Sunday, 22 April 2018

கருகிய மொட்டுக்கள்

 பன்னிரண்டு  வயதுநிறை  யாதசின்னஞ்  சிறுமி
பலபேர்கள்  அண்மையிலே  கொலையுண்டு  மாண்டார்;
பாலியல்வன்  புணர்வாலே  நடந்ததிந்தக்  குற்றம்;
பாமரரும்  படித்தோரும்  குமுறினார்;  கொதித்தார்;

என்னவழி  மேற்கொண்டு  சமுகத்தில்   இதனை
       இரும்புக்கை  கொண்டடக்க  முயன்றிடலாம்  என்றே
இந்நாட்டை  ஆள்வோரும்  சான்றோரும்   இன்னும்
இளைஞர்களும்  முதியோரும்   மாதர்களும்   எண்ணி

உன்னதமாய்  ஒருவழியைக்  கண்டறிந்து  சொன்னார்;
உச்சபட்சத்  தண்டனையைச்  சட்டத்தில்  சேர்த்தால்
ஒடுக்கிடலாம்  இத்தகைய  பாதகமாம்  செயலை;
உறுதியுடன்  மையத்தை   ஆள்வோர்கள்  இயங்கி

சொன்னவண்ணம்  சட்டத்தை  இயற்றினரே;  நமது
        குடியரசுத்  தலைவருமே  ஒப்புதலை   அளித்தார்;
        சூழ்ச்சியால்  சட்டத்தை. வளைக்கநினைப்  போரே!
        தோற்றிடுவீர்;  எச்சரிக்கை;  திருந்திடுவீர்  உடனே!


எத்தனையோ  சட்டங்கள்  இந்நாட்டில்  உள்ளனவே;
      இருந்தபோதும்
நித்தநித்தம்  குற்றங்கள்  அரங்கேறு  கின்றனவே;
       நெஞ்சைத்  தொட்டுத்
தத்தமது  மனச்சாட்சிப்  படிநடந்தால்  மட்டுமிதைத்
           தடுத்தல்  ஒண்ணும்;
உத்தமமாய்  அவரவர்கள்  ஒழுக்கநெறி   மேற்கொண்டால்
       வெற்றி   திண்ணம்.



   








No comments:

Post a Comment