Sunday, 22 April 2018

யாமாமாநீ யாமாமா யாழீகாமா .......

 தமிழ்க்கவிதை இலக்கணத்தில் ஆசுகவி,வித்தாரகவி,மதுரகவி மற்றும் சித்திரகவி என்னும் நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன. ஆசுகவி என்பது எவ்வித முன்னேற்பாடும் இன்றி நினைத்தவுடன் பாடப்படுவதாகும். வித்தாரகவி என்பது பெரும் எண்ணிக்கையில் பாடல்களைப்பாடி இலக்கியம், இதிகாசம் படைப்பதாகும். மதுரகவி என்பது இயற்றப்படும் பாடல்களைப் பிறர் கேட்டு இன்புறும் வண்ணம் இனிமையாகப் படைப்பதாகும். சித்திரகவி என்பது வித்தியாசமான முறையில் பாடல்களை இயற்றுவது அல்லது நாகம், தேள், இரதம், மத்தளம் முதலான சித்திரங்களை எழுதி அவற்றில் எழுத்துக்களை அமைத்துக் கவிபாடுவதாகும். இதில் சித்திரகவியைப்பற்றிக் காண்போம்.
         மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடுதல்(நிரோட்டகம்), ஒரே சொல் மடக்கி மடக்கி வந்து வெவ்வேறு பொருளைத்தருவது (யமகம்), திரிபு, நாகபந்தம், விருச்சிக பந்தம், இரத பந்தம், மத்தள பந்தம், எழுகூற்றிருக்கை, வருக்க எழுத்துக்கவிதை முதலான எத்தனையோ வகைகள் உள்ளன.
மாலைமாற்று:-
         ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தமூர்த்தி பாடியதாகும். மாலைமாற்று என்பது இடமிருந்து வலமாகப் படிப்பதுபோல வலமிருந்து இடமாகப் படித்தாலும் பாட்டின் வடிவம் மாறாமல் ஒரே பொருளைக் குறிப்பதாகும்.
"யாமாமாநீ யாமாமா! யாழீகாமா! காணாகா!
 காணாகாமா! காழீயா! மாமாயாநீ! மாமாயா!".
         இந்தப்பாடலை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் எப்படிப் படித்தாலும் வடிவம் மாறாமல் பொருள் மாறாமல் உள்ளது.
இதன் பொருள்:-
        "யாம் ஆமா?" - ஆன்மாக்கள் கடவுளென்றால் அது பொருந்தாது; "நீ ஆம் ஆம்" - சிவபெருமானே! நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது பொருத்தமானதாகும்; "மாயாழீ" - பேரியாழ் என்னும் இசைக்கருவியை வாசிப்பவனே! "காமா!" - யாவரும் விரும்பும் கட்டழகுத் தோற்றமுடையவனே! "காண்நாகா!" - பக்தர்கள் காணும் வண்ணம் பாம்பை அணிந்தவனே!; "காணா காமா" - இரதியைத்தவிர மற்ற எவர்கண்ணுக்கும் தோன்றாவண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே! "காழீயா" - சீகாழி ஊரில் வீற்றிருப்பவனே! "மாமாயா" - இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! "நீமாமாயா" - மாயை முதலிய குற்றங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!




திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி:-
         சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் பெருந்தமிழறிஞர்க்கும் உள்ளூர்த் தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றிவருவதற்குள் உதடு ஒட்டாமலும், ஒரே சொல் மடக்கி மடக்கி வருமாறும் ஈற்றடி அசையோ, சீரோ அடுத்தபாட்டின் முதலசையாகவோ சீராகவோ வருமாறும் முப்பது பாடல்கள் பாடுதல் வேண்டும் என்பதாகும். சிவப்பிரகாச சுவாமிகள் தான் வெற்றி பெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
கந்தரங் கானந் தனிற்சென் றடங்கிலென் காசிக்கனே
கந்தரங் கானந்த நண்ணிலென்? கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்தில் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே!

இதன் பொருள்:-
         "கன்னியர் கட்டளக கந்தரம் கான் நந்த நின்று ஆடு எழிற்செந்தில் கண்டிறைஞ்சிக்" - கன்னியர் கட்டிமுடிந்து வைத்துள்ள கூந்தல் மணம் வீசும்படியாக ஆடுகின்ற அழகான செந்திலம்பதியில் கந்தனைக் கண்டு தொழுது வணங்கி; "கந்தர் அங்கு ஆனந்தம் நல்கச் சனனம் கடந்திலர்" - கந்தர் வணங்கிய பக்தருக்கு ஆனந்தம் அருள்பாலித்து அதன்பயனாக இந்தப் பிறவியைக் கடவாதவர்கள்; "கந்தரம் கானம் தனிற்சென்று அடங்கில்என்?" - மலைக்குகை, காடு போன்ற இடங்களிற் சென்று புலன்களை ஒடுக்கி வாழ்ந்தால் என்ன? "காசிக்கு அனேகந்தரம் கால் நந்த நண்ணில் என்?" - காசிக்கு அநேக முறை கால்கள் வருந்தும்படியாக நடந்து திருச்செந்தூரை நெருங்கினால் என்ன?

         தற்காலத்தில் சித்திரகவிபாடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. இல்லையென்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment