Sunday, 15 December 2024

செந்தமிழ் வளர்த்த சேதுநாட்டு மன்னர்கள்.

 செந்தமிழ் வளர்த்த சேது மன்னர்கள்.


கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் பேரரசுக்கு

இணையாக இராமநாதபுரம் சேதுபதிகளின் அரசு திகழ்ந்தது.

மூவேந்தர்களும் கடையெழு வள்ளல்களும் அவர்கட்கு இணையான

செல்வந்தர்களும் இல்லாத சூழ்நிலையில் தமிழ்ப்புலவர்கள்

ஆதரிப்பார் இன்றித் தவிக்கின்ற வேளையில், சங்ககால மன்னர்களுக்கு/

வள்ளல்களுக்கு நிகராக ஆதரவுக் கரம் நீட்டியவர்கள் இராமநாதபுரத்தை

யாண்ட சேதுபதி மன்னர்கள் ஆவர்.' நாணிக்கண் புதைத்தல்' என்னும்

ஒரு துறைக் கோவை பாடிய அமிர்த கவிராயர், அவர்க்கு உறவினரான

அனந்த கவிராயர், தலைமலை  கண்ட தேவர், சர்க்கரைப் புலவர்,

சவ்வாதுப் புலவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், கவிக்குஞ்சரப் பாரதியார் 

போன்ற புலவர்கள் இயற்றிய படைப்புகளுக்காகத் தக்க பரிசில்கள்

கொடுத்து ஆதரித்தனர். வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நான்காம்

தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிப் பற்பல இளைய தலைமுறையினர்

தமிழ் கற்க வழிவகுத்தார். இம்மாதிரியாகத் தமிழுக்கு அளப்பரிய தொண்டு

செய்து தமிழைக் காத்தனர் என்று சொன்னால் மிகையில்லை.


சேதுபதி மன்னர்களுள் இரகுநாத சேதுபதி அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

இவர் தம்மீது 'நாணிக்கண் புதைத்தல்' என்னும் அகப்பொருள் துறையில்

நானூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியப்

படைப்பை உருவாக்கிய அமிர்த கவிராயர் என்னும் புலவருக்கு அவர்

ஒவ்வொரு பாடலைப் பாடிப் பொருள் கூறி முடித்தவுடன் பொன்னாலான

எலுமிச்சம்பழம் ஒன்றை உருட்டிப் பரிசிலாகத் தந்தார் என்பர். மேலும்,

அவருக்கு வெகுமதியாகப் பொன்னான்கால் என்னும் சிற்றூரை நன்கொடை

யாகத் தந்தனர். நானூறு பாடல்களைப் புலவர் படித்துப் பொருள் சொல்லி

வருகையில் அவையில் குழுமியிருந்த புலவர்கள் சிலர்" அரசே! இந்தப் பாடல்

மிக அருமையாக அமைந்துள்ளது; நீங்கள் அதனை உடைத்துப் பொருளை யறிந்து

இரசித்தல் அவசியம்" என்று சொன்னதாகவும், அரசர் உடனே "நான் ஏற்கெனவே

அந்தப் பாடலை உடைத்துப் பொருளை யறிந்து சுவைத்துவிட்டுப் பிறகுதான் வெகுமதி

அளித்துள்ளேன். நீங்கள் எலுமிச்சம்பழத்தை உடைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்"

என்று சொன்னதாகவும், அதன்படி பொன்னால் ஆன எலுமிச்சம்பழத்தை உடைத்துப்

பார்க்கையில் உள்ளே மாணிக்கப் பரல்கள் இருந்ததாகவும் பேச்சுள்ளது.


இதைப் போலவே அனந்த கவிராயர் என்ற புலவர் அரசரைப் புகழ்ந்து பாமாலை பாட,

மன்னர் அதற்கு வெகுமதி யாக 'மானூர்' என்ற சிற்றூரை இறையிலி நிலமாகத் தந்தார்.

இதற்கு நன்றி கூற எண்ணிய புலவர்" அரசர் பல கலகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு

எனக்கு மானைத் தந்தார்" என்று மொழிந்தார். அவர் எண்ணம் அரசர் பற்பல கலைகளின்

வித்தகர் என்று தெரிவிப்பதுதான். ஆனால் அரசர் வேறுவிதமாக எண்ணிவிட்டார். கலை

என்னும் சொல் ஆண்மானைக் குறிக்கும். மான் என்னும் சொல் பொதுவாக மான் என்னும்

விலங்கைக்  குறித்தாலும் பெண் மான் எனப் பெரும்பாலும் பொருள்கொள்ளப்படும்.

எனவே " பெண்மானுக்கேற்ற ஆண்மானையும்(கலை) தருகிறேன்" எனவுரைத்துக்

கலையூர் என்ற சிற்றூரையும் முற்றூட்டாக வழங்கியதாகச்  சொல்வர்.


ஒருமுறை அமிர்த கவிராயருக்கும் அனந்த கவிராயருக்கும் கவிதைப் போட்டி நிகழ்ந்தது.

போட்டியில் வெற்றி பெறுபவர், தோல்வியடைந்தவரின் காதை யறுத்துக் கொள்ளலாம்.

அரசர் நடுவராக வீற்றிருந்தார். வண்ணம் என்ற யாப்பில் குறித்த கால வரையறைக்குள்,

குறித்த சொற்களைப் பயன்படுத்திக் குறித்த பொருள் தருமாறு யார் முதலில் பாடுகிறார்

என்பதே நிபந்தனை. அமிர்த கவிராயர் முதலில் பாடலை இயற்றி முடித்துவிட்டார். அனந்த

கவிராயர் முடிக்கும்  தறுவாயில் இருந்தார். சில நொடி தாமதித்து அவரும் பாடலை முடித்து

விட்டார். ஆனால் நிபந்தனைப்படி அமிர்த கவிராயர் வென்றதாக அரசர் தீர்ப்பளித்தார்.

போட்டி விதிப்படி அமிர்த கவிராயர் அனந்தரின் காதையறுக்கக் குறடுதனைக் கையில்

ஏந்திக்கொண்டு அவரை நெருங்கினார். (இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்க

செய்தி). அனந்தர் உடனடியாக அமிர்த கவிராயரைத் தடுத்து நிறுத்தி  "என் பெயர் அனந்

தன். அதாவது ஆதிசேடன் பெயர். ஆதிசேடன் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பாம்பு.

பாம்புக்குக் காதே கிடையாது. (பாம்புக்குக் கண்ணே காதாகச் செயல்படுவதால் அதனைக்

'கட்செவி' என்று புலவர் கூறுவர்). ஆதிசேடன் பெயர்கொண்ட எனக்கும்  அதே நிலைமை.

எனவே என் காதை அறுக்க வாய்ப்பில்லை என்று  சாமர்த்தியமாக உரைத்தார். அது இலக்

கியப் போட்டி யாதலால்  அரசர்முதல் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அனந்தரின்

திறமையை மெச்சி வாழ்த்தினர். உண்மையில் அமிர்த கவிராயருக்கும் தம் உறவின

ரின் காதை யறுக்கும் எண்ணம் ஏதுமில்லை.


பார்வை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய நல்லுரைக் கோவை முதற் பாகம்.

Sunday, 24 November 2024

இக் குச்சிலை யான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?

 இக்குச் சிலையான் இருப்பிடம் என்று ஆர் சொன்னார்?


பருவ வயதில் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற

வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் உணர்வு

காதல் உணர்வு. காதல் வயப்பட்ட தலைவி ஒருத்திக்கு

உரிய பருவ வயதில் காதல் உணர்வு தோன்றிவிட்டது.

அவள் மனத்தை ஈர்த்த தலைவனை அடிக்கடி நினைத்துச்

சோர்வடைகின்றாள். அவனைச் சந்திக்க இயலாத நேரங்

களில் தலைவிக்கு உண்ணும் உணவு பிடிக்கவில்லை.

உறங்க முயன்றால் உறக்கமும் வரவில்லை. காதல் உணர்வு

களுக்குக்  காரணகர்த்தா மன்மதன் என்று இலக்கியங்கள்

இயம்புகின்றன. அவன் பருவப் பெண்களை நோக்கிக் கரும்பு

வில்லை வளைத்து மலர்க் கணைகளை ஏவுவதாக இலக்கியம்

விவரிக்கின்றது.


இங்கு குறிப்பிடப்படும் தலைவி சிறிய இல்லத்தில் வாழ்ந்துவரும்

செல்வச் செழிப்பற்ற தலைவி. அவள் தன் காதலனின் நினைவால்

வாடும் பொழுது "இந்த உலகத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்ட உயர்ந்த

மாளிகைகள்,  தென்றல் தவழும் பெரிய சாளரங்களைக் கொண்ட

வீடுகள், சுற்றிச் சுற்றிச் செல்லுதற்குரிய பளிங்கினாற் கட்டப்பட்ட

மிகப்பெரிய இல்லங்கள், இன்னும் இவை போன்ற செல்வச் செழிப்புள்ள

இடங்களையெல்லாம் தவிர்த்து இக் குச்சிலை--இந்த சிறிய இல்லத்தை--

தேர்த்தெடுத்து அதில் வாழும் என்னை நோக்கி இக்குச் சிலையான்--

கரும்பு வில்லையுடைய மன்மதன்,(இக்கு=கரும்பு; சிலை=வில்) மலர்க்

கணைகளைத் தொடுக்கின்றானே, அந்த மன்மதனுக்கு யான் வாழுமிடம்

இக் குச்சில்(சிறிய வீடு) என்று யார் சொன்னார்கள்?" என்று நொந்து தனக்குத்

தானே புலம்புகின்றாள்.(இயற்கைக்கு ஏழை, செல்வர் என்ற பாகுபாடு கிடையாது.

உரிய பருவத்தில் அது தன் கடமையைத் தவறாது செய்யும்.)

இந்த நிகழ்வுக்குரிய பாடலைப் பார்ப்போம்:

"சித்திரமா மண்டபங்கள்,  தென்றல்வரு சாளரங்கள்,

பத்தி யுலாவும் பளிக்கறைகள்---இத்தனைவிட்(டு)

இக்குச்  சிலையான் இருப்பிடம்என்(று) ஆர்சொன்னார்?

இக்குச் சிலையானுக்(கு) இன்று".

புலவர்: மதுர கவிராயர்

இக்குச்சிலை--இக் குச்சிலை(இந்தச் சிறிய வீட்டை);

யான்இருப்பிடம்-- எனது இருப்பிடம்;

இக்குச் சிலையானுக்கு--- கரும்பு வில்லுக்காரனுக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஏகம்பவாணன்:- தென்பெண்ணையாற்றங்கரையில்

திருக்கோவலூர்ப் பகுதியில் ஆற்றூர் என்னும் ஊரைத்

தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். இவன்

குறுநில மன்னன் என்ற போதிலும் இவன் காலத்தில் (15ஆம்

நூற்றாண்டு) மூவேந்தர்களும் செல்வாக்கு இழந்து சிற்றரசர்

களாக ஆட்சிசெய்த காலக்கட்டம். பாண்டிய நாட்டில் சிறீவல்லப

மாறன் ஆண்டுவந்தான். இவனுக்கும் ஏகம்பவாணனுக்கும்

இடையே நடந்த போரில் ஏகம்பவாணன் வெற்றிபெற்றான்.

பாண்டியனுடைய தலைநகர் மதுரையை ஒரு பாணனுக்குத்

தானமாக அளித்ததாகத் தனிப்பாடல் திரட்டிலுள்ள பாடல் கூறுகிறது.

இந்த ஏகம்பவாணன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி

ஏகம்பவாணனை வணங்க வாய்ப்புக்கிடைக்காமல் அவன் யானையை

வணங்க எண்ணியதாக ஒரு பாடல் உண்டு. அது பின்வருமாறு:

"பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்

வாணர் புகழவரும் ஏகம்ப---வாணன்

கரும்போ தகமேநின் கால்பணிவேன், மீண்டு

வரும்போ தகமே வரின்".

பொருள்:

பாணனுக்கு மதுரையைத் தானமளித்து அதனை அவன் ஆளச்செய்த

ஏகம்பவாணனின் கரிய/பெரிய யானையே! நீ பொய்கையில் நீராடிவிட்டு

அரண்மனைக்குத்திரும்பும் பொழுது என் இல்லத்தின் அருகில் வந்தால்

உன் காலில் விழுந்து வணங்குவேன்.

இதில் பாடலின் பின் இரண்டு வரிகளும் சுவையானவை. கரும்போதகமே!

என்னும் சொல் கரிய யானையே என்று பொருள்படும். (போதகம்=யானை).

மீண்டு வரும்போதகமே வரின்= மீண்டு வரும் போது அகமே வரின்= அரண்

மனைக்குத் திரும்பும் வேளையில், என் அகமே வரின்= மீண்டு வரும் போது

என் வீட்டருகே வந்தால்; நின் கால்பணிவேன்=நின் காலில் விழுந்து வணங்குவேன்.


பார்வை:

தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) மூலமும் உரையும்;

ஆசிரியர்: கா.சுப்பிரமணிய பிள்ளை(கா.சு.பிள்ளை).

Sunday, 10 November 2024

சேற்றூர்ச் சமீனும் சொக்கம்பட்டி சமீனும்..

 சேற்றூர்ச் சமீனுக்குதவிய சொக்கம்பட்டி சமீன்.


ஏறத்தாழ  இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி

மாவட்டத்தில் வடகரையாதிக்கம் என்னும் பெயருடைய சொக்கம்பட்டி

சமீனில்  சமஸ்தானாதிபதியாக இருந்தவர் பெரியசாமிச் சின்னணைஞ்சாத்

தேவர் ஆவார். அவர்க்கு அமைச்சராகவும் படைத்தலைவர் ஆகவும் பணி 

புரிந்தவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவர் ஆவார். இருவருமே தமிழ்ப்

புலமை மிக்கவர்கள். சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சரான

பொன்னம்பலம் பிள்ளையின் அறிவையும் சிறப்பையும் நன்குணர்ந்து அவர்பால்

மிக்க பேரன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். இருவரிடையேயும் அவ்வளவு

நட்பும் மனவொற்றுமையும் நிலவியது சமீனில் வாழ்ந்துவந்த அனைவரையும்

வியப்புக்குள்ளாக்கியது.


அக்காலத்தில் சேற்றூரில்(திருவில்லிபுத்தூர் மற்றும் இராசபாளையம் என்னும்

ஊர்களுக்குஅருகில் அமைந்துள்ளது) சிவப்பிரகாசத் திருவணாதத்துரை என்பவர்

சமீன்தார் ஆகத் திகழ்ந்தார். இவர் சொக்கம்பட்டி சமீன்தார் மற்றும் அவர் அமைச்சர்

பொன்னம்பலம் பிள்ளை யாகிய இருவர் மீதும் பெருமதிப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் கெடுவாய்ப்பாக அருகிலுள்ள சிவகிரி(தென்மலை என்ற பெயரும் உண்டு)

சமீன்தாரிடம் எப்பொழுதும் பகைமை பாராட்டினார். தென்மலை சமீன் சேற்றூரை

விடவும் வலிமை கொண்ட சமீனாகும். அதனால் சேற்றூர்ச் சமீன்தார் மிகுந்த மன

உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளானார். போதாக் குறைக்கு, ஊற்று மலை சமீனின்

ஆதரவும் தென்மலைக்கு இருந்தது.


இத்தகைய சூழ்நிலையில், வலுவான ஒரு துணை கிடைத்தால் தம் சமீன் யாதொரு

அச்சமும் இன்றி மக்களைப் பாதுகாக்க இயலும் என்று சேற்றூர்ச் சமீன்தார் எண்ணினார்.

இந்த எண்ணத்துடன் சேற்றூர்ச் சமீன்தார் சிவப்பிரகாசத் திருவணாதத்துரை தம்

பரிவாரங்கள் புடைசூழத் தக்க காணிக்கைகளுடன் சொக்கம்பட்டி சமீனுக்கு

வருகை புரிந்தார். சொக்கம்பட்டி சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவரையும் அவர்

புதல்வர் இராசகோபாலத் தேவரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துத் தமது

சேற்றூர்ச் சமீனுக்கு அவர்களது ஆதரவு தேவை என்பதை விளக்கமாக எடுத்துச்

சொன்னார். அமைச்சர் பொன்னம்பலம் பிள்ளையையும் சந்தித்துத் தம் சமீன்

சந்திக்கும் இடர்களைப் பற்றி எடுத்துரைத்தார். சேற்றூர்ச் சமீன்தார் தமிழ்ப் புலமை

மிக்கவர். இந்நிகழ்வை ஒரு பாடலில் வடித்தார்; அது பின்வருமாறு:

"கரைகாணா  திருந்த,துன்பக் கடல்கடந்து

        வடகரையுங் கண்டேன்; கல்விக்(கு)

உரைகாணும் துரை, பெரிய சாமியைக்கண்

        டேன்;மழைக்கார்  ஓங்கக் கண்டேன்;

நிரைகாணக் குன்றெடுத்த ராசகோ

        பாலனையும்  நேரே கண்டேன்;

வரைகாணும்  படிபுயமும்  பூரித்தேன்;

        நிலைமைபெற்றேன்;  வாழ்வுற் றேனே!"

(மழைக்கார்=கருமேகம்; நிரை=பசுக்கூட்டம்;

நிரை காணக் குன்றெடுத்த ராஜகோபாலன்=

கோவர்த்தனகிரியைத் தூக்கிய கிருட்டிணனை

ஒத்தவரான இளவரசர் இராசகோபாலத் தேவர்).


ஆனால், சொக்கம்பட்டி சமீன்தார் பற்பல சமீன்பணிகளுக் கிடையே

சேற்றூர்ச் சமீன்தாரின் கோரிக்கையை மறந்துவிட்டார். எந்த உதவி

யையும் புரியவில்லை. சிவப்பிரகாசத் திருவணாதத்துரை சளைக்காமல்

பல மடல்களையும் அனுப்பினார். ஆனால் சொக்கம்பட்டி சமீனின் உதவி

வரவேயில்லை. சேற்றூர்ச் சமீன் உடனே சொக்கம்பட்டி சமீனின் அமைச்சர்

பொன்னம்பலம் பிள்ளைக்கு ஓலை அனுப்பி அதில் தாம் பல சமயங்களில்

சொக்கம்பட்டி சமீன்தாருக்கு அனுப்பிய மடல்களைப் பற்றி எடுத்துரைத்து

உடனடியாகத் தமது சமீனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக் கோரிக்கை விடுத்தார்.

பொன்னம்பலம் பிள்ளை தாமதமின்றிச் சொக்கம்பட்டி சமீன்தாரிடம் எல்லாச்

செய்தியையும் விரிவாக விளக்கிச் சேற்றூராருக்குத் தேவையான உதவி

செய்தல் இன்றியமையாதது எனக் கூறினார். சமீன்தார்" ஆமாம், சேற்றூரார்

நல்ல தமிழ்க் கவிதைகள் வாயிலாகத் தம் துன்பத்தை எடுத்துரைத்து உதவி

கோரினார். பல அரசுப் பணிகளுக்கிடையே நான் மறந்துவிட்டேன். நீரே

படையைத் திரட்டிச் சேற்றூராருக்கு உதவி புரியும்" என்று ஆணையிட்டார்.


அந்த உத்தரவுக்கு இணங்கப் பொன்னம்பலம் பிள்ளை  படையுடன் சேற்றூர்

சென்றார். சொக்கம்பட்டிப் படையும் சேற்றூர்ப் படையும் இணைந்து தென்மலை

என்ற சிவகிரிச் சமீன் படையுடன் மோதினர். தென்மலைச் சமீனுக்கு ஊற்று மலை

சமீன் ஆதரவு இருந்த போதிலும்  போரில் தோற்க நேர்ந்தது. சேற்றூர் சமீன்தார்

சிவப்பிரகாசத் திருவணாதத்துரை பொன்னம்பலம் பிள்ளைக்கும் சொக்கம்பட்டி

சமீன்தார் சின்னணைஞ்சாத் தேவருக்கும் உளமார்ந்த நன்றி நவின்றார். அவர்

பாடல் பின்வருமாறு:

"சேற்றூரார் நெஞ்சம் திடப்பட்டார்; தென்மலையார்

தோற்றோமென் றோடித் துயருற்றார்--மாற்றலர்கள்

தெண்டனிடுஞ் சின்னணைஞ்சான் சேனா பதிபொன்னன்

தண்டிகையைக் கண்டவுடன் தான்."

(தண்டிகை= ஒரு பல்லக்குவகை)


தமிழ்ப் புலமை மிக்கவர்கள் கூடினால் அவர்களுடைய மகிழ்ச்சியும் துக்கமும்

பாடல்களாகவே வெளிப்படுகின்றன.


ஆதாரம்:

டாக்டர் உ.வே.சாமிநாதையரின் " நினைவு மஞ்சரி" நூல்.

Saturday, 19 October 2024

அபய நிருபம்.

 மருதுபாண்டியர் திருப்பூவணக் கோவில் குருக்களுக்கு அனுப்பிய

அபய நிருபம்.


அபய நிருபம் என்பது அரசர்கள் தமது ஆட்சிப் பகுதியில் வாழும்

குற்றவாளிகளுக்கேனும், ஓடி ஒளிந்திருக்கும் பகைவர்களுக்கேனும்

 "நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டா; உங்களுக்கு எத்துன்பமும் நேராது.

அடைக்கலம் தருவோம். இந்தப் பகுதிக்கு யாதொரு அச்சமும்

இல்லாமல் வரலாம்" என்ற உறுதிமொழியுடன் அனுப்பப்படும் கடிதம்.

இங்கே யாருக்கு அனுப்பப்பட்டது; அதன் விவரம் என்ன? என்று

பார்ப்போம்.


கி.பி1772இல்  கிழக்கிந்தியக் கம்பெனியார். இராமநாதபுரத்தைக்

கைப்பற்றிய பின்னர் சிவகங்கை மீது படையெடுத்தனர். அரசர்

முத்து வடுகநாதர் அந்தப் போரில் கொல்லப்பட்டார். அரசி வேலு

நாச்சியாரும், அவர் மகள் வெள்ளச்சியும், அமைச்சர் தாண்டவ

ராயன் பிள்ளையும், படைத் தலைவர்கள் மருதுபாண்டியர்களும்

திண்டுக்கல் அருகையுள்ள விருப்பாட்சிக் காட்டுக்குத் தப்பிச்

சென்று தங்கினர். பின்னர் 1779இல் தொடங்கி 1780 வாக்கில்

சிவகங்கையை மீட்டனர். வேலுநாச்சியாரை அரியணையில்

அமரச் செய்தனர். அவர் ஆட்சி நடத்திக் காலமான பிறகு மருது

பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்தனர். 


மருதுபாண்டியர்களை மக்கள் தங்கள் உயிரைப் போலப்

போற்றிக் கொண்டாடினர். அவர்கள் நெடுங்காலம்

நலமாக வாழுதல் வேண்டும் என்று அல்லும் பகலும்

இறைவனை வேண்டிக் கொண்டனர். காளையார் கோவில்

கோபுரம் கட்டி முடித்த பிற்பாடு பெரிய மருதுவும், சின்ன

மருதுவும் இக்கோவிலுக்குப் பெரிய தேர்செய்யும் ஏற்பாட்டைத்

தொடங்கினர். மிகப் பெரிய தேருக்கு உறுதியான அச்சுமரம்

வேண்டுமல்லவா? உறுதியான மரம் தம் ஆட்சிப் பகுதியில்

எங்கே கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அப்பொழுது

பெரிய மருதுவுக்குத் திருப்பூவணச் சிவன் கோவிலுக்கு எதிரேயுள்ள

பழமையான மற்றும் உறுதியான மருதமரம் நினைவுக்கு வந்தது.

சின்ன மருதுவிடம் அதைப் பற்றித் தெரிவித்துவிட்டு அதிகாரிகளை

அழைத்து அந்த மருத மரத்தை வெட்டி எடுத்துவர உடனடியாக

ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.


மன்னர் உத்தரவுப்படியே அதிகாரிகள் திருப்பூவணத்துக்குச் சென்று

மரத்தைக் கண்டுபிடித்து அதை வெட்டுவதற்குப் பணியாட்களுக்கு

ஆணையிட்டனர். இந்தச் செய்தி திருப்பூவண  ஊர் முழுவதும் பரவியது.

கோவிலில் பூசைக் கைங்கர்யம் ஆற்றிவரும் புஷ்பவனக் குருக்கள்

இச்செய்தியைக் கேட்டவுடன் மரமிருக்கும் இடத்துக்கு வந்து மரத்தை

இரு கைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு " இம் மரத்தை வெட்ட

வேண்டா; வெட்டுவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்" என்று முழக்க

மிட்டார். அதிகாரிகளும் பணியாட்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அரசர் உத்தரவைச் சாதாரண குருக்கள் தடுப்பதா? என்று சினத்தின்

உச்சிக்கே சென்றுவிட்டனர். செய்தி அரசருக்குப் பறந்தது.


பெரிய மருது இச்செய்தியைக் கேட்டவுடன் வியப்படைந்தார். தாம்

போட்ட உத்தரவைப் புஷ்பவனக் குருக்கள் தடுப்பதற்குக் காரணம்

என்னவாயிருக்கும்? என்று அறிந்துகொள்ள உடனே கிளம்பித்

திருப்பூவணத்துக்கு வந்து தங்கினார். சிறிது நேர ஓய்வுக்குப்பின்

கோவிலுக்குச் சென்று முகப்பில் உள்ள மண்டபத்தில் அமர்ந்தார்.

அரசர் வந்திருக்கும் செய்தியறிந்த புஷ்பவனக் குருக்கள் கோவில்

பிரசாதத்தைக் கோவில் அதிகாரிகள் மூலமாக அரசர்க்கு அனுப்பி

வைத்துவிட்டுத் தாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த

குதிரை வண்டி மூலமாக மதுரைக்குச் சென்று தங்கிக்கொண்டார்.

ஏனென்றால், அரசர் உத்தரவைத் தடுத்ததால் என்ன தண்டனை

கிட்டுமோ? என்ற அச்சம் அவரை வாட்டி வதைத்தது.


மண்டபத்தில் அமர்ந்திருந்த அரசர் "புஷ்பவனக் குருக்கள் எங்கே?"

என்று விசாரித்தார். அவர் மதுரைக்குச் தப்பிச் சென்ற விவரத்தைத்

தெரிவித்தனர். உடனே 'அபய நிருபம்' எழுதி நான்கு காவலர்களிடம்

கொடுத்துக் குருக்களிடம் "அஞ்ச வேண்டா; அரசர் அடைக்கலம்

தந்துள்ளார்" என்று தெரிவித்துக் கையோடு அழைத்து வருமாறு

ஆணையிட்டார். காவலர்களும் அம்மாதிரியே செய்தனர்.


பெரிய மருது குருக்களிடம் விசாரணையைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவர் மிக்க சினத்தோடுதான் பேசினார். ஆனால்,

குருக்களின் பணிவான பதில் உரையால் அவர் சினம் சிறிது

சிறிதாகத் தணியத் தொடங்கியது. குருக்கள் கூறியது:-

"மருத மரம் வையை ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள

சிவன் கோவிலுக்கு எதிரே விரிந்து பரந்து நிலை கொண்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிழல் தந்து வெயிலின்

கொடுமையிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, கோடையில்

வையை ஆற்றில் நீர் சிறிதளவே வரும். ஆற்றின் வடபகுதிக்

கரையை ஒட்டி இத்தண்ணீர் இருக்கும். பக்தர்கள் நீராடி விட்டுத்

தென் பகுதியிலுள்ள கோவிலுக்குச் சுடுமணலைக் கடந்து வரல்

வேண்டும். அப்பொழுது முதியோர், கருவுற்ற பெண்டிர், குழந்தைகள்

என் அனைவர்க்கும் நிழல் தந்து வெயிலின் கொடுமையிலிருந்து

பாதுகாக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் மரத்தின்

நிழல் மிகத் தேவையான ஒன்றாகும்." என்று சொல்லி வந்த குருக்கள்

இக்கட்டான நேரத்துக்குத் தக்கவாறு மனத்தைத் தொடும் வகையில் 

மிக உருக்கமாகப் பேசத் தொடங்கினார். அதன் விவரம் வருமாறு:-

" மகாராசா! இவையெல்லாவற்றையும் விட இன்றியமையாத செய்தி

என்னவென்றால் இம்மரம் தங்கள் பெயரைத் தாங்கி நிற்கிறது(மருத மரம்).

சிவகங்கை மக்கள் அனைவரும் நீங்கள் இருவரும்(பெரிய மருது மற்றும்

சின்ன மருது) நீண்ட நெடுங்காலம் நலமாக வாழ்ந்து சிவகங்கை மக்களைக்

காத்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இப்படி இருக்கையில் இந்த

மரத்தை வெட்ட யாருக்கும் எண்ணமே வராது; இது சத்தியம்" என்று

உருக்கமாக முழங்கினார். அருகிலிருந்த அதிகாரிகள், பணியாட்கள்,

பொதுமக்கள் என அனைவரும் " ஆமாம். இது சத்தியமான பேச்சு" என்றனர்.

பெரிய மருதுவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.

"குருக்களே! நீர் நம்மிடம் காட்டிவரும் விசுவாசம் மெச்சத் தக்கது; பக்தர்களின்

நன்மைக்காகச் சிந்தித்தது  எமக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நீர் கருதிய

படியே இம்மரம் வெட்டப்படாமல் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். இது நமது

ஆணை" என்று உறுதி கூறினார். குருக்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அங்கிருந்த அனைவரும் களிப்புக் கடலில் மூழ்கினர்.


பார்வை: கண்டதும்  கேட்டதும்--நூலாசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Friday, 4 October 2024

வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக் கண்ணி.

 பொருள் தேடி வெளிநாடு சென்றவர் புலம்பும் எக்காலக்கண்ணி.


கைநிறைய ஊதியத்தைக் கச்சிதமாய் ஈட்டிடவே

மைவிழியில் லாளை மனம்மறுக---நைதலுடன்

நீங்கிப் பணம்கொழிக்கும் நேரில் துபாய்வந்தேன்;

தீங்கில் தொழிலில் திளைத்து.


(தீங்கில்லாத தொழிலில் திளைத்துக் கைநிறைய ஊதியத்தைக்

கச்சிதமாய் ஈட்டிடவே............என்று பொருள் கொள்ளல் வேண்டும்.)


                  எக்காலக் கண்ணி.


வந்தநாள்  தொட்டு  மனைவியைப் பற்றித்தான்

சிந்தனை சுற்றிவரும்;  தேறிடுதல் எக்காலம்?


கைப்பிடித்த  நங்கை  கரிசனத்தோ(டு) அன்னமிட்டு

மெய்சிலிர்க்கச்  செய்திடுமவ்  வேளைவரல்  எக்காலம்?


அன்புக்(கு)  உரியாள்  அழகுமிகு  தோள்களிலே

இன்பமாய்ச்  சாய்ந்தே  இளைப்பாறல்  எக்காலம்?


கண்ணுக்(கு)  இனியாளின் கைகோர்த்துச் சோலையிலே

பண்ணுடன்  பாடிப்  பரிவடைதல்  எக்காலம்?


ஆரணங்கே!  காரிகையே!  அன்னமே!  பெண்ணரசி!

பேரழகி!  நான்கொண்ட பித்(து)அகல்வ(து)  எக்காலம்?


மொட்டழகு வாய்திறந்து முத்துநகை  சிந்துமுன்றன்

வட்டமுகம்  காணுகின்ற வாய்ப்புவரல்  எக்காலம்?


நாள்காட்டி  பார்த்து  நலிந்து  தவிப்பவளின்

தோள்காட்டும் துன்பம் தொலைவதுதான் எக்காலம்?


பஞசுத் தலையணையில்  பாவைகண் ணீர்சொரிந்து

துஞ்சுதல் கொள்ளாத் துயர்துடைத்தல்  எக்காலம்?


வெம்பித்  திரிபவளின் மேனிமெலி  வைத்தடுத்து

நம்பிக்கை யூட்டி  நலம்சேர்த்தல்  எக்காலம்?


மாமியார்  மாமனார்  மற்றுமுளோர்  சூழ்ந்திருந்தும்

சாமியெனைத்  தேடுமவள்  சாந்தமுறல்  எக்காலம்?


பார்க்கின்ற காட்சியெலாம் பாவையவள் தோன்றுகின்றாள்;

ஓர்மையுடன் வேலையிலே ஊன்றிடுதல்  எக்காலம்?


நீலக்  கடல்தனையும்  நீள்மணல்சேர்  பாலையையும்

காலமெலாம்  காணும்  கலிதீர்தல்  எக்காலம்?


சிந்தனையை நேராக்கிச் செய்தொழிலைச் சீராக்கி

வந்தநோக்  கம்முடிப்பேன்  வாழ்ந்து.


(தோள் காட்டும் துன்பம்=பிரிவுத் துன்பத்தால்  பெண்களின் தோள்கள்

மெலிவடையும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

துஞ்சுதல் கொள்ளாத் துயர்=தூக்கம் வராத துயரம்.)

Monday, 23 September 2024

அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே.ற..

 "அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்  இன்பமும் துன்பமும் உடைத்தே".


அசுணம் என்பது சங்க இலக்கியங்களில் பரவலாகச் சொல்லப்பட்ட ஓர்

உயிரினம். அது விலங்கா பறவையா என  ஐயத்திற்கிடமின்றி விவரிக்கப்

படவில்லை. மேலும் அது உண்மையில் வாழ்ந்த உயிரினமா கற்பனையில்

வாழ்ந்த உயிரினமா என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், சங்க

இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட ஓர் உயிரினம். நாம் அதனை ஒரு

விலங்கு என்று கருதிக் கொள்வோம். அது வலிமை மிக்க விலங்கு; அதனை

வேட்டையாடுதல் எளிதன்று. ஆனால் அது ஒரு இசையறி விலங்கு என்று

கருதப்பட்டது. நல்ல மனங்கவர் இசையைக் கேட்டால் மயங்கி அருகில் வரும்.

அப்பொழுது அதனைப் பிடித்து அடக்கித் தம் வசப்படுத்திக் கொள்வர்/கொல்வர்.

கடுமையான பறையொலி போன்ற ஓசை கேட்கநேர்ந்தால் அவ்விலங்கு பாறையி

லி‌ருந்து வீழ்ந்து உயிர்துறக்கும் என்பது சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலக் கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களும் இவ்விலங்கைப் பற்றிப்

பேசியுள்ளன. நற்றிணையில் ஒரு பாடலைப் பார்ப்போம்.


பல நாட்களாகத் தலைவன் ஒருவன் தலைவியைச் சந்தித்து அளவளாவிவிட்டுப்

பிரிந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளான். இரவுக் குறியில்(சந்திக்கும் இடம்)

அவன் பல இன்னல்களை எதிர்கொண்டு சமாளித்து வருவதால் தலைவி அச்சமயங்களில்

பதற்றத்தோடு மன உளைச்சலுக்கு ஆளாகின்றாள். மேலும் அவன் அடிக்கடி வந்து

போகிறானே தவிர வரைவு(திருமணம்) செய்து கொள்வதைப் பற்றி யாதொரு வார்த்தை

யும் சொல்லாமல் தவிர்க்கின்றான். இதனால் தலைவி  மனம்நோகின்றாள். ஒருநாள்

தலைவன் வழக்கம்போல் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான்(இல்லத்து வேலியருகில்

மறைவாக நிற்கின்றான்). அவன் வந்ததையறிந்த தலைவி தோழியிடம் வன்புறை

எதிர் மொழிகின்றாள்(வற்புறுத்தி/வலியுறுத்திப் பேசுகின்றாள்)."தோழி தினைக்கதிர்

களைத் தின்ற கிளிகள் அங்குள்ள பாறைகளின் மீது அமர்ந்துகொண்டு ஒலியெழுப்பும்;

ஒன்றையொன்று கூவியழைக்கும். அத்தகைய மலையைஉடைய நாட்டில் வாழ்பவன் நம்

தலைவன். அவன் என்னருகிலிருந்து பழகும் பொழுது நல் அழகு என் உடலில் மிளிரும்.

அவன் என்னைவிட்டு நீங்கினால் என் மேனி பொலிவு இழக்கும். அதனால் நம் தலைவனது

மார்பானது அசுணமாவைக் கொல்பவர் கைபோல் உள்ளது. முதலில் இனிய இசையை

எழுப்பி அசுணமாவை வரவழைத்துப் பின்னர் காதுக்குக் கொடுமையான ஓசையால் 

அதனை மிரட்டிச் சாகடித்தல் போலாகும். அஃதாவது, கிளிகள் தினைக்கதிர்களைச் சுற்றத்

துடன் கூடித் தின்ற பின்னர் தம்  துணையோடு இணைந்து குலவுதல்போல் தலைவன்

தன் சுற்றத்தாருடன் தலைவி இல்லத்துக்கு வந்து வரைவு(திருமணம்) முடித்து அவளொடு

கூடிக் குலவி மகிழ்தலை எதிர்பார்க்கும் செய்தியை வற்புறுத்தி/வலியுறுத்திச் சொன்னாள்.

தொடர்புடைய பாடல் பின்வருமாறு:

நற்றிணை பாடல் எண்:304; திணை: குறிஞ்சி; புலவர்: மாறோக்கத்து  நப்பசலையார்.

"வாரல் மென்தினைப் புலவுக் குரல்மாந்தி

சாரல் வரைய கிளையுடன் குழீஇ

வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்

நளியிரும் சிலம்பின் நல்மலை நாடன்

புணரின், புணருமார் எழிலே; பிரியின்

மணிமிடைப் பொன்னின் மாமை சாய,என்

அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்

அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே

தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.

 அருஞ்சொற் பொருள்:

புலவு=வயல்; குரல்=கதிர்; வயிர்=ஊதுகொம்பு;

விளிபயிற்றல்=ஒன்றையொன்று கூப்பிடுதல்.

பார்வை:நற்றிணை--வர்த்தமானன் பதிப்பகம்;

                 உரையாசிரியர்=முனைவர் கதிர் மகாதேவன்.

Friday, 6 September 2024

கள்ளின் சாடியன்ன எம் இளநலம் ஒழிய முதிர்கம் யாமே!

 கள்ளின் சாடியன்ன எம் இளநலம் ஒழிய முதிர்கம் யாமே!


சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு நற்றாய்

தலைவியை இற்செறிப்பு செய்து விட்டாள். அத்தலைவி

யின் எண்ணங்களையும் இன்னல்களையும் பார்ப்போம்:


பாடல் எண்:295; திணை: நெய்தல்; துறை: தோழி செறிப்பு

அறிவுறீஇ வரைவு கடாயது; புலவர்: ஔவையார்.

"முரிந்த சிலம்பின் நெரிந்த  வள்ளியின்,

புறன்அழிந்(து)  ஒலிவரும் தாழிருங் கூந்தல்

ஆயமும் அழுங்கின்று; யாயும்அஃ  தறிந்தனள்,

அருங்கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,

வேறுபல் நாட்டுக் கால்தர வந்த,

பலவினை நாவாய்  தோன்றும் பெருந்துறை,

கலிமடைக் கள்ளின் சாடி யன்ன, எம்

இளநலம் இற்கடை ஒழியச்

சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே."


பொருளுரை:

வளம்நலிந்த மலைக்கொடிபோல்  வதங்கி, வாடி

  வண்ணத்தை இழந்ததென்றன்  தாழும் கூந்தல்;

இளமைமிகு  தோழியரும்  எனைப்போல் உள்ளார்;

  இதயத்தில்  துயர்கொண்டார்; அன்னை  எற்குத்

தளர்வறியாக் கடிகாவல்  போட்டு  விட்டாள்;

  தந்தையவர் கடல்கடந்து  மீண்டு வந்து

மிளிருமெழில்  நாவாயில் உளச  ரக்கை

  விரைவாகத்  தரையிறக்க ஆணை யிட்டார்.


பருகுநர்க்குக் களிப்புநல்கும் கள்ளின் சாடி

   பரிதாப  மாய்க்கொல்லை  தனிலே  வீழ்ந்து

பெருமையெலாம் இழந்ததுபோல், இளமை நீங்கிப்

  பேரழகும் அழிந்துமுதிர்(வு) அடைவேன்;  தோழி!

உருக்கமுறத் தலைவியவள், தலைவன் கேட்டே

  உளம்பதறத், தோழியிடம் உரைத்தாள்; அன்னான்,

இருவருடைக் காதலது வெற்றி கொள்ள

  இல்லறத்தை விரும்பியுடன்  வரைவு  கொள்வான்.


 விளக்கவுரை:

தலைவி தோழியிடம் கூறியவேளை தலைவன் சிறைப்

புறத்தான் ஆக, இவ்விருவரது உரையாடலைக்

கேட்டுக் கொண்டிருக்கின்றான். சிறைப்புறத்தான்

என்பதற்குப் பொருள் வேலிக்கப்புறமாயுள்ளவன்.

தோழியும் தலைவியும் உரையாடும்பொழுது  அவ்விரு

வர் பரிமாறும் செய்திகளை மறைந்து நின்று அறிவ

தற்கு வசதியான காவல் மனைப்புறமாயுள்ள இடம்.

வேலிக்கு அப்புறமுள்ள இடம்.


பருவம் எய்திய பெண்ணைக் கண்ணும் கருத்துமாகப்

பாதுகாப்பது அப்பெண்ணைப் பெற்ற தாயின் கடமை.

வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் தெரியாத/அறி

யாத ஆடவர் நுழைய முடியாது. கட்டுக் காவல் பலமாக

இருக்கும். இற்செறித்தல்  என இலக்கியத்தில் வழங்கப்

படும். தலைவியின் வயது முதிர்ச்சியைக் கருத்தில்

கொண்டு பெற்றோர் வெளியே செல்ல அனுமதிக்காமல்

வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கச் செய்தல். இப்பாடலில்

வரும் தலைவியும் இற்செறிக்கப்பட்டவளே.  ஊருக்குள்,

தலைவி யாரோ ஒருவனுடன் சந்திப்பு நிகழ்த்திப்

பேசுவதாக அலர் கிளம்பியிருக்கும். அதனால் இற்செறிப்பு

நடத்தப்பட்டிருக்கும். தலைவியின் தந்தையார் அண்மையில்

கடல் கடந்து வெளிநாடுகளில் வாணிகம் செய்து விட்டு

மீண்டுவந்துளார்.  நாவாய்களைத் துறையில் நிறுத்துவதற்குரிய

ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். தலைவி தன் தோழியிடம்

தன் இற்செறிப்பு குறித்துப் புலம்புகின்றாள். அவளின் நோக்கம்

சிறைப்புறத்தானாக உள்ள தலைவன் தன் நிலைமையை அறிந்து

மேலும் காலதாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) நிகழ்த்த ஏற்பாடு

செய்தல் மிகமிக இன்றியமையாததாகும் என்பதை உணர்த்துவதே.


இப்பாடலில் கடல்கடந்து தமிழர் நிகழ்த்திய வாணிகம் பற்றி அறிய

முடிகிறது. வேலைப்பாடமைந்த வெளிநாட்டுக் கட்சாடி(கள் நிரப்பும்

சாடி) இங்கு கொண்டுவரப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது.

Monday, 19 August 2024

தேரோட்டியைச் சீராட்டிய தலைவன்..

 தேரோட்டியைச் சீராட்டிய தலைவன்.


வீரம் செறிந்த ஒரு  தலைவன் தன் காதல் மனையாட்டியைப் பிரிந்து

தன் அரசனுக்குத் துணையாகப்  போர்க்களம்  செல்லவேண்டிய  சூழல்

ஏற்பட்டது.  அவனும் தன் இல்லாளைப் பிரிய மனமில்லாமல் நாட்டைக்

காக்கும் பணிக்காக மனத்தைத் தேற்றிக்கொண்டு  போர்க்களம்

சென்றுவிட்டான். போர்ச் சூழலில் தன் அன்பு மனையாளை முற்றாக

மறந்து முழுமனத்துடன்  தன் வீரம் முழுவதையும் வெளிப்படுத்திப்

போர் புரிந்தான். அவனைப் போலவே ஏனைய வீரர்களும் கடுமையாகப்

போர் செய்து எதிரி நாட்டு வீரர்களைப் பந்தாடினர். அரசனின் தலைமைப்

 பண்பாலும் போர் வீரர்களின் அயராத வீரத்தாலும் பகைவர்களை வெல்ல

முடிந்தது. ஒரு வழியாகப் போர் முடிந்து அமைதி தவழத் தொடங்கியது.


வெற்றிவாகை சூடிய வீரர்கள் ஒவ்வொருவராக அரசனிடம் வாழ்த்துப்

பெற்றுத் தத்தம் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர். நம் தலைவனும்

முறையாக அரசனிடம் விடைபெற்றுத்  தன் ஊருக்குத் திரும்புவதற்காகப்

பெரிய தேர் ஒன்றில் ஏறிக் கொண்டான். தேரோட்டியிடம் தான் தன் மனைவி

யைப் பிரிந்து பல நாட்களாகப் போர்க் களத்தில் தங்க நேர்ந்ததைத்  தெரி

வித்து அவளைப் பார்க்க மிக்க ஏக்கத்துடன் இருக்கும் நிலைமையை வெளிப்

படுத்தினான். தேரோட்டி வீரனின் நிலைமையைப் புரிந்துகொண்டு தேரை

விரைவாகவும் கவனமாகவும் செலுத்தினான்.


தேரில் ஏறிய தலைவனின் நினைவு அவன் இல்லாளைப் பற்றியே சுற்றிச்

சுழன்றது. தானும் தன் மனைவியும் நடத்திய இனிய இல்லறம், அவள் தனக்குச்

செய்த பணிவிடை, இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள், தான்

அவளிடம் நிகழ்த்திய  குறும்புச் செயல்கள், தன்னிடம் அவள் வெளிக்காட்டிய

பலஊடல், ஊடலுக்குப்பின் நிகழ்ந்த கூடல், அதனால் விளைந்த கழிபேருவகை

போன்ற நிகழ்வுகள் அவன் சிந்தையில் அலைமோதின. போர்க்களத்துக்கும்

அவன் ஊருக்கும் இடையே உள்ள தொலைவு அதிகம்தான். ஆனாலும், தேரோட்டி

மிகத் திறமையாகவும் விரைவாகவும் ஓட்டிய காரணத்தால் அவன் ஊரை

நெருங்கினர். ஊருக்குள் தேரைச் செலுத்தித் தலைவன் இல்லின்முன் முன் தேரை

நிறுத்தினான் தேரோட்டி.


தலைவனிடம் "ஐயா! இல்லம் வந்து சேர்ந்துவிட்டோம்; நீவிர் கீழே இறங்குக" என்று

தேரோட்டி கூறினான். அதுகாறும், சுற்றுமுற்றும் என்ன நடக்கிறது என்பதையே 

அறியாமல், பழைய இனிய மலரும் நினைவுகளில் மூழ்கியிருந்த தலைவன், உறக்கத்

திலிருந்து விழித்தவன் போலத் தன் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டுத் "தேரில்

ஏறியதை அறிவேன்; மற்றபடி, தேர் கடந்துவந்த பயணம் பற்றி ஏதும் அறியேன்;

பெருந்தேரில் ஏறியதிலிருந்து  முயற்குட்டிகள் அலையும் காட்டைத் தேர்கடந்துவந்த

பயணம் பற்றியோ வேறு நிகழ்வு பற்றியோ யாதொன்றும் அறியேன். வரகுக்கதிர்கள்

சிதறிக் கிடக்கும் எங்கள் இல்லத்தின் முன்பு தேரை நிறுத்தி இறங்கச் சொன்ன பொழுதில்

மருட்சிகொண்டேன். அவ்வளவு விரைவாகத் தேரை ஓட்டிவந்துள்ளாய். தேரோட்டியே!

வான்வழங்கிய காற்றைக் குதிரையாகப் பூட்டினாயோ? பின் மனத்தையே பரியாகப்

பூட்டினாயோ? இவ்வளவு விரைவாகத் தேரோட்டிவந்தது வியப்புக்குரியதே. இவ்வாறு

தேரோட்டி யைப் பாராட்டிய தலைவன் அவனைத் தன் அகன்ற மார்போடு அணைத்த

வாறே இல்லத்துக்குள் தேரோட்டியை அழைத்துச் சென்றான். அவன் இல்லாளுக்கு

நல்லதொரு விருந்தினரைப் பேணும் வாய்ப்புக் கிட்டியது. இனி தொடர்புடைய

பாடலைப் பார்ப்போம்:(அகநானூறு)

பாடல் எண்: 384--புலவர் ஒக்கூர் மாசாத்தியார்--திணை: முல்லை; துறை:வினை

முடித்த தலைமகன் வரவுகண்டு உழையர் (உடனிருந்தவர்) கூறியது.

"இருந்த  வேந்தன் அருந்தொழில்  முடித்தெனப்

புரிந்த  காதலொடு  பெருந்தேர்  யானும்

ஏறிய(து)  அறிந்தன்(று)  அல்லது வந்தவாறு

நனியறிந்(து) அன்றோ  இலனே; தாஅய்

முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில்

கவைக்கதிர்  வரகின்  சீறூர்  ஆங்கண்

மெல்லியல் அரிவை  இல்வயின் நிறீஇ

இழிமின் என்றநின்  மொழிமருண்  டிசினே;

வான்வழங்(கு) இயற்கை  வளிபூட் டினையோ?

மானுரு  வாகநின்  மனம்பூட்  டினையோ?

உரைமதி  வாழியோ வலவ! எனத்தன்

வரைமருள் மார்பின்  அளிப்பனன்  முயங்கி

மனைக்கொண்டு  புக்கனன் நெடுந்தகை;

விருந்(து)ஏர் பெற்றனள் திருந்திழை யோளே!"

குறிப்பு:

சங்க காலத்தில் மக்கள் பிறப்பாலோ, தொழிலாலோ, செல்வத்தாலோ 

உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொள்ளாமல் அனைவரும் சமம் என்ற உணர்வுடன்

வாழ்ந்தனர் என்பதைப் பாடல் வெளிப்படுத்துகின்றது. தலைவன் தேரோட்டி யைப்

பாராட்டிய நிகழ்வும், மார்போடு அணைத்துக்கொண்ட செய்கையும், தேரோட்டியை

விருந்தினர் போலப் பேணியமையும் சங்க காலத்தில் ஏற்றத் தாழ்வு நோக்காத

சமுதாயம் வாழந்ததைப் புலப்படுத்துகிறது.






 


Saturday, 3 August 2024

படுகிளி கடியும் கொடிச்சி புலத்து அழுதாள்.

 படுகிளி கடியும் கொடிச்சி புலந்து அழுதாள்.

(தினையைக் கொத்தவரும் கிளியை விரட்டும் குறிஞ்சி நிலத்தவள்

அம்முயற்சி கைகூடாமையால் வருந்தி அழுதாள்)


தலைவன் பாங்கனுக்குக்(தோழனுக்குக்) கூறியது:

"சுடுபுன மருங்கிற் கலித்த ஏனல்

படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே

இசையின் இசையாய் இன்பா  ணித்தே

கிளியவள் விளியென எழல்ஒல் லாவே;

அதுபுலந்(து) அழுத கண்ணே சாரல்

குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை

வண்டு பயில் பல்லிதழ் கலைஇத்

தண்துளிக் தேற்ற மலர்போன் றனவே!"

திணை: குறிஞ்சி; பாடல் எண்: 291; புலவர்:கபிலர்.

(ஏனல்=தினை; குளிர்=கிளி விரட்ட ஓசையெழுப்பும்

கருவி; புலந்து=வருந்தி; இன் பாணி= இனிய தாளம்)


பொருள்:

விளைந்ததினைக் கதிருண்ணவருங்கிளியை 

   அச்சுறுத்தி விரட்ட வேண்டிக்

களந்தனிலே குளிர்என்னும் கருவியினால்

    ஒலியெழுப்பும்  கன்னி சோர்ந்து

தளர்ந்தழுதாள், தன்கருவி கிளிகளைஅச்

    சுறுத்தாமல்,  தயவாய் உண்ண

விளிப்பதுபோல் ஒலித்ததனால், நீங்காது

   தினைக்கதிரை மேயும் கூடி.

(விளிப்பதுபோல்=அழைப்பது போல்)


கருத்துடனே தினைப்பயிரைக் காவல்செயின்

    அன்னையரின். கனிவு மிக்க

பரிவினையும் பற்றினையும் பெற்றிட லாம்

    என நினைத்த  பாவை நோகக்

கருவியினால் கிளிகடியும் முயற்சியது

    வீணாகிக்  கதிரைக் கொத்தும்

தருணமதில் மங்கையிவள் மனங்கலங்கி

    யழுதனளே,  தோழா!  காண்க.

(அன்னையர்=நல் தாய் மற்றும் செவிலித்தாய்)


தெளிவுரை:

தோழனே! தினைப்புனத்தில் காவல் செய்யும்(விளைந்த தினைக்

கதிரைக் கிளிகள் கொத்தாமல் பாதுகாப்பது) தலைவி கிளிகளை

விரட்டுவதற்காகக் கையில் வைத்திருக்கும் 'குளிர்' எனப்படும் கருவி

கிளிகளை அச்சுறுத்தும் ஓசையை எழுப்பாமல்  இனிய தாளத்தோடு

கூடிய ஓசையை எழுப்புவதால், கிளிகள் அவ்வோசையைக் கேட்டு

மிரண்டு ஓடாமல், தினைக்கதிரை விட்டு அகலாமல், கொத்தும்

பணியையும் நீக்காமல் உள்ளன. அவ்வோசை தம்மைத் தலைவி

அழைப்பது போல்(தினைக் கதிரைக் கொத்தியுண்ண அழைப்பது போல்)

மயங்கச் செய்தது போலும்! " நான் எந்தப் பணிக்கு  வந்தேனோ, அது

நிறைவேறவில்லை" என்று மனம் வருந்தித்  தலைவி அழுதாள். அவள்

அழுதது மனத்துக்கு நோவளிப்பதாக இருந்த போதும் அவள் செய்கை

நகைப்பையும்(சிரிப்பு) வரவழைக்கிறது. அழுத அவள் கண்கள் மலையருகே

யுள்ள ஆழமான சுனையில் பூத்த குவளை மலர்களைப் போல் விளங்கும்.

பார்வை:

குறுந்தொகை மூலமும் உரையும்: டாக்டர் உ.வே.சா.அவர்கள்.

Saturday, 20 July 2024

குன்றுகெழு நாடனொடு சென்ற நெஞ்சு.

 வருவது கொல்லோ......குன்றுகெழு நாடனொடு சென்ற என் நெஞசே.


நூல்: ஐங்குறுநூறு; திணை:குறிஞ்சி--மஞ்ஞைப்பத்து-பாடல் எண்:

 295; புலவர்: கபிலர். துறை: இஃது தலைமகன் வரைவிடை வைத்துப்

பிரிந்து நீட்டித்துழி உடன் சென்ற நெஞ்சைத் தலைமகள் நினைந்து

கூறியது.


"வருவது கொல்லோ தானே வாராது

அவண்உறை மேவலின் அமைவது கொல்லோ

புனவர் கொள்ளியில் புகல்வரு மஞ்ஞை

இருவி இருந்த குருவி வருந்துறப்

பந்தாடு மகளிரில் படர்தரும்

குன்றுகெழு நாடனொடு சென்ற என்நெஞ்சே."


பொருள்:

"தினைக்கதிரை அறுத்தபின்னர் ஐவனநெல்

         பயிரிடுவான்  செப்பம் செய்ய

நினைத்துவயல் கொளுத்திட்டார் குன்றவர்கள்;

        ஆங்கிருந்த  நிகரில் மஞ்ஞை,

அனைத்துவிதத் தாளடியில் தங்கியுள்ள 

         குருவியெலாம்  அஞ்சும் வண்ணம்

முனைந்துபந்து விளையாடும் மங்கையர்போல் 

         நடந்து,துள்ளி  ஓடிச் செல்லும்.


இத்தகைய வளப்பமிகு மலைநாடன், 

         வரைவிடையில்  என்னை  நீங்கி

மெத்தவுமே மனம்நோகப் பொருள்தேடிப் 

        பிரிந்தகன்றான்;  வேகும் நெஞ்சம்;

அத்தனவன் சொன்னபடி திரும்பவில்லை; 

         சுணங்குவதால்   அல்லல் செய்தான்;

பித்தியைப்போல் அவன்பின்னே சென்றநெஞ்சம் 

         திரும்பிடுமோ?  பிழைசெய் யும்மோ?

(அத்தன்=தலைவன்; சுணங்குதல்= தாமதம் செய்தல்; பிச்சி=

பைத்தியக்காரி; பிழை செய்யுமோ=தவறு இழைக்குமோ அதாவது

திரும்பாமல் தங்கிவிடுமோ)


தெளிவுரை:

தினைக்கதிரை அறுவடை செய்த பின்னர் மலைவாழ் மக்கள் மேற்கொண்டு

ஐவன நெல்லைப் பயிர் செய்ய எண்ணி அவ்வயலைத் தீயிட்டுக் கொளுத்தும்

பொழுது, அங்கே அதுவரையில் தங்கியிருந்த மயில்கள் அவ்விடத்தை விட்டுப்

புறப்படத் தொடங்கின. தினைக்கதிரின் தாளடியில் வாழ்ந்துவந்த குருவிகள்

அஞ்சி நடுங்கும் வண்ணம் அம்மயில்கள் தம் தோகையை விரித்துப் பந்தாடு

கின்ற பெண்களைப் போலத் துள்ளியும் ஓடியும் நடந்து சென்றன. இத்தகைய

வளமுடைய  மலைநாட்டுக்கு உரியவனான தலைவன் திருமணத்தை 

முன்னிட்டுப் பொருள்தேடுவதற்காக என்னை விட்டுப் பிரிந்து சென்றான்.

கார்காலத்தில் திரும்பி விடுவதாகச் சூளுரைத்துக் சென்ற அவன் சொன்னபடி

இதுவரை  வரவில்லை. பைத்தியக்காரியைப் போன்ற என் பேதை நெஞ்சம்

அவனைப் பின்தொடர்ந்து சென்றது. அது திரும்பி என்னிடம் வருமா? அவனோடு

தங்கிவிடுமா?  புரியாமல் குழம்பித் தவிக்கின்றேன்.

Friday, 28 June 2024

புலவரின் உதவியாளர் ",சிவ சிதம்பரம்" என்று முழங்கினார்.

 திரை போட்டு நீயிருந்தாய்; சிங்கபூப! சிரோமணியே!


ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் தொண்டைநாட்டிலுள்ள

(காஞ்சிபுரம், செங்கற்பட்டு, சென்னை முதலிய பகுதிகளைக் கொண்டது)

பொன் விளைந்த களத்தூர் என்னும் ஊருக்குப் பக்கத்திலுள்ள பூதூர் என்ற

சிற்றூரில் வீரராகவ முதலியார் என்ற தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார். அவர்

பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். இருப்பினும் அவர் தந்தையார்

தக்க ஏற்பாடுகளைச் செய்து அவருக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக்

கற்பித்தார். வீரராகவரும் முறையாகக் கற்றுத் தேர்ந்து புலவரானார். "ஏடாயிரங்

கோடி எழுதாது தன்மனத் தெழுதிப் படித்த விரகன்" என்று அவர் தம்மைச் சீட்டுக்

கவிகளில் அறிமுகம் செய்துகொள்வார். 


அவருக்கு உரிய வயதில் திருமணம் நடந்து முடிந்தது. தமிழ்ப் புலவருக்கு என்ன

வருமானம் கிடைக்கும்? அவ்வப்பொழுது வள்ளல்களைப் புகழ்ந்து பாடி அவர்கள்

கொடுக்கும் பரிசில்கள் மூலம் அவர் வாழ்வை நடத்திக்கொண்டிருந்தார். பெரிய

அளவில் வருமானம் இல்லையே என்ற குறை அவர் மனைவிக்கு இருந்தது. ஒரு

நாள் புலவர் வெளியே கிளம்பு கையில் " வெந்நீர் போட்டு வைத்திரு. நாலைந்து 

நாழிகையில் திரும்பி விடுவேன்" என்று கூறிவிட்டுச் சென்றார். சொன்னபடியே

நாலைந்து நாழிகையில் திரும்பிவிட்டார். உடனே குளிக்க எண்ணி மனைவியிடம்

வெந்நீரை எடுத்துவரப்பணித்தார். மனைவியார் வெந்நீரை எடுத்து வந்தார்.ஆனால்

அது சூடேயில்லாமல் தண்ணீர் போன்றே இருந்தது. உடனே புலவர்" ஏன் வெந்நீர்

சூடாக இல்லை? " என்று வினவினார். அந்த அம்மையாருக்கு ஏற்கெனவே கணவரின்

வருமானம் போதுமான அளவில் இல்லையென்ற மனத்தாங்கல் எப்போதும் இருந்த

காரணத்தால் " வருகின்ற வருமானத்துக்கு இது போதாதா?" என்று வருத்தமாகப்

பதிலளித்தார்.


இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த புலவர் மறுநாள் ஒரு மாணவனைத்

துணைக்கு அழைத்துக் கொண்டு" நான் இலங்கைக்குப் போய் வருகிறேன்" என்று

தெரிவித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். இராமேசுவரம் சென்று ஓரிரு

நாட்கள் ஓய்வெடுத்து விட்டு ஒரு மரக்கலத்தில் ஏறி யாழ்ப்பாணம் சென்றடைந்தார்.

அப்பொழுது அப்பகுதியைப் பரராச சிங்கம் என்ற மன்னர் ஆண்டுவந்தார். அவர்

நல்ல தமிழ்ப் பயிற்சி உடையவராய் இருந்தமையால் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார்.

புலவர்களுடன் உரையாடுவதையும் அவர்கள் படைத்த கவிதைகளை/நூல்களைப்

படிக்கச் சொல்லிக் கேட்பதையும் அன்றாட வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவேதான்

நம் வீரராகவ முதலியாரும் தாய்த்தமிழகத்திலிருந்து அவரை நாடி வந்துள்ளார்.


புலவர் மன்னரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்றார். மன்னரைக் காண விரும்புவ

தாகத் தெரிவித்தார். வீரராகவ முதலியாரின் வருகை மன்னருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே புலவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னர் உடனே அவரை அழைத்து 

வருமாறு ஆணையிட்டார். உடனிருந்த சிலர்" புலவர் உடற் குறை உள்ளவர். எனவே

மன்னர் அவரை நேரில் சந்திக்காமல் பரிசிலைக் கொடுத்து அனுப்புவது நல்லது" 

என்றனர். வேறு சிலர் "திரைபோட்டுத் திரைக்கு அப்பால் புலவரை அமரச் செய்து அவருடன்

உரையாடலாம்" என்றனர். மன்னருக்கு இந்த நடைமுறைகளில் விருப்பமில்லை. எனினும்

அமைச்சர் பெருமக்கள் சொல்வதால் அரை மனத்துடன் சம்மதித்தார். உடனே திரை தொங்க

விடப்பட்டது. புலவரை அழைத்துவர ஊழியர்கள் பணிக்கப்பட்டனர்.


இதற்கிடையில் அரண்மனை முற்றத்தில் இருந்த புலவரிடம் சிலர்" உடற்குறையுள்ளோர்

மன்னரைப் பார்ப்பது வழக்கத்தில் இல்லை. எனவே கவிதையை ஏட்டில் எழுதி மன்னருக்கு

அனுப்பிவையுங்கள்; அவர் படித்துவிட்டுப் பரிசளிப்பார். இதுதான் அரசு சம்பிரதாயம்"

என்றனர். புலவர் மிகவும் குழம்பிய மனநிலையில் இருந்தார். அப்பொழுது அரசுப் 

பணியாளர்கள் அரசர் வரச்சொன்னதாகத் தெரிவித்தார்கள். புலவர் தம் மாணவனின் 

துணையோடு அரண்மனைக்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்ததும் திரை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்ததை மாணவன் கவனித்தான்.

மன்னர் திரைக்கு அப்பால் இருப்பதை அறிந்துகொண்டான். அவன் கூரிய அறிவுடையவன்.

திரையைப் பற்றிப் புலவரிடம் குறிப்பாகத் தெரிவிக்க எண்ணிச் "சிவ சிதம்பரம்" என்று

முழக்கமிட்டான். மன்னரும் மற்றவர்களும் மாணவன் பக்திப் பரவசத்தால் மனமுருகி

அவ்வாறு முழங்கியதாகக் கருதிக்கொண்டார்கள். புலவருக்கு மட்டும் அவனது செயலுக்கு

ஏதோ மறைவான பொருளிருக்கும் என்ற கருத்து உதித்தது. ஏற்கெனவே வாசலில்

உடற்குறையுள்ளோர் மன்னரைச் சந்திப்பதில் சிக்கலுண்டு என்று கூறியதை நினைத்துக்

கொண்டார். சிதம்பரம் என்ற சிவத்தலத்தில்  இரகசியத்தை மறைக்கத் திரைபோட்டிருப்பர்

என்ற உண்மை அவர் சிந்தையில் நிழலாடியது. உடனே தமக்கும் மன்னருக்கும் இடையே

திரையைத் தொங்க விட்டிருக்கும் தந்திரத்தை அறிந்துகொண்டார். உடனே பாடினார்:

"நரைகோட்(டு) இளங்கன்று நல்வள நாடு நயந்தளிப்பன்

விரையூட்டு தார்ப்புயன் வெற்(பு)ஈழ மன்னனென் றேவிரும்பிக்

கரையோட்ட மீதில் மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்

திரை போட்டு நீயிருந் தாய்சிங்க பூப! சிரோமணியே!".

பொருள்: நறுமண மாலை தவழும், மலை போன்ற தோள்களை யுடைய ஈழநாட்டு மன்னர்

நம் புலமையை வியந்து பெருமைமிக்க இளம் எருதுக் கன்று,  நல்ல வளமுடைய சிற்றூர்

முதலிய பரிசில் நல்குவார் என்று விரும்பித் தாய்த்மிழகத்திலிருந்து மரக்கலம் ஏறிக் கடல்

கடந்து உம்மைக் காணவந்தால் நீவிர் திரைபோட்டு அமர்ந்துள்ளீர்; இது சரியோ? பரராசசிங்க பூபதியே!


ஈழ மன்னர் பரராசசிங்கம் திகைத்துப் போனார். திரை தொங்கவிட்டிருப்பதைப் பார்வை

யற்ற புலவர் எவ்வாறு தெரிந்துகொண்டார்? ஒருவேளை, தெய்வாம்சம் உடையவரா?

என்று குழம்பிப் போனார். உடனே திரையை நீக்குமாறு ஊழியர்களைப் பணித்தார்.

புலவரோடு ஆர்வத்துடன் உரையாடினார். மேலும் சில நாட்கள் அரண்மனையில் தங்கச்

செய்தார். புலவருடன் பல இலக்கியங்கள் குறித்தும் உரையாடி மகிழ்ந்தார். அமைச்சர்

முதலான மற்றவர்களும் புலவரிடம் தம் ஐயங்களைத் தெரிவித்து விளக்கம் பெற்றுக்

கொண்டார்கள். பின்னர் ஒருநாள் புலவர் தாம் ஊருக்குத் திரும்ப விரும்புவதாகக்

கூற அவருக்கு ஏராளமான பரிசில்களைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பிய புலவரிடம்  மனைவி மிகுந்த

வாஞ்சையுடன் நடந்துகொண்டார். புலவர் தமக்குக் கிடைத்த பரிசில்களைக்

காட்டி " என்னாலும் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும் என்பதைத்

தெரிந்துகொண்டாயா?" என்றார். உடனே மனைவி" தங்கள் அருமையையும்

பெருமையையும் அறிந்துகொண்டேன். அன்று பேசிய பேச்சுக்கு மன்னிப்புக்

கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


பார்வை: நல்லுரைக் கோவை நாலாம் பாகம்-- நூலாசிரியர் டாக்டர்

உ.வே.சாமிநாதனார்.

Tuesday, 11 June 2024

நள்ளிருள் யாமத்து இல்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற்(கு) அல்கிரை யாவாய்!

 நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்

பிள்ளை வெருகிற்கு அல்குஇரை யாவாய்.


குறுந்தொகை--பாடல் எண் 107--மருதத் திணை--பாடிய

புலவர்: மதுரைக் கண்ணனார்.


பொருள் முற்றி வந்த(செல்வம் தேடிக் கொண்டுவந்த)

தலைவனையுடைய தலைவி காமம் மிக்க கழிபடர் கிளவி

யால் கூறியது. காமம் மிக்க கழிபடர் கிளவி: காம உணர்வு

மிகுதிப் பட்டதால், மிகுந்த துன்புற்று, அஃறிணைப் பொருள்

களை விளித்து(அழைத்து)த் தனக்குத் தானே பேசுவது.


"குவியிணர்த்  தோன்றி  ஒண்பூ  அன்ன

தொகுசெந்  நெற்றிக்  கணம்கொள்  சேவல்!

நள்ளிருள் யாமத்(து) இல்எலி  பார்க்கும்

பிள்ளை  வெருகிற்(கு) அல்(கு)இரை யாகிக்

கடுநவைப்  படீஇயரோ, நீயே! நெடுநீர்

யாணர்  ஊரனொடு வதிந்த

ஏம  இன்துயில் எடுப்பி யோயே!"


பொருள்:


தலைவி கூற்று:


அளவிலாக்  காதல்,  பாசம், 

         அன்(பு),எழில்  ஒருங்கே  கொண்ட

இளங்கொடி  எனைப்பி  ரிந்தே

        எட்டாத  தொலைவில்  உள்ள

வளநகர்  சென்று  செல்வம்

        மாண்புடன்  தேடி  மீண்டார்;

தளர்வுற்ற  மனத்தில்  இன்பம்

        தழைத்திட  இணைந்தோம்  யாமே.


குவிந்த,கொத்  தாயி  லங்கும்

        கோலச்செங்  காந்தள்  பூப்போல்

சிவந்தநற்  கொண்டை  கொண்ட

         தீமைசெய்  சேவ  லே!நீ

உவப்பொடு  துயிலும்  எங்கள்

        உறக்கத்தைக்  கெடுக்கும்  வண்ணம்

கவடமாய்க்  கூவி  யெம்மைக்

        காலையில்  எழுப்பி  னாயே.


எங்களின்  துயில்,கு  லைத்தே

        இன்பத்தைக்  குறைத்து  விட்டாய்;

மங்கிய  இருட்டு  வேளை

         வலம்வரும், எலியைக் கொல்லும்

வெங்கொடும்  காட்டுப்  பூனை

          விரும்பிடும்  இரையாய்  உன்னைப்

பங்கமாய்  விழுங்கச்,  சாவாய்;

           பாதகம்  செய்த  சேவல்!


(சேவல் யாதொரு தீங்கும் செய்யவில்லை; பாதகமும் புரியவில்லை. அது இயல்பாய்

அதிகாலையில் கூவியது. வெகுகாலத்துக்

குப்பின் தலைவனொடு கூடிவாழும் தலைவிக்கு வைகறை வேளையில் சேவல்

கூவித் தூக்கத்தைக் கெடுத்ததால் அதனைத்

தீமைசெய் சேவல் என்றும் பாதகம் செய்த

சேவல் என்றும் பிதற்றுகின்றாள்).


விளக்கம்:

 பொருள் தேட வேற்று நாட்டுக்குச் சென்ற தலைவன் வெகு நாட்களுக்குப்

பிறகு திரும்பிவந்தான். "பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?" என்று

கம்பர் இராமாயணத்தில் பாடியதைப் போல வெகுகாலம் பிரிந்திருந்த

இணையர் இணைந்து தூங்குகின்றனர்.  வைகறை வேளையில் சேவல்

வழக்கம்போல் கூவித் தன் கடமையைச் செய்தது. ஆனால் தலைவிக்கோ

சேவலின் கூவல் தன் இன்பத்தைக் குறைத்துவிட்டதாகத் தோன்றியது.

அதனால் காமவுணர்வால் சேவலைச் சபிக்கின்றாள். எங்களின் இன்பமான

தூக்கத்தைக் கெடுத்த சேவலே! நள்ளிரவில் எலியை வேட்டையாடும்

காட்டுப் பூனை உன்னை விழுங்கட்டும் என்று சாபமிடுகிறாள்.

சேவல் தன் இயல்புப்படி  கூவியது. இன்ப மயக்கத்தில் இருந்த தலைவிக்கு

அக் கூவல் இடையூறாகத் தோன்றியது. நல்ல கற்பனை!


பார்வை:

சங்க இலக்கியம்(குறுந்தொகைத் தொகுதி)-- வர்த்தமானன் பதிப்பகம்,

உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல்.

(மூன்று கவிதைகளும் என்னால் இயற்றப்பட்டவை.)

Wednesday, 29 May 2024

தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

 தோழி செறிப்பறிவுறீஇ(தலைவி வீட்டில் அடைபடும் வாய்ப்பைத் 

தெரிவித்து)  வரைவு கடாயது(திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தியது).


தினைப்புனம் காவல்காக்கத் தலைவி வந்திருந்தாள். வழக்கம் போலப்

பகற்குறியில் சந்தித்துப் பேசிப் பழகும் தலைவனும் வந்திருந்தான். அவனிடம்

தோழி கூறியது:" தினைக்கதிர் முற்றிவிட்டது. இனி அறுவடை செய்ய வேண்டியதுதான்.

அதனால் இனிமேல் தலைவி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான்.

வெளியேவர வாய்ப்பில்லை. எனவே, விரைந்து வரைவு(திருமணம்) மேற்கொள்ள

ஏற்பாடு செய்க". நற்றிணை பாடல் எண்:57; குறிஞ்சித் திணை; புலவர் பொதும்பில்

கிழார். பாடல் பின்வருமாறு:


"தடங்கோட்(டு) ஆமான் தடங்கல் மாநிரைக்

குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்

துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி

கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி

வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால்

கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்

மாமலை நாட! மருட்கை யுடைத்தே

செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்

கொய்பதம் குறுகும் காலையும்

மையீர் ஓதி மாணலந் தொலைவே".

பொருள்:

சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் தலைவனுடைய மலையில் காணப்படும்.

அத்தகைய மலையின் வேங்கை மரத்தடியில் வளைந்த கொம்பையுடைய

காட்டுப்பசு தனது கன்றுடன் துயிலும்.;  அதனைக் கண்ட பஞ்சு போன்ற தலையை

யுடைய மந்தி(பெண்குரங்கு) தன் சுற்றத்தினைப் பார்த்து ஓசை எழுப்பாமல் கையால்

சைகை காட்டி அந்தக் காட்டுப் பசுவின் மடியிலிருந்து பால் கறந்து தன் குட்டிக்கு

ஊட்டும். இக்காட்சியை யுடைய மலைநாடனே! தினைக்கதிர் முற்றிவிட்டது. தலைவி

காவல் காக்கத் தேவையில்லை. தினைக்கதிரை அறுவடை செய்யும் பதமும் வந்துவிட்டது.

இனி, தலைவி தினைப் புனத்துக்கு வரமாட்டாள். வீட்டினுள் அடைபட்டுக் கிடைப்பாள்.

வெளியே வர வாய்ப்பில்லாததால் அவளை நீ இனிக் காண இயலாது. நிலைமை

இவ்வாறிருக்க, எது சரி என்று உன் மனத்துக்குத் தோன்றுகிறதோ அதன்படி செயல்படுக.

விரைந்து வரைவு(திருமணம்) மேற்கொண்டால் அவளை மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்

கிட்டும் என்று குறிப்பாகத் தெரிவித்தாள்.


சிறப்புச் செய்தி:

தலைவனுடைய மலைநாட்டில் வாழும் மந்தி காட்டுப் பசுவுக்கு அஞ்சாமல் அது துயிலும்

வேளை பார்த்து அதன் பாலைக் கறந்து தனது குட்டிக்கு ஊட்டிக் காப்பாற்றுவதைப்போலத்

தலைவனும் வரைவு மேற்கொள்ளக்  கொடிய பாலை வழியே வேறு நாட்டுக்குச்

சென்று பொருள் ஈட்டிக் கொண்டுவந்து தலைவியைத் திருமணம்செய்துகொண்டு அவளைக்

காப்பாற்றல் வேண்டும் என்பது பாடலில் பொதிந்திருக்கும் செய்தி. அநேகமாக இப்படியே

தலைவன் நடந்து கொண்டிருப்பான் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அருஞ்சொற்பொருள்:

ஆமான்= காட்டுப்பசு; மடங்கல்=சிங்கம்; துய்த்தலை=பஞ்சு போன்ற தலை; ஞெமுங்குதல்=

அமுக்குதல்; பறழ்= குட்டி.


பார்வை:

சங்க இலக்கியம்(நற்றிணை)--வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.

உரையாசிரியர்: முனைவர் கதிர்.மகாதேவன்.

Monday, 13 May 2024

விலங்குகள் வெளிப்படுத்தும் அன்பு/நட்பு.

 விலங்குகள் வெளிப்படுத்தும் அன்பு/நட்பு.


ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்

ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவான்

ரீஜெண்ட்(சமஸ்தானத்தின் மன்னர் பட்டத்துக்கு உரியவர்

ஆட்சி செய்யும் வயது முதிர்ச்சி அடையாதவராக இருப்பின்

உரிய வயது அடையும்வரை அவர் சார்பாகச் சமஸ்தான நடவடிக்

கைகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் அரசப் பிரதிநிதி)

பதவியில் இருந்து பல நல்ல, அரிய செயல்களைச் செய்தவர் மாட்சிமை

கொண்ட அமராவதி சேஷையா சாஸ்திரிகள் ஆவார். மக்களுடைய

இயல்புகளை நன்றாக அறிந்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில்

வல்லவர். வாயில்லா உயிரினங்கள்மீதும்  அத்தகைய  அருளைப்

பொழிந்தவர்.


ஒருசமயம் பட்டத்து யானைக்கு மதம்  பிடித்துவிட்டதாகவும்  கொடுத்த

உணவை உண்ணாமல் வீசியெறிந்துவிடுவதாதவும் சிலநேரங்களில்

காலின் கீழே போட்டு மிதித்து விடுவதாகவும் அடிக்கடி பிளிறிக்கொண்டே

இருப்பதாகவும் யாரும் அதனை நெருங்குவதற்கு அஞ்சுவதாகவும்  பணி

பாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனே பாகனை அழைத்து இதுகுறித்து

விசாரித்தார். பாகன்" ஐயா நான் பணியில் சேர்ந்து சில நாட்களே கடந்துள்ளன.

இதற்கு முன்பு பணியில் இருந்த பாகன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

அவருக்குப் பதிலாக என்னை நியமித்துள்ளனர். நான் என்னால் இயன்ற

பணிவிடைகளைச்செய்து வருகிறேன்.ஆனாலும் பட்டத்து யானை இயல்பு

நிலையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையின் நான்கு

கால்களிலும் இரும்புச் சங்கிலிகளைச் சுற்றிப்  பிணைத்துள்ளேன்" என்றார்.


திவான் ரீஜெண்ட் உடனே தாமே நேரில் சென்று யானையின் நிலையை ஆய்வு                  

செய்ய எண்ணி யானை கட்டப்பட்டுள்ள கூடாரத்துக்கு வந்து யானையைப் பார்த்தார்.

கரும்பு, அரிசி, வெல்லம் முதலியவைகளைக் கொண்டுவந்து யானைக்குப் படைக்குமாறு

பணியாளர்களை ஏவினார். அவையெல்லாம் யானைமுன்பாகப் படைக்கப் பட்டன. ஆனால்

யானை அவற்றை எடுத்து உண்ணாமல் கீழே போட்டுவிட்டது. திடீரென்று உரத்த குரலில்

பிளிறியது. அதனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. மத்தகத் 

திலிருந்து மதநீர் ஏதும் கசியவில்லை. அதற்கான அறிகுறி ஏதுமில்லை. எனவே திவான்  

யானைக்கு  மதம் பிடிக்கவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து

கொண்டார். வேறு யாது காரணத்தால் யானை இயல்புநிலை தவறி நடக்கிறது? என்று

ஆழ்ந்து சிந்தித்தார்.


பட்டத்து யானையை வேடிக்கை பார்க்கச் சிலர் குழுமியிருந்தனர். ஆனால் எவரும் அதன்

அருகில் செல்ல அஞ்சி ஒதுங்கியே நின்றனர். கூட்டத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி

யானையைப் பார்த்துக் கதறியழுதுகொண்டிருந்தாள். யானை  அப்பெண்ணை நோக்கித்

துதிக்கையை நீட்டி நீட்டிப்பிளிறியது. இதனைக் கூர்ந்து கவனித்த திவான் அப்பெண்ணை

அருகில் வருமாறு அழைத்து விசாரித்தார். "ஏனம்மா அழுகின்றாய்?  யானையைப் பார்த்துப்

பார்த்துக் கதறியழுவதன் காரணம் என்ன?" என்று வினவினார். உடனே அப்பெண் தன்

முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கோண்டு " ஐயா! என் கணவர்தான் இந்தப் பட்டத்து

யானையைக் கவனித்து வளர்த்து வந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இந்த யானை

என் கணவரிடம் மிகவும் அன்பாகப் பழகி வந்தது. அண்மையில் அவர் நோயுற்று இறந்து

விட்டார். அந்தத் துக்கத்தில் நான் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுது கொண்டிருந்தேன்.

இன்று இந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டதாகவும்  இயல்பை மீறி நடப்பதாகவும் கேள்விப்

பட்டு இங்கு வந்தேன். யானையைக் கண்டவுடன் அதன் வாடிய தோற்றத்தைப் பார்த்துத்

துக்கம் நெஞ்சையடைக்க அழுது கொண்டிருக்கிறேன்" என்றாள். உடனே திவான் அவளிடம்

"நீ இந்தக் கரும்பை யானையிடம் கொடுத்துப் பார்" என்றார். அப்பெண் தயக்கத்தோடும்

அச்சத்தோடும் சற்றுத் தொலைவில் இருந்தபடி கரும்பை யானையிடம் நீட்டினாள். என்ன

வியப்பு! யானை பாகனின் மனைவி தனக்குப் பழக்கப்பட்டவள் என்பதனாலும், எத்தனையோ முறை அவள் கையால் கவளம் முதலிய உணவை வாங்கியுண்டதாலும்

தட்டாமல் அவள் கொடுத்த கரும்பை உண்ணத் தொடங்கியது. உடனே குழுமியிருந்த

மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திவான் மேலும் சில கரும்புகளையும் அச்சுவெல்லம் அரிசி முதலியவற்றையும் யானைக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறே

அப்பெண் அனைத்தையும் கொடுக்க, யானை எல்லாவற்றையும் வாங்கியுண்டது.

ஓரிரு நாட்களாக உணவேதும் உண்ணாமல் இருந்த யானை தற்பொழுது வயிறார

உண்டவுடன் தெளிவு பெற்றது. 


இவ்வண்ணமே  இன்னும் சிலகாலம் செய்து வருமாறு அப்பெண்ணுக்குத் திவான்

கட்டளையிட்டார். மேலும் புதிய பாகனையும் யானையிடம் பழகச்செய்யுமாறு அப்

பெண்ணுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு பட்டத்து யானையால் பழைய பாகனின்

மனைவிக்கு அரண்மனைத் தொடர்பு விட்டுப் போகாமல் தொடர்ந்தது. யானையும்

புதிய பாகனிடம் பழகி அவரை ஏற்றுக்கொண்டது. விலங்குகளும் அன்பையும் நட்பை

யும் வெளிப்படுத்துகின்றன. பழைய பாகன் இறந்தவுடன் அவர் நட்பையிழந்த துயரத்

தால் வாடிய யானை பாகனின் மனைவியின் நட்பாலும் புதிய பாகனின் நட்பாலும்

துன்பம் நீங்கித் தெளிவும் தெம்பும் பெற்று இயல்புநிலை அடைந்தது. அன்பே உலகில்

அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறது என்பது உண்மை.


பார்வை: 'நல்லுரைக் கோவை'--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதனார்.

                  (நாலாம் பாகம்).

Saturday, 27 April 2024

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி..

 தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி.


அது பதின்மூன்றாம் நூற்றாண்டுக் காலம். தமிழகத்தில் ஒன்பதாம்

நூற்றாண்டு தொடங்கிப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இடைக்

காலச் சோழர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலம். ஏறத்தாழ

நானூறு ஆண்டுகளுக்கு மேல் பேரரசைக் கட்டியாண்ட சோழர்கள்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஆட்சிப் பரப்பை

இழக்கத் தொடங்கியிருந்த காலம். அதேநேரம் இடைக்காலப் பாண்டி

யர்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலம். முதலாம் சடையவர்மன்

சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் அரியணை ஏறி ஆட்சி நடத்திக்

கொண்டிருந்தார். கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகச்

சோழர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பாண்டியர்கள் எழுச்சி பெறத்

தொடங்கினர்.


கொங்கு நாடு சங்க காலத்திலிருந்தே குறுநில மன்னர்களால் ஆளப்

பட்டு வந்தது. அவ்வப்பொழுது சேர, சோழ மற்றும் பாண்டிய வேந்தர்கள்

கொங்குப் பகுதியைக் கைப்பற்றித் தம் ஆளுகைக்கீழ்க் கொண்டு வருவர்.

பிறகு அது அவர்களின் பிடியிலிருந்து விலகி ஆங்காங்கே குறுநில மன்னர்களின்

ஆட்சிக்கீழ் சென்றுவிடும். கொங்கு நாட்டில் வீரம் செறிந்த தலைவர்கள்

பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தமக்குரிய சிறு படையைத் திரட்டித்

தத்தம் நிலப் பகுதியைப் பாதுகாத்துக் கொள்வர். சேர, சோழ, மற்றும்

பாண்டிய வேந்தர்கள் தேவைப்படும் பொழுது இவர்  போன்ற குறுநில

மன்னர்களின் உதவியை நாடுவர். இவர்களும் அவர்கள் அழைப்புக்கு

இணங்கி உதவி செய்துவிட்டு உரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்வர்.


அக்காலக் கட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழைய கோட்டை

என்ற ஊர் சிறப்போடு விளங்கியது. அங்கு வாழ்ந்த கொங்கு வேளாளர்

தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக்காரர் என்ற பெயர் நிலவியது.

அவர் கொங்கு வேளாளரின் நலம் கருதி நாட்டாண்மை செலுத்துவார்.

அந்த ஊருக்குக் காரை என்ற மற்றொரு பெயரும் இருந்தது. நத்தக்காரையூர்

என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் காலத்தில் மேற்படி ஊரில்

சர்க்கரை மன்றாடியார் என்ற தலைவர் வாழ்ந்துவந்தார். சர்க்கரை என்பது

இயற்பெயர். மன்றாடியார் என்பது குலப்பெயர். மன்று என்பது கிராம நீதி

மன்றம் போன்றது. தம் குலத்தினரின் வழக்குகளை விசாரித்து நீதி/தீர்ப்பு

வழங்கியமையால்  மன்றாடியார் என்னும் பெயர் வாய்த்தது.


சர்க்கரை மன்றாடியார் காலத்தில் கொங்குப் பகுதி பாண்டியர் ஆட்சிக் கீழ்

இருந்தது. பாண்டியர் ஒருமுறை கொங்குப் பகுதிக்கு வந்தபோது சர்க்கரை

மன்றாடியார் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது

பாண்டியர் தமது படையில் கொங்கு வீரர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை

உருவாக்க விரும்புவதாகவும் சர்க்கரையார் அப்பிரிவுக்குச் சேனாபதியாகப்

பணிபுரிதல் வேண்டும் என்றும் கோரினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அவர்

சம்மதித்தார்.


பாண்டியர் படையில் கொங்குப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டதை அறியாத

சோழ வேந்தர் சர்க்கரையாருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.. அதில் "வழக்கம்

போல  நீங்கள் உங்கள் படையை அனுப்பி உதவி புரியவும். தக்க ஊதியம்

வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. உடனே சர்க்கரையார் " நான் கூலிப்படை

திரட்டி வைத்திருக்கவில்லை. எனவே அனுப்ப இயலாது" என்று மறுமொழி

அனுப்பினார். சோழன் மிக்க சினமடைந்து " தாங்கள் படையை அனுப்பாவிட்டால்

தங்கள் பகுதி மீது போர்தொடுப்பேன்" என்று மிரட்டி ஓலைவிடுத்தார்.. சர்க்கரையார்

ஓலையைத் தூக்கி எறிந்து விட்டார்.

பாண்டிய உளவு வீரர்கள் இச்செய்தியைப் பாண்டிய வேந்தருக்குத் தெரிவித்தனர்.

பாண்டியர் சர்க்கரையாருக்கு அவசரமாக ஓலையை அனுப்பி" படையுதவி தேவையா?"

என்று விசாரித்தார். " படை ஏதும் அனுப்ப வேண்டாம். நாங்களே சமாளித்து விடுவோம்"

என்று பதில் ஓலை அனுப்பினார் சர்க்கரையார். சோழன் சொன்னபடியே படையெடுத்து

வந்து கருவூருக்குள் நுழைந்து விட்டார்.. சர்க்கரையார் தமது கொங்குப் படைவீரர்களோடு

சோழ நாட்டுப் படைகளை எதிர்கொண்டார். கடுமையான போர் நிகழ்ந்தது. குருதி

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சோழப்படைகளுக்குப் பெருத்த இழப்பு நேரிட்டது.

சர்க்கரையாரும் சோழ வேந்தனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர். இடையில்

இருபதடித் தொலைவே இருந்தது. சர்க்கரையார் தொடுத்த அம்பு சோழனின் தலைக்

கவசத்தை வீழ்த்தியது. அடுத்து அவர் விடுத்த அம்பு சோழனின் தலைமுடியை உரசிச்

சென்றது. உரசிய வேகத்தில் அவர் தலைமுடியைப் பிய்த்துச் சென்றது. சோழனின்

சுருண்ட முடிக் கற்றை போர்க்களம் எங்கும் பரவலாகச் சிதறியது. தலைக்கு வந்த

தீங்கு தலைக் கேசத்தோடு போனது என்று எண்ணிய சோழன் புறங்காட்டி ஓடினார்..

அவரைத் தொடர்ந்து எஞ்சிய சோழ வீரர்களும் ஓடத் தொடங்கினர். போர்க்களக்

காட்சியை யாரோ ஒரு புலவர் மிக அருமையாக விவரித்துப் பாடியுள்ளார்:

"ஆறெல்லாம் செந்நீர்; அவனியெல்லாம் பல்பிணங்கள்;

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி---வீறுபெறு

கன்னிக்கோன் ஏவலினால் காரைக்கோன் பின்தொடரப்

பொன்னிக்கோன் போன பொழுது".

(தூறு=புதர்; சுரிகுஞ்சி= சருண்ட தலைமுடி; கன்னிக்கோன்=கன்னியாகுமரிக்குத்

தலைவனான பாண்டியன்; காரைக்கோன்= நத்தக்காரையூர்த் தலைவனான

சர்க்கரை மன்றாடியார்; பொன்னிக்கோன்= காவிரிநாட்டுக்குத் தலைவனான

சோழன்).


வெற்றிக்குப் பிறகு சர்க்கரை மன்றாடியார் சடையவர்மன் சுந்தர பாண்டியனை

மதுரையில் சந்தித்துப் போர்க்களச் செய்திகளை எடுத்துரைத்தார். பாண்டியர்

பெருமகிழ்ச்சியடைந்து பலப்பல பரிசுகளைச் சர்க்கரையாருக்கு அளித்தார்.

மேலும்" இன்றுமுதல் நீங்கள் வெறும் சேனாபதியல்லர்; நல்ல சேனாபதி" என்ற

பட்டத்தையும் நல்கினார். அன்றுமுதல் அவர் பழையகோட்டைப் பட்டக்காரர்

நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் ஆனார். அவரின் வழித் தோன்றல்கள்

மேற்படி பட்டத்தை இன்றும் தம் பெயருக்குப்பின் சூடிக் கொள்கின்றனர்.


பார்வை: 'நல்ல சேனாபதி' நூல்-- ஆசிரியர் தமிழறிஞர் கி.வா.ஜெகந்நாதனார்.

Sunday, 7 April 2024

குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்கு நாட்டு மற்போர் வீரர்)

 குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்குநாட்டு மற்போர் வீரர்)


கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூந்துறை என்னும்

ஊரில் மாட்டையாக் குப்பிச்சி என்ற மற்போர் வீரர் இருந்தார்.கொங்கு

வேளாளரில் காடையென்னும் வமிசத்தில் தோன்றியவர் அவர். மற்போர்

புரிவதில் வல்லுநர். பல நாடுகளுக்குச் சென்று ஆங்காங்கு நிலவும்

சிறப்புக்களையும் பண்பாட்டுப் பாங்குகளையும் தெரிந்துகொள்ள ஆவல் 

கொண்டார். கொங்கு நாட்டில் விசயநகர மன்னர்கள் ஆட்சி செலுத்திய

காலம். குப்பிச்சி தான் திட்டமிட்ட படியே விசய நகரம் சென்றுசேர்ந்தார்.


அங்கே ஒரு ஆஸ்தான மற்போர் வீரர் இருந்தார். வெளிநாட்டிலிருந்து

வரும் மற்போர் வீரர்கள் அவரோடு மற்போர் புரிந்து வெற்றியடைந்தால்

மட்டுமே அரசரைப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் அந்த ஆஸ்தான

மல்லருக்குப் பணிந்து நடத்தல் வேண்டும். ஒரு நீண்ட சங்கிலியை அரண்மனை

முதல் வாயிலில் மேலே வளைவாகத் தொங்கவிட்டு அதன் ஒரு நுனியைத்

தன் இடக்கால் விரலால் பற்றிக்கொண்டிருப்பார். வெளிநாட்டிலிருந்து

வருபவர்கள் தலைவணங்கி அச்சங்கிலியின் கீழே நுழைந்து வரல் வேண்டும்.

தன் கால் பட்ட சங்கிலிக்கும் வருபவர்கள் பணிவுகாட்டல் வேண்டும் என்ற

இறுமாப்புடன் நடந்து கொண்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்நாட்டு

மன்னர் இதனைக் கவனிக்கவேயில்லை.


போதாக்குறைக்கு அவர் ஒரு அடங்காத முரட்டுக் குதிரையை வேறு வளர்த்து

வந்தார். ஆஸ்தான மல்லரைத் தவிர வேறு யாரையும் தன்மேல் சவாரி செய்ய

அக்குதிரை அனுமதித்ததில்லை. சொல்லப் போனால் வேறு யாரும் அக்குதிரைமீது

ஏறினால் உயிர் பிழைப்பது அரிதாகும். வேறு நபர் ஏறிவிட்டால் அக்குதிரை

குதிக்கும்; சுற்றிச் சுழலும்; வெறித்தனமாக ஓடும். இப்படியெல்லாம் செய்து

ஏறிய நபரைக் கீழே தள்ளிவிடும். இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஏறிய நபர்

இறங்காமல் சமாளித்துவிட்டால்  அருகிலுள்ள அவ்வூரின் பெரிய ஏரிக்குள்

பாய்ந்து செல்லும். மடமடவென்று நீரில் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும்.

ஆழமான பகுதியில் தன் மேல் ஏறியுள்ள நபரை விழவைக்கும். விழுந்தால்

மூச்சுத்திணறிச் சாகவேண்டியதுதான். இந்த அளவு முரட்டுத்தனம் கொண்ட

குதிரையாகும். இதனால் ஆஸ்தான மல்லரோடு யாரும் வம்பு, வழக்கு வைத்துக்

கொள்வதில்லை. அவருடன் யாதொரு மோதலும் மேற்கொள்ளாமல் மன்னரைப்

பார்த்து வணங்கிப் பரிசு ஏதேனும் கிடைத்தால் பெற்றுக்கொண்டு ஆஸ்தான

மல்லருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவர். இப்படியாக ஆஸ்தான

மல்லர் போட்டி அரசு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.


இந்தச் சூழ்நிலையில் நம் குப்பிச்சி ஆஸ்தான மல்லருடன் மற்போர் நிகழ்த்தத்

தனக்குச் சம்மதம் என்று பலர் முன்னிலையில் அறிவித்துவிட்டார். ஆஸ்தான

மல்லர் திகைத்துப் போனார். தன்னோடு மற்போர் புரிய யாரும் இதுகாறும்

முன்வந்ததில்லை. அந்த அளவுக்கு அனைவரையும் அரட்டி உருட்டி வைத்திருந்தார்.

தற்பொழுது வெளியூர்க்காரர் தனக்கு அறைகூவல் விடுவதை ஏற்றுக்கொள்ள

இயலவில்லை. வேறுவழியின்றித் தானும் சம்மதிப்பதாகக் கூறினார். மன்னர்

காதுக்கு இந்தச் செய்தி எட்டியது. மளமளவென மற்போருக்கான ஏற்பாடுகள்

செய்யப்பட்டன. அரங்கம் தயார் செய்யப் பட்டது. பொதுமக்கள் ஏராளமாகக்

குழுமிவிட்டனர். மற்போர் தொடங்கியது. ஆஸ்தான மல்லர் வெகுநாட்கள் மற்போர்

புரியாமல் சுகவாசியாக இருந்தமையால் தொடக்கத்திலிருந்தே சுணக்கம்

காட்டினார். நம் குப்பிச்சியோ வெளிநாட்டில் தன் திறமையைக் காட்ட எண்ணி

முனைப்புடன் மற்போர் நிகழ்த்தினார். பிறகென்ன? குப்பிச்சி ஆஸ்தான மல்லரை

வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டினார்.


ஆஸ்தான மல்லர் உடனே குப்பிச்சியிடம் அறைகூவல் விடுக்கலானார். "என் முரட்டுக்

குதிரையை அடக்கினால்தான் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன்" என்றார்.

குப்பிச்சி அறைகூவலை ஏற்றக்கொண்டார். "நாளை இதே நேரத்தில் குதிரையை

அடக்கும் போட்டியை நடத்தலாம்" என்றார். மன்னர்"அப்படியே ஆகட்டும்" என்றார்.

குப்பிச்சி அன்றைய மாலைப் பொழுதில் சுண்ணாம்புக் கற்களை ஒரு துணியில்

நிரப்பி அதனை நன்கு மடித்துக் கொண்டார். குதிரையின் சேணத்தின்மீது இந்தச்

சுண்ணாம்புக்கல் கொண்ட துணியைத் தோதாகச் சுற்றிக் கொண்டால் குதிரை

ஆற்றுக்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும் முன்பே சுண்ணாம்புக் கற்கள்

பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தும். சூட்டைத் தாங்க முடியாமல்

குதிரை கரைக்குத் திரும்பும் என்று தந்திரமாகத் திட்டமிட்டார்.


மறுநாள் மன்னர் முன்னிலையில் பொதுமக்கள் கூடினர். ஆஸ்தான மல்லரும்

குப்பிச்சியும் வருகை புரிந்தனர். குதிரை கொண்டுவரப்பட்டது. ஆஸ்தான மல்லர்

குதிரைக்குத் தேவையான போதையூட்டிக் கொண்டு வந்திருந்தார். போட்டி

தொடங்கியது. குப்பிச்சி குதிரையை நெருங்கிச் சேணம், கடிவாளம் போன்றவற்றைச்

சரிசெய்வதுபோல் தான் தயாரித்து வைத்த சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணியைச்

சேணத்தின் மீது சுற்றி வைத்துக் குதிரையின்மீது தாவியேறினார். சுண்ணாம்புக்

கற்கள் நிரம்பிய பகுதி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது.

குப்பிச்சி ஏறியவுடன் குதிரை சிலிர்த்துக்கொண்டு குதித்தது; சுழன்றது; தாவியது;

அதிவேகமாக ஓடியது. குப்பிச்சி குதிரையின் மீது படுத்தவண்ணம் அதன் கழுத்தை

இறுகப் பற்றிக் கொண்டார். குதிரையால் அவரைக் கீழே தள்ள இயலவில்லை. எனவே,

ஏரியை நோக்கி ஓடி அதற்குள் இறங்கியது ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல முயன்றது.

இதற்குள் சேணத்தைச் சுற்றியுள்ள துணியில் இருந்த சுண்ணாம்புக் கற்கள் தண்ணீர்

பட்டவுடன் பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தியது.


சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்

ததால் வெப்பம் அதன் அடிவயிற்றைத் தாக்கியது. சூட்டைத் தாள மாட்டாத குதிரை

மேற்கொண்டு ஆழத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பிக் கரையை நோக்கி வரத்

தொடங்கியது. சுண்ணாம்புச் சூட்டால் குதிரையின் வெறி, வேகம் எல்லாம் தணிந்து

மெதுவாக நடை பயின்று கரையேறியது. மன்னருக்கும், ஆஸ்தான மல்லருக்கும்,

குழுமியிருந்த பொதுமக்களுக்கும் இந்தத் தந்திரம் தெரியாததால் குதிரையின்

ஆவேசம் தணிந்ததற்குக் காரணம் விளங்காமல் குப்பிச்சிக்குக் கிடைத்த தெய்வ

அருள் அவரைக் காப்பாற்றியதாக நம்பினர். குப்பிச்சி வெற்றி வீரராக அரங்கை

வலம்வந்தார். ஆஸ்தான மல்லர் நிறுவிய சங்கிலியை அகற்ற வேண்டுகோள்

வைத்தார். மன்னரும் பரிசுகள் நல்கி அவர் கோரிக்கையை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்வைக் கொங்கு மண்டல சதகம் என்ற நூல் விவரிக்கிறது(பா.எ.56):

"தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்

வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமய மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே."

விளக்கம்: விசயநகர அரசில் ஆஸ்தான மல்லரை வெற்றி கண்டு அவரது முரட்டுக்

குதிரையை அடக்கி எல்லோரும் மெச்ச அந்நாட்டில் சிறப்படைந்த குப்பிச்சி

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே.


பார்வை: நினைவு மஞ்சரி 2ஆம் பாகம்(நூல்)

ஆசிரியர்: தமிழ்த்தாத்தா  உ.வே.சாமிநாதையர்

Sunday, 24 March 2024

விதி வலியது. விதிப்படியே எல்லாம் நடக்கும் .

 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும்  துய்த்தல் அரிது.(குறள்:377).


தனிப்பாடல்கள் பல்வேறு சூழ்நிலையில் பாடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஒரு கதை/நிகழ்ச்சி இருக்கும்.

பின்வரும் தனிப்பாடலும் ஒரு விந்தையான சூழ்நிலையில் தான்

பாடப்பட்டது. பாடல் பின்வருமாறு:

"நாடெலாம் செந்நெல் விளையினும் நாட்டின்

        நதியெலாம் நவமணி தரினும்

காடெலாம் ஆடை காய்க்கினும் மேகம்

        கனகமே பொழியினும் மடவாய்!

ஆடலே புரியும்  அம்பல வாணர்

       அவரவர்க்(கு) அமைத்ததே யல்லால்

வீடெலாம் கிடந்து புரண்(டு)உருண்(டு) அழினும்

         விதியலால் வேறுமொன்(று) உளதோ?".

பொருள்: நாடெல்லாம் செழிப்பாய்ச் செந்நெல் விளைந்தாலும், நாட்டின்

நதியெல்லாம் நவமணிகளைத் தந்தாலும், காடெல்லாம் ஆடையாய்க்

காய்த்தாலும், மேகம் பொன்னையே பொழிந்தாலும், பெண்ணே!, ஆடல்

நிகழ்த்தும் அம்பல வாணர் அவரவர்க்கு இன்ன இன்ன பொருளை அனு

பவிக்கும் வாய்ப்பை வகுத்துக்கொடுத்ததைத் தவிர வேறு எதனையும்,

வீடெல்லாம் கிடந்து புரண்டு உருண்டு அழுதாலும், அனுபவிக்க வாய்ப்பில்லை.

இதை விதியென்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை என்னவென்று அறிவோம்.


இப்பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த

காலம் மழைபொய்த்ததனால் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் நிலவிய கொடுங்

காலம்.புலவரை ஆதரிக்க மூவேந்தர்களோ அவரையொத்த கொடை வள்ளல்

களோ இல்லாத காலம். ஆங்காங்கே சில சமீன்தார்களும், நிலக்

கிழார்களும்  வாழ்ந்துவந்த காலம். கொடுமையான பஞ்சம் நிலவிய காலம்.

புலவர்க்கோ தமிழைத் தவிர வேறு தொழில் தெரியாது. பஞ்ச காலத்தில்

பிழைப்பு நடத்த அவர் இருந்த ஊரில் வழியில்லாத காரணத்தால் வேறு

ஊருக்குச் செல்ல முடிவுசெய்து தம்மிடமிருந்த ஒருசில பொருட்களை எடுத்துக்

கொண்டு மனைவியுடன் காட்டு வழியில் நடந்து சென்றார். வேற்றூரில் எப்படி

பிழைப்பு நடத்தப் போகிறோம் என்ற கவலையுடன் தள்ளாடி நடந்து

சென்றனர். வழியில் கள்வர் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்

புலவரையும் அவர் மனைவியையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தோற்றம்

கடுமையாக இருந்தது. புலவர் மனைவி அச்சத்துடன் நடுங்கியபடியே "அண்ணன்

மார்களே! நாங்கள் புலவர் குடும்பத்தினர். பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்கின்

றோம். எங்களுக்குத் துன்பம் இழைத்து விடாதீர்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்"

என்று கூறினாள். அக்கூட்டத்தில் ஒருவன் இரக்ககுணம் உடையவன் போலும்.

அவன் புலவர் மனைவியிடம்" நீங்கள் எங்களோடு இருக்கலாம். எங்கள் தொழிலில்

எமக்குக் கிடைக்கும் இலாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், புலவர்

எங்கள் தொழிலில் எங்களுக்கு உதவுதல் வேண்டும்" என்று சொன்னான். புலவர்

" நீவிர் என்ன தொழில்புரிகின்றீர்?" என வினவினார். "நாங்கள் கள்வர்கள். ஆனால்,

ஏழைகளிடமும்  தருமவான்களிடமும் திருட மாட்டோம்;  தாமும் அனுபவியாமல்

பிறருக்கும் ஈயாமல்  வாழ்க்கை நடத்தும் கஞ்சர்களிடம் திருடுவோம்." என் நவின்றான்.

மேலும் "நல்லவர்கள் வீட்டுக்குத் திருடச் சென்றால் அபசகுனங்கள் தோன்றி எங்களை

எச்சரிக்கும். மேலும் கன்னம் வைக்கும் பொழுது தேள் கையில் கொட்டிவிடும். நாங்கள்

அவ்வீட்டில் திருடாமல் திரும்பி விடுவோம்" என்றான்.


நாலைந்து நாட்கள் கடந்து சென்றன. கள்வர்கள் புலவரையும் மனைவியையும் நன்கு

கவனித்துக் கொண்டனர். ஒருநாள் அக்கூட்டத்தின் தலைவன்  புலவரை நெருங்கி

"ஐயா, இன்றிரவு பக்கத்து ஊரிலிருக்கும் சமீன்தார் அரண்மனைக்குச் செல்லத்

திட்டமிட்டுள்ளோம். நீங்களும் எங்களுடன் வந்து தொழிலில் பங்கெடுத்துக் கொள்

ளுங்கள்" என்று தெரிவித்தான். புலவரும் "வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால்

முருங்கைமரம் ஏறத்தானே வேண்டும்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

திட்டமிட்டபடியே அனைவரும் பக்கத்து ஊருக்குச் சென்று சமீன்தார் அரண்மனையை

நெருங்கினர். கள்வர் கூட்டத் தலைவன் அரண்மனையைச் சுற்றிவந்து நோட்டமிட்டான்.

ஓரிடத்தில் கன்னமிட்டு அத்துளை வழியே புலவரை நுழையச் செய்தான். "புலவரே,

உள்ளே போய் நோட்டமிட்டு அரண்மனைப் பொக்கிஷ அறை எங்குள்ளது என்று

அறிந்து எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று உரைத்தான்.


புலவருக்கு முதலில் ஒன்றும் பிடிபடவில்லை. கும்மிருட்டாக இருந்தது. சிறிது நேரம்

பழகிய பின்னர் கண்கள் நன்றாகத் தெரிந்தன. அவர் நுழைந்த இடம் அரண்மனை

அந்தப்புரம் ஆகும். அங்கு ஒரு பெரிய அறையில் வேலைப்பாடமைந்த ஒரு மஞ்சத்தில்

சமீன்தார் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அலங்கார விளக்குகள் வெளிச்சம்

தந்தன. புலவருக்கு ஒன்றும் தோன்றாமல் மஞ்சத்தினடியில் பதுங்கிக்கொண்டு என்ன

செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.


நான்கு சாமப் பொழுது கடந்த நள்ளிரவு நேரம்.  திடீரென்று சமீன்தாரும் அவர் மனைவியும்

உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர். எழுந்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டே பற்பல

விடயங்கள் குறித்துப் பேசிக் கொண்டனர். பேச்சின் நடுவில் சமீன்தார் மனைவியிடம் "நாம்

ஒரு செய்யுள் இயற்றுவோம்; முதலிரண்டடியை நான் பாடித் தொடங்குவேன்; மீதமுள்ள

இரண்டடியை நீ நிறைவு செய்" என்றார். சொன்னபடியே முதலிரண்டடியைப் பாடிவிட்டு

மீதமுள்ள இரண்டடியைப் பாடுமாறு மனைவியிடம் கூறிவிட்டுக் காத்திருந்தார். இருவரும்

தமிழ்ப் பயிற்சி யுடையவர்களே; இருப்பினும் சமீன்தாரிடம் காணப்பட்ட வேகம் அவர்

மனைவியிடம் இல்லை. அவள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில், மஞ்சத்தின் கீழே படுத்திருந்த புலவர் தாம் திருட்டுக்குத் துணையாக

வந்திருப்பதை மறந்து சமீன்தாரின் பாடலை எப்படி நிறைவு செய்யலாம் என்று

யோசித்து மீதியுள்ள இரண்டடியை உரத்த குரலில் பாடிக்கொண்டே வெளியே வந்தார்.

சமீன்தாரும் அவர் மனைவியும் திடுக்கிட்டுப் போனார்கள். அவர் மனைவி நாணத்துடன்

வேறு அறைக்குச் சென்றுவிட்டாள். சமீன்தார் புலவரைப் பார்த்துச் சினமடைந்தார்.

"யார் நீர்? இங்கு ஏன் வந்தீர்? எப்படி வந்தீர்?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை எழுப்பி

அதட்டினார். புலவருக்கு உடலெங்கும் நடுக்கம் எடுத்தது; வாய் குழறியது; பேச்சுத்

திக்கியது. பின் ஒருவாறு மனம் தேறி தான் யார் என்பதனையும் திருடுவதற்காக

வந்ததையும் ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.


சமீன்தார் புலவர் கூறிய கதையைக் கேட்டு அவர்பால் பரிவுகொண்டார். அவர் கையைப்

பற்றியிழுத்துப் பொக்கிஷ அறைக்குள் நுழைந்தார். பொக்கிஷ அறைக்குள் நுழைந்த

புலவர் பிரமிப்படைந்தார். இவ்வளவு நகைகளையும் பொற்காசுகளையும் பாத்திரபண்டங்

களையும் அவர் தம் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. ஒருவாறு பிரமிப்பு அகன்று இயல்பு

நிலைக்கு வந்தார். சமீன்தார் புலவரிடம் " உமக்கு எது வேண்டுமோ அதனை எடுத்துக்

கொள்க" என்று கூறினார். புலவர் வெகுநேரம் யோசித்து அங்கே தென்பட்ட ஓரளவு பெரிய

பெட்டியைக் காட்டி அதனை எடுத்துக் கொள்ளலாமா? என்று வினவினார். சமீன்தார் சரி

என்றார். புலவர் அப்பெட்டியைத் தூக்க முடியாமல் திணறித் தூக்கிக் கொண்டார். சமீன்

தாரும் ஒருகை கொடுத்தார். ஒரு வழியாகப் பெட்டியை வெளியே கொண்டுவந்துவிட்டனர்.

கள்வர்கள், வெகுநேரம் புலவர் வராததால் தப்பி ஓடிவிட்டனர். புலவர் சமீன்தாரிடம் விடை

பெற்றுக்கொண்டு மனைவி இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.


இருவரும் ஆவலுடன் பெட்டியைத் திறந்தனர். புலவரின் பொல்லாத விதி வேலை செய்தது.

பெட்டிக்குள் ஆடை, ஆபரணம், பொற்காசு ஏதுமில்லை. வெறும் உப்புத்தான் இருந்தது.

புலவரின் மனைவி "கீரைக் கறிக்கு உப்பு உதவும்" என்று கூறிவிட்டு அதனைத் தடவிப்

பார்த்தாள். அது சமையல் உப்பு அல்ல; வாண(வெடி) உப்பு. புலவர் பொல்லாத விதியை

நொந்து கொண்டு முதலில் கூறிய பாடலைப் பாடி மனந் தேறினார்.


ஆதாரம்: 'நான் கண்டதும் கேட்டதும்' நூல்--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Friday, 8 March 2024

பரிவட்டம்--விடாக் கண்டரும் கொடாக்கண்டரும்.

 பரிவட்டம்--விடாக்கண்டரும் கொடாக்கண்டரும்.


பொருநை(தாமிரவருணி)யாறு பாயும் திருநெல்வேலிச் சீமை

சங்க காலத்திலிருந்தே சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. பொருநை

யாறு இந்த மாவட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஆறாகும். ஆண்டு

முழுவதும் நீர் வற்றாமல் ஓடும் இந்த ஆறு கடலோடு கலக்குமிடத்தில்

முத்து விளைகிறது. பொருநையாற்றில் பல துறைகள் அமைந்துள்ளன.

இவ்வாற்றின் மேல் கரையில் குறுக்குத்துறையமைந்துள்ளது.  இதற்கு

வடபால் உள்ள மற்றொரு துறை சிந்துபூந்துறை யாகும். இத்துறையில்

ஆற்றின் இடையில் திருவுருமா என்ற முருகன்  தலம் அமைந்துள்ளது.

அங்கே உயரமான பாறையொன்றில் முருகக் கடவுளின் திருவுருவம்

உள்ளது. அப்பாறையே திருவுருமாமலை யாகும். அவ்வாலயத்தைச்

சார்ந்து ஒரு பெரிய மண்டபம் உள்ளது. நாடோறும் உள்ளூர் மக்களும்

வெளியூர் மக்களும் அங்கு வந்து ஆற்றில் நீராடி அம்மண்டபத்தில்

பார்த்திப பூசை, உடையவர் பூசை, ஏட்டருச்சனை முதலியன  நிகழ்த்தி

விட்டுத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.


ஏறத்தாழ நூறு/நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு  சைவப்பிரபுவாகிய

செட்டியார் ஒருவர் குறுக்குத்துறைக்குவந்து நீராடிவிட்டு  மண்டபத்தில்

பூசை நிகழ்த்தத் தொடங்கினார். வேலைப்பாடமைந்த ஒரு பெட்டியிலிருந்து

மூர்த்திகளையும் வெள்ளியினால் உருவாக்கப்பட்ட பூசைப் பாத்திரங்களையும்

சரிகைக்கரையிட்ட பட்டுப் பரிவட்டங்களையும் வெளியே எடுத்து வைத்தார்.

வேறொரு பிரம்புக் கூடையிலிருந்து பலவிதமான பழவகைகள், தேன், பன்னீர்,

பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கலவைச் சந்தனம், மலர்மாலைகள் முதலானவற்றை 

எடுத்து வைத்தார். அவர் பரப்பிவைத்த பொருட்களெல்லாம் அருகிலிருந்தோர் 

கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. நறுமணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது.


சற்று நேரத்தில் சைவகுரு ஒருவரும் அங்கே வந்து சேர்ந்தார். அவர் ஏழ்மை நிலை

யில்உள்ளவர் போலும். அவர் தம்முடைய பழைய பிரப்பம் பெட்டியைத் திறந்து சில மூர்த்தி

களையும்  கந்தல் பரிவட்டங்களையும் சில பூசைப் பாத்திரங்களையும் வெளியே எடுத்து

வைத்தார். கந்தல் பரிவட்டத்தை நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தினார். அவரும்

பூசையைத் தொடங்கினார். அவர் மனத்தில் தாழ்வு மனப்பான்மை பீறிட்டெழுந்தது.

அருகிலிருந்த செல்வந்தரான செட்டியார்பால்  காரணமில்லாமல் பொறாமை உருவானது.

செட்டியார் தம் பரிவட்டம் ஒன்றை நமக்குத்தந்தால் குறைந்தா போய்விடுவார்?  நாமும்

கடவுளுக்குச் சாத்தி மகிழலாமே என்று எண்ணினார். நேரடியாக அவரிடம் கேட்பதற்கு

வெட்கப்பட்டுத்  தயங்கினார். அவர் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவராதலால் உடனடியாகப்

பாடல் ஒன்றை இயற்றினார். வழக்கம்போல் தேவாரம், திருவாசகம் போன்ற பழமையான

பாடல்களைப் பாடிய பின்னர் உரத்த குரலில் தாம் புதிதாக இயற்றிய பரிவட்டம்  வேண்டும்

பாடலைப் பாடத் தொடங்கினார். அப்பாடல் பின்வருமாறு:

"நரிவட்டம் இருங்களத்தில் அந்தகா சுரனைவென்ற

      நம்பா! செம்பொற்

கிரிவட்டத் தனத்(து)உமையாள் பங்காளா! எளியன்மொழி

      கேளா(து) ஏனோ?

கரிவட்டத்(து) உரிபுனைந்த குறையோ?நம் செட்டியார்

       கையில் மேவும்

பரிவட்டம் தனில்நினைவோ? வேண்டுமென்றால் அவரதனைப்

பாலிப் பாரே."

பொருள்: நரி வட்டமிடும் போர்க்களத்தில் அந்தகாசுரனை வென்ற

சிவபெருமானே! உமையம்மையை இடப்பக்கத்தில் உடையவனே!

எளியேனின் சொல் கேளாதது ஏனோ?  யானையின் தோலைப்

போர்த்தியிருக்கும் மனக்குறையோ?(தாருகாவனத்து முனிவர்கள்

ஏவிவிட்ட யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக்

கொண்டதாகப் புராணம் கூறும்.) அருகிலிருக்கும் செல்வந்தரான

செட்டியார் கையிலுள்ள பரிவட்டம் பற்றிய நினைவா? வேண்டுமென்று

நீ தெரிவித்தால் செட்டியார் பரிவட்டம் ஒன்றைக் கொடுப்பாரே.

சைவகுரு தமது உள்ளக்கிடக்கையைச் சிவபெருமான் கோரிக்கையாக

எடுத்துரைத்த தந்திரத்தை மெச்சத்தான் வேண்டும்.


செல்வச் செட்டியார் சைவகுருவைவிடவும் கெட்டிக்காரர். பரிவட்டம்

வேண்டுமென்று தம்மிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிச் சிவபெரு

மான் வேண்டுவது போலப் பாடுகின்றாரோ?  என்று

சிந்தித்துத் தாமும் சைவகுருவைப் போலவே பாட்டால் விடையளித்து

விடுதலே நன்று என்ற முடிவெடுத்துப் பாடல் இயற்றத் தொடங்கினார்.

சைவகுருவைப் போலச் செட்டியார் பெரும் புலவர் அல்லர். ஓரளவே

புலமையுடையவர். எனவே தியானத்தில் இருப்பதுபோல் கண்களை

மூடிக்கொண்டு வெகுநேரம் சிந்தித்து இறுதியில் பாடலை இயற்றி

முடித்தார். உடனே கண்களைத் திறந்து சைவகுருவைவிடவும் உரத்த

குரலில் பாடத் தொடங்கினார்:

"கொத்தாரும் குழலுமையாள் வாழும் பங்கிற்

        கோமானே! எளியன்மொழி கொள்ளா        தேனோ?

அத்தார்கள் ஆணை;யென(து) ஐயன் ஆணை;

         அம்மைமேல் ஆணை;யுயர் அண்டர்    ஆணை;

பத்தார்கள் ஆணை; யுன்றன் பாத‌த்(து) ஆணை;

         பண்டாரம் தொண்டைகட்டப் பாடிப் பாடிச்

செத்தாலும் எலும்பெலும்பாய்த் தேய்ந்திட்  டாலும்

          தேவரீர் உடைமையொன்றும் செலவி டேனே".

பொருள்:

உமையம்மையை இடப் பக்கத்தில் கொண்ட கோமானே!

எளியேனின் பேச்சைக் கேளாதது ஏனோ? பெரிய சமயத்

தலைவர்கள்மேல் ஆணை; என் ஐயன் சிவபெருமான்மேல் ஆணை;

உமையம்மைமேல் ஆணை; முப்பத்து முக்கோடி தேவர்கள்மேல்

ஆணை; பக்தகோடிகள்மேல் ஆணை; ஈசனே! உன் பாதத்தின்மேல்

ஆணை; சைவகுரு தொண்டைகட்டும்படி பாடிப் பாடிச் செத்தாலும்

எலும்புகள் வெளியே தெரியும்படி உடல் தேய்ந்திட்டாலும்

தேவரீர்! உமக்காக நான் வைத்துள்ள பொருள் எதனையும் செலவு

செய்யமாட்டேன், அதாவது, உமக்குரிய பொருளை நான் பிறருக்குத் தரமாட்டேன்."

சைவகுரு விடாக்கண்டர்;  செல்வந்தரான செட்டியார் கொடாக்கண்டர்.


பார்வை:

'நான் கண்டதும் கேட்டதும்' நூல் ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Tuesday, 20 February 2024

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் நீயுரைத்தி வையை நதி.

 "தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்   நீ உரைத்தி வையை நதி".


நாடு செழிப்பாக இருப்பதற்குக் காரணம் மழையும் ஆறும் ஆகும்.

கடவுள் வாழ்த்தாகத் திங்களையும், ஞாயிறையும் போற்றிய

சிலப்பதிகாரம் அடுத்ததாக மாமழை போற்றுதும் என்று பகர்கிறது.

எனவே இவற்றைத் தெய்வமாகக் கருதித் தொழுதனர் பண்டைய

தமிழ்மக்கள். மாதம் மும்மாரி பொழிந்தால் அந்நாடு செழிப்படைதல்

திண்ணம். நல்ல மழைப்பொழிவு கிட்டினால் நல்ல ஆறும் நிச்சயம்

உருவாகும். தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை,

பொருநை(தாமிரவருணி) முதலிய ஆறுகள் இருந்தாலும் பரிபாடல்

இலக்கியத்தில் பேசப்படுவது வையை மட்டுமே. அதுவும் வையைநதிக்கு

அடைமொழி கொடுத்துத் 'தமிழ்வையை' என்று புகழப்பட்டுள்ளது.

பரிபாடலில் நமக்குக் கிடைத்த பாடல்கள் இருபத்திரண்டு மட்டுமே. அதில்,

திருமாலைப் பற்றி ஏழு, செவ்வேளைப் பற்றி எட்டு, வையையைப் பற்றி

எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருமால், செவ்வேள்(முருகன்) முதலிய

தெய்வங்களை வழிபட்டு அவர்களிடம் வரம் கேட்டது போலவே வையை

ஆற்றையும் வழிபட்டு வரம் கேட்டனர் என்று பரிபாடல் தெரிவிக்கிறது.


ஆறுகள்  உழவுக்கு இன்றியமையாதது போலவே புனலாடுதலுக்கும்

இன்றியமையாதது. பண்டைய தமிழ் மக்கள் ஆறு, குளம் போன்றவற்றில்

நீராடி மகிழ்ந்தனர் என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. (நூற்பா1138)

"யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப".

கன்னிப் பெண்கள் தைந்நீராடுதல் தவச் செயலாகக் கருதப்பட்டது.

'ஐங்குறுநூறு' என்ற சங்க இலக்கியத்தில் ' புனலாட்டுப் பத்து' என்ற தலைப்பில்

பத்துப் பாடல்கள் உள்ளன. இக்கட்டுரை வையைப் புனல் பற்றியும், தைந்நீராடல்

பற்றியும் எடுத்துரைக்கும்.


வையை ஆறு வருச நாட்டுப் பகுதியில் உருவாகிறது. சைய மலையில் பொழியும்

மழையின் மிகுதியே வையையாற்றின் வெள்ளப்பெருக்குக் காரணமாகும். மலையிலுள்ள

புன்னை மலர்களையும், கரையிலுள்ள சுரபுன்னை மலர்களையும், வண்டுகள் ஒலிக்கும்

செண்பக மலர்களையும், குளிர்ந்த இயல்புடைய தேற்றாமரப் பூக்களையும், கூவிளைப்

பூக்களையும், கிளைகளைக் கொண்ட வேங்கைமலர்களையும், செவ்வலரி, செங்காந்தள்,

தீயென மலரும் தழைத்த தோன்றிமலர், ஊதைக் காற்றால் கட்டவிழ்க்கப்பெற்ற இதழ்களை

உடைய நீல மலர் ஆகியவற்றையும் மூங்கில் அடர்ந்த சோலைக்கு அருவி அடித்திழுத்து

வந்தது. அலைகளையுடைய நீர் அம்மலர்களைத் தள்ளி வந்து மருதந்துறையில் சேர்த்தது.

அதனால் அத்துறையின் அழகை விவரித்தல் எளிதன்று. முதலில் வளர்பிறைபோல் நீர்ப்

பெருக்கு கூடிக் கொண்டு வந்தது. பின்னர் தேய்பிறை போல் நீர்ப் பெருக்கு சுருங்கத்

தொடங்கியது. ஆனால் முற்றிலும் வற்றியதில்லை.


வையையாற்றில் மக்கள் நீர் விளையாட்டு விளையாடுவர். ஆற்றிலே அணியாக நின்று

நெட்டியாலான வாளைச் சுழற்றுவார் சிலர். குந்தம்(வேல்) ஏந்துவார் சிலர். மகளிர் தேர்க்கு

மகளிரும் மைந்தர் தேர்க்குப்பாகரும் கோல் கொள்ளக் கொடிகட்டி வலிய தேரில்

ஏறுவார் சிலர். பறவை போல் பறக்கும் குதிரை மீதும் பொன்னால் ஆன  நெற்றிப் பட்டத்தை

அணிந்த யானை மீதும் ஏறி,  ஆற்றின் ஆழமான பகுதியில் அவற்றைச் செலுத்தித் திரிவார்

சிலர். மூங்கிற் குழாயால் நீரைப் பீய்ச்சுவார் சிலர். மணமிக்க மாலையைச் சுழற்றிஎறிவார்

சிலர். கொம்பென்னும் கருவியால் நீரை வீசுவார் சிலர். பெண்கள் நீராடுதற்கேற்ற அணி

களையும் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலைகளையும் அணிந்திருந்தனர். அழகிய

நகைகளோடு நுண்ணிய வேலைப்பாடமைந்த பிற அணிகளையும் பொன்னரி மாலை

யினையும் மகளிர் பூண்டிருந்தனர். வையை நீர் கார்காலத்தில் கலங்கி வேனிற் காலத்தில்

தெளிந்து வருதலால் எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.


கார்காலம் நீங்கியது. குளிர் மிகுந்த பின் பனிக்காலம் தொடங்கியது. கன்னிப் பெண்கள்

தம் தாயர் அருகே நின்று நீராடுதலால் தைந்நீராடல் அம்பாவாடல் எனவும் பெயர் பெற்றது.

"வெம்பா தாக, வியன்நில வரைப்பென

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்

பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின்

ஊதை ஊர்தர"............ (இந்நில உலகம் வெயிற் கொடுமையால் வெம்பாது  மழையால் 

குளிர்வதாகுக என வாழ்த்தி உடலை நடுங்கச் செய்யும்  பனியில் மனந்துணிந்து

தைந்நீராடினர். அப்போது சடங்குகள் அறிந்த முதுபெண்டிர், நோற்கும் முறையினைச்

சொல்லிக் கொடுத்தனர். பனியோடு கூடிய விடியற் காலத்தில் பெருமணலை அரித்தோ

டும் நீரில் மூழ்கி எழுவர். அப்போது வாடைக் காற்று வீசி நடுங்க வைக்கும்.

தைந்நீராடல் பெண்களால் தைமாதத்தில் விடியற் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது தவச்செயல் எனவும் கருதப்பட்டது. எனவேதான் 90,91,92ஆம் வரிகளில்

"தீயெரிப் பாலும் செறிதவமுன் பற்றியோ?

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்

நீயுரைத்தி வையை நதி"

என்று பாடப்பட்டுள்ளது. தைந்நீராடல் பிற்காலத்தில் சமயச் சார்புடையதாக

மாறி மார்கழி நீராடல்--பாவை நோன்பு எனப் பெயர் பெற்றது. நாட்டு நலன்

கருதி மழைவேண்டியும் நல்ல கணவன்மார் வேண்டியும் கன்னியர்

தைந்நீராடியதைப் பரிபாடல் கூறுகிறது. ஆனால், திருப்பாவை, திருவெம்பாவை

ஆண், பெண் இரு பாலாரும் வீடுபேறு(,மோட்சம்) கருதிச் சமயச் சார்புடன்

வழிபடுவதைக் கூறும்.


"தைந்நீரே! நீ நிறம் தெளிந்திருத்தலால் யாம் புனலாடுவதற்கேற்ற தகுதி

உடையாய்! எம் கழுத்தில் போட்ட கைகளை எடுக்காமல் காதலர் எம்மைத்

தழுவ, யாம் சிறந்த பேற்றினைப் பெறுவோமாக என வேண்டுவோம் என

மகளிர் வையையிடம் வரங்கேட்டு மொழிந்தனர். சிலர் எம்மால் விரும்பப்

படும் தலைவர் எம்மை விட்டுப் பிரிந்து செல்லாமல் எம்முடன் இருத்தல்

வேண்டும் என்று வரம் கேட்டனர். வேறு சிலர் எம் கணவரும் யாமும் 

பேரிளம்பெண் பருவம் அடையும்வரை இளமையுடன் இருந்து நிறைந்த

செல்வமும் கேளிரும் பொருந்த வாழ்வோமாக என வரங்கேட்டனர்..


வையையே! இத்தைந்நீராடலை முற்பிறப்பில் செய்த தவத்தால் இப்பிறப்பில்

பெற்றோம். யாவரும் விரும்பத்தக்க நிறைந்த நீர்(வெள்ளம்,) உன்னிடம்

வரும்போது மறுபிறப்பிலும் இத்தைந்நீராடல் எமக்கு வாய்ப்பதாகுக!

பரிபாடல் பதினொன்றாம் பாடல்--புலவர் நல்லந்துவனார்.


பார்வை: பரிபாடல்--வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.

உரையாசிரியர்: முனைவர் இரா.சாரங்கபாணி.

Monday, 5 February 2024

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

 இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.


கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காண்போம்:

தோழி கூற்று: (செவிலித் தாயிடம் உரைத்தது).

அன்னையே!  ஆற்று வெள்ள அழகால் கவரப்பட்ட தலைவி எங்களுடன்

நீராடினாள். எதிர்பாராமல் உடல் தளர்ந்து தனது தாமரை போன்ற

கண்களை மூடிக்கொண்டு  நீந்தாமல் கைசோர்ந்து நின்றவளை ஆற்று

வெள்ளம் அடித்துச் சென்றது. தீடீரென்று அவ்விடத்துக்கு வந்த ஒருவன்

தான் சூடி யிருந்த சுரபுன்னை மாலை அசைய அவ்வெள்ளத்தில் பாய்ந்து

நகையணிந்த தலைவியை மார்போடு அணைத்துக் கரைசேர்த்தான்.

கரையில் குழுமியிருந்தவர் "அவன் அவளைத் தழுவினான்" என்று அலர்

(பழி) தூற்றினர். இதில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. தேவைப்

பட்டால் தன் கற்பின் திண்மையை அவள் மழையை வரவழைப்பதன் மூலம்

நிரூபிக்க இயலும். (கற்புடைப் பெண்டிர் பெய்யென்று சொன்னால் மழை

பெய்யும் என்பது மக்களிடையே நிலவிய நம்பிக்கை. "தெய்வம் தொழாள்,

கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை--திருக்குறள்)


அவளைக் காப்பாற்றிய தலைவன் அந்த மலைநாட்டுக்குத் தலைவன்.

தினைப்புனத்தைக் காவல்காப்போர் எழுப்பும் அகிற் புகையினால் நிலவு

மறைக்கப்பட்டுத் தேன்கூடு போலத் தோன்றும். அதிலிருக்கும் தேனை

எடுப்பதற்கு ஏணி அமைப்பர். ( புலவரின் மிகையான கற்பனை). அத்தகைய

வளமான குறிஞ்சி மலைக்குத் தலைவனவன். சிறுகுடியில் வாழும் மக்களே!

அவள் உயிரைக் காத்த தலைவனுக்குத் தலைவியைப் பெண்கொடுக்காமல்

அயலானுக்குக் கொடுக்க எண்ணுதல் தவறு அன்றோ?  இம்மலையில்

உள்ளோர் இத்தகைய அறம் இல்லாத செயல் செய்தால் இனி நிலத்தில்

வள்ளிக்கிழங்கு விளையாது; மலைச்சாரலில் தேன்கூடு கட்டப்படாது; புனத்தில்

தினைப்பயிர் கதிர்விடாது.


காந்தள் மலர் மணம் வீசும் இந்த மலையில், மூங்கில் போன்ற தோள்களை

உடைய குன்றவர் மகளிர் நாளும் தவறாமல் தம் கணவரைத் தொழுது

எழுவதால் அந்த ஆடவர்கள் அம்பு எய்தால் அது குறிதப்புவதில்லை. தற்போது

தலைவியைப் பற்றி அலர் தூற்றினால் விளைச்சல் பொய்க்கும்; வேட்டைக்குச்

செல்வோர் எய்யும் அம்பு குறிதவறும்.(,அக்காலத்தில் நிலவிய நம்பிக்கை)."


இவ்வாறெல்லாம் கூறித் தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள். அவள்

தோழியின் கருத்தை உணர்ந்துகொண்டு நற்றாய்க்கு(தலைவியைப் பெற்ற

தாய்க்கு) அறத்தொடு நின்றாள். நற்றாய், தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும்

அவர்கள் உண்மையை உணரும் வகையிலும் சினம் கொள்ளாத வகையிலும் கூறி

அறத்தொடு நின்றாள். (அறத்தொடு நிற்பது என்பது தலைவிக்கும்  தோழிக்கும் மட்டும்

தெரிந்த உண்மையை/களவுக்காதலை வெளிப்படுத்துவது). இதனைக் கேட்ட தலைவியின்

தந்தையும் தமையனும் சினமடைந்து அம்பையும் வில்லையும் கையிலெடுத்து வெளியே

கிளம்ப எழுவதும் பின்னர்ச் சினமடங்கி அமர்வதுமாக நிலைகொள்ளாமல் தவித்தனர்.

இவ்வாறு அன்றைய பகற்பொழுது முழுவதும் புரியாத மனநிலையில் இருந்தனர்.

மனம் குழம்பிச் சுழன்று கொதித்த அவர்கள் ஒருவாறு முற்றாகச் சினமடங்கி "இருவர் மீதும்

யாதொரு தவறும் இல்லை" என்று கூறிச் சமாதானம் அடைந்தனர்.  "தெருமந்து தலைசாய்த்

தார்" என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தலையைச் சாய்த்துத் திருமணத்துக்கு

ஒப்புதல் தெரிவித்ததாகக் கொள்ளலாம். தொடர்புடைய பாடற்பகுதி பின்வருமாறு:

"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட

என்னையர்க்(கு) உய்த்துரைத்தாள் யாய். 

அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து

ஒரு பகல் எல்லாம் உருத்தெழுந்(து) ஆறி

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை".

தெருமரல்=மனச் சுழற்சி; சந்தேகப்படுதல்.

முதலில் மனங்குழம்பிப் பின்னர்த் தெளிவடைந்து திருமணத்துக்கு உடன்பட்டனர்.

(பாடல் நெடியது--51அடிகளையுடையது).பாடல் எண்: 39; திணை: குறிஞ்சி;புலவர்: கபிலர்.)


தோழி தலைவியிடம் கூறியது:" உனக்கும் தலைவனுக்கும்  இனிதே திருமணம்

நடக்கும் பொருட்டு மலைத்தெய்வம்(முருகன்) மனம் மகிழ நாம் குரவை ஆடுவோம்.

கொண்டு நிலைப் பாடலைப் பாடு(,ஒருவகைப் பாட்டு)".

தலைவி: "தினைப் புனத்தின் அருகில், இங்குள்ள வேங்கைப் பூவின் மகரந்தப்

பொடி உதிர்ந்து பொன்னால் இழைக்கப்பட்ட மணவறையாகப் பொலியும் பாறையில்

அனைவரும் காண மணமக்களாக நாங்கள் ஒன்றாக அமர்வோமன்றோ? உடனே

தலைவனுடன் இணைவதாகக் கனவு காண்பதை விட்டுவிடுவேன்(நனவாகப்

போவதால் கனவு தேவையில்லை).

தலைவியும் தோழியும் உவகையுடன் மென்மேலும் உரையாடி மகிழ்ந்தனர். பின்னர்த்

தலைவன் திருமணச் சடங்கைப் பற்றி நன்கு தெரிந்த அறிவனை(நல்ல நேரம்

கணிப்போன்) முதலில் அனுப்பி வாழ்வின் தகுதிமிக்க பொதுக் குறிக்கோளையும்

அதனை அடையும் வகையில் வாழும் முறையையும் அறிந்த இல்லறம் சான்றோர்

புடைசூழத் திருமணம் புரிந்துகொள்ள வருகின்றான். இப்பொழுது மையுண்ட

பூப்போன்ற உன்கண் பொலிவு பெறுவதாகுக!


பார்வை:சங்க இலக்கியம்(கலித்தொகை)--வர்த்தமானன் பதிப்பகம்; உரையாசிரியர்:

பெருந்தமிழறிஞர் சுப.அண்ணாமலை.

Saturday, 20 January 2024

பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.

 பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.


நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது யானை ஆகும். முற்

காலத்தில் டைனோசர் என்னும் மிகப் பெரிய உயிரினம் வாழ்ந்ததாகச்

சொல்லப்படுகிறது. ஆனால், இன்று அத்தகைய விலங்கினம் உயிர் வாழவில்லை.

யானையின் உயர்ந்த மற்றும் பருத்த உடலமைப்பு ஓரளவு அச்சமூட்டினாலும்

அனைவர்க்கும் யானையின் மீது ஈர்ப்பு ஏற்படுவது மறுக்க இயலாத

உண்மை.


யானைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு மிகமிகத் தொன்மையானது. மனித

இனம் உலகில் தோன்றிய காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தி

லேயே யானை தோன்றியிருக்கக் கூடும். யானை காட்டு விலங்காக இருப்பினும்

இன்றுவரை யானைகள் வீட்டு விலங்குகள் போலவே வளர்க்கப்படுகின்றன.

கோவில்களிலும், பரம்பரை பரம்பரையாக யானை வளர்ப்போர் வீடுகளிலும் அரசு

அனுமதி பெற்று வளர்க்கப் படுகின்றன. 


நம் இலக்கியங்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படும்.

சங்க இலக்கியம் முதல் இன்றைய கால இலக்கியம் வரை யானையைப் பற்றிய

செய்தி/தகவல் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். சிறுவர் முதல் பெரியோர் ஈறாக

அனைவருமே யானையைப் பற்றிய செய்தியைப் படித்து இரசிப்பர்.. ஏனெனில்

குழந்தைப் பருவத்திலிருந்தே யானை நம்மைக் கவர்ந்திழுக்கத் தொடங்கிவிடுகிறது.

யானையின் செம்மாந்த தோற்றமும் நடையும் நம் கண்களை விட்டு அகலா. சிறு

வயதில் பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றால் தவறாமல் யானையைக் கண்டு 

குதுகலம்அடைந்து சற்று அச்சத்துடன் அதன் தும்பிக்கையினால் ஆசீர்வாதம் பெற்றுப் 

பரவசம்அடைந்த நிகழ்வு  பசுமையாக இருக்கிறது.


சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அதனால் மன்னர்களுக்குள் அடிக்கடி

போர் நடைபெற்றது. அப்போது  போர்களில் யானைகளைப் பயன்படுத்தினர்.

இளைஞர்கள் யானையுடன் போர்செய்து பழகுதல் வேண்டும். புறநானூற்றில்

புலவர் பொன்முடியார் பாடிய பாடலில்(பாடல் எண்:312) பின்வருமாறு பாடியுள்ளார்:

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிருவாள் அருஞ்சமம் முருக்கிக்

களி(று)எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே".

தனியொருவனாக யானையுடன் போர்புரிந்து அதனைக் கொல்லுதல் இயலாத செயல்.

வேல்கொண்டோ வாள்கொண்டோ அதனைத் தடுக்க முயற்சி செய்யலாம். அதனைக்

காயப்படுத்தி அச்சுறுத்தி விரட்டலாம். அதனை வெல்ல முடியாது.

எனவேதான் வள்ளுவர் பின்வருமாறு பாடினார்:

"கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.'


நற்றிணை ஒரு காட்சியைச் சொல் ஓவியமாகக் காட்டுகிறது:

"புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்(டு)

ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து

வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு

மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்

தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப்

பொன்புரை கவழம் புறந்தருபு ஊட்டும்"

யானை கூட்டமாக வாழும் விலங்கு. பிடி(பெண் யானை)

மற்றும் கன்று மீது அதிகமாகப் பாசத்தை வெளிக்காட்டும்.

இப் பாடல் அதனை விளக்குகிறது. புலியுடன் போரிட்ட யானையின்

கோடுகள்(தந்தங்கள்) இரத்தத்தால் சிவந்து காணப்படுகின்றன.

அவற்றில் முத்துக்கள் பதிந்திருப்பது போலத் தோன்றும். அதிலிருந்து

புலவு நாற்றம் வருகிறது. அந்த வேழம்(ஆண் யானை) வேங்கை

மரத்தின் பருத்த அடியை முறித்துத் தன் கன்றுடனே பிடியை(பெண்யானையை)

அணைத்துக்கொண்டு வேங்கை மரத்தின் பூக்களை அவை உண்ணுமாறு

ஊட்டும். அவ்வளவு பாசம் உடையது யானை.


இனி, கலிங்கத்துப் பரணியில் போர்க்களக் காட்சியைக் காண்போம்.

சோழநாட்டுக் களிறும் கலிங்க தேசத்துக் களிறும் மோதிக் கொண்டன.

"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு

மதக்கரி மருப்பினிடையே

நெருப்போடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ

நிழற்கொடி தழற்கதுவவே"

(பாடல் எண்:411)

இரு மலைகளைப்போல மதங்கொண்ட களிறுகள் தம் தந்தங்களால்

ஆவேசமாக மோதிக் கொள்ள அவைகளின் தந்தங்களுக்கிடையே

தீப்பொறி எழுந்து நிழலுக்கு ஏற்றியிருந்த துகிற்கொடிகளைப் பற்றியது.


பரிபாடலில் செவ்வேளைப் பற்றிய(முருகனைப் பற்றிய) பத்தொன்பதாம்

பாடலில் யானைவழிபாடு குறிப்பிடப்படுகிறது. முருகனுக்குரிய யானை

யின் நெற்றியில் குங்குமத்தால் அழகுபடுத்திப் பூவோடு கூடிய நீரைத்

தெளித்துச் செவிக் கவரியைச் சார்த்திப் பொலிந்த பவழத்தாற் செய்த

நல்ல காம்பினை உடைய பொற்குடையை மேலே எடுத்து மனமகிழ்வுடன்

பூசனை புரிவர். அப்பொழுது அந்த யானைக்கு அளிக்கப்படும் கவழ மிச்சிலை

(யானை உண்டு மிச்சமிருக்கும்  உணவை)  உண்ணாவிட்டால் பெண்டிர்  தம் காதலரின்

அன்பை அடைய மாட்டார். கன்னிப் பெண்கள் நல்ல கணவரை அடையமாட்டார்.

இது அந்தக் காலத்தில் நிலவிய நம்பிக்கை. பாடல் வருமாறு:

"கன்னிமை கனிந்த காலத் தார்நின்

கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்

மறுவற்ற மைந்தர்தோள் எய்தார்;; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார்;நின் குன்றம்

குறுகிச் சிறப்புணாக் கால்".


யானை நம் நாட்டுக்குக் கிடைத்த அரும் பெரும் சொத்து. அதனைத் துன்புறுத்

தாமல் பேணிப் பாதுகாப்பது நமது கடமை.


பார்வை:

சங்க இலக்கிய வெளியீடு, வர்த்தமானன் பதிப்பகம்.


"

Friday, 5 January 2024

தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புதல் எக்காலம்?

 தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழக்கை திரும்புதல் எக்காலம்?


செம்மாந்து  திகழ்கின்ற   தமிழ்நாட்டின்  தென்பகுதி

       சிதைந்து வீழ

அம்மா!எம்  இயற்கையன்னாய்!  அடைமழையைப் பொழிவித்தாய்,

       அரண்டு  போனோம்;

விம்மாத்தல் செய்துநெஞ்சம் துடிதுடித்தோம்; கணீருகுத்தோம்;

       வெந்தோம், நொந்தோம்;

இம்,மாதுன் பத்தைவெல்ல வழியின்றித் தவிக்கின்றோம்,

        என்செய் வோமே?


முத்துக்  குளிப்பதிலே  முன்னின்றோம்; வான்பரப்பில்

பொத்துக்கொண்  டாற்போல்  பொழிந்த  பெருமழையால்

எத்திக்கும் வெள்ளம்;  இடுப்பு,  கழுத்துமட்டம்

சொத்து பொருளையெல்லாம் சூழ்ந்திழுத்து வந்ததுவே;

கத்தும் உயிரினங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்

செத்து மிதந்தனவே; சிற்றில்லம் அத்தனையும்

பொத்துப்பொத் தென்று பொருத்துவிட்டு வீழ்ந்தனவே;

மொத்த இழப்பை மொழிந்தால்  மனம்நோகும்.


நன்செய் நிலமெல்லாம் நாசமுற்றுப் போயினவே;

அன்பாய் வளர்த்தபயிர் அய்யோ,வீண் ஆனதுவே;

தென்பாய் நடந்த சிறுகுறு வாணிகமும்

பொன்போற்  பொலிந்த பெருங்கொண்ட வாணிகமும்

தின்பண்ட வாணிகமும் சேதாரம் உற்றனவே;

தன்னம்பிக்  கைகெட்டுத் தள்ளாட நேர்ந்ததுவே;

மன்னவர்போல்  வாழ்ந்த  வளமான  வாழ்விழந்(து)

இன்னலுக்கா  ளானோரின்  எண்ணிக்கை  ஏராளம்.


வெள்ளமது  சிதைத்துவிட்ட. தென்மா வட்டம்

        மீண்டுவர  வெகுகாலம்  தேவை  யாகும்;

கள்ளமற்ற  பொதுமக்கள்  வாழ்வா  தாரம்

        கடும்வேக  வெள்ளத்தால்  பறிபோ யிற்றே;

உள்ளபடி மாந்தர்களின்  உள்ளச்  சோர்வை

        உடனடியாய் நீக்குதற்கும், வாழ்வா  தாரம்

விள்ளரிய  முறையினிலே  உயர்த்து  தற்கும்

       விரைவாக  நிதிதேவை;  திரட்டு  வோமே.


பொருள்நிறைந்தார் மனதார அள்ளித் தந்தார்;

        பொருள்குறைந்தார் உவகையுடன் கிள்ளித் தந்தார்;

இருள்நிறைந்த மழைவெள்ளச்  சேதந்  தன்னை

         எப்படியும்  முறியடித்துத்  துயருற்  றோரின்

மருள்நிறைந்த வாழ்வினிலே தெளிவுண்  டாக்கி

         வருங்கால வாழ்வையெதிர்  கொள்ளச்  செய்ய

அருள்நிறைந்த மையப்பே  ரரசில்  உள்ளோர்

         அரசுநிதி சாலவுமே  கொட்டித் தாரீர்.

(மையப் பேரரசு=நடுவண் அரசு)


மாநில  அரசும்  சீரார்  மையப்பே  ரரசும்  கூடி

ஊனெலாம் ஒடுங்கி யுள்ளம்  உருக்குலை வுற்று வாடும்

நானில மக்க ளெல்லாம் நலம்பெறத் திட்டம் தீட்டி

மேனிலை அடையும் வண்ணம் விரைவினில் சேவை செய்க.

(நானில மக்கள்=தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,

தென்காசி முதலிய நான்கு மாவட்ட மக்கள்)


இருகரம் கூப்பி இந்த இரண்டுபே ரரசு தம்மை

உரிமையாய்க் கேட்டுக் கொள்வோம், உடனடிச் செய்கை வேண்டும்

தருணமி தனைநீர் ஓர்ந்து  தள்ளுக பயனில் வாதம்;

ஒருமையாம் கருத்தைப் பற்றி ஓம்புக மக்கள் தம்மை.

(ஒருமை=ஒற்றுமை; ஓம்புவோம்=பாதுகாப்போம்)