Tuesday, 5 June 2018

சில சுவையான தனிப்பாடல்கள்

         தனிப்பாடல்  என்பது  குறிப்பிட்ட  காவியத்திலோ
கவிதைத்   தொகுப்பிலோ  சேராத  பாடல்கள  ஆகும்.
இந்தச்  சூழ்நிலையில்  இந்தக்  கவிஞரால்   இன்னார்
மீது  பாடப்பட்டவை   என  உறுதியாகச்   சொல்ல   முடியா
விட்டாலும்  காலங்காலமாகச்  செவிவழியாக  வரும்  செய்தி
களைக்கொண்டு  இன்னாரால்  இந்தச்  சூழ்நலையில்
இன்னார்மீது  பாடப்பட்டவை  என்று  சொல்லிவருகிறோம்.
தனிப்பாடல்கள்  பாடியவர்களில்  காளமேகப்புலவர்,
இரட்டைப்புலவர்கள்,  படிக்காசுப்பலவர்  முதலானவர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள்.  காவியம்  பாடிய  பெரும்  புலவர்களா
கிய  கம்பர்,  ஒட்டக்கூத்தர்,  புகழேந்திப்புலவர்  முதலியோர்
பெயர்களிலும்  சிலபல  பாடல்கள்  உலவுகின்றன.  இவை
அறிஞர்  பெருமக்களால்  முழுஅளவில்  ஏற்றுக்கொள்ளப்
படவில்லை.

"காசுக்குக்  கம்பன்  கருணைக்கு  அருணகிரி
ஆசுக்குக்  காளமுகில்  ஆவனே--காசினியில்
ஊழுக்குக்  கூத்தன்  உவக்கப்  புகழேந்தி
கூழுக்கிங்(கு)  ஔவையெனக்  கூறு."
இந்தப்   பாடலில்  கூறப்பட்டது  போல  ஆசுகவி  பாடுவதில்
காளமேகப்புலவர்  மிக  மிகச்  சிறப்புப்  பெற்றவர்.  அவர்
பாடல்களில்  சிலவற்றைப்  பார்ப்போம்.:
ஒருமுறை  அதிமதுரகவிராயர்  என்னும்  புலவர்  காள
மேகத்தைப்  போட்டிக்கு  அழைத்து  தாமும்  தமது  சீடர்களும்
கொடுக்கும்  குறிப்புக்களுக்கு  ஏற்றவாறு  ஆசுகவி  பாட
வேண்டும்  என்று  நிபந்தனை  விதித்தார்.  காளமேகம்
சம்மதித்தார்.  "குடத்திலே  கங்கையடங்  கும்"  என்று
ஈற்றடி  வருமாறு  வெண்பா  பாடுமாறு  கூறினர்.
"விண்ணுக்  கடங்காமல்  வெற்புக்  கடங்காமல்
மண்ணுக்  கடங்காமல்  வந்தாலும்--பெண்ணை
இடத்திலே  வைத்த  இறைவர்  சடாம
குடத்திலே  கங்கையடங்  கும்".
எதற்கும்  அடங்காமல்   பாய்ந்துவந்த  கங்கை  சிவபெரு
மான்  சடாமகுடத்திலே  அடங்கும்  என்பது  பொருளாகும்.

அடுத்த  குறிப்பு  என்னவென்றால்  ஓ,கா,மா,வீ,தோ  என்னும்
ஐந்து  எழுத்துக்களையும்  டு,டு,டு,டு,டு  என்ற  ஐந்து  எழுத்துக்
களோடு  பொருத்தி. ஓடு,காடு,மாடு,வீடு,தோடு  முதலிய
சொற்கள்  வருமாறு  வாக்கியம்   அமைத்து  வெண்பா
இயற்றல்  வேண்டும்  எனக்கூறினர்.  உடனடியாக
உதித்தது  பாடல்:
" ஓகாமா  வீதோநேர்  ஒக்க  டுடுடுடுடு
நாகார்   குடந்தை  நகர்க்கிறைவர்--வாகாய்
எடுப்பர்  நடமிடுவர்  ஏறுவர்  அன்பர்க்குக்
கொடுப்பர்  அணிவர்  குழை."
நாகார்  குடந்தை  நகர்க்கு  இறைவராகிய
சிவபெருமான்,
வாகாய்  எடுப்பர்--பிட்சாடனர்  ஆகத்  திரு
ஓடு  எடுப்பர்
நடமிடுவர்--சுடுகாட்டில்  நடமிடுவர்
ஏறுவர்--மாடு(நந்தி) மீது  ஏறுவர்
அனபர்க்குக்  கொடுப்பர்--பக்தர்களுக்கு  வீடு
(முக்தி) கொடுப்பர்
அணிவர்  குழை--காதில்  குழை(தோடு)அணிவர்

பிறிதொரு  குறிப்பு  தரப்பட்டது.  அது  என்ன
வென்றால்  "செருப்பு"  எனத்  தொடங்கி  "விளக்கு
மாறு"  என  முடிக்கும்  வகையில்  வெண்பாப்
பாடுமாறு  கூறினர்.  உடனே  பாடல்  பிறந்தது:
"செருப்புக்கு  வீர்ர்களைச்  சென்றுழக்கும்  வேலன்
பொருப்புக்கு  நாயகனைப்  புல்ல--மருப்புக்குத்
தண்டேன்  பொழிந்ததிருத்  தாமரைமேல்  வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா  றே"
நாயகன்  நாயகி  தோரணையில்  பாடிய  பாடல்:
போர்க்களத்திற்  புகுந்துபோய்  (செருப்புக்கு)
வீர்ர்களைச்  சிதறக்  கலக்குகின்ற  வேலனாகிய
குறிஞ்சித்  தலைவனை  நான்  தழுவுவதற்கு
(பொருப்புக்கு  நாயகனைப்புல்ல) குளிர்ச்சியாகிய
தேனைப்  பொழிந்த  அழகிய  தாமரை  மலர்  மீது
வீற்றிருக்கும்  வண்டே  அவனிருக்கும்  இடத்துக்
குப்  போகும்  வழியை  விளங்க  காட்டும்
(விளக்கும்  ஆறே).

காளமேகப்   புலவர்க்குச்  சமகாலத்தவர்களாக
எண்ணப்படும்  இரட்டைப்  புலவர்களும்
ஆசுகவி  பாடுவதில்  தேர்ந்தவர்கள்.  ஒருவர்
முடவர்;  மற்றவர் குருடர்.  குருடர்  தோள்  மீது
முடவர்  ஏறிக்கொள்ள  இருவரும்  ஊர்ஊராகச்
சென்றுவந்தனர்.  போகும்  வழியில்  கவனத்தை
ஈர்க்கும்  காட்சியைக் கண்டவுடன்  முடவர்  முதல்
இரண்டடிகளைத்  தொடங்கிப்  பாடுவது  வழக்கம்.
குருடர்  அதிலுள்ள  செய்தியைப்  புரிந்துகொண்டு
மீதமுள்ள  இரண்டடிகளைப்  பாடிமுடிப்பது  வழக்கம்.

ஒருமுறை  ஒரு  ஆற்றில்  குருடர்  குளித்துக்
கொண்டிருந்தார்.  முடவர்  ஏற்கெனவே  குளித்து
முடித்து  உயரமான  இடத்தில்  அமர்ந்திருந்தார்.
குருடர்  குளிக்கும்  போது  ஆடையைத்  துவைத்துக்
கொண்டிருந்தார்.  அப்போது  நீரின்  வேகம்
ஆடையை  அடித்துக்கொண்டு  போய்விட்டது.
இதனைக்கண்ட முடவர்  பாடத்தொடங்கினார்.
"அப்பிலே  தோய்த்திட்டு  அடித்தடித்து  நாமதனைத்
தப்பினால்  நம்மையது  தப்பாதோ--செப்பக்கேள்
ஆனாலும்  கந்தை ;அதிலுமோர்  ஆயிரங்கண்;
போனால்  மயிர்போச்சே  போ."
நீரிலே  தோய்த்து  அடித்தடித்து நாம்துவைத்தால்
நம்மை   அந்த  ஆடை(வேட்டி)  நீங்காதோ?  என்று
முடவர்  பாடக்  குருடர்  அந்த வேட்டி கந்தைதான்.
அதிலும் ஆயிரம்  ஓட்டைகள்.  போனால்  நமக்குக்
கேடில்லை  எனப்பதில்  அளித்தார்.
உடனே  முடவர்
"கண்ணா  யிரமுடைய  கந்தையே  ஆனாலும்.
தண்ணார்  குளிரைஉடன்  தாங்காதோ?--அண்ணாகேள்
இக்கலிங்கம்  போனாலென்?ஏகலிங்க  மாமதுரைச்
சொக்கலிங்கம்   உண்டே  துணை."
ஆயிரம்   ஓட்டைகள்  உள்ள  ஆடையானாலும்
குளிரைத் தாங்கப்  பயன்படுமே  என்று  முடவர்
கூற  உடனே  குருடர்  இந்த  ஆடை  போனாலென்ன?
(இக்கலிங்கம்)  மாமதுரைச்  சொக்கலிங்கம்
துணையாயிருப்பார்  என்று  பாடி  முடித்தார்.

படிக்காசுப்   புலவர்என்ற  புலவர்  பெயரைச்  சொன்னாலே
காயல்பட்டினத்து   வள்ளல்   சீதக்காதி  நினைவு  வந்துவிடும்.
அந்த  அளவுக்குப்  படிக்காசுப்   புலவர்  சீதக்காதி  வள்ளலிடம்
கொடைகள்  பெற்று  அனுபவித்தவர்வள்ளலைப்  பற்றிப்
பின்வரும்   பாடலைப்  பாடியுள்ளார்:
"ஈயாத  புல்லர்  இருந்தென்ன?  போயென்ன? எட்டிமரம்
காயா  திருந்தென்ன?  காய்த்துப்  பலனென்ன?  கைவிரித்துப்
போயா  சகமென்  றுரைப்போர்க்குச்  செம்பொன்  பிடிப்பிடியாய்
ஓயாமல்  ஈபவன்  வேள்சீதக்  காதி  ஒருவனுமே!"
ஈயாத  கஞ்சர்கள்இருந்தால்  என்ன?  போனால்  என்ன?  எட்டிமரம்
காய்த்தாலும்  காய்க்காவிட்டாலும்  ஒரு  பயனுமில்லை.  கைந்நீட்டி
யாசகம்  என்று  கேட்பவர்க்குப்  பிடிப்பிடியாய்  செம்பொன்னைக்
கொடுப்பவர்  வள்ளல்  சீதக்காதி.  இதில்  அவர்  ஒப்பற்றவர்.

ஒருமுறை  படிக்காசுப்புலவர்  வள்ளலைத்தேடிக்  காயல்பட்டினத்
துக்கு வந்த  பொழுது  அவர்  இறந்துவிட்டதாகத்  தகவல்
தெரிவித்தனர்.  அப்பொழுது  மனம்  நொந்து  பாடியது:
"தேட்டாளன்  காயல்  துரைசீதக்  காதி  சிறந்தவச்ர
நாட்டான்புகழ்க்கம்பம்  நாட்டிவைத்  தான்தமிழ்  நாவலரை
ஓட்டாண்டி  யாக்கி  அவர்கள்தம்  வாயில்  ஒருபிடிமண்
போட்டான்  அவனும்  ஒளித்தான்சமாதிக்  குழிபுகுந்தே!
தமிழ்  நாவலரை  ஓட்டாண்டி  யாக்கி  அவர்கள்  வாயில்
ஒருபிடி  மண்ணைப்  போட்டுவிட்டு  அவனும்  சமாதிக்
குழிபுகுந்து  மறைந்துவிட்டான்  எனப்  புலம்பிப்
பாடினார்.

வள்ளல்  சீதக்காதி  மறைந்தபோது  நமச்சிவாயப்
புலவர்  பாடியது:
" பூமா  திருந்தென்?  புவிமா  திருந்தென்ன?  பூதலத்தில்
நாமா  திருந்தென்ன?  நாமிருந்  தென்னநன்  னாவலர்க்குக்
கோமான்  அழகமர்  மால்சீதக்  காதி  கொடைமிகுந்த
சீமான் இறந்திட்ட  போதே  புலமையுஞ்  செத்ததுவே!"
வள்ளல்  சீதக்காதி  மறைவோடு  புலமையுஞ்
செத்துவிட்டதாக  மனம  நொந்து  பாடினார்.

இன்னும்  எத்தனையோ  தனிப்பாடல்கள்  உள்ளன.
அவைகளின்  சொற்சுவை,  பொருட்சுவை  நயமாகவே
உள்ளன.  மேலும்  அவை  பாடப்பட்ட  காலத்துச்
செய்திகளையும்  தெரிவிக்கின்றன.





"








.






1 comment:

  1. தனிப்பாடல் பற்றிய தகவல் மிக அருமை

    ReplyDelete