Saturday, 28 April 2018

விரைவுணவு வேண்டாம் ( NO FASTFOOD)


 ஒட்சு  பீசா  பர்கரின்னும்
       உடலைக்  கெடுக்கும்  பரோட்டாவாம்;
ஒட்டும்  பசைபோல்  நூடுல்சாம்;
ஒளிரும்  மிளிரும்  வண்ணவண்ணக்
காட்சிக்  கினிய  பணடங்கள்;
        கடையில்  கிடைக்கும்;  உடல்நலமோ
        கன்னா  பின்னா  எனக்கெடுமே;
        காலன்  தன்னை  வலிந்தழைக்கும்;
மீட்சி  செய்ய  முடியாத
        நோய்கள்  எல்லாம்  அணுகிடுமே;
        விழித்துக்  கொள்வீர்  பெருமக்காள்!
        விலக்கு  வீரே  விரைவுணவை(fast food)
ஆட்சி  நடத்தும்  பெரியோரே!
அல்லல்  நிறைந்த  இதைப்பற்றி
அலசி  ஆய்ந்து  குறும்படமாய்
தமிழ்நா  டெல்லாம்  வெளியிடுவீர்.

விரைவுணவால்  கொழுப்புமிகும்;  சர்க்கரைநோய்  தலையெடுக்கும்;
       விரைந்து  கொல்லும்
இருதயநோய்  தோன்றிடுமே;நோயெதிர்ப்பு  சக்திகுன்றும்;
        இன்னும்  சொல்வேன்;
தரமான  தசைநாடி  நரம்பெல்லாம்  தளர்ந்திடுமே;
        சருமம்  வாடும்;
சிரம்முதலாய்  பாதம்வரை  உடலைநன்கு  பேணிடுவோம்;
       சிந்திப்  பீரே!

ஏனிந்த  உணவுகளை  வேண்டாவென்  றுரைக்கின்றீர்?
        என்று  கேட்டால்
தேனொத்த  சுவைநல்கும்;  அதிலுள்ள  வேதியியல்
        சேர்மா  னங்கள்
ஊனத்தைச்  செய்துவிடும்;  சுவைமணம்நல்  நிறம்,கெட்டுப்
        போகாத்  தன்மை
ஆனவெல்லாம்  உருவாகும்;  என்றாலும்  உடல்நலத்தை
        அழிக்கும்  உண்மை.

அவரவர்கள்  மரபுவழி  உணவுகளை  உண்டுவந்தால்
அல்லல்  இல்லை;
கவர்ச்சிகரத்  தோற்றமுடை  விரைவுணவை  உடல்மறுத்துக்
         கலகம்  செய்யும்;
சுவைஇட்லி, இடியாப்பம், தோசை,களி, உப்புமா,
         அடை,பிட்  டப்பம்
இவைகளையே  உண்டிடுவோம்; சிறுதான்யம்  சமைத்திடுவோம்;
          என்றும்  நன்மை.

நீராவி  தனில்வேக  வைத்தெடுக்கும்  இடியாப்பம்
           இட்லி  பிட்டு
சீரான  கொழுக்கட்டை  முதலான  உணவுகளைத்
            தினமும்  உண்டால்
யாராலும்  செரிமானம்  செயமுடியும்  கோளாறென்
             றெதுவும்  இல்லை;
நேரான  நம்உணவே  நம்உடலுக்  கொத்துவரும்;

             நினைவிற்  கொள்வீர்.

மணமூட்ட,  நிறமூட்ட,  கெடாதிருக்க, சுவைகூட்ட
            வணிக  நோக்கில்
உணவுகளில்  கெடுதிசெயும்  சேர்மானம்  தனைக்கலந்து
            விற்கின்  றாரே;
பணமொன்றே  குறிக்கோளாய்க்  கொண்டுபெரும்  நிறுவனங்கள்
            படைக்கும்  நல்ல
குணங்களற்ற  நாகரிக  உணவுகளை  விலக்கிடுவோம்
            குறித்துக்  கொள்வீர்.

சாமை,திணை,  கேழ்வரகு,  சோளம்,கம்பு,  வரகரிசி
            சத்து  மிக்க
காமர்சிறு  தானியங்கள்  இம்மண்ணில்  உள்ளனவே;
            கருத்தில்  கொண்டு
நாமவற்றைப்  பயன்படுத்தி நலம்பெறலாம்;  சர்க்கரையால்
            நலிய  வேண்டா;
பாமரரும்  படித்தோரும்  மரபுவழி  உணவைப்பின்
            பற்று  வோமே.










No comments:

Post a Comment