மன்மதன்தன் ஐந்துகணையால் வாடினாள்.
இரண்டாம் குலோத்துங்க சோழரின் அரசவையில் புலவர் பெருமக்களின்
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் குரு
நாதரும் தலைமைப் புலவருமான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர்,
சோழ நாட்டின் ஏனைய புலவர்கள், சேர, பாண்டிய நாடுகளிலிருந்து வந்த
புலவர்கள் குழுமியிருந்தனர். வெகு தொலைவிலுள்ள ஊரிலிருந்து அப்
பொழுதுதான் வந்தடைந்த ஔவைப் பிராட்டியார்(இவர் இடைக் காலத்து
ஔவையார்--அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர் அல்லர்) தாமும் அக்
கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்ததால் குலோத்துங்கர்
கூத்தருக்கு எதிர்வரிசையில் நல்லதொரு இருக்கையில் அமரச் செய்தார்.
அவையிலிருந்த அனைவரும் ஔவையாரிடம் நலம் விசாரித்தனர். ஔவை
யாரும் தமது சுற்றுப் பயணத்தில் கண்ட மற்றும் கேட்டறிந்த செய்திகளைச்
சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது காலம் கடந்தபின் குலோத்துங்கர்"புலவர்
பெருமக்களே! தமிழாய்வைத் தொடங்குங்கள்' என்று கூறினார். ஒவ்வொரு
புலவரும் தாங்கள் அண்மையில் இயற்றிய பாடலைச் சொல்லி அதன் பொரு
ளையும் நயத்தையும் கூறினர். இது முடிந்தவுடன் ஔவையார் கூத்தரை நோக்கி
'கவிச் சக்கரவர்த்திகளே! நான் சில முத்திரைகளைக் கைவிரல்களால் செய்து
காட்டுகிறேன். தாங்கள் அவற்றின் மெய்ப்பொருள் யாவையென விளக்குதல்
வேண்டும்" என்றார். ஒட்டக் கூத்தர் முதிய வயதினர்; எனவே செவிப் புலன்(காது)
சிறிது வேலை செய்யாது. ஔவையார் நிபந்தனையாகச் சொன்ன மெய்ப்
பொருள் என்னும் சொல் அவருக்குக் கேட்கவில்லை. அவையிலுள்ள அனைவரும்
ஔவையாரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஔவையார் தமது விரல்களால் ஐந்து முத்திரைகளைச் செய்து காட்டினார்.
பிறகு கூத்தரிடம் "ஐயா! பாடுக" என்றார். கூத்தர் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:
"இவ்வளவு கண்ணினாள்; இவ்வளவு சிற்றிடையாள்;
இவ்வளவு போன்ற இளமுலையாள்--இவ்வளவு
நைந்த உடலாள்; நலம்மேவ மன்மதன்தன்
ஐந்துகணை யால்வாடி னாள்'.
குலோத்துங்கர் உட்பட அவையிலுள்ளோர் அனைவரும்(ஔவையார் நீங்கலாக)
கைகளைத் தட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உண்மையிலையே அப்பாடல்
கருத்துச் செறிவுள்ள அகப்பொருட் பாடலாகும்.
"இவ்வளவு (முட்டைக் கண்ணும் அல்லாது இடுங்கிய கண்ணும் அல்லாது) அளவான
கண்ணையுடையவள்; இவ்வளவு சிறுத்த இடையையுடையவள்; இவ்வளவு பெருத்த
மார்பகங்களையுடையவள்; தலைவனப் பிரிந்திருக்கும் விளைவாக இவ்வளவு நைந்த
உடலையுடையவள்; தனிமையில் இருப்பதால் மன்மதனின் ஐந்து மலர் அம்புகளால்
(தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை,நீலோற்பலம்) மேனி நொந்து வாடினாள்."
ஔவையார் குறுக்கிட்டுச் சக்கரவர்த்திகளை நோக்கி "பேரரசே! கூத்தர் பெருமான்
நான் கூறிய நிபந்தனையைக் கவனிக்கத் தவறிவிட்டார். நான் சில முத்திரைகளைச்
செய்து காட்டி அவற்றின் மெய்ப்பொருள்(அறம் மற்றும் கடவுள் பற்றிய சிந்தனை)
யாவை? எனக் கேட்டிருந்தேன். அவர் சிற்றின்பப் பொருள்தரும் காதற் பாடலைப்
பாடியுள்ளார். பாடல் மிக மிக அருமை; ஆனால் மெய்ப்பொருளை விளக்கவில்லை"
என நவின்றார். குலோத்துங்கர் தமது குருநாதரைக் கூறை கூறாமல்(குலோத்துங்கருக்கு
மட்டுமல்லாமல் அவர் தந்தை விக்கிரம சோழருக்கும் மகன் இரண்டாம் இராசராசனுக்கும்
கூத்தரே ஆசான் ஆவார்) ஔவையாரை விளித்து "அம்மையே! உமது முத்திரைக்கு நீவிரே
மெய்ப்பொருள் உரைத்திடுவீர்" என்று கேட்டுக் கொண்டார். ஔவையார் பாடலானார்:
"ஐயம் இடுமின்; அறநெறியைக் கைப்பிடிமின்;
இவ்வளவே னும்மனத்தை இட்டுண்மின்--தெய்வம்
ஒருவனே யென்ன உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்".
பொருள்:
ஏழையெளியவர்க்குப் பிச்சை இடுங்கள்; நீதி, நேர்மை போன்ற அறநெறிகளைக்
கைக்கொள்ளுங்கள்; நீவிர் உண்பதற்குமுன் இவ்வளவேனும் அன்னத்தைப்
பிறருக்குக் கொடுத்துவிட்டு உண்ணுங்கள்; கடவுள் ஒருவரே என்ற உண்மையை
உணருங்கள். உணர்ந்தால் ஐந்து புலன்களால் உருவாகும் வினைகள் அனைத்தும்
அற்றுவிடும்.
இந்த மெய்ப்பொருளைக் கேட்டவுடன் குலோத்துங்கர், கூத்தர் உட்பட அவையோர்
அனைவரும் வரவேற்று உவகைக் கடலில் மூழ்கினர் என்பதைச் சொல்லவும்
வேண்டுமோ? ஔவையார் தமிழர்க்குக் கிடைத்த மகா அறிஞர்.