Sunday, 4 May 2025

"காய்ச்சிய பாலைக் குடி போ"

 "காய்ச்சிய பாலைக் குடி, போ" என்றேன்; உடன்போக்கில் சென்றனளே.


இடைக்காலப் புலவர் ஒருவர் தனிப்பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.

அதில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். ஒரு குடும்பத்தில் ஓர்

அன்னையும் அவள் மகளும் வாழ்ந்து வருகின்றனர். மகள் வயது

பதினான்கு அல்லது பதினாறு இருக்கலாம். பருவச் செழிப்போடு

மகள் திகழ்கின்றாள். அன்னை தன் மகளை மிகவும் வாஞ்சையுடன்

பேணிப்பேணி வளர்த்துவருகின்றாள். அவள் தந்தையார் பொருளீட்ட

வெளியூர் சென்றிருக்கின்றார். எனவே, கூடுதல் அக்கறையோடும்

கவனத்தோடும் அன்னை மகளைப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறாள்.

அன்றாடம் காலையும் மாலையும் மகளுக்குப் பாலைக் காய்ச்சிக்

குடிக்கக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.


அண்மைக் காலமாக மகளுடைய நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள்

தெரிகின்றன. வேளாவேளைக்கு உண்பதில் நாட்டமில்லை. அடிக்கடி

தட்டொளி(உலோகக் கண்ணாடி)யில் முகத்தைப் பார்த்துத் திருத்திக்கொள்

கின்றாள். தோழியுடன் நெடுநேரம் எதைப்பற்றியோ உரையாடல் நிகழ்த்து

கின்றாள். பாவைகளை வைத்து விளையாடும் நேரம் சுருங்கிவிட்டது.

அன்னை இம்மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும்

மகள் மீது யாதொரு ஐயமும் ஏற்படவேயில்லை. நியாயமாக மகள் உரிய பருவம்

எய்தியதும் அன்னையின் கவனமும் கண்காணிப்பும் அதிகரித்திருத்தல் வேண்டும்.

ஆனால் மகளை இன்னும் சிறுமியாகவே அன்னை நோக்கினாள்; வளர்ந்துவரும்

பருவக் குமரி என்பதனை மறந்து விட்டாள்.


விளைவு என்னவென்றால், மகள் ஒரு தலைவனைக் கண்டு அவன்பால் மனத்தைப்

பறிகொடுத்துவிட்டாள். களவியல் காதல் என்பதனால் அன்னைக்கோ, அருகிருக்கும்

ஏனையோருக்கோ தெரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. தோழிக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், தலைவியோ அவளின் தோழியோ அறத்தொடு நின்று(களவுக் காதலை வெளிப்பட

உரைத்தல்) வெளிப்பட உரைத்தால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியவரும். கடந்த ஓரிரு

நாட்களாகத் தலைவியும் தோழியும் அடிக்கடி சந்தித்து உரையாடிவந்தனர். அரவம்(சத்தம்)

வெளியே கேட்காத வகையினில் கமுக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்னை யாதொன்றும்

அறியாமல் தன் இயல்புப் படி வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். வழக்கம்போல, மகளிடம்

காலை மாலை பாலைக் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துவந்தாள். குறிப்பிட்ட நாளும் வந்தது.

அன்று முழுவதுமே தலைவியும் தோழியும் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்பட்டனர். அன்று

மாலை(முன் இரவு) அன்னை மகளிடம் "காய்ச்சிய பாலைக் குடி போ" என்று கூறினாள்.

காய்ச்சிய பாலை ஒரு கலத்தில் வைத்துள்ளேன். அங்குபோய் அதனைக் குடி" என்னும்

பொருள்படக் கூறினாள். சிறிது நேரம் நகர்ந்தது. அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்னை தன் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல்

துடித்துப் போய்விட்டாள்.  எங்கே போயிருப்பாள்? என்ன நேர்ந்தது? என்று அறியாமல்

குழம்பினாள். தோழியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் தன்மகளைப்பற்றிய விவரம்

கேட்டாள். தோழி மென்று விழுங்கினாள். பின் தனக்குத் தெரிந்த தகவல் அனைத்தையும்

வெளிப்படுத்தி விட்டாள். அன்னைக்கு மகள் தன் தலைவனுடன் உடன்போக்கு 

மேற்கொண்டு சென்றுவிட்டாள் என்னும் உண்மை  புரிந்தது. " காய்ச்சிய பாலைக் குடி போ"

என்று அவள் உடல் நலத்தைப் பேணும் வழி சொன்னேன். அவள் வேறு விதமாகப் பொருள்

கொண்டுவிட்டாள். "பாலை நிலத்துக்கு உடன்போக்கில் தலைவனுடன் குடி போ" என்று

தவறான அர்த்தம் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவிட்டாள்" என்று

புலம்பினாள். அவள் புலம்பிய பாடல் வருமாறு:

"பூச்சிலைக் கன்னல்கைச் சேடா சலேந்த்ரன் பொருப்பிடத்தே

காய்ச்சிய பாலைக் குடிபோவென் றேனந்தக் காரிகையும்

பேச்சிலெத் துக்கள்ளி பின்கைகை ராமற்கு முன்சொன்னதா

வாய்ச்சுதென் றேநடந் தாள்பாலை யான வனந்தனிலே!".

பொருள்:

கரும்பாகிய வில்லையும் கை நிறைந்த பூவையுமுடைய மன்மதன் போன்ற

சேடாசலேந்திரனுடைய(சேஷாசலேந்திரனுடைய) மலையிடத்தே, காய்ச்சிய

பாலைக் குடிக்கும்படி போகச் சொன்னேன்; அந்தப் பெண்ணாகிய என்மகளும்,

சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருள் வேறு கொண்டு ஏமாற்றுகின்ற திருட்டுக்

குணமுடையவளாதலால், கைகேசி இராமனுக்குக் காட்டுக்குப் போகும்படி

சொன்னதுபோலத் தனக்கும் என் பேச்சு பொருத்தமானது என்றெண்ணிப் பாலை யான

வனந்தனிலே தலைவன் பின் சென்றுவிட்டாள்.


சங்ககாலத்தில் உடன்போக்கு செல்வது காதலில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.

சமுகம் இதனைக் காதலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர்

இதனைக் "கொண்டுதலைக் கழிதல்" என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தலைவன்

தலைவியை அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்துதர மறுக்கும் பொழுது

தோழியின் உதவியால் தலைவியை மணந்துகொள்வதற்காகத் தன்னூருக்குக்

கொண்டு செல்லல். இதில் தலைக் கழிவு என்பது தலைமையாகிய  செலவு எனப்

பொருள்படும். சுருங்கக் கூறின், கொண்டுதலைக் கழிதலாவது, உடன் கொண்டு

பெயர்தலாகும். தற்காலத்தில், உடன்போக்கு சமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதோ?

என்று எண்ணத் தூண்டுகிறது. ஒருவித வெறுப்புடன் கொச்சையாக. "ஓடிப்   போனவள்/

ஓடி வந்தவள் என்ற கொச்சையான பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

தொல்காப்பியர்க்கும்  முன்பே  பெரியோர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று

சிறப்பிழந்து நோக்கப்படுகிறது.


பார்வை: தனிப்பாடல் திரட்டு 2 ஆம் பாகம்-- உரையாசிரியர் கா.சு.பிள்ளை,

                  வர்த்தமானன் பதிப்பகம்.


Saturday, 12 April 2025

மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.

 மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.


தற்காலத்தில் குடியரசு ஆட்சி நிலவுகிறது. நூற்று நாற்பது

கோடி மக்களும் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு

ஒவ்வாதது. ஆகவே மக்கள் தம் சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிய

உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்.

அவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பழங்காலத்தில்

மன்னரை ஆட்சியில் அமர்த்தினர்.. மன்னர் நாட்டு மக்களின்

உயிருக்கும் உடைமைக்கும் நாட்டு வளங்களுக்கும் பாதுகாவலர்

என்ற நிலையில் மன்னருக்கு முதன்மை உரிமையும் அதிகாரமும்

தரப்பட்டது. புறநானூறு 186ஆம் பாடலில்  மோசிகீரனார் என்ற

புலவர் நெல்லும் உயிராகாது; நீரும் உயிராகாது. விரிந்த இந்த

நாடு ஆள்பவனை(மன்னனை) உயிராகக் கொண்டது. அதனால்

"மன்னனே நாட்டின் உயிர்" என்பதை அறிந்து கொள்ளுதல் வெல்லும்

படையுடைய ஆள்வோரது(மன்னர்) கடமையாகும் என்று பாடியுள்ளார்.

பாடல் பின்வருமாறு:

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யானுயிர் என்பது அறிகை

வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே".

(உயிர்த்து=உயிரை உடையது; மலர் தலை= விரிந்த இடம்).


செவ்விய ஆட்சி செய்யும் மன்னரைத் தெய்வத்துக்கு அடுத்த

நிலையில் உயர்வாக மக்கள் கருதினர். சங்க இலக்கியங்களில்

மன்னர் புகழ் ஆங்காங்கே பேசப்படுகிறது. சாதாரணமாகப்

பாடும் பொழுதிலும் மன்னரைப் போற்றிவிட்டுத்தான் மேற்கொண்டு

பாடுவதை மரபாகக் கொண்டனர். சிலம்பி என்னும் பெண் தன்னைப்

பற்றிப் பாடுமாறு புலவர் பெருமான் கம்பரைக் கேட்டுக் கொண்டதாகவும்

அவர் ஆயிரம்பணம் கேட்டதாகவும் அப்பெண் ஐந்நூறு பணம் தந்ததாகவும்

கம்பர் பாதிப் பட்டே பாடியதாகவும்  உலவும் ஒரு கதை வழக்கிலுண்டு.(இது வெறும்

கதைதான். உண்மையாக நிகழ்ந்தது என்று கூற யாதொரு ஆதாரமும் இல்லை).

அந்தப் பாதிப் பாடலிலும் காவிரியையும், சோழமன்னரையும், சோழ நாட்டையும்

குறிப்பிட்டாரே யன்றிப் பணம் கொடுத்த சிலம்பியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

மீதிப்பணம் வந்தபிறகு மீதிப்பாடலைப் பாடலாம்; அப்போது சிலம்பியைக் குறிப்பிட்டு

வாழ்த்தலாம் என்று எண்ணியிருந்தார். நல்லவேளையாக அப்பாதிப் பாடலை

அவ்வீட்டுச் சுவரில் எழுதி விட்டுச் சென்றிருந்தார். சில நாட்கள் கழிந்தபின்னர்

அவ்வூருக்கு வந்த ஔவையார் நடந்தவற்றை அறிந்து மீதிப்பாடலைப் பாடி

நிறைவு செய்தார் என்பது கதை.(...............................................பெண்ணாவாள்

அம்பொன் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொன் சிலம்பே சிலம்பு). (அரவிந்தம்=தாமரை). இதுதான் மீதிப் பாடல். இதற்கு

அன்பளிப்பாக அவர் குடிப்பதற்குக் கூழைப் பெற்றுக்கொண்டதாகக் கதை. 


இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பழங்காலத்தில்  ஒரு காவியமோ,

பாடலோ படைக்கும் முன்னர் அந்நாட்டையும் மன்னனையும் வேறு சிறப்பு இருப்பின்

அதனையும் பாடிய பிறகே தாம் படைக்க நினைத்த நூலைப் புலவர் தொடங்குவர்.

இது புலவர்கள் பின்பற்றிய மரபு.  புலவரல்லாத ஏனையோர் தமது மார்பிலோ

தம் குழந்தைகள் மார்பிலோ மன்னரது பெயர்களை எழுதிக் கொள்வர். இந்த

வழக்கத்தைக் கீழ்க்கண்ட பாடல் விவரிக்கிறது.


அந்நாளில் அரசகுலத்துப் பெண்டிர் தமக்குக் குழந்தைகள்

பிறக்கும் காலத்தில்  அக்குழந்தை ஆண்குழந்தை என்றால்

பெருமகிழ்ச்சி அடைவது இயல்பு. ஏனென்றால் அரசாட்சி

புரியத் தேவையான அடுத்த தலைமுறை உருவானதால்

ஏற்பட்ட பேருவகை காரணமாகும். மேலும் அக்குழந்தையின்

மார்பு அகன்று விரிந்து பரந்து தென்பட்டால் களிக்கடலில்

மூழ்கித் திளைத்திடுவர். ஏனென்றால் விரிந்து பரந்த அகன்ற

மார்பு வீரத் தோற்றத்தை வெளிக்காட்டும். ஆனால் கம்பர்

பெருமான் வேறொரு காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.


இந்நாளில் மக்கள் தமக்கு மிகவும் பிடித்தமான தலைவர்,

நடிகர் முதலானோர் படங்களை மார்பிலும் தோளிலும் பச்சை

குத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். முன்னாளிலும் இது

போல மக்கள் தம் மன்னரின் பெயர், பட்டப் பெயர் முதலான

வற்றை மார்பில் எழுதிக் கொள்வர். ஒவ்வொரு மன்னருக்கும்

இயற்பெயர், விருதுப் பெயர் எல்லாம் சேர்த்தால், எண்ணிக்கை

ஏழெட்டு தேறும். அவையனைத்தையும் தத்தம் குழந்தைகளின்

மார்பில் எழுதிக் கொள்ளத் தோதாக மார்பகலம் இருப்பதைக்

கண்டு பெற்ற தாய்மார் மகிழ்ந்து போவதாகக் கம்பர் பாடியுள்

ளார்.அரசகுலத்தில் பிறவாத மக்களே தம் குழந்தைதளின்

மார்பகலம் கண்டு மகிழும் போது, அரச குலத்துப் பெண்டிர்

இவ்வாறு மகிழ்வது இயல்புதானே! இனி, பாடலைப் பார்ப்போம்:

"பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்

மார்பகலங் கண்டு மகிழ்வரே---போர்புரிய

வல்லான் அகளங்கன் வாணன் திருநாமம்

எல்லாம் எழுதலாம் என்று."

அருஞ்சொற் பொருள்:

மதலை-மகன், குழந்தை; அகளங்கன்= அ+களங்கன்=களங்கம்

இல்லாதவன். வாணன்- ஒரு குறுநில மன்னன்.


மேலும் பொதுமக்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும்

தம் மன்னரின் கொடியைப் பற்றியும் தேரைப் பற்றியும் இதர சிறப்பைப்

பற்றியும்  பாடிக்கொண்டே அச் செயலைச் செய்வர். முத்தொள்ளாயிரம்

என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் அரண்மனைப் பெண்டிர்

பாண்டியமன்னனுக்குரிய குளியலுக்கான சுண்ணப்பொடி(நறுமணப்

பொடி) இடிக்கும் பொழுது பாண்டியனின் கொடி முதலானவற்றைப்

பாடிக்கொண்டே இடித்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் பின்வருமாறு:

"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்

முடிபாடி முத்தாரம் பாடி"ச் சுண்ணம் இடித்தனர்.

இவ்வாறு பழங்கால மக்களின் வாழ்க்கையில் மன்னரைப் பற்றிய

உயர்வான சிந்தனை, அவர் நலத்தைப் பற்றிய கரிசனம் ஒன்றிக்

கலந்திருந்ததை அறியலாம்.

Tuesday, 25 March 2025

புதுமைப்பெண்.

புதுமைப் பெண்  விதித்த நிபந்தனை


ஓர் அழகிய நகரத்தில்  ஓவியக் கண்

காட்சி நடைபெறுகின்றது.  அக்காட்சிக்கு

மனைவியை  அழைத்துச்  செல்ல  எண்ணு

கின்றார், அக்குடும்பத்தின் தலைவர். கணவன்

மனைவிக்கிடையே கீழ்க்கண்டவாறு

உரையாடல் நடைபெறுகின்றது.:

கணவர்: நகரில் நடைபெறும்  ஓவியக்

                 கண்காட்சிக்குச் சென்று

                 வருவோமா?

மனைவி: போய் வருவோம்; ஆனால்

                   ஒரு நிபந்தனை.

கண.: என்ன நிபந்தனை?

மனை:ஆண்கள் படங்களை நான்

              பார்க்கமாட்டேன்.

கண.: அப்படியா? ஏன் இந்தப் பழக்கம?

மனை: தமிழ்ப்பண்பாடு அது தானே!

கண.: அதுசரி; அதுசரி; நீ அப்படியே

             செய்துகொள்.

மனை: இன்னொரு நிபந்தனையும்

               உண்டு்.

கண.:இன்னொரு நிபந்தனை என்ன?

மனை:பெண்கள் படங்களை  நீங்கள்

              பார்வையிட்டால் நான் மனம்

              பொறுக்கமாட்டேன்.

இந்த விநோதமான நிபந்தனைகளை

ஏற்றுக் கொண்டால் கண்காட்சிக்குச்

சென்று பார்வையிடுவதால் எந்த

மகிழ்ச்சியும் ஏற்படாது. இதைத்தான்

கீழ்க்கண்ட கவிதை  மறைமுகமாக

எடுத்துரைக்கிறது.

பாடல்:

ஓவியர்நீள் சுவரெழுதும்  ஓவியத்தைக்

கண்ணுறுவான்

தேவியையான்  அழைத்திடஆண்

        சித்திரமேல்  நான்பாரேன்;

பாவையர்தம்  உருவெனில்நீர்  பார்க்க

மனம்  பொறேனென்றாள்;

காவிவிழி  மங்கையிவள்  கற்புவெற்பின்

        வற்புளதால்.

இந்தக்  கவிதையை  என் பள்ளிநாட்க

ளில்  படித்திருக்கிறேன்.  ஆசிரியர்

யாரென்று  நினைவுக்கு வரவில்லை.

அநேகமாக, இயற்றியவர்  பாரதிதாசன்

அவர்களாக  இருக்கலாம்.ஏனென்றால்,

"கற்பு  நிலையென்று சொல்லவந்தால்

இரு கட்சிக்கும் அஃதைப்  பொதுவில்

வைப்போம்" (ஆண்,பெண்  இருவருக்கும்

கற்பு  பொதுவானது) என்று  முழங்கிய

மகாகவி பாரதியாரின்  சீடர்  தானே

பாரதிதாசன்.  என் கருத்துப்படி விளை

யாட்டாகப்  பாடப்பட்ட  கவிதை போலத்

தோன்றினாலும், அதன் கருப்பொருளாக

ஆண்,பெண்  இருவரும்  கற்பு  உட்பட

அனைத்து  விடயங்களிலும்  சரிநிகர்

சமானம்  என்பது வலியுறுத்தப்  பட்டுள்

ளது.  இனி,  வேறு ஒரு  சுவையான கவிதையைப்

பார்ப்போம்:

இரண்டு தமிழ் அறிஞர்கள்  பலதரப்பட்ட

விடயங்கள்  குறித்துத்  தங்களுக்குள்

உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.  வெகு

நேரம்  கடந்த  காரணத்தால்  ஒருவர்  மற்ற

வரிடம்  விடைபெற்றுக்  கொண்டு  தமது

இல்லத்துக்கு  வந்து  சேர்கிறார்.  வீட்டுக்கு

வந்த போதும்  அவர்  மனம்  அன்று  நிகழ்ந்த

சந்திப்பு  குறித்தும்,  நடைபெற்ற  உரையாடல்

குறித்தும்  திரும்பத் திரும்ப  எண்ணி மகிழ்ந்

தது.  உடனே ஒரு  கவிதை  உருவாயிற்று.:

"சூர்வந்து  வணங்கும்  மேன்மைச்

     சுப்பிர  மணிய  தேவே!

நேர்வந்து  நின்னைக்  கண்டு

    நேற்றிராத்  திரியே  மீண்டேன்;

ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

   உளம்வந்து  சேரக்  காணேன்;

ஆர்வந்து  சொலினும்  கேளேன்;

  அதனையிங்(கு)  அனுப்பு  வாயே!'

என்ன  அருமையான  கவிதை!

" ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

     உளம்வந்து  சேரக்  காணேன்;"

சொற்கட்டு, ஓசைநயம், கருத்துச்  செறிவு

மிக  மிக  நேர்த்தியாக  அமைந்துள்ளன.

கவிதையைப்  பாடியவர்  மாயூரம்(தற்போது

மயிலாடுதுறை) முன்சீஃப்  வேதநாயகம்பிள்ளை

அவர்கள்.  பாடப்பட்டவர்: திருவாவடுதுறை

ஆதீனகர்த்தர்  அவர்கள்.  இருபெரும்  தமிழ்

அறிஞர்களும்  மறைந்துவிட்டனர்.  ஆனால்

இந்தக்  கவிதை  என்றென்றும்  நினைவில்

நிற்கும்.

   




Tuesday, 4 March 2025

சித்திர கவி.

 சித்திர கவி.


"கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால"

என்பது தண்டியலங்காரச் சூத்திரம் ஆகும். அக்கரச் சுதகமும்

என உம்மையில் முடிந்திருப்பதால் வேறு சிலவும் வழக்கத்தில்

உள்ளன என உணரலாம். அவையாவன: நிரோட்டம், ஒற்றுப்

பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை,

முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, இரத பந்தம், பிறிதுபடு

பாட்டு போன்றவை. இவை வியக்கவைக்கும் கவிகள். இவற்றை

இயற்றுவதும் கடினம்; புரிந்து கொள்வதும் கடினம். இவற்றை

மிறைக்கவிகள் என்றும் அழைப்பர். தற்காலத்தில் இவ்வகைக்

கவிகளைப் படைத்தல் மிக மிக அரிதாகிவிட்டது.  சித்திர கவியில்,

மாத்திரைச் சுருக்கம் மற்றும் மாத்திரை வருத்தனை வகைகளைப்

பார்ப்போம்.


மாத்திரைச் சுருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைத்தரும்

சொல்லானது, ஒரு மாத்திரையைக் குறைத்தால் வேறொரு பொருளை

வெளிப்படுத்தும் சொல்லாக மாறும் நிலை. மாத்திரை என்பது எழுத்தை

ஒலிக்கும் கால அளவு. எடுத்துக்காட்டாக,  நெட்டெழுத்தை இரண்டு மாத்திரை

அளவு ஒலிக்கின்றோம். அதன் மாத்திரையைக் குறைத்து விட்டால், அதாவது,

குற்றெழுத்தாக மாற்றிவிட்டால் அச்சொல் வேறு ஒரு பொருளைத் தரும்.

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்;

நீர்நிலையோர் புள்ளி பெற,நெருப்பாம்---சீரளவும்

காட்டொன்(று) ஒழிப்ப இசையாம் அதனளவில்

மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு".

நேரிழையார்--பெண்கள்; இவர்களின் கூந்தல் ஓதி என இலக்கியம்

இயம்பும். ஓதி என்ற சொல்லில் ஒரு மாத்திரையைக் குறைத்தால் ஒதி என

ஆகும்.. ஒதி என்னும் சொல் ஒதிய மரத்தைக் குறிக்கும்,; நீர்நிலை--ஏரி. இதில்

ஒரு மாத்திரையைக் குறைக்க எரி என்று வரும். எரி என்பது நெருப்பைக்

குறிக்கும்; காட்டைக் குறிக்கும் சொல் காந்தாரம். இதில் ஒரு மாத்திரையைக்

குறைத்தால் கந்தாரம் என்று வரும். இது ஒரு இராகத்தை(பண்)க் குறிக்கும்.

இதில் மீண்டும் ஒரு மாத்திரையைக் குறைத்தால் கந்தரம் என்று வரும். இது

மிடறு என இலக்கியம் சொல்லும் கழுத்தைக் குறிக்கும்.(பழங்காலத்தில் எழுத்து

வரிவடிவம் முழு வளர்ச்சியுற்ற  நிலை பெறாமல் இருந்தது. நெட்டெழுத்து,

குற்றெழுத்து வேறுபாட்டை உணர்த்த எ, ஒ போன்ற உயிரெழுத்து மேலேயும்

புள்ளிவைத்தல் கடைப்பிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் உருவான நூல் இது.

எனவே நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமெனவும், 

நீர்நிலையோர் புள்ளி பெற நெருப்பாம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்து 'ஒ' என்ற நெட்டெழுத்தையும் 'எ' என்ற நெட்டெழுத்தையும்

குற்றெழுத்தாக்க அவற்றின் மேல் புள்ளிவைத்தல் என்னும் அன்றைய

வழக்கத்தைப் பாடல் தெரிவிக்கிறது.)


இனி, மாத்திரை வருத்தனை என்ன எனப் பார்ப்போம். மாத்திரை வருத்தனை,

மாத்திரைச் சுருக்கத்துக்கு நேர் எதிரானது. ஒரு குறிப்பிட்ட பொருள்தரும் ஒரு

சொல்லின் மாத்திரையை அதிகரித்தால் வேறு பொருளைத் தரும் சொல்லாக

மாறிவிடும். 

"அள(பு)ஒன்(று) ஏறிய வண்டதின் ஆர்ப்பினால்

அள(பு)ஒன்(று) ஏறிய மண்அதிர்ந்(து) உக்குமால்;

அள(பு)ஒன்(று) ஏறிய பாடல் அருஞ்சுனை

அள(பு)ஒன்(று) ஏறழ(கு) ஊடலைந்(து) ஆடுமால்".

அளி என்னும் சொல் வண்டு என்னும் பொருள்தரும். அளபு ஏறிய வண்டு அதாவது

மாத்திரை அதிகரித்த அளி ஆளிஎன்ற சொல்லாகும். தரை என்னும் சொல் மண்ணைக்

குறிக்கும். அளபேறிய மண் அதாவது மாத்திரை அதிகரித்த தரை தாரை என்ற சொல்லாகும். பாடல் என்ற சொல் கவியைக் குறிக்கும். அளபேறிய கவி காவி என்ற சொல்லாகும்.

வனப்பு என்ற சொல் அழகு என்ற பொருளைத் தரும். அளபேறிய 

அழகு அதாவது மாத்திரை அதிகரித்த வனப்பு வானப்பு என்ற சொல்லாகும். இந்தப் பாடல்

களவுக் காதலில் நற்றாயிரங்கல் துறையில் அமைந்துள்ளது. தலைவி ஒருத்தி தலைவனு

டன் உடன் போக்கு சென்றதையடுத்துப் பெற்ற தாய் புலம்புவதைச் சொல்வது. "என் மகள்

காட்டு வழியில் செல்லும் பொழுது ஆளி(யாளி என்னும் விலங்கு) ஆர்ப்பரிப்பதால் மண்

அதிர்ந்து அச்சுறுத்தும். அதனால் தலைவியின் காவி(குவளை) மலர் போன்ற கண்கள்

கண்ணீர்ச் சுனையில் மூழ்கியது போலத் தோற்றம்தரும். அதாவது யாளியால் ஏற்பட்ட

அச்சத்தால் கண்ணீர்த் தாரைகள் மார்பின்மேல் சொரியும்.

(வானப்பு=வான்+அப்பு=வானத்துக் கங்கை)


பார்வை:'தண்டி யலங்காரம்' -- திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழக வெளியீடு.




Tuesday, 18 February 2025

காதலர் நாள்.

 காதலர் நாள்.


காதலி கூற்று:


சுருள்முடிக் குஞ்சி யோடும்

    சுடர்விழிப் பார்வை  யோடும்

கருகரு மீசை யோடும்

    கவின்முத்துப்  பற்க ளோடும்

இருபொருந் தோள்க ளோடும்

    இதழிற்புன் முறுவ லோடும்

செருக்குறு  நடையி னோடும்

    திகழ்ந்திடும்  அழகுச்  செம்மல்.


ஏரார் இளங்காளை; ஈட்டிபோல் கூர்விழிகள்;

சீரார் செருக்குநடை;  செங்கழுநீர்த்--- தாரான்;

கள்ள இளமுறுவல் காட்டுகின்ற கட்டழகன்;

உள்ளம் கவர்ந்தான் உவந்து.


காதலன் கூற்று:


கயலொத்த  இரண்டு  கண்கள்;

    காரொத்த அடர்ந்த கூந்தல்;

நயமிக்க முத்துப் பற்கள்;

    நாணத்திற் செம்மை காட்டும்

வியத்தக்க கதுப்புக் கன்னம்;

    வெண்ணிலா வதனம்; இன்னும்

செயலற்றுத் திகைக்கச் செய்யும்

    சிலபிற அழகும் வாட்டும்.


என்னவளே! காதல் இளங்கொடியே! நன்னடையால்

அன்னமெனப் பேர்பெற்ற ஆரணங்கே!---கன்னல்நிகர்

பேச்சுடைய பெண்ணரசீ! பேசாமல் கண்ணம்பைப்

பாய்ச்சுவதால் நொந்தேன் பதைத்து.


தேனோ? செழுங்கனியோ? தீம்பாகோ? கற்கண்டோ?

வானோர் அமுதமோ? வாய்ப்பேச்சு---யானோரேன்;

தென்றல்போல் ஆடிவரும் சீறடியாள்  கை,பிடிக்கும்

மன்றல்நாள் என்று வரும்?

(குஞ்சி=தலைமுடி; வதனம்=முகம்; 

கன்னல்நிகர்=கரும்பு போன்ற;

யானோரேன்=நானறியேன்;

சீறடியாள்=சிறிய பாதமுடையவள்;

மன்றல்நாள்=திருமணநாள்)

Wednesday, 29 January 2025

வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.

 வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் வட்டத்தில் ஆறகழூர்

என்ற ஊர் உண்டு. அது முற்காலத்தில் பெரிய நகராக, ஆறு அகழி

களையும் பெரிய கோட்டையையும் உடையதாக விளங்கியமையால்

ஆறகழூர் என் அழைக்கப்பட்டது. அதனை 'ஆறை' என இலக்கிய வழக்கில்

புலவர்கள் அழைப்பர். ஆறகழூரைத் தலைநகராகக் கொண்ட பகுதி மகத

மண்டலம் என்ற பெயர் பெற்றது. அப்பகுதியை ஆண்டவர்கள் வாணர்கள்

என்று அழைக்கப்பட்டனர். வாண அரசர்கள் தம்மை மகாபலிச் சக்கரவர்த்தி

யின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்வர். மகதேசன், மாகதர்கோன்

என்ற பெயர்களால் வாண அரசர்கள் புகழப்பட்டனர். (பொன்னியின் செல்வனில்

குறிப்பிடப்படும் வல்லவரையன் வந்தியத்தேவன் இந்த மரபைச் சேர்ந்தவரே).

"வாணன் புகழுரையா வாயுண்டோ? மாகதர்கோன்

வாணன் பெயரெழுதா மார்புண்டோ?---வாணன்

கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ?  உண்டோ

அடிதாங்கி நில்லா அரசு?".

என்று புலவர்கள் பாடியுள்ளனர்.


இந்தக்கதை நிகழ்ந்த காலம்  கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

அந்தக் காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பெருவீரன் வாணகோவரையன்

இராசராச தேவன் ஆவான். மூவேந்தர்களும் வலிமையிழந்து நலிவடைந்து ஆட்சி

புரிந்த காலம். ஒருமுறை ஆறை வாணனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நிகழ்ந்த

போரில் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாடு வாணன் ஆதிக்கத்தின்

கீழ் வந்தது. ஆண்டு தோறும் திறை(கப்பம்) செலுத்தவேண்டிய இழிநிலைக்கு உள்ளானது.


காலச் சக்கரம் சுழன்றது.  வாணகோவரையன் இராசராச தேவன் மறைந்தான்.

அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் தன் தந்தை போல் வீரமுடையவன்

அல்லன். அதேநேரத்தில் பாண்டியன் காலமான பிறகு பதவிக்கு வந்த அவன் மகன்

மிக்க வீரமுடையவனாகவும் படை திரட்டுவதில் வல்லவனாகவும் விளங்கினான்.

பாண்டியர்க்கு நேர்ந்த இழிவைத் துடைத்தெறியத் திட்டம் தீட்டினான். அந்தக் காலக்

கட்டத்தில் கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டியனின் ஆட்சிக்கீழ் இருந்தது. கொங்கு

இளைஞர்கள் பலர் பாண்டியனின் படையில் பணியாற்றினர். ஒருநாள் பாண்டியன்

தன் படையில் பணிபுரியும் கொங்கு இளைஞர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில்

" உங்களில் யாருக்காவது வாண தேசத்து அரசனைப் பிடித்து வந்து என்முன் நிறுத்தும்

துணிவும் வீரமும்  உள்ளதா?" என்று வினவினான். அப்பொழுது மோரூர் என்னும் ஊரைச்

சேர்ந்த சூரியன் என்ற வீரன் முன்வந்து " என்னால் வாணனைப் பிடித்து வர இயலும்" என்று

கூறினான். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய பாண்டியன் "சரி; நீயே இப்பணியைச்

செய். மற்றவர்கள் இவன் கோரும் உதவிகளைச் செய்யுங்கள்" என்று ஆணையிட்டான்.


சூரியன் அடுத்து வந்த நாட்களில் மளமளவென்று பல செயல்களைச் செய்தான். ஆறகழூர்

கொங்கு நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சூரியன் அந்த எல்லையில் பாண்டி

யனின் படைப்பிரிவு ஒன்றை நிலைநிறுத்த ஏற்பாடு செய்தான். சங்ககிரி என்ற ஊரில் ஒரு

மலையும் அதன்மேல் ஒரு கோட்டையும் இருந்தன. பாண்டியன் அங்கு வந்து தங்கியிருந்

தால் தான் வாணனைப் பிடித்து அக்கோட்டைக்குள் அழைத்து வரும் வாய்ப்பு மிக அதிகம்

என்ற கருத்தைப் பாண்டியனிடம் தெரிவித்தான். பாண்டியனும் அவ்வாறே சங்ககிரிக்

கோட்டைக்கு வந்து தங்கியிருந்தான்.


சூரியன் நம்பிக்கைக்குரிய நாலைந்து வீரர்களுடன் ஆறகழூர் ஊருக்குள் நுழைந்தான்.

தனக்கும் தன்னுடன் வந்துள்ள நண்பர்களுக்கும் ஏற்ற வேலை ஏதாவது கிடைக்குமா?

என்று ஊர் மக்களிடம் விசாரித்தான். "உங்கள் ஊரில் வேலை கிடைக்கவில்லையா?"

என்று மக்கள் கேட்க" நாங்கள் பெரிய செல்வந்தரிடம் பல்லக்குத் தூக்கியாகப் பணி

புரிந்தோம். அண்மையில் அவர் காலமாகிவிட்டார். எனவே பிழைப்புக்காக இந்த ஊருக்கு

வந்துள்ளோம். பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு வேலை எங்களுக்குத் தெரியாது.

உங்கள் மன்னரின் அரண்மனையில் எங்களுக்கு வேலை கிட்டுமா?" என்று வினவினர்.

இந்தச் செய்தி வாணன் காதுகளுக்கு எட்டியது. அண்மையில் ஒரு புதிய பல்லக்கை

உருவாக்கி அதனைச் சுமக்க வலிமை கொண்ட ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தான்.

எனவே, அரண்மனை ஊழியர்களை அனுப்பிச் சூரியனையும் அவன் பணியாட்களை

யும் அழைத்து வரச் செய்து பல்லக்கை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான். ஒரு

வாரம் சூரியனும் அவன் ஆட்களும் வாணன் திருப்தியடையும் வண்ணம் பணி செய்தனர்.

அரண்மனைப் பெண்டிரைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அரண்மனைக்குத்

திரும்பினர். வாணனுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை அதிகரித்தது.


ஒருநாள் நள்ளிரவு வரை ஆடல் பாடல் நிகழ்ச்சியைக் கண்டு களித்த வாணன் மிகச்

சோர்வடைந்தான். அரண்மனை  அந்தப்புரத்தில் எழிலான கட்டிலில் தூங்கிவிட்டான.

காலையில் அருகிலுள்ள ஒரு ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது.

மன்னர்கள் எங்கு சென்றாலும் குதிரையேறிச் செல்வதுதான் வழக்கம். ஆனால்

முதல்நாள் சரியாக உறங்காததால்  அலுப்பும் களைப்பும் ஆட்கொண்டன. எனவே,

வழக்கத்துக்கு மாறாகப் பல்லக்கில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தான். அதன்படி

பல்லக்கில் ஏறிப் படுத்துவிட்டான். உடனேயே ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.


இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த சூரியன் தன் ஆட்களுடன் பல்லக்கைச்

சுமந்துகொண்டு ஆறகழூரைக்

கடந்து சங்ககிரிக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டியன் அரண்மனையில் நிறுத்தினான்.

உடனே, ஆயுதம் தாங்கிய பாண்டிய வீரர்கள் பல்லக்கைச் சூழ்ந்துகொண்டனர். உறக்கம் 

கலைந்து எழுந்த வாணன் தான் இக்கட்டில் மாட்டியிருப்பதை யறிந்து நிலைகுலைந்து

போனான். சிறிது நேரத்தில் பாண்டியன் அரண்மனை முற்றத்துக்கு வந்து "வாணரே!

நீர் எம்வசம் சிக்கியுள்ளீர். ஆண்டுதோறும் திறை செலுத்தி எம் ஆட்சிக்கீழ் அரசு நடத்த

ஒப்புக் கொண்டால் உம்மை விடுவிக்கலாம்" என்றான். " பாண்டியரே! இச்செயல் அறமன்று;

வேறுவழியென்ன? திறை செலுத்த ஒப்புக் கொள்கிறேன்" என்றான் வாணன்.


பாண்டியன் சூரியனுக்குப் பல பரிசில்கள் நல்கினான். ஆகவராமன் என்ற பட்டத்தை

அளித்தான். சூரியன் என்ற பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் என்று அழைக்கச்

செய்தான். வேளாளர்களைக் கங்காபுத்திரர்கள் என அழைப்பது வழக்கம். சூரியன்

வேளாளர் தலைவனாதலின் அவனைக் காங்கேயன் என்றழைக்கச் செய்தான்.

எழுகரைநாடு என்ற பகுதியை அரசாளுமாறு வழங்கினான்.

"மிண்டாறை வாணனைமுன் வெட்டாமல் பாண்டியன்நேர்

கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனும் நீயலையோ?

தெண்டிரைசேர் மோரூரில் தென்னன்மகு டாசலனே!

மண்டலிகர் தேர்ந்துமெச்ச வாழ்சூர்ய காங்கெயனே!"

(,மிண்டு=செருக்குற்று நின்ற; தென்னன் மகுடாசலனே=

பாண்டியன் சூட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதி

யுள்ளவனே; மண்டலிகர்=மணடலங்களுக்கு நாயகராகிய

அரசர்கள்)


ஆதாரம்: நல்ல சேனாபதி நூல்; ஆசிரியர்: கி.வா.ஜ.அவர்கள்.

Thursday, 9 January 2025

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.

புலியைத் தேடிப் புறப்பட்ட வள்ளல்.


இந்தக்கதை எப்பொழுது நிகழ்ந்தது என்று அறுதியிட்டுக் கூற

இயலவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு

நிகழ்ந்திருக்கலாம். கொங்கு நாட்டில் கோபிச்செட்டிப் பாளையத்

துக்கருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. ஊருக்குச் சற்றுத்

தொலைவில் பெருங்காடு ஒன்றும் சிறு குன்று ஒன்றும் இருந்தன.

அந்தப் பக்கங்களில் புலி ஒன்று நடமாடியதாகப் பொதுமக்கள்

பேசிக்கொண்டனர். காட்டுக்குள் மேயப்போன ஓரிரண்டு மாடுகள்

திரும்பி வரவேயில்லை. அதனால்தான் புலி உலவுவதாகப் பேச்சுக்

கிளம்பியது. ஆனால் யாரும் காட்டுக்குள் சென்று புலி நடமாட்டம்

உண்மைதானா என்று அறிய முன்வரவில்லை.


கொங்கு நாட்டில் அவ்வப்பொழுது வள்ளல்கள் பலர் தோன்றி

மக்களுக்குக் குறிப்பாகப் புலவர்களுக்கு உதவியுள்ளனர்.

கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பூர்வீகம் கொங்குநாடு

என்று கொங்கு மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. சம்பந்தச்

சர்க்கரை என்ற வள்ளல் யாது காரணத்தாலோ சங்ககிரிதுருக்கத்தில்

சிறையினில் இருந்தபொழுது தம்மையணுகி உதவி கேட்ட தமிழ்ப்

புலவருக்குச் சிறையிலிருந்து கொண்டே தன் மனைவியின் தாலியைக்

கொடுக்கச் செய்தார் என்று கொங்கு மண்டல சதகம் இயம்புகிறது.

"சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்

சங்கையி லாதொரு பாவாணர் சென்று தமிழுரைக்க

அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்

மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே".

(பாடல் எண்:66--கொங்குமண்டல சதகம்).

இப்படிப்பட்ட வள்ளல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்

ளனர். இந்தக்கதை நிகழ்ந்த காலத்தில் செட்டிபிள்ளையப்பன்

என்ற வள்ளல் வாழந்துகொணாடிருந்தார். அவரிடம் தமிழ்ப் புலவர்

களும் ஏனைய ஏழை மக்களும் உதவி பெற்றுச் செல்வது வழக்கம்.

அவரின் கொடைத்தன்மைக்குச் சோதனை வந்தது. ஓரிரண்டு

ஆண்டுகளாக மழை பொய்த்தமையால் விளைச்சல் குறைந்தது.

இருப்பினும் அவரின் கொடைத் தன்மை குறையவேயில்லை.

வரவு இல்லாமல் செலவு மட்டுமே செய்து வந்தமையால் அவர்

வறியவர் ஆனார்.


இந்த வறிய நிலையிலும் உதவி கேட்டு வருவோரின்  எண்ணிக்கை

குறையவில்லை. ஒருநாள் ஒரு புலவர் உதவி கேட்டு வர, வள்ளல்

கைகளைப் பிசைந்தவாறு இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறி

வந்தவரை வெறுங்கையோடு அனுப்பிவிட்டார். வள்ளலின் மனம்

மிக மிக நொந்த நிலையில் இருந்தது. அப்போழுது வள்ளலைத் தேடிவந்த

நண்பர் ஒருவர் புலியைப் பற்றிப் பேசி "இதை அடக்குவதற்கு நெஞ்சுரம்

கொண்ட ஆடவர் யாரும் இல்லையா?" என்று புலம்பிவிட்டு அகன்றார்.

இரவு முழுவதும் வள்ளல் இதைப் பற்றியே எண்ணியெண்ணி வருந்தினார்.

பிறருக்கு உதவ முடியாத வறுமை நிலையை எண்ணிக் குமைந்தார்.. பொழுது

ஒருவாறு விடிந்தது. வள்ளல் ஒரு முடிவுக்கு வந்தார். " காட்டுக்குள் நானே

சென்று புலியை எதிர்கொள்வேன். ஒன்று புலியைக் கொன்று மக்களுக்கு

நன்மை செய்தல் வேண்டும்; இல்லையேல் புலியால் கொல்லப்பட்டு வாழ்வைத்

தொலைத்தல் வேண்டும். பிறருக்கு உதவமுடியாமல் வறுமையில் உழல்வது

அவமானம்" என்று தமக்குள் கூறிக் கொண்டார். தம் கருத்தைக் குடும்பத்தாரிடம்

கூறிவிட்டுக் கைகளில் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு காட்டை. நோக்கிப்

புறப்பட்டார்.


காட்டையடைந்த வள்ளல் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிவந்தார்.

புலியை எங்கும் காணவில்லை. ஏதாவது குகையில் தங்கியிருக்கும்

என்றெண்ணிக் காட்டின் நடுவிலுள்ள குன்றை நோக்கி நடந்தார்.

அங்கே தென்பட்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. புலி அங்கேயும்

தென்படவில்லை. ஆனால் குன்றின் மேல் நாலைந்து ஆட்கள் அமர்ந்து

ஏதோ செய்து கொண்டிருந்தனர். நெருங்கிச் சென்று பார்வையிடலாம்

என்றெண்ணிக் குன்றின் அடிவாரத்தை அடைந்துவிட்டார். வ‌ள்ளல்

நடந்து வந்தமையால் காட்டுக்குள் குவிந்து கிடந்த சருகுகள் ஓசை

யெழுப்பின. குன்றின்மேலிருந்த ஆட்கள் தம் வேலையைக் கைவிட்டு 

வருபவர் யார் என்று பார்த்தனர். கைகளில் வாளும் வேலும் தாங்கி

நிற்கும் வள்ளலின் வீரத் தோற்றத்தைக் கண்டு பதைபதைப்புக்கு

உள்ளாகி ஓடிவிட்டனர். வள்ளல் குன்றின் மேலேறிப் பார்த்தார்.

அங்கே அவிழ்ந்த நிலையில் மூட்டைமுடிச்சுகள் தென்பட்டன.

அவற்றை முற்றிலும் அவிழ்த்துப் பார்த்தால் நகைகள், அணிகலன்கள்

இருந்தன. "ஓகோ! அந்த ஆட்கள் திருடர்கள் போலும். அதனால்தான்

தம்மைக் கண்டதும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.

பொதுமக்கள் காட்டுக்குள் வந்து தொல்லை செய்யாமலிருக்கப் புலி

நடமாடுகிறது என்ற புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றெண்ணினார்..


வள்ளல் அங்கிருந்த நகைகள், அணிகலன்களைத் திரட்டி மூட்டை

கட்டித் தோளில் சுமந்துகொண்டு ஊர்வந்து சேர்ந்தார். நடந்த

நிகழ்வுகள் அனைத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்துப்

புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கினார். இந்த நிகழவுகள்

அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இட்ட மான கவிசொலும் பாவலற்(கு)

       இல்லை என்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித் தூரில் புகுந்தநல்

         தூய வன்கன வாள குலத்தவன்

செட்டி பிள்ளையப் பன்தினம் தொண்டுசெய்

         தேவி மாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடை அமர விடங்கனார்

          கதித்து வாழ்பாரி யூரெங்கள் ஊரே".

(தூர்=புதர்; கனவாள குலம் என்பது கொங்கு வேளாளர்

குடிவகைகளுள் ஒன்று;)

ஆதாரம்: 'நல்ல சேனாபதி' நூல்- இயற்றியவர் கி.வா.

ஜகன்னாதனார்).