Thursday, 22 March 2018

நடந்தாய் வாழி காவேரி

பிணையும் கலையும் இணைந்தோடப்
          பேசும் கிளிகள் உரையாற்றப்
பணைத்தோள் உழவர் ஆர்ப்பரிக்க
          நடந்தாய் வாழி காவேரி!
பணைத்தோள் உழவர் ஆர்ப்பரிக்க
         நடந்த நின்னைத் தடுப்பதற்கு
அணைகள் மேக தாதில்கட்ட
         ஆயத் தம்தான் செய்தல் நன்றோ?


நடுவு நிலைமை பிறழாமல்
         நாட்டு மக்கள் அனைவரையும்
கடுகின் அளவும் பாரபட்சம்
        காட்டா வண்ணம் ஆட்சிசெய்தால்
மிடுக்கும் புகழும் எய்திடுமே!
        வேறு பாடு காட்டிவிட்டால்
வெடிக்கும் மக்கள் போராட்டம்;
         மைய அரசே எச்சரிக்கை!


உச்ச நீதி மன்றத்தார்
        உறுதித் தீர்ப்பை நவின்றிட்டார்;
மெச்சும் வகையில் காவிரிக்கு
       மேலாண் மைசெய் வாரியமும்
அச்சம் இலாது பங்கீட்டை
       அளிக்கும் ஒழுங்காற் றுக்குழுவும்
இச்ச கத்தார் பாராட்ட
      இற்றைப் பொழுதே நிறுவுகவே!

No comments:

Post a Comment