Sunday, 1 April 2018

அண்ணல் நோக்கினான் அவள்......

ஈராயி  ரம்வருடம்  வீரமும்நற்  காதலும்நம்
இரண்டு   கண்ணாய்
இலக்கியங்கள்  இயம்பினவே     ஆனாலும்   தற்காலம்
இதிலோர்  சிக்கல்
ஆராத  ஒருதலையாம்  காதலினால்  ஆடவர்கள்
          அமிலம்  தன்னை
அணுவளவும்  விரும்பாத  மாதர்கள்மேல்  வீசிடுதல்
           அறமோ ?  சொல்லீர்.
ஓராது  சிலவேளை  அன்னவரைத்   துன்புறுத்தி
             உயிரும்   போக்கும்
உன்மத்தச்   செயல்நன்றோ?   நெறியன்று   நேர்மையுமன்று
             ஒழுக்கக்  கேடே!
தேராத  காளையரே!   கிடைக்காத  பொருள்தன்னைச்
              சிந்திக்   காது
தேறிமனம்   ஒத்துவரும்   பெண்களையே  காதலிப்பீர்
               சேரும்   வெற்றி.

எங்கள்   வீட்டுத்  திருமகளே!
       என்று   போற்றிச்   செல்லமிக
       இயன்ற   வகையில்   அரசியைப்போல்
எழிலாய்   வளர்த்த  தங்கமகள்

கண்கள்   கண்ணீர்  சிந்திடவே
          கயவர்  கிண்டல்  கேலிசெய்தால்
          கனன்று   நெஞ்சம்  குமுறிடுமே;
         கடிய   துன்பம்   இன்னுமுள
மங்கை   யிவளை  ஒருதலையாய்
         மறுகி  மறுகிக் காதலித்து
        மறுத்தால்   அமிலம்    தனைவீசி
         வருத்தம்   அடையச் செய்திடுவார்

சங்கை   யறுத்துக்  கொல்வதற்கும்
          தயங்கார்   நெஞ்சம்  கலங்காரே
           சான்றோர்   சமூகம்   காவலர்கள்
           தக்க  விதத்தில்  தடுத்திடுக!


         



 


No comments:

Post a Comment