Sunday, 11 March 2018

குழந்தை புரியும் குறும்பு

                   குழந்தை புரியும் குறும்பு

 கொட்டுகின்ற மழைநீரில் காகிதத்தால் செய்தபல
      குட்டிக் கப்பல்
 விட்டுமனம் மகிழ்ந்துநின்ற மைந்தனையான் இழுத்துவந்தேன்
     வீட்டுக் குள்ளே;
பட்டுநிகர் மேனியனை அடித்திடவே கையோங்கப்
     பாங்காய் அன்னான்
மொட்டுநிகர் வாய்திறந்து நகைபூத்தான்; நான்மயங்கி
     முத்த மிட்டேன்.

சுட்டிமகன் மாம்பழந்தான் வேண்டுமெனக் கேட்டழுதான்;
     தூய தங்கக்
கட்டியன்ன மைந்தனுக்கு மாம்பழத்தை யான்தந்தேன்;
     கனியைத் துண்டாய்
வெட்டியளி என்றழுதான்; துண்டுதுண்டாய் அரிந்தளித்தேன்;
     வேண்டா இஃதை
ஒட்டியளி முழுவடிவில் என்றழுதான்; எங்ஙனம்நான்
     ஒட்டல் ஒண்ணும்?

மாலையிலே புழுதியில்நீ விளையாடேல் என்றுரைத்து
     மனையில் என்றன்
வேலையிலே ஆழ்ந்திருந்தேன்; குறும்புமகன் தெரியாமல்
     வெளியே சென்று
சாலையிலே விளையாடிப் புழுதியினைத் தான்தரித்துத்
     தங்க மேனி
ஆலையிலே பிழிகரும்பாய் வாடி, முகம் வதங்கி, மெல்ல
     அகத்துள் வந்தான்.

No comments:

Post a Comment