல் அவருக்குக்  கேட்கவில்லை. அவையிலுள்ள அனைவரும்

ஔவையாரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஔவையார் தமது விரல்களால் ஐந்து முத்திரைகளைச் செய்து காட்டினார்.

பிறகு கூத்தரிடம் "ஐயா! பாடுக" என்றார். கூத்தர் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:

"இவ்வளவு கண்ணினாள்; இவ்வளவு சிற்றிடையாள்;

இவ்வளவு போன்ற இளமுலையாள்--இவ்வளவு

நைந்த உடலாள்; நலம்மேவ மன்மதன்தன்

ஐந்துகணை  யால்வாடி னாள்'.

குலோத்துங்கர் உட்பட  அவையிலுள்ளோர் அனைவரும்(ஔவையார் நீங்கலாக)

கைகளைத் தட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உண்மையிலையே அப்பாடல்

கருத்துச் செறிவுள்ள அகப்பொருட் பாடலாகும்.

"இவ்வளவு (முட்டைக் கண்ணும் அல்லாது இடுங்கிய கண்ணும் அல்லாது) அளவான

கண்ணையுடையவள்; இவ்வளவு சிறுத்த இடையையுடையவள்; இவ்வளவு பெருத்த

மார்பகங்களையுடையவள்; தலைவனப் பிரிந்திருக்கும் விளைவாக இவ்வளவு நைந்த

உடலையுடையவள்; தனிமையில் இருப்பதால் மன்மதனின் ஐந்து மலர் அம்புகளால்

(தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை,நீலோற்பலம்) மேனி நொந்து வாடினாள்."

ஔவையார் குறுக்கிட்டுச் சக்கரவர்த்திகளை நோக்கி "பேரரசே! கூத்தர் பெருமான்

நான் கூறிய நிபந்தனையைக் கவனிக்கத் தவறிவிட்டார். நான் சில முத்திரைகளைச்

செய்து காட்டி அவற்றின் மெய்ப்பொருள்(அறம் மற்றும் கடவுள் பற்றிய சிந்தனை)

யாவை? எனக் கேட்டிருந்தேன். அவர் சிற்றின்பப் பொருள்தரும் காதற் பாடலைப்

பாடியுள்ளார். பாடல் மிக மிக அருமை; ஆனால் மெய்ப்பொருளை  விளக்கவில்லை"

என நவின்றார். குலோத்துங்கர் தமது குருநாதரைக் கூறை கூறாமல்(குலோத்துங்கருக்கு

மட்டுமல்லாமல்  அவர் தந்தை விக்கிரம சோழருக்கும்  மகன் இரண்டாம் இராசராசனுக்கும்

கூத்தரே ஆசான் ஆவார்) ஔவையாரை விளித்து "அம்மையே! உமது முத்திரைக்கு நீவிரே

மெய்ப்பொருள் உரைத்திடுவீர்" என்று கேட்டுக் கொண்டார். ஔவையார் பாடலானார்:

"ஐயம் இடுமின்;  அறநெறியைக் கைப்பிடிமின்;

இவ்வளவே னும்மனத்தை இட்டுண்மின்--தெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்".

பொருள்:

ஏழையெளியவர்க்குப் பிச்சை இடுங்கள்;  நீதி, நேர்மை போன்ற அறநெறிகளைக்

கைக்கொள்ளுங்கள்; நீவிர் உண்பதற்குமுன் இவ்வளவேனும் அன்னத்தைப்

பிறருக்குக் கொடுத்துவிட்டு உண்ணுங்கள்;  கடவுள் ஒருவரே என்ற உண்மையை

உணருங்கள். உணர்ந்தால் ஐந்து புலன்களால் உருவாகும் வினைகள் அனைத்தும்

அற்றுவிடும்.

இந்த மெய்ப்பொருளைக் கேட்டவுடன் குலோத்துங்கர், கூத்தர் உட்பட அவையோர்

அனைவரும் வரவேற்று உவகைக் கடலில் மூழ்கினர் என்பதைச் சொல்லவும்

வேண்டுமோ? ஔவையார் தமிழர்க்குக் கிடைத்த மகா அறிஞர்.



 




Sunday, 4 May 2025

"காய்ச்சிய பாலைக் குடி போ"

 "காய்ச்சிய பாலைக் குடி, போ" என்றேன்; உடன்போக்கில் சென்றனளே.


இடைக்காலப் புலவர் ஒருவர் தனிப்பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.

அதில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். ஒரு குடும்பத்தில் ஓர்

அன்னையும் அவள் மகளும் வாழ்ந்து வருகின்றனர். மகள் வயது

பதினான்கு அல்லது பதினாறு இருக்கலாம். பருவச் செழிப்போடு

மகள் திகழ்கின்றாள். அன்னை தன் மகளை மிகவும் வாஞ்சையுடன்

பேணிப்பேணி வளர்த்துவருகின்றாள். அவள் தந்தையார் பொருளீட்ட

வெளியூர் சென்றிருக்கின்றார். எனவே, கூடுதல் அக்கறையோடும்

கவனத்தோடும் அன்னை மகளைப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறாள்.

அன்றாடம் காலையும் மாலையும் மகளுக்குப் பாலைக் காய்ச்சிக்

குடிக்கக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.


அண்மைக் காலமாக மகளுடைய நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள்

தெரிகின்றன. வேளாவேளைக்கு உண்பதில் நாட்டமில்லை. அடிக்கடி

தட்டொளி(உலோகக் கண்ணாடி)யில் முகத்தைப் பார்த்துத் திருத்திக்கொள்

கின்றாள். தோழியுடன் நெடுநேரம் எதைப்பற்றியோ உரையாடல் நிகழ்த்து

கின்றாள். பாவைகளை வைத்து விளையாடும் நேரம் சுருங்கிவிட்டது.

அன்னை இம்மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும்

மகள் மீது யாதொரு ஐயமும் ஏற்படவேயில்லை. நியாயமாக மகள் உரிய பருவம்

எய்தியதும் அன்னையின் கவனமும் கண்காணிப்பும் அதிகரித்திருத்தல் வேண்டும்.

ஆனால் மகளை இன்னும் சிறுமியாகவே அன்னை நோக்கினாள்; வளர்ந்துவரும்

பருவக் குமரி என்பதனை மறந்து விட்டாள்.


விளைவு என்னவென்றால், மகள் ஒரு தலைவனைக் கண்டு அவன்பால் மனத்தைப்

பறிகொடுத்துவிட்டாள். களவியல் காதல் என்பதனால் அன்னைக்கோ, அருகிருக்கும்

ஏனையோருக்கோ தெரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. தோழிக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், தலைவியோ அவளின் தோழியோ அறத்தொடு நின்று(களவுக் காதலை வெளிப்பட

உரைத்தல்) வெளிப்பட உரைத்தால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியவரும். கடந்த ஓரிரு

நாட்களாகத் தலைவியும் தோழியும் அடிக்கடி சந்தித்து உரையாடிவந்தனர். அரவம்(சத்தம்)

வெளியே கேட்காத வகையினில் கமுக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்னை யாதொன்றும்

அறியாமல் தன் இயல்புப் படி வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். வழக்கம்போல, மகளிடம்

காலை மாலை பாலைக் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துவந்தாள். குறிப்பிட்ட நாளும் வந்தது.

அன்று முழுவதுமே தலைவியும் தோழியும் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்பட்டனர். அன்று

மாலை(முன் இரவு) அன்னை மகளிடம் "காய்ச்சிய பாலைக் குடி போ" என்று கூறினாள்.

காய்ச்சிய பாலை ஒரு கலத்தில் வைத்துள்ளேன். அங்குபோய் அதனைக் குடி" என்னும்

பொருள்படக் கூறினாள். சிறிது நேரம் நகர்ந்தது. அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்னை தன் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல்

துடித்துப் போய்விட்டாள்.  எங்கே போயிருப்பாள்? என்ன நேர்ந்தது? என்று அறியாமல்

குழம்பினாள். தோழியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் தன்மகளைப்பற்றிய விவரம்

கேட்டாள். தோழி மென்று விழுங்கினாள். பின் தனக்குத் தெரிந்த தகவல் அனைத்தையும்

வெளிப்படுத்தி விட்டாள். அன்னைக்கு மகள் தன் தலைவனுடன் உடன்போக்கு 

மேற்கொண்டு சென்றுவிட்டாள் என்னும் உண்மை  புரிந்தது. " காய்ச்சிய பாலைக் குடி போ"

என்று அவள் உடல் நலத்தைப் பேணும் வழி சொன்னேன். அவள் வேறு விதமாகப் பொருள்

கொண்டுவிட்டாள். "பாலை நிலத்துக்கு உடன்போக்கில் தலைவனுடன் குடி போ" என்று

தவறான அர்த்தம் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவிட்டாள்" என்று

புலம்பினாள். அவள் புலம்பிய பாடல் வருமாறு:

"பூச்சிலைக் கன்னல்கைச் சேடா சலேந்த்ரன் பொருப்பிடத்தே

காய்ச்சிய பாலைக் குடிபோவென் றேனந்தக் காரிகையும்

பேச்சிலெத் துக்கள்ளி பின்கைகை ராமற்கு முன்சொன்னதா

வாய்ச்சுதென் றேநடந் தாள்பாலை யான வனந்தனிலே!".

பொருள்:

கரும்பாகிய வில்லையும் கை நிறைந்த பூவையுமுடைய மன்மதன் போன்ற

சேடாசலேந்திரனுடைய(சேஷாசலேந்திரனுடைய) மலையிடத்தே, காய்ச்சிய

பாலைக் குடிக்கும்படி போகச் சொன்னேன்; அந்தப் பெண்ணாகிய என்மகளும்,

சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருள் வேறு கொண்டு ஏமாற்றுகின்ற திருட்டுக்

குணமுடையவளாதலால், கைகேசி இராமனுக்குக் காட்டுக்குப் போகும்படி

சொன்னதுபோலத் தனக்கும் என் பேச்சு பொருத்தமானது என்றெண்ணிப் பாலை யான

வனந்தனிலே தலைவன் பின் சென்றுவிட்டாள்.


சங்ககாலத்தில் உடன்போக்கு செல்வது காதலில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.

சமுகம் இதனைக் காதலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர்

இதனைக் "கொண்டுதலைக் கழிதல்" என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தலைவன்

தலைவியை அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்துதர மறுக்கும் பொழுது

தோழியின் உதவியால் தலைவியை மணந்துகொள்வதற்காகத் தன்னூருக்குக்

கொண்டு செல்லல். இதில் தலைக் கழிவு என்பது தலைமையாகிய  செலவு எனப்

பொருள்படும். சுருங்கக் கூறின், கொண்டுதலைக் கழிதலாவது, உடன் கொண்டு

பெயர்தலாகும். தற்காலத்தில், உடன்போக்கு சமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதோ?

என்று எண்ணத் தூண்டுகிறது. ஒருவித வெறுப்புடன் கொச்சையாக. "ஓடிப்   போனவள்/

ஓடி வந்தவள் என்ற கொச்சையான பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

தொல்காப்பியர்க்கும்  முன்பே  பெரியோர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று

சிறப்பிழந்து நோக்கப்படுகிறது.


பார்வை: தனிப்பாடல் திரட்டு 2 ஆம் பாகம்-- உரையாசிரியர் கா.சு.பிள்ளை,

                  வர்த்தமானன் பதிப்பகம்.


Saturday, 12 April 2025

மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.

 மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.


தற்காலத்தில் குடியரசு ஆட்சி நிலவுகிறது. நூற்று நாற்பது

கோடி மக்களும் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு

ஒவ்வாதது. ஆகவே மக்கள் தம் சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிய

உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்.

அவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பழங்காலத்தில்

மன்னரை ஆட்சியில் அமர்த்தினர்.. மன்னர் நாட்டு மக்களின்

உயிருக்கும் உடைமைக்கும் நாட்டு வளங்களுக்கும் பாதுகாவலர்

என்ற நிலையில் மன்னருக்கு முதன்மை உரிமையும் அதிகாரமும்

தரப்பட்டது. புறநானூறு 186ஆம் பாடலில்  மோசிகீரனார் என்ற

புலவர் நெல்லும் உயிராகாது; நீரும் உயிராகாது. விரிந்த இந்த

நாடு ஆள்பவனை(மன்னனை) உயிராகக் கொண்டது. அதனால்

"மன்னனே நாட்டின் உயிர்" என்பதை அறிந்து கொள்ளுதல் வெல்லும்

படையுடைய ஆள்வோரது(மன்னர்) கடமையாகும் என்று பாடியுள்ளார்.

பாடல் பின்வருமாறு:

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யானுயிர் என்பது அறிகை

வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே".

(உயிர்த்து=உயிரை உடையது; மலர் தலை= விரிந்த இடம்).


செவ்விய ஆட்சி செய்யும் மன்னரைத் தெய்வத்துக்கு அடுத்த

நிலையில் உயர்வாக மக்கள் கருதினர். சங்க இலக்கியங்களில்

மன்னர் புகழ் ஆங்காங்கே பேசப்படுகிறது. சாதாரணமாகப்

பாடும் பொழுதிலும் மன்னரைப் போற்றிவிட்டுத்தான் மேற்கொண்டு

பாடுவதை மரபாகக் கொண்டனர். சிலம்பி என்னும் பெண் தன்னைப்

பற்றிப் பாடுமாறு புலவர் பெருமான் கம்பரைக் கேட்டுக் கொண்டதாகவும்

அவர் ஆயிரம்பணம் கேட்டதாகவும் அப்பெண் ஐந்நூறு பணம் தந்ததாகவும்

கம்பர் பாதிப் பட்டே பாடியதாகவும்  உலவும் ஒரு கதை வழக்கிலுண்டு.(இது வெறும்

கதைதான். உண்மையாக நிகழ்ந்தது என்று கூற யாதொரு ஆதாரமும் இல்லை).

அந்தப் பாதிப் பாடலிலும் காவிரியையும், சோழமன்னரையும், சோழ நாட்டையும்

குறிப்பிட்டாரே யன்றிப் பணம் கொடுத்த சிலம்பியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

மீதிப்பணம் வந்தபிறகு மீதிப்பாடலைப் பாடலாம்; அப்போது சிலம்பியைக் குறிப்பிட்டு

வாழ்த்தலாம் என்று எண்ணியிருந்தார். நல்லவேளையாக அப்பாதிப் பாடலை

அவ்வீட்டுச் சுவரில் எழுதி விட்டுச் சென்றிருந்தார். சில நாட்கள் கழிந்தபின்னர்

அவ்வூருக்கு வந்த ஔவையார் நடந்தவற்றை அறிந்து மீதிப்பாடலைப் பாடி

நிறைவு செய்தார் என்பது கதை.(...............................................பெண்ணாவாள்

அம்பொன் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொன் சிலம்பே சிலம்பு). (அரவிந்தம்=தாமரை). இதுதான் மீதிப் பாடல். இதற்கு

அன்பளிப்பாக அவர் குடிப்பதற்குக் கூழைப் பெற்றுக்கொண்டதாகக் கதை. 


இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பழங்காலத்தில்  ஒரு காவியமோ,

பாடலோ படைக்கும் முன்னர் அந்நாட்டையும் மன்னனையும் வேறு சிறப்பு இருப்பின்

அதனையும் பாடிய பிறகே தாம் படைக்க நினைத்த நூலைப் புலவர் தொடங்குவர்.

இது புலவர்கள் பின்பற்றிய மரபு.  புலவரல்லாத ஏனையோர் தமது மார்பிலோ

தம் குழந்தைகள் மார்பிலோ மன்னரது பெயர்களை எழுதிக் கொள்வர். இந்த

வழக்கத்தைக் கீழ்க்கண்ட பாடல் விவரிக்கிறது.


அந்நாளில் அரசகுலத்துப் பெண்டிர் தமக்குக் குழந்தைகள்

பிறக்கும் காலத்தில்  அக்குழந்தை ஆண்குழந்தை என்றால்

பெருமகிழ்ச்சி அடைவது இயல்பு. ஏனென்றால் அரசாட்சி

புரியத் தேவையான அடுத்த தலைமுறை உருவானதால்

ஏற்பட்ட பேருவகை காரணமாகும். மேலும் அக்குழந்தையின்

மார்பு அகன்று விரிந்து பரந்து தென்பட்டால் களிக்கடலில்

மூழ்கித் திளைத்திடுவர். ஏனென்றால் விரிந்து பரந்த அகன்ற

மார்பு வீரத் தோற்றத்தை வெளிக்காட்டும். ஆனால் கம்பர்

பெருமான் வேறொரு காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.


இந்நாளில் மக்கள் தமக்கு மிகவும் பிடித்தமான தலைவர்,

நடிகர் முதலானோர் படங்களை மார்பிலும் தோளிலும் பச்சை

குத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். முன்னாளிலும் இது

போல மக்கள் தம் மன்னரின் பெயர், பட்டப் பெயர் முதலான

வற்றை மார்பில் எழுதிக் கொள்வர். ஒவ்வொரு மன்னருக்கும்

இயற்பெயர், விருதுப் பெயர் எல்லாம் சேர்த்தால், எண்ணிக்கை

ஏழெட்டு தேறும். அவையனைத்தையும் தத்தம் குழந்தைகளின்

மார்பில் எழுதிக் கொள்ளத் தோதாக மார்பகலம் இருப்பதைக்

கண்டு பெற்ற தாய்மார் மகிழ்ந்து போவதாகக் கம்பர் பாடியுள்

ளார்.அரசகுலத்தில் பிறவாத மக்களே தம் குழந்தைதளின்

மார்பகலம் கண்டு மகிழும் போது, அரச குலத்துப் பெண்டிர்

இவ்வாறு மகிழ்வது இயல்புதானே! இனி, பாடலைப் பார்ப்போம்:

"பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்

மார்பகலங் கண்டு மகிழ்வரே---போர்புரிய

வல்லான் அகளங்கன் வாணன் திருநாமம்

எல்லாம் எழுதலாம் என்று."

அருஞ்சொற் பொருள்:

மதலை-மகன், குழந்தை; அகளங்கன்= அ+களங்கன்=களங்கம்

இல்லாதவன். வாணன்- ஒரு குறுநில மன்னன்.


மேலும் பொதுமக்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும்

தம் மன்னரின் கொடியைப் பற்றியும் தேரைப் பற்றியும் இதர சிறப்பைப்

பற்றியும்  பாடிக்கொண்டே அச் செயலைச் செய்வர். முத்தொள்ளாயிரம்

என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் அரண்மனைப் பெண்டிர்

பாண்டியமன்னனுக்குரிய குளியலுக்கான சுண்ணப்பொடி(நறுமணப்

பொடி) இடிக்கும் பொழுது பாண்டியனின் கொடி முதலானவற்றைப்

பாடிக்கொண்டே இடித்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் பின்வருமாறு:

"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்

முடிபாடி முத்தாரம் பாடி"ச் சுண்ணம் இடித்தனர்.

இவ்வாறு பழங்கால மக்களின் வாழ்க்கையில் மன்னரைப் பற்றிய

உயர்வான சிந்தனை, அவர் நலத்தைப் பற்றிய கரிசனம் ஒன்றிக்

கலந்திருந்ததை அறியலாம்.

Tuesday, 25 March 2025

புதுமைப்பெண்.

புதுமைப் பெண்  விதித்த நிபந்தனை


ஓர் அழகிய நகரத்தில்  ஓவியக் கண்

காட்சி நடைபெறுகின்றது.  அக்காட்சிக்கு

மனைவியை  அழைத்துச்  செல்ல  எண்ணு

கின்றார், அக்குடும்பத்தின் தலைவர். கணவன்

மனைவிக்கிடையே கீழ்க்கண்டவாறு

உரையாடல் நடைபெறுகின்றது.:

கணவர்: நகரில் நடைபெறும்  ஓவியக்

                 கண்காட்சிக்குச் சென்று

                 வருவோமா?

மனைவி: போய் வருவோம்; ஆனால்

                   ஒரு நிபந்தனை.

கண.: என்ன நிபந்தனை?

மனை:ஆண்கள் படங்களை நான்

              பார்க்கமாட்டேன்.

கண.: அப்படியா? ஏன் இந்தப் பழக்கம?

மனை: தமிழ்ப்பண்பாடு அது தானே!

கண.: அதுசரி; அதுசரி; நீ அப்படியே

             செய்துகொள்.

மனை: இன்னொரு நிபந்தனையும்

               உண்டு்.

கண.:இன்னொரு நிபந்தனை என்ன?

மனை:பெண்கள் படங்களை  நீங்கள்

              பார்வையிட்டால் நான் மனம்

              பொறுக்கமாட்டேன்.

இந்த விநோதமான நிபந்தனைகளை

ஏற்றுக் கொண்டால் கண்காட்சிக்குச்

சென்று பார்வையிடுவதால் எந்த

மகிழ்ச்சியும் ஏற்படாது. இதைத்தான்

கீழ்க்கண்ட கவிதை  மறைமுகமாக

எடுத்துரைக்கிறது.

பாடல்:

ஓவியர்நீள் சுவரெழுதும்  ஓவியத்தைக்

கண்ணுறுவான்

தேவியையான்  அழைத்திடஆண்

        சித்திரமேல்  நான்பாரேன்;

பாவையர்தம்  உருவெனில்நீர்  பார்க்க

மனம்  பொறேனென்றாள்;

காவிவிழி  மங்கையிவள்  கற்புவெற்பின்

        வற்புளதால்.

இந்தக்  கவிதையை  என் பள்ளிநாட்க

ளில்  படித்திருக்கிறேன்.  ஆசிரியர்

யாரென்று  நினைவுக்கு வரவில்லை.

அநேகமாக, இயற்றியவர்  பாரதிதாசன்

அவர்களாக  இருக்கலாம்.ஏனென்றால்,

"கற்பு  நிலையென்று சொல்லவந்தால்

இரு கட்சிக்கும் அஃதைப்  பொதுவில்

வைப்போம்" (ஆண்,பெண்  இருவருக்கும்

கற்பு  பொதுவானது) என்று  முழங்கிய

மகாகவி பாரதியாரின்  சீடர்  தானே

பாரதிதாசன்.  என் கருத்துப்படி விளை

யாட்டாகப்  பாடப்பட்ட  கவிதை போலத்

தோன்றினாலும், அதன் கருப்பொருளாக

ஆண்,பெண்  இருவரும்  கற்பு  உட்பட

அனைத்து  விடயங்களிலும்  சரிநிகர்

சமானம்  என்பது வலியுறுத்தப்  பட்டுள்

ளது.  இனி,  வேறு ஒரு  சுவையான கவிதையைப்

பார்ப்போம்:

இரண்டு தமிழ் அறிஞர்கள்  பலதரப்பட்ட

விடயங்கள்  குறித்துத்  தங்களுக்குள்

உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.  வெகு

நேரம்  கடந்த  காரணத்தால்  ஒருவர்  மற்ற

வரிடம்  விடைபெற்றுக்  கொண்டு  தமது

இல்லத்துக்கு  வந்து  சேர்கிறார்.  வீட்டுக்கு

வந்த போதும்  அவர்  மனம்  அன்று  நிகழ்ந்த

சந்திப்பு  குறித்தும்,  நடைபெற்ற  உரையாடல்

குறித்தும்  திரும்பத் திரும்ப  எண்ணி மகிழ்ந்

தது.  உடனே ஒரு  கவிதை  உருவாயிற்று.:

"சூர்வந்து  வணங்கும்  மேன்மைச்

     சுப்பிர  மணிய  தேவே!

நேர்வந்து  நின்னைக்  கண்டு

    நேற்றிராத்  திரியே  மீண்டேன்;

ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

   உளம்வந்து  சேரக்  காணேன்;

ஆர்வந்து  சொலினும்  கேளேன்;

  அதனையிங்(கு)  அனுப்பு  வாயே!'

என்ன  அருமையான  கவிதை!

" ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

     உளம்வந்து  சேரக்  காணேன்;"

சொற்கட்டு, ஓசைநயம், கருத்துச்  செறிவு

மிக  மிக  நேர்த்தியாக  அமைந்துள்ளன.

கவிதையைப்  பாடியவர்  மாயூரம்(தற்போது

மயிலாடுதுறை) முன்சீஃப்  வேதநாயகம்பிள்ளை

அவர்கள்.  பாடப்பட்டவர்: திருவாவடுதுறை

ஆதீனகர்த்தர்  அவர்கள்.  இருபெரும்  தமிழ்

அறிஞர்களும்  மறைந்துவிட்டனர்.  ஆனால்

இந்தக்  கவிதை  என்றென்றும்  நினைவில்

நிற்கும்.

   




Tuesday, 4 March 2025

சித்திர கவி.

 சித்திர கவி.


"கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால"

என்பது தண்டியலங்காரச் சூத்திரம் ஆகும். அக்கரச் சுதகமும்

என உம்மையில் முடிந்திருப்பதால் வேறு சிலவும் வழக்கத்தில்

உள்ளன என உணரலாம். அவையாவன: நிரோட்டம், ஒற்றுப்

பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை,

முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, இரத பந்தம், பிறிதுபடு

பாட்டு போன்றவை. இவை வியக்கவைக்கும் கவிகள். இவற்றை

இயற்றுவதும் கடினம்; புரிந்து கொள்வதும் கடினம். இவற்றை

மிறைக்கவிகள் என்றும் அழைப்பர். தற்காலத்தில் இவ்வகைக்

கவிகளைப் படைத்தல் மிக மிக அரிதாகிவிட்டது.  சித்திர கவியில்,

மாத்திரைச் சுருக்கம் மற்றும் மாத்திரை வருத்தனை வகைகளைப்

பார்ப்போம்.


மாத்திரைச் சுருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைத்தரும்

சொல்லானது, ஒரு மாத்திரையைக் குறைத்தால் வேறொரு பொருளை

வெளிப்படுத்தும் சொல்லாக மாறும் நிலை. மாத்திரை என்பது எழுத்தை

ஒலிக்கும் கால அளவு. எடுத்துக்காட்டாக,  நெட்டெழுத்தை இரண்டு மாத்திரை

அளவு ஒலிக்கின்றோம். அதன் மாத்திரையைக் குறைத்து விட்டால், அதாவது,

குற்றெழுத்தாக மாற்றிவிட்டால் அச்சொல் வேறு ஒரு பொருளைத் தரும்.

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்;

நீர்நிலையோர் புள்ளி பெற,நெருப்பாம்---சீரளவும்

காட்டொன்(று) ஒழிப்ப இசையாம் அதனளவில்

மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு".

நேரிழையார்--பெண்கள்; இவர்களின் கூந்தல் ஓதி என இலக்கியம்

இயம்பும். ஓதி என்ற சொல்லில் ஒரு மாத்திரையைக் குறைத்தால் ஒதி என

ஆகும்.. ஒதி என்னும் சொல் ஒதிய மரத்தைக் குறிக்கும்,; நீர்நிலை--ஏரி. இதில்

ஒரு மாத்திரையைக் குறைக்க எரி என்று வரும். எரி என்பது நெருப்பைக்

குறிக்கும்; காட்டைக் குறிக்கும் சொல் காந்தாரம். இதில் ஒரு மாத்திரையைக்

குறைத்தால் கந்தாரம் என்று வரும். இது ஒரு இராகத்தை(பண்)க் குறிக்கும்.

இதில் மீண்டும் ஒரு மாத்திரையைக் குறைத்தால் கந்தரம் என்று வரும். இது

மிடறு என இலக்கியம் சொல்லும் கழுத்தைக் குறிக்கும்.(பழங்காலத்தில் எழுத்து

வரிவடிவம் முழு வளர்ச்சியுற்ற  நிலை பெறாமல் இருந்தது. நெட்டெழுத்து,

குற்றெழுத்து வேறுபாட்டை உணர்த்த எ, ஒ போன்ற உயிரெழுத்து மேலேயும்

புள்ளிவைத்தல் கடைப்பிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் உருவான நூல் இது.

எனவே நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமெனவும், 

நீர்நிலையோர் புள்ளி பெற நெருப்பாம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்து 'ஒ' என்ற நெட்டெழுத்தையும் 'எ' என்ற நெட்டெழுத்தையும்

குற்றெழுத்தாக்க அவற்றின் மேல் புள்ளிவைத்தல் என்னும் அன்றைய

வழக்கத்தைப் பாடல் தெரிவிக்கிறது.)


இனி, மாத்திரை வருத்தனை என்ன எனப் பார்ப்போம். மாத்திரை வருத்தனை,

மாத்திரைச் சுருக்கத்துக்கு நேர் எதிரானது. ஒரு குறிப்பிட்ட பொருள்தரும் ஒரு

சொல்லின் மாத்திரையை அதிகரித்தால் வேறு பொருளைத் தரும் சொல்லாக

மாறிவிடும். 

"அள(பு)ஒன்(று) ஏறிய வண்டதின் ஆர்ப்பினால்

அள(பு)ஒன்(று) ஏறிய மண்அதிர்ந்(து) உக்குமால்;

அள(பு)ஒன்(று) ஏறிய பாடல் அருஞ்சுனை

அள(பு)ஒன்(று) ஏறழ(கு) ஊடலைந்(து) ஆடுமால்".

அளி என்னும் சொல் வண்டு என்னும் பொருள்தரும். அளபு ஏறிய வண்டு அதாவது

மாத்திரை அதிகரித்த அளி ஆளிஎன்ற சொல்லாகும். தரை என்னும் சொல் மண்ணைக்

குறிக்கும். அளபேறிய மண் அதாவது மாத்திரை அதிகரித்த தரை தாரை என்ற சொல்லாகும். பாடல் என்ற சொல் கவியைக் குறிக்கும். அளபேறிய கவி காவி என்ற சொல்லாகும்.

வனப்பு என்ற சொல் அழகு என்ற பொருளைத் தரும். அளபேறிய 

அழகு அதாவது மாத்திரை அதிகரித்த வனப்பு வானப்பு என்ற சொல்லாகும். இந்தப் பாடல்

களவுக் காதலில் நற்றாயிரங்கல் துறையில் அமைந்துள்ளது. தலைவி ஒருத்தி தலைவனு

டன் உடன் போக்கு சென்றதையடுத்துப் பெற்ற தாய் புலம்புவதைச் சொல்வது. "என் மகள்

காட்டு வழியில் செல்லும் பொழுது ஆளி(யாளி என்னும் விலங்கு) ஆர்ப்பரிப்பதால் மண்

அதிர்ந்து அச்சுறுத்தும். அதனால் தலைவியின் காவி(குவளை) மலர் போன்ற கண்கள்

கண்ணீர்ச் சுனையில் மூழ்கியது போலத் தோற்றம்தரும். அதாவது யாளியால் ஏற்பட்ட

அச்சத்தால் கண்ணீர்த் தாரைகள் மார்பின்மேல் சொரியும்.

(வானப்பு=வான்+அப்பு=வானத்துக் கங்கை)


பார்வை:'தண்டி யலங்காரம்' -- திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழக வெளியீடு.