Saturday, 14 April 2018

காவிரியை மீட்டெடுக்கப் போராட்டம்

புலியினைக்  கண்டும்   அஞ்சேன்;
         பூதத்தைக்   கண்டும்   அஞ்சேன்;
வலிமைகொள்  கரடிக்  கஞ்சேன்;
         வாரணம்  கண்டும்  அஞ்சேன்;
நலிவுறும்  வயலைக்  காக்க
         நம்பொன்னி  யாற்றை  வேண்டிச்
சிலபல  முயற்சி  செய்தால்
        சிரிப்பவர்க்  கஞ்சு  வேனே.

சிங்கத்தைக்  கண்டும்  அஞ்சேன்;
        சிறுத்தையைக்   கண்டும்  அஞ்சேன்;
பங்கத்தைச்   செய்யும்   நல்ல
        பாம்பினைக்   கண்டும்   அஞ்சேன்;
தங்கத்தை  நிகர்க்கும்  பொன்னி
         யாற்றினை  வேண்டிச்  செய்யும்
எங்கள்தம்  போராட்  டத்தை
         இகழுவார்க்  கஞ்சு  வேனே.

கயவர்கள்  தமக்கும்  அஞ்சேன்;
        கருணையில்  லார்க்கும்  அஞ்சேன்;
பயமிலாக்  கொலைஞர்க்  கஞ்சேன்;
       பண்பிலா  தவர்க்கும்  அஞ்சேன்;
வயல்களை  வளமை  யாக்க
       காவிரித்  தண்ணீர்  வேண்டி
முயற்சிகள்  செய்தால்  தூற்றும்
        மூடர்கட்  கஞ்சு வேனே.
எத்தனையோ   நூற்றாண்டாய்   எங்கள்தமிழ்நாட்டினுள்ளே
       எழிலாய்ப்    பாய்ந்து
நத்தைநண்டு  மீனினங்கள்   செழித்திடவும நெல்கரும்பு
       நன்கு  பல்கி
வித்தகமாய்   விளைந்திடவும்  பணிசெய்த  காவிரியே !
      மிக்க  நன்றி;
நித்தமுனைத்  தொழுதிடுவோம்   தடைதகர்த்து   மீட்டெடுப்போம்;
     நிரம்பி   வாராய்.

காவிரியை   மீட்டெடுக்கத்  தமிழரெல்லாம்  பலமுயற்சி
     களத்தில்  செய்தார்;
பாவலன்நான்  அன்னவர்கள்  பணிதன்னைப்  பாராட்டிப்
     பகர்வேன்   நன்றி;
ஆவலுடன்  வேடிக்கை   பார்த்தவரும்  பலருள்ளார்
     அவர்க்கும் நன்றி;
கேவலமாய்க்   கேலிகிண்டல்  செய்தோரை   எச்சரிப்பேன்;
     திருந்து  வீரே.

No comments:

Post a Comment