செந்தமிழ் வளர்த்த சேது மன்னர்கள்.
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் பேரரசுக்கு
இணையாக இராமநாதபுரம் சேதுபதிகளின் அரசு திகழ்ந்தது.
மூவேந்தர்களும் கடையெழு வள்ளல்களும் அவர்கட்கு இணையான
செல்வந்தர்களும் இல்லாத சூழ்நிலையில் தமிழ்ப்புலவர்கள்
ஆதரிப்பார் இன்றித் தவிக்கின்ற வேளையில், சங்ககால மன்னர்களுக்கு/
வள்ளல்களுக்கு நிகராக ஆதரவுக் கரம் நீட்டியவர்கள் இராமநாதபுரத்தை
யாண்ட சேதுபதி மன்னர்கள் ஆவர்.' நாணிக்கண் புதைத்தல்' என்னும்
ஒரு துறைக் கோவை பாடிய அமிர்த கவிராயர், அவர்க்கு உறவினரான
அனந்த கவிராயர், தலைமலை கண்ட தேவர், சர்க்கரைப் புலவர்,
சவ்வாதுப் புலவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், கவிக்குஞ்சரப் பாரதியார்
போன்ற புலவர்கள் இயற்றிய படைப்புகளுக்காகத் தக்க பரிசில்கள்
கொடுத்து ஆதரித்தனர். வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நான்காம்
தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிப் பற்பல இளைய தலைமுறையினர்
தமிழ் கற்க வழிவகுத்தார். இம்மாதிரியாகத் தமிழுக்கு அளப்பரிய தொண்டு
செய்து தமிழைக் காத்தனர் என்று சொன்னால் மிகையில்லை.
சேதுபதி மன்னர்களுள் இரகுநாத சேதுபதி அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.
இவர் தம்மீது 'நாணிக்கண் புதைத்தல்' என்னும் அகப்பொருள் துறையில்
நானூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியப்
படைப்பை உருவாக்கிய அமிர்த கவிராயர் என்னும் புலவருக்கு அவர்
ஒவ்வொரு பாடலைப் பாடிப் பொருள் கூறி முடித்தவுடன் பொன்னாலான
எலுமிச்சம்பழம் ஒன்றை உருட்டிப் பரிசிலாகத் தந்தார் என்பர். மேலும்,
அவருக்கு வெகுமதியாகப் பொன்னான்கால் என்னும் சிற்றூரை நன்கொடை
யாகத் தந்தனர். நானூறு பாடல்களைப் புலவர் படித்துப் பொருள் சொல்லி
வருகையில் அவையில் குழுமியிருந்த புலவர்கள் சிலர்" அரசே! இந்தப் பாடல்
மிக அருமையாக அமைந்துள்ளது; நீங்கள் அதனை உடைத்துப் பொருளை யறிந்து
இரசித்தல் அவசியம்" என்று சொன்னதாகவும், அரசர் உடனே "நான் ஏற்கெனவே
அந்தப் பாடலை உடைத்துப் பொருளை யறிந்து சுவைத்துவிட்டுப் பிறகுதான் வெகுமதி
அளித்துள்ளேன். நீங்கள் எலுமிச்சம்பழத்தை உடைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்"
என்று சொன்னதாகவும், அதன்படி பொன்னால் ஆன எலுமிச்சம்பழத்தை உடைத்துப்
பார்க்கையில் உள்ளே மாணிக்கப் பரல்கள் இருந்ததாகவும் பேச்சுள்ளது.
இதைப் போலவே அனந்த கவிராயர் என்ற புலவர் அரசரைப் புகழ்ந்து பாமாலை பாட,
மன்னர் அதற்கு வெகுமதி யாக 'மானூர்' என்ற சிற்றூரை இறையிலி நிலமாகத் தந்தார்.
இதற்கு நன்றி கூற எண்ணிய புலவர்" அரசர் பல கலகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு
எனக்கு மானைத் தந்தார்" என்று மொழிந்தார். அவர் எண்ணம் அரசர் பற்பல கலைகளின்
வித்தகர் என்று தெரிவிப்பதுதான். ஆனால் அரசர் வேறுவிதமாக எண்ணிவிட்டார். கலை
என்னும் சொல் ஆண்மானைக் குறிக்கும். மான் என்னும் சொல் பொதுவாக மான் என்னும்
விலங்கைக் குறித்தாலும் பெண் மான் எனப் பெரும்பாலும் பொருள்கொள்ளப்படும்.
எனவே " பெண்மானுக்கேற்ற ஆண்மானையும்(கலை) தருகிறேன்" எனவுரைத்துக்
கலையூர் என்ற சிற்றூரையும் முற்றூட்டாக வழங்கியதாகச் சொல்வர்.
ஒருமுறை அமிர்த கவிராயருக்கும் அனந்த கவிராயருக்கும் கவிதைப் போட்டி நிகழ்ந்தது.
போட்டியில் வெற்றி பெறுபவர், தோல்வியடைந்தவரின் காதை யறுத்துக் கொள்ளலாம்.
அரசர் நடுவராக வீற்றிருந்தார். வண்ணம் என்ற யாப்பில் குறித்த கால வரையறைக்குள்,
குறித்த சொற்களைப் பயன்படுத்திக் குறித்த பொருள் தருமாறு யார் முதலில் பாடுகிறார்
என்பதே நிபந்தனை. அமிர்த கவிராயர் முதலில் பாடலை இயற்றி முடித்துவிட்டார். அனந்த
கவிராயர் முடிக்கும் தறுவாயில் இருந்தார். சில நொடி தாமதித்து அவரும் பாடலை முடித்து
விட்டார். ஆனால் நிபந்தனைப்படி அமிர்த கவிராயர் வென்றதாக அரசர் தீர்ப்பளித்தார்.
போட்டி விதிப்படி அமிர்த கவிராயர் அனந்தரின் காதையறுக்கக் குறடுதனைக் கையில்
ஏந்திக்கொண்டு அவரை நெருங்கினார். (இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்க
செய்தி). அனந்தர் உடனடியாக அமிர்த கவிராயரைத் தடுத்து நிறுத்தி "என் பெயர் அனந்
தன். அதாவது ஆதிசேடன் பெயர். ஆதிசேடன் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பாம்பு.
பாம்புக்குக் காதே கிடையாது. (பாம்புக்குக் கண்ணே காதாகச் செயல்படுவதால் அதனைக்
'கட்செவி' என்று புலவர் கூறுவர்). ஆதிசேடன் பெயர்கொண்ட எனக்கும் அதே நிலைமை.
எனவே என் காதை அறுக்க வாய்ப்பில்லை என்று சாமர்த்தியமாக உரைத்தார். அது இலக்
கியப் போட்டி யாதலால் அரசர்முதல் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அனந்தரின்
திறமையை மெச்சி வாழ்த்தினர். உண்மையில் அமிர்த கவிராயருக்கும் தம் உறவின
ரின் காதை யறுக்கும் எண்ணம் ஏதுமில்லை.
பார்வை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய நல்லுரைக் கோவை முதற் பாகம்.