Friday, 23 March 2018

இயற்கைக் காட்சி

                           இயற்கைக் காட்சி

கொட்டுகின்ற மழையழகைக் கண்டேன்;  இஃதைக்
        கூறவகை தெரியாது திகைக்கின் றேனே!
வெட்டுகின்ற மின்னல்பல வானில் தோன்றும்;
       வெருட்டுகின்ற இடிக்குரலும் அங்கே கேட்கும்;
சுட்டுகின்ற திசையெல்லாம் நீரின் தோற்றம்;
       சுருதியுடன் இடையிடையே காற்று வீசும்;
எட்டுகின்ற காட்சியெல்லாம் இயற்கை யன்னை
        இறுமாந்து புரிகின்ற ஆட்டம் தானோ?


பந்து போன்ற முழுநிலவே !
        பால்போல் வெள்ளை முழுநிலவே !
நொந்து வாடும் மாந்தர்கள்தம்
        நோவை நீக்கும் முழுநிலவே !
உந்து மதியே ! மேகத்தில்
        ஒளிந்து தோன்றி மயக்குகிறாய் ;
சிந்து பாடி மகிழ்கி்ன்றேன்;
        சிந்தை  குளிர்ந்து நெகிழ்கின்றேன்


மாலையிற் பொழுதைப் போக்க
       வளமிகு சோலை சென்றேன்;
நீலநல் மயில்கள் ஆடும்
       நேர்த்திசேர் காட்சி கண்டேன்;
மூலையிற் குயில்கள் கூவும்
        மோகன இசையும் கேட்டேன்;
கோலமார் கிளிகள் பேசும்
       குதலையாம் மொழியும் கேட்டேன்;

தாமரை கூம்பக் கண்டேன்;
        சந்திரன் உதிக்கக் கண்டேன்;
தேன்மலர் அல்லி பூக்கும்
       சிறந்தநற் காட்சி கண்டேன்;
காமர்சேர் மல்லி முல்லை
      கவினுற மலரக் கண்டேன்;
பூமகள் செழுமை தாங்கிப்
      புரிந்திடும் ஏரார் காட்சி!





No comments:

Post a Comment