Wednesday, 10 September 2025

பயறணீச்சுரம் என்ற உடையார் பாளையம்..

 பயறணீச்சுரமென்ற உடையார் பாளையம்.


தமிழ்நாட்டிலுள்ள பழைய ஜமீன்களுள் உடையார் பாளையம்

ஒன்று. வீரத்துக்கும் தியாகத்துக்கும் கல்விக்கும் பெயர்பெற்ற

பல ஜமீன்தார்கள் இதனை யாண்டு இங்கு புகழை நாட்டியிருக்

கிறார்கள். இவ்வூருக்குப் பயறணீச்சுரமென்னும் பெயர் முன்பு

வழக்கிலிருந்தது. மலைநாட்டின்கண் திவாகரபுரமென்னும்

ஊரிலிருந்த வணிகர் ஒருவர் அங்கிருந்து மிளகுப் பொதிகளை

மாடுகளின்மேல் ஏற்றிக் கொணர்ந்து சமவெளியிலிருந்த சோழ

நாட்டிலும் அருகிலிருந்த பிற நாடுகளிலும் வணிகம் புரிந்து வந்தார்.

ஒருசமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்துக்குப் போனார். அந்நாளில்

விருத்தாசலத்தில் ஒரு சுங்கச்சாவடி யிருந்தது. மிளகுப் பொதிக்கு

அதிக வரி விதிக்கப்படுவது வழக்கம். வரியைக் குறைக்க, மிளகுப்

பொதிகளைப் பயறு மூட்டைகள் என்று பொய் சொல்லிச் சாவடியைக்

கடந்து சென்றார். விருத்தாசலத்தை அடைந்த அவர் அங்கு மூட்டைகளை

அவிழ்த்துப் பார்த்தால் மிளகே காணப்படவில்லை. பதிலாக, பயறு தான்

எல்லா மூட்டைகளிலும் இருந்தது. தாம் பொய் சொன்ன காரணத்தால்

பழமலைநாதர் தண்டித்து விட்டாரோ? என்று பதறித் துடித்தார். அப்பொழுது

"கெட்ட இடத்திலே போய்த் தேடு" என்றொரு அசரீரி கேட்டதாகவும் அதன்படி

பயறணீச்சுரத்துக்குவந்து பயறணிநாதரிடம்  மனமுருகி வேண்டிக்கொண்டதாகவும்

அதன்பின்னர் தெய்வத்தின் திருவருளால் பயறெல்லாம் பழையபடி மிளகாக

உருமாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது.


இந்த ஊரையாண்ட ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய

பெயரையும், காலாட்கள் தோழ  உடையார் என்னும் பட்டப் பெயரையும்

உடையவர்கள். தங்கள் படைகளுடன் இங்கு தங்கிய காரணத்தால் இந்த

ஊர் உடையார் பாளையம் என்று அழைக்கப்படலாயிற்று. இவர்களுடைய

முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்த காரணத்தால்

கச்சி என்னும் அடைமொழி பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது.

பல வீரர்களுக்குத் தலைவர்களாகிய விசயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும்

போரில் உதவி புரிந்தவர்கள் ஆதலால் " காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப்

பெயர் இணைந்து கொண்டது.


விசயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரசிம்மராயர் என்னும் அரசருடைய ஆட்சிக்

காலத்தில் காஞ்சிபுரத்தில் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் என்பவர் பாளையக்

காரராக ஆண்டுவந்தார். அவருக்குப் பின் அவர் மூத்த மகன் பெரிய நல்லப்ப

உடையாரும், அவருக்குப் பின் அவர் தம்பி சின்ன நல்லப்ப உடையாரும்  பாளையக்

காரர்களாக ஆட்சி செய்தனர். சின்ன நல்லப்ப உடையார் சிதம்பரம் நடராசப் பெருமான்

மீது பக்தி கொண்டவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர்

காலத்தில் சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயர் என்னும் பெரியவரிடம்  உபதேசம்

பெற்றவர். ஒருமுறை தீர்த்த யாத்திரை செல்ல எண்ணிய நல்லப்ப உடையார்

சிதம்பரத்துக்குச் சென்று நடராசரைக் கண்டு வணங்கிய பின் தம் குரு நமச்சிவாயர்

ஆசியும் பெற்று வேதாரண்யம் நோக்கிப் பயணப்பட்டார். அன்று வழியில் ஒரு

சிவாலயத்தையும், அதனருகே அமைந்துள்ள தடாகத்தையும் கண்டு அவ்விடத்திலேயே

தங்கினார். நல்ல தூக்கத்தில் அவர் கனவில் சிவபெருமான் தோன்றியதாகவும் அவ்

வூரையே தலைநகரமாக மாற்றிக்கொள்ளுமாறு கூறியதாகவும சொல்லப்படுகிறது.

அதன்படியே அவ்வூரில் அரண்மனையை எழுப்பித் தம் படை, பரிவாரங்களை வரவழைத்து

அவ்வூரில் நிலையாகத் தங்கச்செய்தார். அவ்வூரே உடையார்பாளையம் என் அழைக்கப்

படுகிறது. நல்லப்ப உடையார் பல அரசர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தார்.

முஸ்லீம் படையெடுப்புக் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காமாட்சியம்மன் சிலை, வரத

ராசர் சிலை இங்கே கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. உடையார் பாளையத்துக்குச்

சென்றால் அச்சமின்றி இருக்கலாம் என்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்துவந்தது. புலவர்கள் நல்லப்ப உடையாரைப் பாராட்டிப் பாடல்கள் இயற்றினர்.


அவர் காலத்துக்குப் பின் பல ஜமீன்தார்கள் பட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் காட்டைத் திருத்தி நாடாக்கினர். அதனால் உடையார்

பாளையத்துக்கு வருவாய் குவிந்தது. ஜமீன்தார்கள் பற்பல அறச்

செயல்கள் செய்தனர். ரங்கப்ப உடையார் என்னும் ஜமீன்தார்

தமிழ், வட மொழிகளில் புலமை மிக்கவராகத்  திகழ்ந்த போதிலும்

ஞானியைப் போல் பற்றற்ற மனநிலையில் ஆட்சி நடத்தினார்.

துறவுகொள்ள விரும்பித் தம் மகன் யுவரங்க உடையாரிடம் ஆட்சிப்

பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தவம்புரியலானார்.


உடையார் பாளையத்தில் ஆட்சிபுரிந்த ஜமீன்தார்களிலேயே யுவரங்க

உடையார் புகழ் மற்றவர்களை விஞ்சி நிற்கிறது. அவர் தமிழில் நிகரற்ற

புலமையுடன் திகழ்ந்தார். வடமொழியிலும், இசையிலும் மிகச்சிறந்த

பயிற்சி பெற்றிருந்தார். தமிழ்ப் புலவர்களாயினும், வடமொழி விற்பன்னர்க

ளாயினும், இசை மேதைகள் ஆயினும் , யுவரங்க உடையாரிடம் தம் திறனை

வெளிப்படுத்திப் பரிசில் பெறுவதையே இலக்காகக் கொண்டிருந்தனர்.

யுவரங்க உடையார் பயறணீச்சுரத்து அம்மன் மீது நறுமலர்ப் பூங்குழல்

நாயகி மாலை என்னும் சிற்றிலக்கியம் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல்:

"தனந்தரு வாய்கல்வி கற்கும் அறிவொடு சாந்தமிகு

மனந்தரு வாய்நின்னைப் போற்றும் தகைக்குவண் சாதுசங்க

இனந்தரு வாய்நின் திருநோக்கம் வைக்க இலங்குறும்ஆ

னனந்தரு வாய்நல் நறுமலர்ப் பூங்குழல் நாயகியே!"

(இலங்குறும் ஆனனம்=விளங்கும் முகம்; ஆனனம்=முகம்).

ஒரு புலவர் திருவரங்கருக்கு இணையாக யுவரங்கரை ஒப்பிட்டுப்

பாடியுள்ளார். பிடல் பின்வருமாறு:

"கச்சி யுவரங்கன், காவேரி அந்தரங்கன்,

இச்சகத்தில் என்றும் இரண்டரங்கர்--மெச்சுறவே

இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பான் என்றெண்ணி

அந்தரங்கன் கண்ணுறங்கி னான்."


இதைவிடவும் ஒரு புலவர் யுவரங்கர் மட்டுமே முழுத் தாதா

(வள்ளல், கொடையாளி) ஏனையோர் வீசம், அரைக்கால், கால்,

அரை மற்றும் முக்கால் அளவுக்கு வள்ளல்/கொடையாளி ஆவர்

என்று உரத்துப் பாடியுள்ளார். பாடல் பின்வருமாறு:

" சந்திரன்வீ  சம்குமணர் அரைக்கால் தாதா;

   சவிதாவின் கான்முளையே  கால்தா தாவாம் 

இந்தெனும்வாள் நுதலாள்தன் பாகத்(து) 

   எம்மான்

     ஈசனையே அரைத்தாதா என்ன லாகும்;

வந்(து)இரக்கும் முகுந்தனுக்(கு)ஈ  முக்கால்  

     தாதா

மாவலியே எனப்பெரியோர் வழங்கு வார்கள்;

இந்திரனாம் கச்சியுவ ரங்க மன்னன்

    என்றுமுழுத் தாதாவென்(று) இயம்ப லாமே.

(குறிப்பு: தாதா என்னும் சொல் தந்தை, தாத்தா, பெரியோன்,

கொடையாளி, பிரமன் முதலான பொருளைத் தரும். தற்காலத்தில்

அச்சொல் லுக்கு வேறுவிதமான அர்த்தம் கொள்கின்றனர்).

பாடலின் பொருள்:

பதினாறு கலைகளையுடைய நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு கலையே

சூரியனுக்குத் தருவதால் வீசம் அளவு கொடையாளி. தம் தலையையே புலவருக்குத்

தானமாகக் கொடுக்க முன்வந்த குமணர் அரைக்கால் அளவுக்கு வள்ளல்;

ஏனெனில் உடலில் எட்டில் ஒரு பங்கு தலையாகும். அதாவது அரைக்கால் அளவே

கொடை தர முன்வந்தார். அதனால் அரைக்கால் கொடையாளி யாவார்.

சவிதாவின் கான்முளை--சூரியனின் மகனான கர்ணன் ஒரு நாளில் 15

நாழிகை மட்டுமே கொடை கொடுப்பார். அதனால் கால் அளவு கொடையாளி.

பிறை நிலவு போன்ற நெற்றியையுடைய பார்வதியை இடப்பாகத்தில்

கொண்ட சிவபெருமான் அரைக் கொடையாளி. மகாபலி சக்கரவர்த்தியிடம்

வாமன உருவத்தில் வந்து யாசித்து மூன்றடி மண்ணைக் கொடையாகப்

பெற்றார் விஷ்ணு. மகாபலியின்கொடை முக்கால் கொடையாகும். ஆனால்,

இந்திரனைப் போன்ற பாளையக்காரரான யுவரங்கர் முழுக் கொடையாளி

என்று உறுதியாகச் சொல்லலாமே.


உடையார் பாளையத்தில் யுவரங்க உடையாருக்குப் பின் பற்பல ஜமீன்தார்கள்

ஆண்டனர். பிற்பாடு ஜமீன்தாரி முறையை ஒழித்து விட்டார்கள். உடையார்

பாளையம் சரித்திரத்தில் யுவரங்க உடையார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.


பார்வை:

'நல்லுரைக் கோவை'(இரண்டாம் பாகம்)--நூலாசிரியர் டாக்டர் உ. வே.சாமிநாதையர்.

Wednesday, 27 August 2025

மானம் காத்த மைந்தர்.

 தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்-நீரோ டுலாவிவரும்

நெல்லை.


மதுரைக்குக் கிழக்கே ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில்

அமைந்துள்ள சிற்றூர் வேம்பற்றூர்(வேம்பத்தூர்--மக்கள் வழக்கு). சங்க

காலம் முதல் அண்மைக் காலம்வரை தமிழ்ப் புலவர்கள்/கவிஞர்கள்

வாழந்துவந்த  சீரூர். வேம்பற்றூர்க் குமரன் என்னும் சங்கப் புலவர்

இவ்வூரைச் சேர்ந்தவர் எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். சிலேடைப்

புலி என்ற அடைமொழிக்குரிய பிச்சுவையர், வேம்பு ஐயர் முதலான

பிராமண குலத் தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர். முறையாகத் தமிழ் இலக்கிய,

இலக்கணங்களைக் கற்றுப் புலமை யடைந்து தமிழ்நாட்டிலுள்ள

வள்ளல்கள், பெருநிலக்கிழார்கள், சமீன்தார்கள், மருது சகோதரர்கள்,

இராமநாதபுரம் சேதுபதிகள் முதலான பிரபுக்களின் முன்பு புலமையையும்

திறமையையும் வெளிப்படுத்திப் பரிசில், நிலக்கொடை போன்றவற்றைப்

பெற்றவர்கள். இவ்வூரைச் சேர்ந்த பெருமாளையர் என்ற தமிழறிஞர்

திருநெல்வேலிக்குச் சென்று அங்குள்ள பெருநிலக்கிழார்களின் ஆதரவைப்

பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.


திருநெல்வேலிப் பிரபுக்கள் தூண்டுதலால் வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்

இயற்ற முடிவுசெய்தார். உயிரெழுத்துக்கள், மொழிக்கு முதலாக வரத்தகுதியுள்ள

உயிரமெய்யெழுத்துக்கள் இவைகளில் ஒவ்வொன்றை எடுத்துப் பாடலின் முதலில்

வருமாறு அகப்பொருள் துறைப் பாடலைப் பாடுவது வருக்கக் கோவையாகும்.

எடுத்துக்காட்டாக, மாறன் வருக்கக்கோவை, பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலானவை.

நூலை இயற்றி முடித்தவுடன் பெருமாளையர் இதனை அரங்கேற்றம் செய்யத் திட்ட

மிட்டார்.


அதன்படி, திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீசாலிவாடீசுவரப் பெருமான் சந்நிதியில்

அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழன்பர்கள் குழுமியிருந்தனர்.

பெருமாளையரின் மாணவர்களில் ஒருவர் நூலின் முதற் பாடலான காப்புச்

செய்யுளைப் படித்து முடித்தார். பாடல் பின்வருமாறு:

"தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும்

நீரோ(டு) உலாவிவரும் நெல்லையே!---காரோடும்

கந்தரத்தர் அந்தரத்தர்; கந்தரத்தர் அந்தரத்தர்;

கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு".

மாணவர் படித்தவுடன் கூட்டத்திலிருந்த அரைகுறைத் தமிழறிவு கொண்ட ஒருவர்

எழுந்து  "தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும்

நெல்லை எனப் பாடப்பட்டுள்ளது. தேரோடும் வீதியில் அவ்வாறு நடைபெறுகிறதா?"

என்று ஐயம் எழுப்பினார். மாணவர் அருகில் அமர்ந்திருந்த நூலாசிரியர் பெருமாளையர்

திகைத்துப் போனார். தமது பாடலில் குறை காணும் தகுதியுள்ள புலவர் திருநெல்வேலியில்

இல்லை என்று நம்பினவர் மனக்கிலேசத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

மேடையில் வீற்றிருந்த அறிஞர்கள் யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல்

அமைதியாய் இருந்தனர். உரைநடை வேறு; கவிதை வேறு. உரைநடையில்

சொல்லப்பட்ட செய்திகளுக்கு நேரடியாகச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே

பொருள் கூறிடலாம். ஆனால் கவிதை அப்படிப்பட்டது அன்று. அதற்கு, எதுகை,மோனை,

சீர், தளை, அடி, தொடை, அணி முதலான கூறுகள் உண்டு. அவைகளுக்கும் கட்டுப்பட்டே

கவிதையை இயற்ற முடியும். பொருள் கொள்ளும் முறைக்கும் இலக்கணம் உண்டு.

தொல்காப்பியம் நான்கு விதமான பொருள் கொள்ளும் முறைகளை விவரிக்கிறது.

நன்னூல் எட்டுவிதமான முறைகளைக் கூறுகிறது. " சுரை ஆழ, அம்மி மிதப்ப" என்ற

சொற்றொடரில் அப்படியே படித்துப் பொருள்கொண்டால்  மிகத் தவறாகும். மிதக்கும்

தன்மையையுடைய சுரையை நீரில் மூழ்கும் என்று பொருள்கொள்வது நகைப்புக்கிடமாகும்.

அதுபோலவே, அம்மி மிதப்ப என்ற சொற்றொடரும் தவறாக மாறும். நாம் இந்தச் 

சொற்களை மாற்றியமைத்துக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அதாவது,

"சுரை மிதப்ப, அம்மி ஆழ" என்று மாற்றிப் பொருள் கொள்ளவேண்டும். இதுபோன்ற

விதிவிலக்குகள், சலுகைகள் கவிதை படைப்பவர்களுக்கு உள்ளன.. மேலே கண்ட

காப்புச் செய்யுளிலும்  "தேரோடும் வீதியெலாம்" என்பதோடு நிறுத்திப் பொருள்

கொள்ளல் வேண்டும். "செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும் நெல்லை"

என்று படித்துப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, வீதியெல்லாம் தேரோடுகிறது;

தாமிரபரணி ஆற்று நீரிலே செங்கயலும் சங்கினமும் உலாவி வருகின்றன. இப்படியாகத்

தனித்தனியாகப் படித்துப் பார்த்தால் எப் பிழையும் வர வாய்ப்பில்லை. ஐயம்

எழுப்பியவர் தமிழிலக்கணம் முழுமையாகப் படித்திருந்தால் இந்த ஐயம் தோன்றியிராது.

அவர் கிளப்பிய ஐயத்தால் மனமுடைந்து போன நூலாசிரியர் பெருமாளையர்

அரங்கேற்ற நிகழ்வைத் தள்ளி வைத்துவிட்டார். நூல் அரங்கேற்றம் செய்யப்படவில்லை.


ஆண்டுகள் உருண்டோடின. பெருமாளையருக்கு ஒரு தவப்புதல்வன் பிறந்தான்  அவன்

தகப்பனாரைப்போலவே தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்

புலமையடைந்தான். ஒருநாள் தகப்பனார் எழுதிய வருக்கக் கோவை நூலைப் பரணிலே

கண்டு தன் தாயாரிடத்திலே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டறிந்தான்.

தானே இந்நூலை அரங்கேற்றம் செய்து தகப்பனார்க்கு நேர்ந்த இழி சொல்லைத் 

துடைத்தெறிய முடிவெடுத்தான். அதன்படி ஸ்ரீஅனவரத நாயகர் சந்நிதியில் அரங்கேற்றம்

ஏற்பாடு செய்யப்பட்டது. காப்புச் செய்யுளை ஒரு மாணவர் மூலமாகப் படிக்கச்செய்து

முதல் இரண்டு அடிகளில் யாதொரு பிழையும் இல்லை என்று நிறுவினான். பின்

இரண்டு அடிகளில் பயின்று வரும் மடக்கு(யமகம்)எனப்படும் சொல் அலங்காரத்தை

விளக்கலானான்:

காரோடும்=கருநிறம் பரவிய(அமுதம் பெறக் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால

                      நஞ்சை உண்டதால் கழுத்தில் கருநிறம் பரவியது).

கந்தரத்தர்=கந்தரம்=கழுத்து(நீல கண்டர்)-கறுத்த கழுத்தையுடையவர்.

அந்தரத்தர்=அந்தரம்= ஆகாயம்; ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவர்.

கந்து+அரத்தர்=கந்து=பற்றுக் கோடு=பற்றுக்கோடாகிய செம்மைநிறமுடையவர்.

அந்தரத்தர்= அம்+தரத்தர்=அம்=நீர்= திருமுடியில் நீரைத் தாங்கியவர்(நீர்=கங்கை);

கந்தரத்தர்=கந்தர்+அத்தர்=முருகக் கடவுளின் தந்தையானவர்.

அந்தரத்தர்=அம்+தரத்தர்= அழகிய தகுதியை உடையவர்.

முழுப் பாடலின் பொருள்:

நெல்லையில் வீதியெலாம் தேரோடும்; தாமிரவருணி யாற்று நீரினிலே செங்கயலும்

சங்கினமும் உலாவிவரும். அந்த நெல்லைப் பதியில் கருநிறம் பரவிய கழுத்தை

உடையவரும், ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவரும், பற்றுக் கோடாகிய

செம்மை நிறமுடையவரும், திருமுடியில் கங்கையைத் தாங்கியவரும், முருகக்

கடவுளின் தந்தையானவரும்,  அழகிய தகுதியை உடையவருமான சிவபெருமான்

காவல் புரிந்து வீற்றிருக்கின்றார். அவர் நமக்குக் காப்பாக விளங்குகிறார்.


பார்வை: "நான் கண்டதும் கேட்டதும்"

                   நூலாசிரியர்: டாக்டர் உ.வே.சா.

Sunday, 10 August 2025

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில் மூதேவி ஏன்பிறந்தாள் முன்?

 சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?


அந்தகக்கவி வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள

பூதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். பிறவியிலேயே கண்பார்வை

யற்றவராக உதித்த போதும் "ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகர்" ஆனார். பூதூரில் பிறந்தாலும் வாழ்ந்த ஊர்

பொன் விளைந்த களத்தூராகும். பல வள்ளல்களாலும்  ஈழத்து மன்னர்

பரராச சிங்கம் என்பவராலும் ஆதரிக்கப் பெற்றவர். பல சிற்றிலக்கியங்களையும்

தனிப்பாடல்களையும் இயற்றியவர்.


ஒருமுறை திருவேங்கடம் என்னும் வள்ளலிடம் பாடிப் பரிசில் பெற எண்ணிச்

சென்றிருந்தார். திருவேங்கடம் புலவர்களைப் பேணுபவர். தாராளமாகப்

பரிசில்கள் வழங்குபவர். ஆனால் அவருக்கு ஒரு தமையன் இருந்தார்  அவர்

தமிழ்ப் பற்றோ, புலவர்களைப் பாராட்டும் எண்ணமோ இல்லாதவர். புலவர்

களுக்குப் பரிசில் கொடுப்பதைத் தடுக்க முயல்பவர். புலவர் பாடி முடித்தவுடன்

தன் இளவல் திருவேங்கடத்திடம்  "சிறிய அளவில் பரிசிலைக் கொடுத்தனுப்பு;

பெரிதாக எதுவும் கொடுத்துவிடாதே" என்று புலவரின் காதுபடவே கூறினார்.

வள்ளலின் தமையன் பெயர் கண்ணுக்கினியான். ஆனால் அவர் யாருக்கும்

இனியவராக நடந்துகொண்டதே இல்லை. தமையனின் சொற்களைப் பொருட்

படுத்தாத வள்ளல் திருவேங்கடம் புலவருக்குத் தம் வழக்கப்படியே தாராளமாகப்

பரிசில் கொடுத்துச் சிறப்புச் செய்து அனுப்பிவைத்தார். திரும்பும் பொழுது

புலவர் ஒரு பாடலைத் தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்:

"தேன்பொழிந்த வாயான் திருவேங்  கடத்துடனே

ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே--வான்சிறந்த

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்

மூதேவி ஏன்பிறந்தாள் முன்?"

செம்மையான திருப்பாற்கடலில் மிகவும் சிறப்புடைய சீதேவிக்கு முன்னதாக

மூதேவி பிறந்ததைப் போல, கனிவு மிக்க வள்ளல் திருவேங்கடத்தாருக்கு

முன்னவனாகக் கண்ணுக்கினியான் பிறந்துள்ளான்.


ஒருமுறை புலவர் வழக்கமாகத் துணைக்கு வரும் சிறுவனோடு வெளியூர்

செல்ல நேர்ந்தது. பயணத்தில் களைப்பும் சோர்வும் ஏற்படின் புசித்துப்

பசியாறக் கைவசம் கட்டுச் சோற்று மூட்டையையும் சிறுவனிடம் கொடுத்துக்

கொண்டுவரப் பணித்திருந்தார். வெய்யில் கடுமையாகக் கொளுத்தியதால்

ஒரு பெரிய ஆலமரநிழலில் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று நினைத்து

 இருவரும் மரத்தடியில் அமர்ந்தனர். அப்பொழுது இதமான தென்றல் வீசியதால்

இருவரும் சற்றே கண்ணயர்ந்து விட்டனர். ஒரு நாழிகை கடந்த பின்னர்

தூக்கம் கலைந்து எழுந்த புலவர் சிறுவனையும் எழுப்பி விட்டுக் "கட்டுச் சோற்று

மூட்டையைப் பிரி; உணவுண்போம் என்றார்". துயிலெழுந்து உட்கார்ந்த சிறுவன்

"ஐயா! கட்டுச் சோற்றை நாய் உண்டுகொண்டிருக்கிறது" என்று அலறினான்.

புலவருக்கும் மிகுந்த மனவேதனை வாட்டியது. தன் வேதனையை ஒரு பாடலில்

கொட்டித் தீர்த்தார்:

"சீராடை யற்ற  வைரவன் வாகனம் சேரவந்து

பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாரா யணனுயர் வாகன மாயிற்று; நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே".

பொருள்:

சீராடையற்ற வைரவன் வாகனம்=கீளைத் தவிர(கோவணம்) வேறு நல்ல ஆடையை                                                              உடுத்தியிராத   பைரவரின் வாகனம் நாயாகும்.

சேரவந்து                                             =நெருங்கி வந்து.     

நான்முகன் வாகனம்                         =அன்னம்(உணவு--இங்கே கட்டுச் சோறு)

நாராயணன் உயர் வாகனம்.          =பருந்து.

மை வாகனன் -மை=ஆடு; ஆட்டை வாகனமாகக் கொண்ட                                 =நெருப்புக் கடவுள்(அக்னி).

தெளிவுரை:

தாமும் உதவிக்கு வந்த சிறுவனும் கண் அயர்ந்திருந்த நேரத்தில்

பைரவரின் வாகனமான நாய் ஒன்று நெருங்கி வந்து, பிரம்மாவின்

வாகனமான அன்னத்தை(அன்னப் பறவையன்று--உணவு-கட்டுச்சோறு)ப்

பற்றிக் கௌவி நாராயணனின் வாகனமான பருந்தைப் போல விரைவாக

ஓடி மறைந்துவிட்டது. ஆட்டை வாகனமாகக் கொண்ட தீக்கடவுள்

(அக்னி) எம் இருவர் வயிற்றைப் பற்றிக் கொண்டனன். பசி வயிற்றைப்

பிராண்டியது.

Friday, 1 August 2025

ஐந்திணை ஐம்பது.

 ஐந்திணை ஐம்பது.


மாறன் பொறையனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

இது பதினெண்கீழ்க்கணக்கு என்ற பிரிவிலுள்ள பதினெட்டு நூல்களில்

ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டவை

யல்ல. சங்கம் மருவிய காலத்தில்(சங்ககாலம் முடிவடைந்த பிற்பாடு இயங்கிய

காலம்) இயற்றப்பட்டது என்று புலவர்கள் கருதுகின்றனர். இது அகப்பொருளைப்

பற்றிப் பாடும் நூல். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில்

திணைக்குப் பத்துப் பாடல்கள்  என்ற கணக்கில் மொத்தமாக ஐம்பது பாடல்களைக்

கொண்டு திகழ்கிறது. இதில் குறிஞ்சித்திணையில் காணப்படும் ஓரினிய

பாடலைக் காண்போம்::

"கொடுவரி  வேங்கை  பிழைத்துக்கோட்   பட்டு

மடிசெவி  வேழம்  இரீஇ---அடியோசை

அஞ்சி  யொதுங்கும்  அதருள்ளி  ஆரிருள்

துஞ்சா  சுடர்த்தொடி  கண்".

திணை: குறிஞ்சி; துறை: இரவுக்குறி வந்து திரும்பும் தலைவனைக் கண்ணுற்று

நின்ற தோழி வரைவு(திருமணம்)  கடாயது(புரிந்து கொள்ளும்படி கோரியது).

இரவுக்குறி: காதலர்கள் இரவில் பிறர் அறியாமல் சந்தித்துக் கொள்ளும் இடம்.

பாடல் எண்16.

பொருள்:

வளைந்த வரிகளையுடைய வேங்கைப் புலியாலே பிடிக்கப்பட்டுப் பெரும்

போராட்டத்துக்குப் பின்னர் ஒருவாறு தப்பிப் பிழைத்த, மடிந்த முறம் போன்ற

காதுகளைக் கொண்ட யானையானது, அஞ்சிப் பின் வாங்கித் "தான் நடப்பதால்

கிளம்பும் ஒலி புலிக்குக் கேட்டுவிடக்கூடாது என்ற உதறலில் மெல்ல நடந்து

செல்லும் அச்சுறுத்தும் வழியையுடைய காடு அது.  தலைவியுடன் கலந்துரையாடித்

திரும்பிச் செல்லும் போது  ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புண்டு. இந்த எண்ணம்

உதித்ததால் ஒளியுடைய வளையலை அணிந்த தலைவிக்குத் தூக்கம் வரவேயில்லை.

இவ்வாறாக  அவளை அச்சத்துக்கு ஆளாக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ வழிசெய்க.

அதற்காக, மேற்கொண்டு கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ளத்

தேவையான முயற்சிகளைச் செய்தல் சாலவும் நன்று.  இவ்வாறாகத் தோழி

தலைவனிடம் வற்புறுத்திக் கூறினாள்.


காட்டில் திரியும் விலங்குகளின் இயல்பையும், நடந்துகொள்ளும் முறையையும்

மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. யானை

பருத்த உடலையும், கூரிய கொம்புகளையும்  கொண்டிருந்தாலும் புலி பாய்ந்து

தாக்கும்போது அஞ்சிப்பின்வாங்கும். புலிக்கு ஊக்கமும் மனவலிமையும்

யானையை விடவும் அதிக அளவில் உள்ளன. எனவே, உரமும் வலிமையும்

உடைய யானை தன்னை விடவும் வலிமை குறைந்த புலியால் கொல்லப்படும்

வாய்ப்புண்டு. களிறு என அழைக்கப்படும் ஆண் யானையே அஞ்சும் பொழுது

பிடி என அழைக்கப்படும் பெண் யானையைப் பற்றிப் பேசவே வாய்ப்பில்லை.

ஆனால் மதங்கொண்ட யானை புலியுடன் மூர்க்கமாகப் போராடி வெல்லும்.

சங்க இலக்கியத்தில் யானை--,புலி இவைகட்கிடையே நிகழ்ந்த சண்டைகளைப்

பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் புலி யானையைக் கொன்ற

தாகவும், சிலவற்றில் யானை புலியைக் கொன்றதாகவும் குறித்துள்ளனர்.

"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்"  (திருக்குறள் எண்: 599)

என்ற குறளில் யானையின் ஊக்கமின்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

(வெரூஉம்=அஞ்சி நடுங்கும்).


இனி, ஐந்திணை எழுபது என்னும் நூலில் காணப்படும் ஊக்கமுடைய யானை

யைப் பற்றிய பாடலைப் பார்ப்போம்:

இந்நூலை இயற்றியவர் மூவாதியார் என்னும் புலவர்.

துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது உரைத்தது.

பாடல் எண்:37; திணை: பாலை.

"கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி

கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டும்;

நெடுவரை அத்தம் இரப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்கும் சுரம்."

பொருள்:

தலைவி தோழியிடம் கூறியது:

"தோழியே! புலியானது பாய்ந்ததால் தன் துணையான பிடியைப்

பறிகொடுத்து அச்சமடைந்து அப்பால் போய் மாவிலங்குமரம்

வாடிநிற்கும் பாறைதளுக்கிடையில் உள்ள வழியில் நிற்கும்

களிறு(ஆண் யானை) தன் துணையான பெண் யானையைக்

கொன்ற புலியினது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.

இத்தகைய பாலை நிலத்திலுள்ள நீண்ட மலைத்தொடர்களைக்

கொண்ட அரிய வழியில் நம்மைப் பிரிந்து தலைவன் கடந்து

போவாரோ?".

Tuesday, 15 July 2025

எலியும் பூனையும் போல் விளங்கியவர் இரதி-மன்மதன் போல மாறியது எப்படி?து

 எலியும் பூனையும் போல விளங்கியவர் இரதியும் மன்மதனும் போல

மாறியதற்குக் காரணம் என்ன?


இவளோ வாலைப்பெண்(பன்னிரு வயதுப் பெண்.) பக்கத்து வீட்டில்

வாழும் இவனோ பதினான்கு வயதுச் சிறுவன்.;முரடன்.;இருவரும்

எப்பொழுதும் மோதல் போக்கை மேற்கொண்டனர்.இவன் இவளின்

கூந்தலைப் பிடித்திழுத்துத் துன்பம் தருவதும், இவள் பதிலடியாக இவனின்

தலைமுடியைப் பிடித்து ஆட்டிவிட்டு ஓடுவதும் அன்புடைய செவிலித்தாய்

இவர்களின் செயல்களைத் தடுப்பதும் வழக்கமாக நிகழ்வதுதான். ஏனென்

றால் இவர்கள் இருவரும் எப்பொழுதும் எலியும் பூனையும் போல நடந்து

கொள்வர். அடிக்கடி சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வர்.


ஆனால் இவர்கள் வளரந்து பெரியவர்கள் ஆன பிறகு(பருவ வயது அடைந்த

பிறகு) ஊழின் வலிமையால் இவர்கள் சண்டைக்குணம் மாறி ஒருவர் மற்றவர்

பால் ஈர்ப்பும் அன்பும் காட்டி நாளடைவில் காதலர்களாக மாறிவிட்டனர். எனினும்

இவர்கள் காதல் விவகாரம் மற்றவர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. இருப்

பினும் காதல்வயப்பட்ட இவள் நடத்தையில் ஐயம் கொண்ட இவள் அன்னை

இவளை  இற்செறிப்புச் செய்துவிட்டாள்.(இவள் வெளியேறிச் செல்லாவாறு வீட்

டிலேயே சிறைவைத்துவிட்டாள்). இருந்த போதிலும் இவள் கட்டுக் காவலை மீறிக்

காதலனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். 


பாலைநிலத்தில் இவள் தன் காதலனோடு சென்ற பொழுது  இவர்களைப் பார்த்த

வர்கள் மிகுந்த வியப்புக்கு உள்ளானார்கள். எலியும் பூனையும் போலச் சதா சர்வ

காலமும் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள்  இரதியும் மன்மதனும் போலக் காத

லால் கட்டுண்டு  கணவன் மனைவி ஆனமை ஊழின் வலிமையால் ஏற்பட்டதுதான்

என்று  தமக்குள் கூறிக்கொண்டனர்.


இது தொடர்பான குறுந்தொகைப் பாடலைப் பார்ப்போம்:

குறுந்தொகைப் பாடல் எண்: 229; புலவர்: மோதாசனார்.

பாலைநிலத்தில் இவர்களைக் கண்டோர் தமக்குள் கூறிக்

கொண்டது.

"இவன்இவள்  ஐம்பால்  பற்றவும்  இவள்இவன்

புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்

காதல் செவிலியர்  தவிர்ப்பவும் தவிரா(து)

ஏதில் சிறுசெரு  வுறுப மன்னோ.

நல்லைமன்(று) அம்ம! பாலே மெல்லியல்

துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்

மணமகிழ் இயற்கை  காட்டி  யோயே!"

அருஞ்சொற் பொருள்:

ஐம்பால்--ஐந்து விதமாகப் பகுக்கப்பட்ட  கூந்தல்.

ஓரி--ஆணின் தலைமுடி; பரியவும்--ஓடவும்.

ஏதில்-- ஏது இல்--காரணம் இன்றி; சிறு செரு--சிறு சண்டை

பாலே--விதியே.

ஏதில் சிறுசெரு உறுப--காரணமின்றிச் சிறு சண்டை செய்வர்.

மலர்த் துணைப் பிணையல் அன்ன இவர்--மலரைப் பிணைத்த

இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்.

மணம் மகிழ் இயற்கை காட்டியோய்--மணம் புரியும் இயல்பை

உருவாக்கினாய்.; பாலே--விதியே!

மன்ற நல்லை--நீ நிச்சயமாக நன்மையை  உடையாய்.

இச் செய்தியைத் தெரிவிக்கும் என் பாடல்கள்:

முன்னாளில் மீசைஇனும் அரும்பாத 

             இளவயது முரட்டுப்  பையன்

வன்னமுறும் அண்டையில்லச் சிறுமியுடன் 

     பலமுறையும் வம்பு செய்தான்;

அன்னவன்அச்  சிறுமியுடைக் கூந்தலினை 

             இழுத்தாட்டி  அல்லல்  தந்தான்;

பன்னரிய  சிறுமிபதி  லடியாக 

             அவன்முடியைப்  பற்றி   நைத்தாள்.


விதியின்விளை  யாட்டாலே  வளர்ந்தவுடன் 

             அவர்களுக்குள்  மெல்லக்  காதல்

உதித்திடவே பேரன்பைப் பரிமாறிப்  

              பழகினரே,  உண்மைக்  காதல்

அதிகரித்த  வேளையிலே  அன்னையவள்

              தடைசெய்ய அதனை மீறிப்

பதியகன்றே உடன்போக்கை மேற்கொண்டு 

              கொடுமைமிகு பாலை  வந்தார்.


பாலைதனைக்  கடக்கின்ற  வேளைதனில்

              அன்னவரைப்  பார்த்த  மாந்தர்

கோலமிகும் காதலர்கள் அந்நாளில் 

              சண்டையிட்ட. குறும்பை  எண்ணிக்

காலமவர் மனந்தனைநல் மாற்றமுறச் 

              செய்ததற்குக்  கார  ணம்என்?

சாலவுமே நல்லதொரு செயல்செய்தாய்

               விதியே! உன்  தகைமை  நன்றே!

Sunday, 29 June 2025

வியப்பூட்டும் பாடல்கள்.

 வியப்பூட்டும் பாடல்கள்.

"முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவார்;

அக்கண்ணற்(கு) உள்ள(து) அரைக்கண்ணே;---மிக்க

உமையாள்கண் ஒன்றரை;மற்  றூன்வேடன் கண்,ஒன்(று)

அமையுமித னாலென்(று) அறி".

பொருள்:

சிவபெருமான் முக்கண்களை யுடையவரென்று  நம் மூதாதையர்

கூறியுள்ளனர். உண்மை என்னவெனில், அக்கு(எலும்பு) அணிந்த

அப் பெருமானுக்கு அரைக்கண்ணே சொந்தம். எவ்வாறெனில்,

சிவபெருமான் தம் உடலில் சரிபாதியைத் தம் மனைவிக்குக்

கொடுத்துவிட்டதாகப் புராணம் கூறும். ஆக, உமையவளுக்கு

ஒன்றரைக் கண் சொந்தம். மேலும், வேடராகிய கண்ணப்ப

நாயனாரைச் சோதிக்கத் தம் கண்ணிலிருந்து  இரத்தத்தை

வழியவிட,, அதைப்பார்த்த கண்ணப்பர் அந்தக்கண்ணை அகற்றி

அந்த இடத்தில் தமது கண்ணைத் தோண்டி யப்பினதாகப் பெரிய

புராணம் கூறும். எனவே, ஒன்றரையும் ஒன்றும் சேர்ந்து  இரண்டரைக்

கண்கள் சிவபெருமானுக்குச் சொந்தமில்லாமற் போயின. ஆக,

அவருக்கு மிச்சம் இருப்பது அரைக்கண்ணே! அதைத்தான் பாடல்

கூறுகிறது. புலவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.அவர் கற்பனை

வியப்பூட்டுவதாகவுள்ளது.


வேறொரு வியப்பூட்டும் பாடலைப் பார்ப்போம்:

"கைத்தலம் தன்னில் பசும்பொன் வளையல் கலகலெனச்

சத்தம் ஒலித்திட நூபுரம் பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடம்செய்சம் பீசர்தம் சந்நிதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல் சுமந்து திரிந்தனளே!"

பொருள்:

கைகளில் அணிந்துள்ள புதிய தங்க வளையல்கள் கலகலவென்று

ஓசை செய்யவும், கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கிண்கிணியும்

மெதுவாய் ஓசையெழுப்பவும், தத்திமியென்று தாளத்தோடு நடனமாடு

கின்ற சம்புகேசப் பெருமானது சந்நிதிப் பெண் சாமந்திப் பூவைத்

(சா+மந்தி= செத்த குரங்கு) தலையில் சூடிக்கொண்டு திரிந்தனளே!

இந்தப் புலவரின் வார்த்தை விளையாட்டு வியப்பூட்டுகிறது.(புலவர்

பெயர் தெரியவில்லை).


அந்தகக்கவி வீரராகவ முதலியார் தானன் என்னும் வள்ளல் தமக்கு

யானையைப் பரிசாக வழங்கினதைப் போற்றிப் பாடியது:

இல்லையெனும்  சொல்லறியாச் சீகையில்வாழ்

தானனனைப்போய்  யாழ்ப்பா  ணன்யான்

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்

        பழந்தூசும். பாலி யாமல்

கொல்லநினைந் தேதனது நால்வாயைப்

பரிசென்று  கொடுத்தான்; பார்க்குள்

தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கும்

இரையெங்கே  துரப்பு வேனே!

பொருள்:

ஈயென இரந்து வருவோர்க்கு "இல்லை" என்று சொல்லத் தெரியாத

சீகை என்னும் பதியில் வாழந்துவரும் தானன் என்னும் பெயருடைய

வள்ளலிடம் போய் எனது வறுமை நிலைமையைப் பற்றிச் சொல்லி

எனக்குத் தேவையானதை நயந்து கேட்டால், தூய்மையான வெள்ளைச்

சோறும் பழைய துணியும் தராமல், என் உயிர்போக்க எண்ணி

நால்வாயாகிய தனது யானையைப் பரிசாக அளித்தான். உலகத்தில்

பசியால் துன்புறுகின்ற எனது ஒரு வாயோடு இன்னும் நால்வாய்க்கும்

உணவை எங்கே கண்டு நிரப்புவேன்?

(நால்வாய்--நாலும் வாய்--தொங்குகின்ற வாயையுடைய யானையைக்

குறிக்கும். யானைப் பரிசில் என்பது வெறும் யானையை மட்டும்  பரிசாகக்

கொடுப்பதன்று;; யானையையும் அந்த யானைக்குத் தீனி போடுவதற்கான

செலவைச் சமாளிக்கத் தேவையான  பணத்தையும் பரிசாகக் கொடுப்பது

வழக்கம்.)


பார்வை:

தனிப் பாடல் திரட்டு(1&2ஆம் பாகங்கள்)--சாரதா பதிப்பகம்.

உரையாசிரியர்: கா சுப்பிரமணிய பிள்ளை.







Saturday, 14 June 2025

தாத்தா பாட்டியைப் போற்றிடுவோம்.

 தாத்தா பாட்டியைப் போற்றுவோம்.


பிள்ளைகளை வளர்ப்பதிலே  வீட்டிலுள்ள 

       மூத்தோர்க்குப் பெரும்பங்(கு) உண்டு;

விள்ளரிய  அறம், அன்பு  நீதி, நெறி

       கடைப்பிடித்தல் வேண்டும்  என்று

கள்ளமிலாப்  பிஞ்சுளத்தில்  பதியவைத்துப்

        பின்பற்றக் கதைகள்  மூலம்

தள்ளரிய நல்லொழுக்க  வழிமுறையைக்

         காட்டிடுவர் தாத்தா பாட்டி.


காலையிலே  துயிலெழுப்பிப்  பல்துலக்கல்

         நீராடல் கடவுள் பேணல்

வேலைகளை  முறையாகச் செயத்தூண்டி

         நல்லுணவை விரும்பி  யூட்டிச்

சீலமிகு  கல்விகற்கப்  பள்ளியினுக்(கு)  

         அனுப்பிடுவர்; சீராய்க்  கற்று

மாலையிலே  மனைதிரும்பும் பிள்ளைகளை 

         எதிர்கொண்டு வரவேற்  பாரே.


அந்தியிலே  சிறிதமயம்  விளையாடச்

          செய்துபின்னர் அமர வைத்துச்

சிந்தைகளி கூர்ந்திடவே  இன்குரலில்

           பாடவைத்துச்  சிலிர்க்கச் செய்வர்.

விந்தைமிகு  கல்விகற்கத்  தூண்டிடுவர்;  

          பள்ளிதந்த  வீட்டுப் பாடம்

எந்தவிதத் பிழையுமின்றி முடிப்பதற்குத்

          துணைசெய்வர்  இன்னும்  உண்டே.


இரவுணவைப் படைக்கின்ற  வேளையிலே

          நன்னெறியை  எடுத்துச்  சொல்லும்

தருமமிகு கதைபகர்ந்து  வயிறார  

          உணச்செயவர்;  தமிழில்  நல்ல

சுருதியுடன்  இதமான  இராகத்தில்  

          தாலாட்டைச் சுகமாய்ப்  பாடி

விரைவினிலே  துயிலும்வகை  உடல்நீவித் 

           தூங்க வைப்பர்; மேன்மை  மிக்கார்.


ஒவ்வொருவர்  வாழ்வினிலும்  நற்குழவிப்  

           பருவத்தில்  உயர்ந்த  மூத்தோர்

செவ்வியதாம்  முறையினிலே வளர்ப்பதற்கு  

           நற்றுணையாய்த்  திகழ்வர்; மேலும்

ஔவியமும்  கொடுஞ்சினமும்  தீச்செயலும்  

            தவிர்ப்பீரென்(று) அறைவர்  அன்னார்;

எவ்விதத்தில்  இவர்க்குநன்றி கூறிடுவோம்? 

             கண்கண்ட  இறைவன்  தானே!










Tuesday, 27 May 2025

மன்மதன் தன் ஐந்து கணையால் வாடினாள்.

 மன்மதன்தன் ஐந்துகணையால் வாடினாள்.


இரண்டாம் குலோத்துங்க சோழரின் அரசவையில் புலவர் பெருமக்களின்

ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் குரு

நாதரும் தலைமைப் புலவருமான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர்,

சோழ நாட்டின் ஏனைய புலவர்கள், சேர, பாண்டிய நாடுகளிலிருந்து வந்த

புலவர்கள் குழுமியிருந்தனர். வெகு தொலைவிலுள்ள ஊரிலிருந்து அப்

பொழுதுதான் வந்தடைந்த ஔவைப் பிராட்டியார்(இவர் இடைக் காலத்து

ஔவையார்--அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர் அல்லர்) தாமும் அக்

கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்ததால் குலோத்துங்கர்

கூத்தருக்கு எதிர்வரிசையில் நல்லதொரு இருக்கையில் அமரச் செய்தார்.


அவையிலிருந்த அனைவரும் ஔவையாரிடம் நலம் விசாரித்தனர். ஔவை

யாரும் தமது சுற்றுப் பயணத்தில் கண்ட மற்றும் கேட்டறிந்த செய்திகளைச்

சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது காலம் கடந்தபின் குலோத்துங்கர்"புலவர்

பெருமக்களே! தமிழாய்வைத் தொடங்குங்கள்'  என்று கூறினார். ஒவ்வொரு

புலவரும் தாங்கள் அண்மையில் இயற்றிய பாடலைச் சொல்லி அதன் பொரு

ளையும் நயத்தையும் கூறினர். இது முடிந்தவுடன் ஔவையார் கூத்தரை நோக்கி

'கவிச் சக்கரவர்த்திகளே! நான் சில முத்திரைகளைக் கைவிரல்களால் செய்து

காட்டுகிறேன். தாங்கள் அவற்றின் மெய்ப்பொருள் யாவையென விளக்குதல்

வேண்டும்" என்றார். ஒட்டக் கூத்தர் முதிய வயதினர்; எனவே செவிப் புலன்(காது)

சிறிது  வேலை செய்யாது. ஔவையார் நிபந்தனையாகச் சொன்ன மெய்ப்

பொருள் என்னும் சொல் அவருக்குக்  கேட்கவில்லை. அவையிலுள்ள அனைவரும்

ஔவையாரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஔவையார் தமது விரல்களால் ஐந்து முத்திரைகளைச் செய்து காட்டினார்.

பிறகு கூத்தரிடம் "ஐயா! பாடுக" என்றார். கூத்தர் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:

"இவ்வளவு கண்ணினாள்; இவ்வளவு சிற்றிடையாள்;

இவ்வளவு போன்ற இளமுலையாள்--இவ்வளவு

நைந்த உடலாள்; நலம்மேவ மன்மதன்தன்

ஐந்துகணை  யால்வாடி னாள்'.

குலோத்துங்கர் உட்பட  அவையிலுள்ளோர் அனைவரும்(ஔவையார் நீங்கலாக)

கைகளைத் தட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உண்மையிலையே அப்பாடல்

கருத்துச் செறிவுள்ள அகப்பொருட் பாடலாகும்.

"இவ்வளவு (முட்டைக் கண்ணும் அல்லாது இடுங்கிய கண்ணும் அல்லாது) அளவான

கண்ணையுடையவள்; இவ்வளவு சிறுத்த இடையையுடையவள்; இவ்வளவு பெருத்த

மார்பகங்களையுடையவள்; தலைவனப் பிரிந்திருக்கும் விளைவாக இவ்வளவு நைந்த

உடலையுடையவள்; தனிமையில் இருப்பதால் மன்மதனின் ஐந்து மலர் அம்புகளால்

(தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை,நீலோற்பலம்) மேனி நொந்து வாடினாள்."

ஔவையார் குறுக்கிட்டுச் சக்கரவர்த்திகளை நோக்கி "பேரரசே! கூத்தர் பெருமான்

நான் கூறிய நிபந்தனையைக் கவனிக்கத் தவறிவிட்டார். நான் சில முத்திரைகளைச்

செய்து காட்டி அவற்றின் மெய்ப்பொருள்(அறம் மற்றும் கடவுள் பற்றிய சிந்தனை)

யாவை? எனக் கேட்டிருந்தேன். அவர் சிற்றின்பப் பொருள்தரும் காதற் பாடலைப்

பாடியுள்ளார். பாடல் மிக மிக அருமை; ஆனால் மெய்ப்பொருளை  விளக்கவில்லை"

என நவின்றார். குலோத்துங்கர் தமது குருநாதரைக் கூறை கூறாமல்(குலோத்துங்கருக்கு

மட்டுமல்லாமல்  அவர் தந்தை விக்கிரம சோழருக்கும்  மகன் இரண்டாம் இராசராசனுக்கும்

கூத்தரே ஆசான் ஆவார்) ஔவையாரை விளித்து "அம்மையே! உமது முத்திரைக்கு நீவிரே

மெய்ப்பொருள் உரைத்திடுவீர்" என்று கேட்டுக் கொண்டார். ஔவையார் பாடலானார்:

"ஐயம் இடுமின்;  அறநெறியைக் கைப்பிடிமின்;

இவ்வளவே னும்மனத்தை இட்டுண்மின்--தெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்".

பொருள்:

ஏழையெளியவர்க்குப் பிச்சை இடுங்கள்;  நீதி, நேர்மை போன்ற அறநெறிகளைக்

கைக்கொள்ளுங்கள்; நீவிர் உண்பதற்குமுன் இவ்வளவேனும் அன்னத்தைப்

பிறருக்குக் கொடுத்துவிட்டு உண்ணுங்கள்;  கடவுள் ஒருவரே என்ற உண்மையை

உணருங்கள். உணர்ந்தால் ஐந்து புலன்களால் உருவாகும் வினைகள் அனைத்தும்

அற்றுவிடும்.

இந்த மெய்ப்பொருளைக் கேட்டவுடன் குலோத்துங்கர், கூத்தர் உட்பட அவையோர்

அனைவரும் வரவேற்று உவகைக் கடலில் மூழ்கினர் என்பதைச் சொல்லவும்

வேண்டுமோ? ஔவையார் தமிழர்க்குக் கிடைத்த மகா அறிஞர்.



 




Sunday, 4 May 2025

"காய்ச்சிய பாலைக் குடி போ"

 "காய்ச்சிய பாலைக் குடி, போ" என்றேன்; உடன்போக்கில் சென்றனளே.


இடைக்காலப் புலவர் ஒருவர் தனிப்பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.

அதில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். ஒரு குடும்பத்தில் ஓர்

அன்னையும் அவள் மகளும் வாழ்ந்து வருகின்றனர். மகள் வயது

பதினான்கு அல்லது பதினாறு இருக்கலாம். பருவச் செழிப்போடு

மகள் திகழ்கின்றாள். அன்னை தன் மகளை மிகவும் வாஞ்சையுடன்

பேணிப்பேணி வளர்த்துவருகின்றாள். அவள் தந்தையார் பொருளீட்ட

வெளியூர் சென்றிருக்கின்றார். எனவே, கூடுதல் அக்கறையோடும்

கவனத்தோடும் அன்னை மகளைப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறாள்.

அன்றாடம் காலையும் மாலையும் மகளுக்குப் பாலைக் காய்ச்சிக்

குடிக்கக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.


அண்மைக் காலமாக மகளுடைய நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள்

தெரிகின்றன. வேளாவேளைக்கு உண்பதில் நாட்டமில்லை. அடிக்கடி

தட்டொளி(உலோகக் கண்ணாடி)யில் முகத்தைப் பார்த்துத் திருத்திக்கொள்

கின்றாள். தோழியுடன் நெடுநேரம் எதைப்பற்றியோ உரையாடல் நிகழ்த்து

கின்றாள். பாவைகளை வைத்து விளையாடும் நேரம் சுருங்கிவிட்டது.

அன்னை இம்மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும்

மகள் மீது யாதொரு ஐயமும் ஏற்படவேயில்லை. நியாயமாக மகள் உரிய பருவம்

எய்தியதும் அன்னையின் கவனமும் கண்காணிப்பும் அதிகரித்திருத்தல் வேண்டும்.

ஆனால் மகளை இன்னும் சிறுமியாகவே அன்னை நோக்கினாள்; வளர்ந்துவரும்

பருவக் குமரி என்பதனை மறந்து விட்டாள்.


விளைவு என்னவென்றால், மகள் ஒரு தலைவனைக் கண்டு அவன்பால் மனத்தைப்

பறிகொடுத்துவிட்டாள். களவியல் காதல் என்பதனால் அன்னைக்கோ, அருகிருக்கும்

ஏனையோருக்கோ தெரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. தோழிக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், தலைவியோ அவளின் தோழியோ அறத்தொடு நின்று(களவுக் காதலை வெளிப்பட

உரைத்தல்) வெளிப்பட உரைத்தால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியவரும். கடந்த ஓரிரு

நாட்களாகத் தலைவியும் தோழியும் அடிக்கடி சந்தித்து உரையாடிவந்தனர். அரவம்(சத்தம்)

வெளியே கேட்காத வகையினில் கமுக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்னை யாதொன்றும்

அறியாமல் தன் இயல்புப் படி வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். வழக்கம்போல, மகளிடம்

காலை மாலை பாலைக் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துவந்தாள். குறிப்பிட்ட நாளும் வந்தது.

அன்று முழுவதுமே தலைவியும் தோழியும் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்பட்டனர். அன்று

மாலை(முன் இரவு) அன்னை மகளிடம் "காய்ச்சிய பாலைக் குடி போ" என்று கூறினாள்.

காய்ச்சிய பாலை ஒரு கலத்தில் வைத்துள்ளேன். அங்குபோய் அதனைக் குடி" என்னும்

பொருள்படக் கூறினாள். சிறிது நேரம் நகர்ந்தது. அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்னை தன் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல்

துடித்துப் போய்விட்டாள்.  எங்கே போயிருப்பாள்? என்ன நேர்ந்தது? என்று அறியாமல்

குழம்பினாள். தோழியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் தன்மகளைப்பற்றிய விவரம்

கேட்டாள். தோழி மென்று விழுங்கினாள். பின் தனக்குத் தெரிந்த தகவல் அனைத்தையும்

வெளிப்படுத்தி விட்டாள். அன்னைக்கு மகள் தன் தலைவனுடன் உடன்போக்கு 

மேற்கொண்டு சென்றுவிட்டாள் என்னும் உண்மை  புரிந்தது. " காய்ச்சிய பாலைக் குடி போ"

என்று அவள் உடல் நலத்தைப் பேணும் வழி சொன்னேன். அவள் வேறு விதமாகப் பொருள்

கொண்டுவிட்டாள். "பாலை நிலத்துக்கு உடன்போக்கில் தலைவனுடன் குடி போ" என்று

தவறான அர்த்தம் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவிட்டாள்" என்று

புலம்பினாள். அவள் புலம்பிய பாடல் வருமாறு:

"பூச்சிலைக் கன்னல்கைச் சேடா சலேந்த்ரன் பொருப்பிடத்தே

காய்ச்சிய பாலைக் குடிபோவென் றேனந்தக் காரிகையும்

பேச்சிலெத் துக்கள்ளி பின்கைகை ராமற்கு முன்சொன்னதா

வாய்ச்சுதென் றேநடந் தாள்பாலை யான வனந்தனிலே!".

பொருள்:

கரும்பாகிய வில்லையும் கை நிறைந்த பூவையுமுடைய மன்மதன் போன்ற

சேடாசலேந்திரனுடைய(சேஷாசலேந்திரனுடைய) மலையிடத்தே, காய்ச்சிய

பாலைக் குடிக்கும்படி போகச் சொன்னேன்; அந்தப் பெண்ணாகிய என்மகளும்,

சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருள் வேறு கொண்டு ஏமாற்றுகின்ற திருட்டுக்

குணமுடையவளாதலால், கைகேசி இராமனுக்குக் காட்டுக்குப் போகும்படி

சொன்னதுபோலத் தனக்கும் என் பேச்சு பொருத்தமானது என்றெண்ணிப் பாலை யான

வனந்தனிலே தலைவன் பின் சென்றுவிட்டாள்.


சங்ககாலத்தில் உடன்போக்கு செல்வது காதலில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.

சமுகம் இதனைக் காதலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர்

இதனைக் "கொண்டுதலைக் கழிதல்" என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தலைவன்

தலைவியை அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்துதர மறுக்கும் பொழுது

தோழியின் உதவியால் தலைவியை மணந்துகொள்வதற்காகத் தன்னூருக்குக்

கொண்டு செல்லல். இதில் தலைக் கழிவு என்பது தலைமையாகிய  செலவு எனப்

பொருள்படும். சுருங்கக் கூறின், கொண்டுதலைக் கழிதலாவது, உடன் கொண்டு

பெயர்தலாகும். தற்காலத்தில், உடன்போக்கு சமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதோ?

என்று எண்ணத் தூண்டுகிறது. ஒருவித வெறுப்புடன் கொச்சையாக. "ஓடிப்   போனவள்/

ஓடி வந்தவள் என்ற கொச்சையான பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

தொல்காப்பியர்க்கும்  முன்பே  பெரியோர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று

சிறப்பிழந்து நோக்கப்படுகிறது.


பார்வை: தனிப்பாடல் திரட்டு 2 ஆம் பாகம்-- உரையாசிரியர் கா.சு.பிள்ளை,

                  வர்த்தமானன் பதிப்பகம்.


Saturday, 12 April 2025

மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.

 மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.


தற்காலத்தில் குடியரசு ஆட்சி நிலவுகிறது. நூற்று நாற்பது

கோடி மக்களும் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு

ஒவ்வாதது. ஆகவே மக்கள் தம் சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிய

உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்.

அவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பழங்காலத்தில்

மன்னரை ஆட்சியில் அமர்த்தினர்.. மன்னர் நாட்டு மக்களின்

உயிருக்கும் உடைமைக்கும் நாட்டு வளங்களுக்கும் பாதுகாவலர்

என்ற நிலையில் மன்னருக்கு முதன்மை உரிமையும் அதிகாரமும்

தரப்பட்டது. புறநானூறு 186ஆம் பாடலில்  மோசிகீரனார் என்ற

புலவர் நெல்லும் உயிராகாது; நீரும் உயிராகாது. விரிந்த இந்த

நாடு ஆள்பவனை(மன்னனை) உயிராகக் கொண்டது. அதனால்

"மன்னனே நாட்டின் உயிர்" என்பதை அறிந்து கொள்ளுதல் வெல்லும்

படையுடைய ஆள்வோரது(மன்னர்) கடமையாகும் என்று பாடியுள்ளார்.

பாடல் பின்வருமாறு:

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யானுயிர் என்பது அறிகை

வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே".

(உயிர்த்து=உயிரை உடையது; மலர் தலை= விரிந்த இடம்).


செவ்விய ஆட்சி செய்யும் மன்னரைத் தெய்வத்துக்கு அடுத்த

நிலையில் உயர்வாக மக்கள் கருதினர். சங்க இலக்கியங்களில்

மன்னர் புகழ் ஆங்காங்கே பேசப்படுகிறது. சாதாரணமாகப்

பாடும் பொழுதிலும் மன்னரைப் போற்றிவிட்டுத்தான் மேற்கொண்டு

பாடுவதை மரபாகக் கொண்டனர். சிலம்பி என்னும் பெண் தன்னைப்

பற்றிப் பாடுமாறு புலவர் பெருமான் கம்பரைக் கேட்டுக் கொண்டதாகவும்

அவர் ஆயிரம்பணம் கேட்டதாகவும் அப்பெண் ஐந்நூறு பணம் தந்ததாகவும்

கம்பர் பாதிப் பட்டே பாடியதாகவும்  உலவும் ஒரு கதை வழக்கிலுண்டு.(இது வெறும்

கதைதான். உண்மையாக நிகழ்ந்தது என்று கூற யாதொரு ஆதாரமும் இல்லை).

அந்தப் பாதிப் பாடலிலும் காவிரியையும், சோழமன்னரையும், சோழ நாட்டையும்

குறிப்பிட்டாரே யன்றிப் பணம் கொடுத்த சிலம்பியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

மீதிப்பணம் வந்தபிறகு மீதிப்பாடலைப் பாடலாம்; அப்போது சிலம்பியைக் குறிப்பிட்டு

வாழ்த்தலாம் என்று எண்ணியிருந்தார். நல்லவேளையாக அப்பாதிப் பாடலை

அவ்வீட்டுச் சுவரில் எழுதி விட்டுச் சென்றிருந்தார். சில நாட்கள் கழிந்தபின்னர்

அவ்வூருக்கு வந்த ஔவையார் நடந்தவற்றை அறிந்து மீதிப்பாடலைப் பாடி

நிறைவு செய்தார் என்பது கதை.(...............................................பெண்ணாவாள்

அம்பொன் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொன் சிலம்பே சிலம்பு). (அரவிந்தம்=தாமரை). இதுதான் மீதிப் பாடல். இதற்கு

அன்பளிப்பாக அவர் குடிப்பதற்குக் கூழைப் பெற்றுக்கொண்டதாகக் கதை. 


இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பழங்காலத்தில்  ஒரு காவியமோ,

பாடலோ படைக்கும் முன்னர் அந்நாட்டையும் மன்னனையும் வேறு சிறப்பு இருப்பின்

அதனையும் பாடிய பிறகே தாம் படைக்க நினைத்த நூலைப் புலவர் தொடங்குவர்.

இது புலவர்கள் பின்பற்றிய மரபு.  புலவரல்லாத ஏனையோர் தமது மார்பிலோ

தம் குழந்தைகள் மார்பிலோ மன்னரது பெயர்களை எழுதிக் கொள்வர். இந்த

வழக்கத்தைக் கீழ்க்கண்ட பாடல் விவரிக்கிறது.


அந்நாளில் அரசகுலத்துப் பெண்டிர் தமக்குக் குழந்தைகள்

பிறக்கும் காலத்தில்  அக்குழந்தை ஆண்குழந்தை என்றால்

பெருமகிழ்ச்சி அடைவது இயல்பு. ஏனென்றால் அரசாட்சி

புரியத் தேவையான அடுத்த தலைமுறை உருவானதால்

ஏற்பட்ட பேருவகை காரணமாகும். மேலும் அக்குழந்தையின்

மார்பு அகன்று விரிந்து பரந்து தென்பட்டால் களிக்கடலில்

மூழ்கித் திளைத்திடுவர். ஏனென்றால் விரிந்து பரந்த அகன்ற

மார்பு வீரத் தோற்றத்தை வெளிக்காட்டும். ஆனால் கம்பர்

பெருமான் வேறொரு காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.


இந்நாளில் மக்கள் தமக்கு மிகவும் பிடித்தமான தலைவர்,

நடிகர் முதலானோர் படங்களை மார்பிலும் தோளிலும் பச்சை

குத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். முன்னாளிலும் இது

போல மக்கள் தம் மன்னரின் பெயர், பட்டப் பெயர் முதலான

வற்றை மார்பில் எழுதிக் கொள்வர். ஒவ்வொரு மன்னருக்கும்

இயற்பெயர், விருதுப் பெயர் எல்லாம் சேர்த்தால், எண்ணிக்கை

ஏழெட்டு தேறும். அவையனைத்தையும் தத்தம் குழந்தைகளின்

மார்பில் எழுதிக் கொள்ளத் தோதாக மார்பகலம் இருப்பதைக்

கண்டு பெற்ற தாய்மார் மகிழ்ந்து போவதாகக் கம்பர் பாடியுள்

ளார்.அரசகுலத்தில் பிறவாத மக்களே தம் குழந்தைதளின்

மார்பகலம் கண்டு மகிழும் போது, அரச குலத்துப் பெண்டிர்

இவ்வாறு மகிழ்வது இயல்புதானே! இனி, பாடலைப் பார்ப்போம்:

"பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்

மார்பகலங் கண்டு மகிழ்வரே---போர்புரிய

வல்லான் அகளங்கன் வாணன் திருநாமம்

எல்லாம் எழுதலாம் என்று."

அருஞ்சொற் பொருள்:

மதலை-மகன், குழந்தை; அகளங்கன்= அ+களங்கன்=களங்கம்

இல்லாதவன். வாணன்- ஒரு குறுநில மன்னன்.


மேலும் பொதுமக்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும்

தம் மன்னரின் கொடியைப் பற்றியும் தேரைப் பற்றியும் இதர சிறப்பைப்

பற்றியும்  பாடிக்கொண்டே அச் செயலைச் செய்வர். முத்தொள்ளாயிரம்

என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் அரண்மனைப் பெண்டிர்

பாண்டியமன்னனுக்குரிய குளியலுக்கான சுண்ணப்பொடி(நறுமணப்

பொடி) இடிக்கும் பொழுது பாண்டியனின் கொடி முதலானவற்றைப்

பாடிக்கொண்டே இடித்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் பின்வருமாறு:

"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்

முடிபாடி முத்தாரம் பாடி"ச் சுண்ணம் இடித்தனர்.

இவ்வாறு பழங்கால மக்களின் வாழ்க்கையில் மன்னரைப் பற்றிய

உயர்வான சிந்தனை, அவர் நலத்தைப் பற்றிய கரிசனம் ஒன்றிக்

கலந்திருந்ததை அறியலாம்.

Tuesday, 25 March 2025

புதுமைப்பெண்.

புதுமைப் பெண்  விதித்த நிபந்தனை


ஓர் அழகிய நகரத்தில்  ஓவியக் கண்

காட்சி நடைபெறுகின்றது.  அக்காட்சிக்கு

மனைவியை  அழைத்துச்  செல்ல  எண்ணு

கின்றார், அக்குடும்பத்தின் தலைவர். கணவன்

மனைவிக்கிடையே கீழ்க்கண்டவாறு

உரையாடல் நடைபெறுகின்றது.:

கணவர்: நகரில் நடைபெறும்  ஓவியக்

                 கண்காட்சிக்குச் சென்று

                 வருவோமா?

மனைவி: போய் வருவோம்; ஆனால்

                   ஒரு நிபந்தனை.

கண.: என்ன நிபந்தனை?

மனை:ஆண்கள் படங்களை நான்

              பார்க்கமாட்டேன்.

கண.: அப்படியா? ஏன் இந்தப் பழக்கம?

மனை: தமிழ்ப்பண்பாடு அது தானே!

கண.: அதுசரி; அதுசரி; நீ அப்படியே

             செய்துகொள்.

மனை: இன்னொரு நிபந்தனையும்

               உண்டு்.

கண.:இன்னொரு நிபந்தனை என்ன?

மனை:பெண்கள் படங்களை  நீங்கள்

              பார்வையிட்டால் நான் மனம்

              பொறுக்கமாட்டேன்.

இந்த விநோதமான நிபந்தனைகளை

ஏற்றுக் கொண்டால் கண்காட்சிக்குச்

சென்று பார்வையிடுவதால் எந்த

மகிழ்ச்சியும் ஏற்படாது. இதைத்தான்

கீழ்க்கண்ட கவிதை  மறைமுகமாக

எடுத்துரைக்கிறது.

பாடல்:

ஓவியர்நீள் சுவரெழுதும்  ஓவியத்தைக்

கண்ணுறுவான்

தேவியையான்  அழைத்திடஆண்

        சித்திரமேல்  நான்பாரேன்;

பாவையர்தம்  உருவெனில்நீர்  பார்க்க

மனம்  பொறேனென்றாள்;

காவிவிழி  மங்கையிவள்  கற்புவெற்பின்

        வற்புளதால்.

இந்தக்  கவிதையை  என் பள்ளிநாட்க

ளில்  படித்திருக்கிறேன்.  ஆசிரியர்

யாரென்று  நினைவுக்கு வரவில்லை.

அநேகமாக, இயற்றியவர்  பாரதிதாசன்

அவர்களாக  இருக்கலாம்.ஏனென்றால்,

"கற்பு  நிலையென்று சொல்லவந்தால்

இரு கட்சிக்கும் அஃதைப்  பொதுவில்

வைப்போம்" (ஆண்,பெண்  இருவருக்கும்

கற்பு  பொதுவானது) என்று  முழங்கிய

மகாகவி பாரதியாரின்  சீடர்  தானே

பாரதிதாசன்.  என் கருத்துப்படி விளை

யாட்டாகப்  பாடப்பட்ட  கவிதை போலத்

தோன்றினாலும், அதன் கருப்பொருளாக

ஆண்,பெண்  இருவரும்  கற்பு  உட்பட

அனைத்து  விடயங்களிலும்  சரிநிகர்

சமானம்  என்பது வலியுறுத்தப்  பட்டுள்

ளது.  இனி,  வேறு ஒரு  சுவையான கவிதையைப்

பார்ப்போம்:

இரண்டு தமிழ் அறிஞர்கள்  பலதரப்பட்ட

விடயங்கள்  குறித்துத்  தங்களுக்குள்

உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.  வெகு

நேரம்  கடந்த  காரணத்தால்  ஒருவர்  மற்ற

வரிடம்  விடைபெற்றுக்  கொண்டு  தமது

இல்லத்துக்கு  வந்து  சேர்கிறார்.  வீட்டுக்கு

வந்த போதும்  அவர்  மனம்  அன்று  நிகழ்ந்த

சந்திப்பு  குறித்தும்,  நடைபெற்ற  உரையாடல்

குறித்தும்  திரும்பத் திரும்ப  எண்ணி மகிழ்ந்

தது.  உடனே ஒரு  கவிதை  உருவாயிற்று.:

"சூர்வந்து  வணங்கும்  மேன்மைச்

     சுப்பிர  மணிய  தேவே!

நேர்வந்து  நின்னைக்  கண்டு

    நேற்றிராத்  திரியே  மீண்டேன்;

ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

   உளம்வந்து  சேரக்  காணேன்;

ஆர்வந்து  சொலினும்  கேளேன்;

  அதனையிங்(கு)  அனுப்பு  வாயே!'

என்ன  அருமையான  கவிதை!

" ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

     உளம்வந்து  சேரக்  காணேன்;"

சொற்கட்டு, ஓசைநயம், கருத்துச்  செறிவு

மிக  மிக  நேர்த்தியாக  அமைந்துள்ளன.

கவிதையைப்  பாடியவர்  மாயூரம்(தற்போது

மயிலாடுதுறை) முன்சீஃப்  வேதநாயகம்பிள்ளை

அவர்கள்.  பாடப்பட்டவர்: திருவாவடுதுறை

ஆதீனகர்த்தர்  அவர்கள்.  இருபெரும்  தமிழ்

அறிஞர்களும்  மறைந்துவிட்டனர்.  ஆனால்

இந்தக்  கவிதை  என்றென்றும்  நினைவில்

நிற்கும்.

   




Tuesday, 4 March 2025

சித்திர கவி.

 சித்திர கவி.


"கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால"

என்பது தண்டியலங்காரச் சூத்திரம் ஆகும். அக்கரச் சுதகமும்

என உம்மையில் முடிந்திருப்பதால் வேறு சிலவும் வழக்கத்தில்

உள்ளன என உணரலாம். அவையாவன: நிரோட்டம், ஒற்றுப்

பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை,

முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, இரத பந்தம், பிறிதுபடு

பாட்டு போன்றவை. இவை வியக்கவைக்கும் கவிகள். இவற்றை

இயற்றுவதும் கடினம்; புரிந்து கொள்வதும் கடினம். இவற்றை

மிறைக்கவிகள் என்றும் அழைப்பர். தற்காலத்தில் இவ்வகைக்

கவிகளைப் படைத்தல் மிக மிக அரிதாகிவிட்டது.  சித்திர கவியில்,

மாத்திரைச் சுருக்கம் மற்றும் மாத்திரை வருத்தனை வகைகளைப்

பார்ப்போம்.


மாத்திரைச் சுருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைத்தரும்

சொல்லானது, ஒரு மாத்திரையைக் குறைத்தால் வேறொரு பொருளை

வெளிப்படுத்தும் சொல்லாக மாறும் நிலை. மாத்திரை என்பது எழுத்தை

ஒலிக்கும் கால அளவு. எடுத்துக்காட்டாக,  நெட்டெழுத்தை இரண்டு மாத்திரை

அளவு ஒலிக்கின்றோம். அதன் மாத்திரையைக் குறைத்து விட்டால், அதாவது,

குற்றெழுத்தாக மாற்றிவிட்டால் அச்சொல் வேறு ஒரு பொருளைத் தரும்.

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்;

நீர்நிலையோர் புள்ளி பெற,நெருப்பாம்---சீரளவும்

காட்டொன்(று) ஒழிப்ப இசையாம் அதனளவில்

மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு".

நேரிழையார்--பெண்கள்; இவர்களின் கூந்தல் ஓதி என இலக்கியம்

இயம்பும். ஓதி என்ற சொல்லில் ஒரு மாத்திரையைக் குறைத்தால் ஒதி என

ஆகும்.. ஒதி என்னும் சொல் ஒதிய மரத்தைக் குறிக்கும்,; நீர்நிலை--ஏரி. இதில்

ஒரு மாத்திரையைக் குறைக்க எரி என்று வரும். எரி என்பது நெருப்பைக்

குறிக்கும்; காட்டைக் குறிக்கும் சொல் காந்தாரம். இதில் ஒரு மாத்திரையைக்

குறைத்தால் கந்தாரம் என்று வரும். இது ஒரு இராகத்தை(பண்)க் குறிக்கும்.

இதில் மீண்டும் ஒரு மாத்திரையைக் குறைத்தால் கந்தரம் என்று வரும். இது

மிடறு என இலக்கியம் சொல்லும் கழுத்தைக் குறிக்கும்.(பழங்காலத்தில் எழுத்து

வரிவடிவம் முழு வளர்ச்சியுற்ற  நிலை பெறாமல் இருந்தது. நெட்டெழுத்து,

குற்றெழுத்து வேறுபாட்டை உணர்த்த எ, ஒ போன்ற உயிரெழுத்து மேலேயும்

புள்ளிவைத்தல் கடைப்பிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் உருவான நூல் இது.

எனவே நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமெனவும், 

நீர்நிலையோர் புள்ளி பெற நெருப்பாம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்து 'ஒ' என்ற நெட்டெழுத்தையும் 'எ' என்ற நெட்டெழுத்தையும்

குற்றெழுத்தாக்க அவற்றின் மேல் புள்ளிவைத்தல் என்னும் அன்றைய

வழக்கத்தைப் பாடல் தெரிவிக்கிறது.)


இனி, மாத்திரை வருத்தனை என்ன எனப் பார்ப்போம். மாத்திரை வருத்தனை,

மாத்திரைச் சுருக்கத்துக்கு நேர் எதிரானது. ஒரு குறிப்பிட்ட பொருள்தரும் ஒரு

சொல்லின் மாத்திரையை அதிகரித்தால் வேறு பொருளைத் தரும் சொல்லாக

மாறிவிடும். 

"அள(பு)ஒன்(று) ஏறிய வண்டதின் ஆர்ப்பினால்

அள(பு)ஒன்(று) ஏறிய மண்அதிர்ந்(து) உக்குமால்;

அள(பு)ஒன்(று) ஏறிய பாடல் அருஞ்சுனை

அள(பு)ஒன்(று) ஏறழ(கு) ஊடலைந்(து) ஆடுமால்".

அளி என்னும் சொல் வண்டு என்னும் பொருள்தரும். அளபு ஏறிய வண்டு அதாவது

மாத்திரை அதிகரித்த அளி ஆளிஎன்ற சொல்லாகும். தரை என்னும் சொல் மண்ணைக்

குறிக்கும். அளபேறிய மண் அதாவது மாத்திரை அதிகரித்த தரை தாரை என்ற சொல்லாகும். பாடல் என்ற சொல் கவியைக் குறிக்கும். அளபேறிய கவி காவி என்ற சொல்லாகும்.

வனப்பு என்ற சொல் அழகு என்ற பொருளைத் தரும். அளபேறிய 

அழகு அதாவது மாத்திரை அதிகரித்த வனப்பு வானப்பு என்ற சொல்லாகும். இந்தப் பாடல்

களவுக் காதலில் நற்றாயிரங்கல் துறையில் அமைந்துள்ளது. தலைவி ஒருத்தி தலைவனு

டன் உடன் போக்கு சென்றதையடுத்துப் பெற்ற தாய் புலம்புவதைச் சொல்வது. "என் மகள்

காட்டு வழியில் செல்லும் பொழுது ஆளி(யாளி என்னும் விலங்கு) ஆர்ப்பரிப்பதால் மண்

அதிர்ந்து அச்சுறுத்தும். அதனால் தலைவியின் காவி(குவளை) மலர் போன்ற கண்கள்

கண்ணீர்ச் சுனையில் மூழ்கியது போலத் தோற்றம்தரும். அதாவது யாளியால் ஏற்பட்ட

அச்சத்தால் கண்ணீர்த் தாரைகள் மார்பின்மேல் சொரியும்.

(வானப்பு=வான்+அப்பு=வானத்துக் கங்கை)


பார்வை:'தண்டி யலங்காரம்' -- திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழக வெளியீடு.




Tuesday, 18 February 2025

காதலர் நாள்.

 காதலர் நாள்.


காதலி கூற்று:


சுருள்முடிக் குஞ்சி யோடும்

    சுடர்விழிப் பார்வை  யோடும்

கருகரு மீசை யோடும்

    கவின்முத்துப்  பற்க ளோடும்

இருபொருந் தோள்க ளோடும்

    இதழிற்புன் முறுவ லோடும்

செருக்குறு  நடையி னோடும்

    திகழ்ந்திடும்  அழகுச்  செம்மல்.


ஏரார் இளங்காளை; ஈட்டிபோல் கூர்விழிகள்;

சீரார் செருக்குநடை;  செங்கழுநீர்த்--- தாரான்;

கள்ள இளமுறுவல் காட்டுகின்ற கட்டழகன்;

உள்ளம் கவர்ந்தான் உவந்து.


காதலன் கூற்று:


கயலொத்த  இரண்டு  கண்கள்;

    காரொத்த அடர்ந்த கூந்தல்;

நயமிக்க முத்துப் பற்கள்;

    நாணத்திற் செம்மை காட்டும்

வியத்தக்க கதுப்புக் கன்னம்;

    வெண்ணிலா வதனம்; இன்னும்

செயலற்றுத் திகைக்கச் செய்யும்

    சிலபிற அழகும் வாட்டும்.


என்னவளே! காதல் இளங்கொடியே! நன்னடையால்

அன்னமெனப் பேர்பெற்ற ஆரணங்கே!---கன்னல்நிகர்

பேச்சுடைய பெண்ணரசீ! பேசாமல் கண்ணம்பைப்

பாய்ச்சுவதால் நொந்தேன் பதைத்து.


தேனோ? செழுங்கனியோ? தீம்பாகோ? கற்கண்டோ?

வானோர் அமுதமோ? வாய்ப்பேச்சு---யானோரேன்;

தென்றல்போல் ஆடிவரும் சீறடியாள்  கை,பிடிக்கும்

மன்றல்நாள் என்று வரும்?

(குஞ்சி=தலைமுடி; வதனம்=முகம்; 

கன்னல்நிகர்=கரும்பு போன்ற;

யானோரேன்=நானறியேன்;

சீறடியாள்=சிறிய பாதமுடையவள்;

மன்றல்நாள்=திருமணநாள்)

Wednesday, 29 January 2025

வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.

 வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் வட்டத்தில் ஆறகழூர்

என்ற ஊர் உண்டு. அது முற்காலத்தில் பெரிய நகராக, ஆறு அகழி

களையும் பெரிய கோட்டையையும் உடையதாக விளங்கியமையால்

ஆறகழூர் என் அழைக்கப்பட்டது. அதனை 'ஆறை' என இலக்கிய வழக்கில்

புலவர்கள் அழைப்பர். ஆறகழூரைத் தலைநகராகக் கொண்ட பகுதி மகத

மண்டலம் என்ற பெயர் பெற்றது. அப்பகுதியை ஆண்டவர்கள் வாணர்கள்

என்று அழைக்கப்பட்டனர். வாண அரசர்கள் தம்மை மகாபலிச் சக்கரவர்த்தி

யின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்வர். மகதேசன், மாகதர்கோன்

என்ற பெயர்களால் வாண அரசர்கள் புகழப்பட்டனர். (பொன்னியின் செல்வனில்

குறிப்பிடப்படும் வல்லவரையன் வந்தியத்தேவன் இந்த மரபைச் சேர்ந்தவரே).

"வாணன் புகழுரையா வாயுண்டோ? மாகதர்கோன்

வாணன் பெயரெழுதா மார்புண்டோ?---வாணன்

கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ?  உண்டோ

அடிதாங்கி நில்லா அரசு?".

என்று புலவர்கள் பாடியுள்ளனர்.


இந்தக்கதை நிகழ்ந்த காலம்  கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

அந்தக் காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பெருவீரன் வாணகோவரையன்

இராசராச தேவன் ஆவான். மூவேந்தர்களும் வலிமையிழந்து நலிவடைந்து ஆட்சி

புரிந்த காலம். ஒருமுறை ஆறை வாணனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நிகழ்ந்த

போரில் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாடு வாணன் ஆதிக்கத்தின்

கீழ் வந்தது. ஆண்டு தோறும் திறை(கப்பம்) செலுத்தவேண்டிய இழிநிலைக்கு உள்ளானது.


காலச் சக்கரம் சுழன்றது.  வாணகோவரையன் இராசராச தேவன் மறைந்தான்.

அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் தன் தந்தை போல் வீரமுடையவன்

அல்லன். அதேநேரத்தில் பாண்டியன் காலமான பிறகு பதவிக்கு வந்த அவன் மகன்

மிக்க வீரமுடையவனாகவும் படை திரட்டுவதில் வல்லவனாகவும் விளங்கினான்.

பாண்டியர்க்கு நேர்ந்த இழிவைத் துடைத்தெறியத் திட்டம் தீட்டினான். அந்தக் காலக்

கட்டத்தில் கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டியனின் ஆட்சிக்கீழ் இருந்தது. கொங்கு

இளைஞர்கள் பலர் பாண்டியனின் படையில் பணியாற்றினர். ஒருநாள் பாண்டியன்

தன் படையில் பணிபுரியும் கொங்கு இளைஞர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில்

" உங்களில் யாருக்காவது வாண தேசத்து அரசனைப் பிடித்து வந்து என்முன் நிறுத்தும்

துணிவும் வீரமும்  உள்ளதா?" என்று வினவினான். அப்பொழுது மோரூர் என்னும் ஊரைச்

சேர்ந்த சூரியன் என்ற வீரன் முன்வந்து " என்னால் வாணனைப் பிடித்து வர இயலும்" என்று

கூறினான். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய பாண்டியன் "சரி; நீயே இப்பணியைச்

செய். மற்றவர்கள் இவன் கோரும் உதவிகளைச் செய்யுங்கள்" என்று ஆணையிட்டான்.


சூரியன் அடுத்து வந்த நாட்களில் மளமளவென்று பல செயல்களைச் செய்தான். ஆறகழூர்

கொங்கு நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சூரியன் அந்த எல்லையில் பாண்டி

யனின் படைப்பிரிவு ஒன்றை நிலைநிறுத்த ஏற்பாடு செய்தான். சங்ககிரி என்ற ஊரில் ஒரு

மலையும் அதன்மேல் ஒரு கோட்டையும் இருந்தன. பாண்டியன் அங்கு வந்து தங்கியிருந்

தால் தான் வாணனைப் பிடித்து அக்கோட்டைக்குள் அழைத்து வரும் வாய்ப்பு மிக அதிகம்

என்ற கருத்தைப் பாண்டியனிடம் தெரிவித்தான். பாண்டியனும் அவ்வாறே சங்ககிரிக்

கோட்டைக்கு வந்து தங்கியிருந்தான்.


சூரியன் நம்பிக்கைக்குரிய நாலைந்து வீரர்களுடன் ஆறகழூர் ஊருக்குள் நுழைந்தான்.

தனக்கும் தன்னுடன் வந்துள்ள நண்பர்களுக்கும் ஏற்ற வேலை ஏதாவது கிடைக்குமா?

என்று ஊர் மக்களிடம் விசாரித்தான். "உங்கள் ஊரில் வேலை கிடைக்கவில்லையா?"

என்று மக்கள் கேட்க" நாங்கள் பெரிய செல்வந்தரிடம் பல்லக்குத் தூக்கியாகப் பணி

புரிந்தோம். அண்மையில் அவர் காலமாகிவிட்டார். எனவே பிழைப்புக்காக இந்த ஊருக்கு

வந்துள்ளோம். பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு வேலை எங்களுக்குத் தெரியாது.

உங்கள் மன்னரின் அரண்மனையில் எங்களுக்கு வேலை கிட்டுமா?" என்று வினவினர்.

இந்தச் செய்தி வாணன் காதுகளுக்கு எட்டியது. அண்மையில் ஒரு புதிய பல்லக்கை

உருவாக்கி அதனைச் சுமக்க வலிமை கொண்ட ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தான்.

எனவே, அரண்மனை ஊழியர்களை அனுப்பிச் சூரியனையும் அவன் பணியாட்களை

யும் அழைத்து வரச் செய்து பல்லக்கை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான். ஒரு

வாரம் சூரியனும் அவன் ஆட்களும் வாணன் திருப்தியடையும் வண்ணம் பணி செய்தனர்.

அரண்மனைப் பெண்டிரைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அரண்மனைக்குத்

திரும்பினர். வாணனுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை அதிகரித்தது.


ஒருநாள் நள்ளிரவு வரை ஆடல் பாடல் நிகழ்ச்சியைக் கண்டு களித்த வாணன் மிகச்

சோர்வடைந்தான். அரண்மனை  அந்தப்புரத்தில் எழிலான கட்டிலில் தூங்கிவிட்டான.

காலையில் அருகிலுள்ள ஒரு ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது.

மன்னர்கள் எங்கு சென்றாலும் குதிரையேறிச் செல்வதுதான் வழக்கம். ஆனால்

முதல்நாள் சரியாக உறங்காததால்  அலுப்பும் களைப்பும் ஆட்கொண்டன. எனவே,

வழக்கத்துக்கு மாறாகப் பல்லக்கில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தான். அதன்படி

பல்லக்கில் ஏறிப் படுத்துவிட்டான். உடனேயே ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.


இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த சூரியன் தன் ஆட்களுடன் பல்லக்கைச்

சுமந்துகொண்டு ஆறகழூரைக்

கடந்து சங்ககிரிக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டியன் அரண்மனையில் நிறுத்தினான்.

உடனே, ஆயுதம் தாங்கிய பாண்டிய வீரர்கள் பல்லக்கைச் சூழ்ந்துகொண்டனர். உறக்கம் 

கலைந்து எழுந்த வாணன் தான் இக்கட்டில் மாட்டியிருப்பதை யறிந்து நிலைகுலைந்து

போனான். சிறிது நேரத்தில் பாண்டியன் அரண்மனை முற்றத்துக்கு வந்து "வாணரே!

நீர் எம்வசம் சிக்கியுள்ளீர். ஆண்டுதோறும் திறை செலுத்தி எம் ஆட்சிக்கீழ் அரசு நடத்த

ஒப்புக் கொண்டால் உம்மை விடுவிக்கலாம்" என்றான். " பாண்டியரே! இச்செயல் அறமன்று;

வேறுவழியென்ன? திறை செலுத்த ஒப்புக் கொள்கிறேன்" என்றான் வாணன்.


பாண்டியன் சூரியனுக்குப் பல பரிசில்கள் நல்கினான். ஆகவராமன் என்ற பட்டத்தை

அளித்தான். சூரியன் என்ற பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் என்று அழைக்கச்

செய்தான். வேளாளர்களைக் கங்காபுத்திரர்கள் என அழைப்பது வழக்கம். சூரியன்

வேளாளர் தலைவனாதலின் அவனைக் காங்கேயன் என்றழைக்கச் செய்தான்.

எழுகரைநாடு என்ற பகுதியை அரசாளுமாறு வழங்கினான்.

"மிண்டாறை வாணனைமுன் வெட்டாமல் பாண்டியன்நேர்

கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனும் நீயலையோ?

தெண்டிரைசேர் மோரூரில் தென்னன்மகு டாசலனே!

மண்டலிகர் தேர்ந்துமெச்ச வாழ்சூர்ய காங்கெயனே!"

(,மிண்டு=செருக்குற்று நின்ற; தென்னன் மகுடாசலனே=

பாண்டியன் சூட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதி

யுள்ளவனே; மண்டலிகர்=மணடலங்களுக்கு நாயகராகிய

அரசர்கள்)


ஆதாரம்: நல்ல சேனாபதி நூல்; ஆசிரியர்: கி.வா.ஜ.அவர்கள்.

Thursday, 9 January 2025

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.


இந்தக்கதை எப்பொழுது நிகழ்ந்தது என்று அறுதியிட்டுக் கூற

இயலவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு

நிகழ்ந்திருக்கலாம். கொங்கு நாட்டில் கோபிச்செட்டிப் பாளையத்

துக்கருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. ஊருக்குச் சற்றுத்

தொலைவில் பெருங்காடு ஒன்றும் சிறு குன்று ஒன்றும் இருந்தன.

அந்தப் பக்கங்களில் புலி ஒன்று நடமாடியதாகப் பொதுமக்கள்

பேசிக்கொண்டனர். காட்டுக்குள் மேயப்போன ஓரிரண்டு மாடுகள்

திரும்பி வரவேயில்லை. அதனால்தான் புலி உலவுவதாகப் பேச்சுக்

கிளம்பியது. ஆனால் யாரும் காட்டுக்குள் சென்று புலி நடமாட்டம்

உண்மைதானா என்று அறிய முன்வரவில்லை.


கொங்கு நாட்டில் அவ்வப்பொழுது வள்ளல்கள் பலர் தோன்றி

மக்களுக்குக் குறிப்பாகப் புலவர்களுக்கு உதவியுள்ளனர்.

கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பூர்வீகம் கொங்குநாடு

என்று கொங்கு மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. சம்பந்தச்

சர்க்கரை என்ற வள்ளல் யாது காரணத்தாலோ சங்ககிரிதுருக்கத்தில்

சிறையினில் இருந்தபொழுது தம்மையணுகி உதவி கேட்ட தமிழ்ப்

புலவருக்குச் சிறையிலிருந்து கொண்டே தன் மனைவியின் தாலியைக்

கொடுக்கச் செய்தார் என்று கொங்கு மண்டல சதகம் இயம்புகிறது.

"சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்

சங்கையி லாதொரு பாவாணர் சென்று தமிழுரைக்க

அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்

மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே".

(பாடல் எண்:66--கொங்குமண்டல சதகம்).

இப்படிப்பட்ட வள்ளல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்

ளனர். இந்தக்கதை நிகழ்ந்த காலத்தில் செட்டிபிள்ளையப்பன்

என்ற வள்ளல் வாழந்துகொணாடிருந்தார். அவரிடம் தமிழ்ப் புலவர்

களும் ஏனைய ஏழை மக்களும் உதவி பெற்றுச் செல்வது வழக்கம்.

அவரின் கொடைத்தன்மைக்குச் சோதனை வந்தது. ஓரிரண்டு

ஆண்டுகளாக மழை பொய்த்தமையால் விளைச்சல் குறைந்தது.

இருப்பினும் அவரின் கொடைத் தன்மை குறையவேயில்லை.

வரவு இல்லாமல் செலவு மட்டுமே செய்து வந்தமையால் அவர்

வறியவர் ஆனார்.


இந்த வறிய நிலையிலும் உதவி கேட்டு வருவோரின்  எண்ணிக்கை

குறையவில்லை. ஒருநாள் ஒரு புலவர் உதவி கேட்டு வர, வள்ளல்

கைகளைப் பிசைந்தவாறு இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறி

வந்தவரை வெறுங்கையோடு அனுப்பிவிட்டார். வள்ளலின் மனம்

மிக மிக நொந்த நிலையில் இருந்தது. அப்போழுது வள்ளலைத் தேடிவந்த

நண்பர் ஒருவர் புலியைப் பற்றிப் பேசி "இதை அடக்குவதற்கு நெஞ்சுரம்

கொண்ட ஆடவர் யாரும் இல்லையா?" என்று புலம்பிவிட்டு அகன்றார்.

இரவு முழுவதும் வள்ளல் இதைப் பற்றியே எண்ணியெண்ணி வருந்தினார்.

பிறருக்கு உதவ முடியாத வறுமை நிலையை எண்ணிக் குமைந்தார்.. பொழுது

ஒருவாறு விடிந்தது. வள்ளல் ஒரு முடிவுக்கு வந்தார். " காட்டுக்குள் நானே

சென்று புலியை எதிர்கொள்வேன். ஒன்று புலியைக் கொன்று மக்களுக்கு

நன்மை செய்தல் வேண்டும்; இல்லையேல் புலியால் கொல்லப்பட்டு வாழ்வைத்

தொலைத்தல் வேண்டும். பிறருக்கு உதவமுடியாமல் வறுமையில் உழல்வது

அவமானம்" என்று தமக்குள் கூறிக் கொண்டார். தம் கருத்தைக் குடும்பத்தாரிடம்

கூறிவிட்டுக் கைகளில் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு காட்டை. நோக்கிப்

புறப்பட்டார்.


காட்டையடைந்த வள்ளல் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிவந்தார்.

புலியை எங்கும் காணவில்லை. ஏதாவது குகையில் தங்கியிருக்கும்

என்றெண்ணிக் காட்டின் நடுவிலுள்ள குன்றை நோக்கி நடந்தார்.

அங்கே தென்பட்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. புலி அங்கேயும்

தென்படவில்லை. ஆனால் குன்றின் மேல் நாலைந்து ஆட்கள் அமர்ந்து

ஏதோ செய்து கொண்டிருந்தனர். நெருங்கிச் சென்று பார்வையிடலாம்

என்றெண்ணிக் குன்றின் அடிவாரத்தை அடைந்துவிட்டார். வ‌ள்ளல்

நடந்து வந்தமையால் காட்டுக்குள் குவிந்து கிடந்த சருகுகள் ஓசை

யெழுப்பின. குன்றின்மேலிருந்த ஆட்கள் தம் வேலையைக் கைவிட்டு 

வருபவர் யார் என்று பார்த்தனர். கைகளில் வாளும் வேலும் தாங்கி

நிற்கும் வள்ளலின் வீரத் தோற்றத்தைக் கண்டு பதைபதைப்புக்கு

உள்ளாகி ஓடிவிட்டனர். வள்ளல் குன்றின் மேலேறிப் பார்த்தார்.

அங்கே அவிழ்ந்த நிலையில் மூட்டைமுடிச்சுகள் தென்பட்டன.

அவற்றை முற்றிலும் அவிழ்த்துப் பார்த்தால் நகைகள், அணிகலன்கள்

இருந்தன. "ஓகோ! அந்த ஆட்கள் திருடர்கள் போலும். அதனால்தான்

தம்மைக் கண்டதும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.

பொதுமக்கள் காட்டுக்குள் வந்து தொல்லை செய்யாமலிருக்கப் புலி

நடமாடுகிறது என்ற புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றெண்ணினார்..


வள்ளல் அங்கிருந்த நகைகள், அணிகலன்களைத் திரட்டி மூட்டை

கட்டித் தோளில் சுமந்துகொண்டு ஊர்வந்து சேர்ந்தார். நடந்த

நிகழ்வுகள் அனைத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்துப்

புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கினார். இந்த நிகழவுகள்

அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இட்ட மான கவிசொலும் பாவலற்(கு)

       இல்லை என்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித் தூரில் புகுந்தநல்

         தூய வன்கன வாள குலத்தவன்

செட்டி பிள்ளையப் பன்தினம் தொண்டுசெய்

         தேவி மாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடை அமர விடங்கனார்

          கதித்து வாழ்பாரி யூரெங்கள் ஊரே".

(தூர்=புதர்; கனவாள குலம் என்பது கொங்கு வேளாளர்

குடிவகைகளுள் ஒன்று;)

ஆதாரம்: 'நல்ல சேனாபதி' நூல்- இயற்றியவர் கி.வா.

ஜகன்னாதனார்).