ஒட்சு பீசா பர்கரின்னும்
உடலைக் கெடுக்கும் பரோட்டாவாம்;
ஒட்டும் பசைபோல் நூடுல்சாம்;
ஒளிரும் மிளிரும் வண்ணவண்ணக்
காட்சிக் கினிய பணடங்கள்;
கடையில் கிடைக்கும்; உடல்நலமோ
கன்னா பின்னா எனக்கெடுமே;
காலன் தன்னை வலிந்தழைக்கும்;
மீட்சி செய்ய முடியாத
நோய்கள் எல்லாம் அணுகிடுமே;
விழித்துக் கொள்வீர் பெருமக்காள்!
விலக்கு வீரே விரைவுணவை(fast food)
ஆட்சி நடத்தும் பெரியோரே!
அல்லல் நிறைந்த இதைப்பற்றி
அலசி ஆய்ந்து குறும்படமாய்
தமிழ்நா டெல்லாம் வெளியிடுவீர்.
விரைவுணவால் கொழுப்புமிகும்; சர்க்கரைநோய் தலையெடுக்கும்;
விரைந்து கொல்லும்
இருதயநோய் தோன்றிடுமே;நோயெதிர்ப்பு சக்திகுன்றும்;
இன்னும் சொல்வேன்;
தரமான தசைநாடி நரம்பெல்லாம் தளர்ந்திடுமே;
சருமம் வாடும்;
சிரம்முதலாய் பாதம்வரை உடலைநன்கு பேணிடுவோம்;
சிந்திப் பீரே!
ஏனிந்த உணவுகளை வேண்டாவென் றுரைக்கின்றீர்?
என்று கேட்டால்
தேனொத்த சுவைநல்கும்; அதிலுள்ள வேதியியல்
சேர்மா னங்கள்
ஊனத்தைச் செய்துவிடும்; சுவைமணம்நல் நிறம்,கெட்டுப்
போகாத் தன்மை
ஆனவெல்லாம் உருவாகும்; என்றாலும் உடல்நலத்தை
அழிக்கும் உண்மை.
அவரவர்கள் மரபுவழி உணவுகளை உண்டுவந்தால்
அல்லல் இல்லை;
கவர்ச்சிகரத் தோற்றமுடை விரைவுணவை உடல்மறுத்துக்
கலகம் செய்யும்;
சுவைஇட்லி, இடியாப்பம், தோசை,களி, உப்புமா,
அடை,பிட் டப்பம்
இவைகளையே உண்டிடுவோம்; சிறுதான்யம் சமைத்திடுவோம்;
என்றும் நன்மை.
நீராவி தனில்வேக வைத்தெடுக்கும் இடியாப்பம்
இட்லி பிட்டு
சீரான கொழுக்கட்டை முதலான உணவுகளைத்
தினமும் உண்டால்
யாராலும் செரிமானம் செயமுடியும் கோளாறென்
றெதுவும் இல்லை;
நேரான நம்உணவே நம்உடலுக் கொத்துவரும்;
நினைவிற் கொள்வீர்.
மணமூட்ட, நிறமூட்ட, கெடாதிருக்க, சுவைகூட்ட
வணிக நோக்கில்
உணவுகளில் கெடுதிசெயும் சேர்மானம் தனைக்கலந்து
விற்கின் றாரே;
பணமொன்றே குறிக்கோளாய்க் கொண்டுபெரும் நிறுவனங்கள்
படைக்கும் நல்ல
குணங்களற்ற நாகரிக உணவுகளை விலக்கிடுவோம்
குறித்துக் கொள்வீர்.
சாமை,திணை, கேழ்வரகு, சோளம்,கம்பு, வரகரிசி
சத்து மிக்க
காமர்சிறு தானியங்கள் இம்மண்ணில் உள்ளனவே;
கருத்தில் கொண்டு
நாமவற்றைப் பயன்படுத்தி நலம்பெறலாம்; சர்க்கரையால்
நலிய வேண்டா;
பாமரரும் படித்தோரும் மரபுவழி உணவைப்பின்
பற்று வோமே.