Saturday, 24 March 2018

நீரின்றி அமையாது உலகு

             நீரின்றி அமையாது உலகு

கோடை வெப்பம் சுட்டெரிக்கக்
      கொதிக்கும் சாலை தகித்திருக்க
ஆடை முழுதும் நனையும்வணம்
      அருவி போல வியர்த்திருக்க
ஓடை ஏரி குளமெல்லாம்
       ஒற்றைச் சொட்டு நீரின்றி
வாடி வறளும் நிலைகண்டு
        வார்த்தை என்ன சொல்வேனே !


நாட்டு மக்கள் நாவறள
        நலிந்து சோர்ந்து துவள்கின்றார் ;
வீட்டுக் குள்ளே இருந்தாலும்
       வெந்து நொந்து தளர்கின்றார் ;
சூட்டைத் தணிக்கக் குடைபிடித்தும்
       துணியால் மறைத்தும் நடக்கின்றார் ;
வாட்டம் போக்க மாமழையே
       வளமாய்ப்  பெய்து குளிரவைப்பாய்


மாதம் மூன்று மழைபெய்து
        வாழ வைத்த இயற்கையன்னாய் !
யாது கார ணத்தாலே
        எங்கள் நாட்டை வறளவைத்தாய் ?
போதும் அம்மா ! எமக்கிந்தப்
       பொல்லா வறட்சி வேண்டாவே ;
தீது நீங்க உடனடியாய்ச்
       செழித்த மழையைப் பெய வைப்பாய்


வறட்சி நிலவி வருத்திடினும்
       மழையே பெய்து செழித்திடினும்
மறவீர் தண்ணீர் மேலாண்மை ;
        மழைநீர் தன்னைச் சேகரிப்போம்
சிறந்த முறையிற் சிக்கனமாய்ச்
       செலவு செய்து சேமிப்போம் ;
முறையாய்ப் பேணி நீர்வளத்தை
       மூன்று மடங்காய்ப் பெருக்கிடுவோம்

No comments:

Post a Comment