Saturday, 28 April 2018

ஆடவர்க்கு மீசை அழகு

நான்  பள்ளி  இறுதி  வகுப்பில்   (பதினோராம்  வகுப்பு)
படித்துக்  கொண்டிருந்த  காலக்கட்டம்(1967).  தமிழில்
கவிதை  எழுதுவதற்குரிய  யாப்பிலக்கணத்தைக்  கற்றுக்☺
கொண்டிருந்த  காலம்.  என்  நெருக்கமான  நண்பர்  திரு
வடிவேல்  என்னிடம்  "நீ  தமிழாசிரியரின்  மகன்  அல்லவா?
என்  மீது  ஒரு  கவிதை  பாடிக்காட்டு"  என்றார்.  நான்
உடனே  ஒரு  குறள்  வெண்பாவை  அவர்மீது  பாடினேன்.
"தடியா  வடிவேலா  தக்கோர்  இகழும்
பொடியா  மடையா  புகல்"
அந்தக்  காலக்கட்டத்தில்  எனக்கிருந்த  தமிழ்ப்புலமை
யால்  ஒரு  குறள்  வெண்பாதான்  எழுத  முடிந்தது .
நண்பர்  என்  தந்தையாரிடம்   இந்தக். கவிதையைக்
காட்டி  இதில்  பிழை  ஏதும்  உள்ளதா?  என்று  வினவினார்.
என்  தந்தையார்  அதனைப்  படித்துப்  பார்த்துவிட்டு
பிழையில்லை  என்றார்.  இது  என்  தன்னம்பிக்கையை
வளர்த்தது.

.
இதன்பிற்பாடு  நான்  சில  யாப்பிலக்கண  நூல்கள்
வாயிலாக  என்  தமிழறிவை  மேம்படுத்திக்கொண்டேன்.
புரியாதவற்றை  என்  தந்தையாரிடம்  கேட்டு  விளங்கிக்
கொண்டேன்.  ஒருநாள்  இகழ்வது  போலவுள்ள  மேற்படி
கவிதையைப்  புகழ்வது  போல  எப்படி  மாற்றலாம்  என்று
யோசித்தேன்.  மேற்படி  கவிதையில்  எந்தச்  சொல்லையும்
மாற்றாமல்  சில  சொற்களைச்  சேர்த்துப்  பாடினேன்.
"தடியா   வடிவேலா  தக்கோர்  இகழும்
பொடியா  மடையா  புகல்இப்--படியாக
வண்டமிழ்  தேர்ந்த  வடிவேலைக்  கூறிடுவார்
மண்டையில்  இல்லை  மதி".
இகழ்ந்து  பாடியது  புகழும். பாடலாக  மாறிவிட்டது.

அந்தக்  காலத்தில்  கவிதை  எழுதத்  தெரியுமா?
என்பதைச்  சோதிக்க  ஈற்றடி  கொடுத்துப்  பாடச்
சொல்வது  மரபு.  அதுபோலவே  'ஆடவர்க்கு  மீசை
அழகு'  என்னும்  ஈற்றடியை  எனக்குக்  கொடுத்தார்கள்.
ஈற்றடி  என்பது  கடைசியாக  வரும்  அடியாகும்.
"மயிலுக்குத்  தோகையும்  மானுக்குக்  கொம்பும்
குயிலுக்குக்  கொண்ட  குரலும்--பயிலுகின்ற
பாடலுக்குப்  பண்ணும்  படிறில்  அழகதுபோல்
ஆடவர்க்கு  மீசை  யழகு".

நான்  கல்லூரியில்   பி.காம்.பட்டப்  படிப்பு  படித்துக்
கொண்டிருந்த  காலக்கட்டம்(1971 ஆம்  ஆண்டு  என்று
நினைக்கின்றேன்).  எங்களுக்கு  வருமானவரி  மற்றும்
ஆடிட்டிங்  பாடங்களுக்கு  வகுப்பு  நடத்தும்  உயர்திரு
மணியன்  என்னும்  பகுதிநேர  விரிவுரையாளர்  திருமண
நிகழ்ச்சியில்  வாழ்த்துப்பா  பாடினேன்.
"அணிகுலவித்  திகழ்கின்ற  மாமதுரைக்  கல்லூரி
             யதனில்  நன்கு
பணிபுரிந்து  வருமான  வரிக்கலையைச்  சிறப்பாகப்
             பயிற்றும்   ஆசான்
மணியனெனும்  தோன்றலிவர்  துணைவியொடு  பெருவாழ்வு
             வாழ்க  என்று
வணிகவியல்  மாணாக்கர்  நாங்களெலாம்  மனதார
            வாழ்த்து  வோமே."
பிற்பாடு  1972ஆம்  ஆண்டில்   விடைபெறு  விழாவின்
போது  ஒரு  கவிதையை  எழுதினேன்.
"ஆடினோம்;  பாடினோம்;  ஆனந்த   மாய்நாளும்
கூடினோம்;  பேசிக்  குலவினோம்;--வாடிநாம்
இப்பொழுது  நெஞ்சமெலாம்  ஏங்கப்  பிரிகின்றோம்;
எப்பொழுது  காண்போம்  இனி."
 
பிற்பாடு1974ஆம்  ஆண்டு  வங்கிப்  பணியிற்  சேர்ந்து
பற்பல  ஊர்களில்  பணிசெய்ய  நேர்ந்தது.  எனவே
பணிப்பளுவுக்  கிடையே  கவிபாடுவதில்  நேரத்தைச்
செலவிட  இயலாமற்  போயிற்று.  2012ஆம்  ஆண்டு
பணியிலிருந்து  ஓய்வுபெற்றேன்.  தற்பொழுது  கவிதைப்
பக்கம்  கவனத்தைத்  திருப்பியுள்ளேன்.

என்  தந்தையார்  பல  பாடல்களைப்  பற்றி  விளக்கிக்
கவிதை  இயற்றும்  முறைபற்றிக்  கற்றுக்  கொடுத்துள்ளார்.
அப்பொழுது  கவிதையிலேயே   ஒரு  விடுகதை  சொல்லி
அதற்கு  விடை  கண்டுபிடிக்குமாறு  கூறியுள்ளார்.
"ஐந்தெழுத்தால்  ஆயதொரு  பொருளின்  பேராம்;
         ஆதியொடு  கடைசேர்க்கச்  சிரமென்  றாகும்;
பைந்தொடியே  முதல்நீக்கிற்  குறியென்  றாகும்;
         பகருமிரண்  டாமெழுத்தை  ஒழித்துப்  பார்க்கின்
மைந்துமிகும்  பருந்தாகும்;  முதலி  ரண்டை
வகுத்துரைக்கின்  ஒருயுகமா  வந்து  தோன்றும்;
செந்தமிழ்நன்  னாட்டுமக்காள்  சிந்திப்  பீரே!
சிறந்தவொரு  விடைகண்டால் மெச்சு  வேனே!"
விடை:: கலிங்கம்(துணி,  உடை)
ஆதியொடு  கடைசேர்த்தல்:  க+ம்=கம்(சிரம்)
முதல்நீக்கிற்  குறியாகும்: லிங்கம்(குறி)
2ஆம்  எழுத்தை  நீக்கில்:கங்கம் = பருந்து
1,2ஆம்  எழுத்தைத்  தவிர  பிறவற்றை  நீக்கில்:கலி=கலியுகம்
இந்த  மாதிரி  எத்தனையோ  கவிதைகள்  உள்ளன.
படித்து  இன்புறுவீராக!




1 comment:

  1. இளம்வயதில் குறள் வெண்பா எழுதும் திறன் அருமை

    ReplyDelete